Friday, October 9, 2015

"ஒத்தக்கை" ஓட்டுனர்கள்


http://what-grinds-my-gears.com/wp-content/uploads/2009/09/hang_up_and_drive_sticker-p217155189698135329q0ou_400.jpg
 

நேற்று சங்கப் பணியாக விழுப்புரம் சென்றிருந்தோம். காரில் சென்று கொண்டிருந்த போது சாலையை பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு விஷயம் கண்ணை உறுத்தியது.

சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனங்களை ஓட்டியவர்களில் குறைந்தபட்சம் நாற்பது சதவிகிதத்திற்கு மேற்பட்டவர்கள்  ஒரு கையில் அலைபேசியில் பேசிக் கொண்டு இன்னொரு கையில் வாகனத்தைப் பிடித்தபடி போய்க் கொண்டிருந்தார்கள்.

இது உயிரை பணயம் வைக்கும் வேலை அல்லவா?

அவர்கள் உயிரை மட்டுமா?

போன் பேசும் மும்முரத்தில் சாலையைக் கடக்கும் பாதசாரியையோ அல்லது   எதிரில் வரும் வாகனத்தையோ கவனிக்காமல் போவதற்கான வாய்ப்பு உண்டு. இவர்களின் போன் உரையாடலால் தடுமாறினால் ஏராளமான பயணிகளை ஏற்றி வரும் பேருந்து போன்ற வாகனங்களுக்கும் சிக்கல் வரலாம்.

வரலாம் என்ன! பல விபத்துக்கள் இந்த ஒத்தக்கை ஓட்டுனர்களாலே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

மிகவும் முக்கியமான விஷயமாக இருந்தால் வண்டியை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு அதன் பின்பு பயணத்தை தொடரலாமே! 

அலைபேசிகள் இல்லாத காலத்தில்  பயணங்களில் நாம் பேசியது கிடையாதே! அதனால் அப்படி ஒன்றும் குடி முழுகிப் போனதில்லையே! அப்புறம் இப்போது மட்டும் அப்படி என்ன அவசரம், அதுவும் உயிர் போகிற அவசரம்!

பின் குறிப்பு: இந்த ஒத்தக்கை ஓட்டுனர்கள் என்ற பதம் கார், பஸ், லாரி ஓட்டுனர்களுக்கும் பொருந்தும்.
 

3 comments:

  1. அவசியம் தேவையான எச்சரிக்கை. இந்த ஒத்தக்கை ஓட்டுனர்களால் எதிரே வரும் அப்பாவிகள் பலியாவது கொடுமை. இரு சக்கர வாகனங்கள் ஓடி கொண்டு ஒரு கையிலே மொபைல் பேசி கொண்டு செல்வதை வேறு நாட்டு மனிதர்கள் பார்த்தால் சார்க்கஸ் நடைபெறுவதாகவே நம்புவார்கள். ஒரு கையிலே மொபைல் பேசி கொண்டு வாகனம் ஓட்டகூடாது என்று அரசு தடை கொண்டுவந்தால் தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு தான் கிடைக்கும்.

    ReplyDelete
  2. வண்டி ஓட்டும்போது, வேறு வேலை எது செய்தாலும், சாலையின்மீதுள்ள கவனம் 40% உடனே குறைந்துவிடும். கைபேசி என்பது இன்னும் மோசம். இவர்கள் செத்தாலும் பரவாயில்லை (பயணியர் இல்லாத வண்டி என்று அனுமானித்துக்கொள்கிறேன்). ஆனால், பயணிகள் வண்டியில் ஓட்டுனர் இவ்வாறு செய்வது, பயணிகளின் உயிரையும், சாலையில் உள்ள மற்றவர்களையும் மதிக்காத தன்மை. இத்தகையவர்கள் விபத்தில் மாட்டிக்கொண்டால், எந்த மருத்துவமனையும் இவர்களைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது.

    ReplyDelete