Thursday, October 22, 2015

புதுகையில் சங்கமமான சமுத்திரத்தில் சிறு துளியாய்

புதுகை வலைப்பதிவர் விழா பற்றிய எனது முந்தைய பதிவுகளில் 

அற்புதமான ஏற்பாடுகளை அர்ப்பணிப்புணர்வோடு செய்திருந்த விழாக் குழுவினரின் துல்லியமான ஏற்பாடுகள், கடுமையான உழைப்பு பற்றி பாராட்டியிருந்தேன்.

விக்கிபீடியா ரவிசங்கர், தமிழ் இணையக் கலவிக் கழகத்தின் மா.தமிழ்ப்பரிதி, அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் சுப்பையா அவர்களின் உரைகளை பகிர்ந்து கொண்டிருந்தேன்.

ஓவியத்தால் மெருகேற்றப்பட்டிருந்த கவிதைகளை படம் பிடித்து பதிவேற்றியிருந்தேன். 

எழுத்தாளர் எஸ்.ரா அவர்களின் உரை பற்றி எழுதி காணொளியின் இணைப்பும் அளித்திருந்தேன். 

இவை மட்டுமல்ல சிறப்பு. வேறு ஒன்றுதான் என்றும் சொல்லியிருந்தேன். 

வலைப்பதிவர் விழாவை சிறப்பான வெற்றியாக்கியது  அங்கே முழுமையாக சங்கமித்திருந்த வலைப்பதிவர்கள்தான். 

வலைப்பக்கம் எழுதுவது பெரும்பாலும் பொழுது போக்கிற்குத்தான். நம் கருத்துக்களை பறிமாறிக் கொள்ளவும் நம் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வடிகாலாகவும்தான். எந்த வித பொருளாதார ஆதாயமும் இல்லாமல் நமது எழுத்துக்களை சுதந்திரமாக முன்வைப்பதற்கான தளம் என்பதுதான் நம்மை வலைப்பக்கத்திற்கு ஈர்த்தது. 

பல்வேறு கருத்துக்கள் உள்ளவர்கள், சித்தாந்த, சமூகப் பின்னணி உள்ளவர்கள், மாறுபட்ட குணாம்சம் கொண்டவர்கள் ஆகியோரின் சங்கமமாக வலைத்தளம் உள்ளதென்றால் அவர்கள் அத்தனை பேரும் சங்கமித்த சிறந்த தருணமாக வலைப் பதிவர் திருவிழா அமைந்திருந்தது. 

கணிணியில் யாருடைய எழுத்துக்களை படிக்கிறோமோ, யாருடைய எழுத்துக்களால் சிலிர்த்துப் போயிருந்தோமோ, நம்முடைய எழுத்துக்களையும் படித்து பின்னூட்டம் எழுதுகிறார்களே என்று மகிழ்ந்திருந்தோமே,  அவர்களையெல்லாம்  ரத்தமும் சதையுமாக நேரில் பார்க்க கிடைத்த வாய்ப்பை விட மிகச் சிறப்பானதாக வேறு எந்த அம்சத்தைச் சொல்ல முடியும்?

இந்த விழாவிற்காக வந்தவர்கள் எத்தனையெத்தனை பேர்.....

அமெரிக்காவிலிருந்து  ஒருவர், டெல்லியிலிருந்து சிலர், கேரளாவில் இருந்து சிலர், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து  என்று நூற்றுக்கணக்கான வலைப்பதிவர்கள் வந்தது "வலைப்பக்கத்தில் எழுதுவது வெறும் பொழுது போக்கல்ல, எங்கள் வாழ்வின் ஒரு பகுதி" என்ற உணர்வில்தான் என்று தோன்றியது.

ஐவர் ஐவராய் அறிமுகம் செய்து கொண்ட போது "ஆஹா, இவர்தானா அது! இவர் எழுதியதை நாம் படித்திருக்கிறோமே" என்றதொரு நேசம் உடனடியாக வந்தது. எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே வந்திருக்கும் என்றே நம்புகிறேன். 

அனைவரோடும் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் நிகழ்ச்சிகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் கொஞ்சம் தயங்கினேன். ஆனாலும் கூட சில பதிவர்களோடு அறிமுகம் கிடைத்தது.

"மீசை வைத்த குழந்தையப்பா"  என்ற பாடலுக்கு பொருத்தமான திரு கரந்தை ஜெயகுமார் அவர்களை சந்தித்து சிறிது நேரம் பேச முடிந்தது. அவரது அன்பின் அடையாளமாக அவர் அன்று வெளியிட்ட நூலை எனக்கு அளித்தார். அது மட்டுமல்ல நான் அளித்த எனது நூலையும் அவரது வலைப்பக்கத்தில் பிரசுரித்து பெருமை சேர்த்துள்ளார்.

நெல்லை திரு சுப்ரா அவர்களோடுதான் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.

திருப்பதி மஹேஷ் அவர்களை மீண்டும் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பேருந்தில் முன்பதிவு செய்ததை படித்தேன் என்று சொல்லி அசத்தினார். 

வேலூர் அன்பே சிவம் அவர்களை திரு விசுவாசம் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவிற்குப் பிறகு புதுகையில்தான் சந்தித்தேன்.

நான் என்னை அறிமுகம் செய்து கொண்டு திரும்பிய போது பெரியவர் திரு புலவர் ராமானுஜம் அழைத்து கை கொடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது.

முதலிடத்தில் நீண்ட நாட்கள் இருந்து, மீண்டும் அதைக் கைப்பற்றப் போகும் திரு ஜோக்காளி அவர்கள் என்னை அழைத்து நானும் ஒரு காலத்தில் சி.ஐ.டி.யு சங்கத்தில் பொறுப்பாளராக இருந்தவன் என்று கூறியது புதிய செய்தி. 

கரூர் பூபதி என்ற தோழர் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். 

திரு தமிழ் இளங்கோ அவர்களோடு அறிமுகம் செய்து கொண்ட போது "உங்க எழுத்துக்களைப் பார்த்து நீங்க ரொம்பவும் வயசானவரா, கம்யூனிஸ்ட் கரை போட்ட வேஷ்டி கட்டிக் கொண்டு வருவீங்க என்று எதிர்பார்த்தேன். இவ்வளவு இளைஞராக இருப்பீங்க என்று நினைக்கவில்லை" என்று சொன்ன போதும் மனம் கொஞ்சம் குளிர்ந்துதான் போனது.

தோழர் முத்து நிலவனை மதிய உணவு வேளையின் போதுதான் பார்த்து பேச முடிந்தது. பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களை வீட்டிற்குப் புறப்படும் வேளையில்தான் பார்த்து கை கொடுக்க முடிந்தது. 

தில்லையகத்து க்ரானிக்கல்ஸ் கீதா அவர்களைப் பார்த்து "வேலூரில் பார்த்தது நினைவில் உள்ளதா?" என்று கேட்க முடிந்தது. 

இந்த விழாவில் நானும் கலந்து கொண்டேன் என்பதற்கான சான்றாக விழாவில் அறிமுகம் செய்து கொண்ட போது எடுத்த புகைப்படத்தை தோழர் முத்து நிலவன் தனது வலைப்பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார், அதுவும் பிரபல பதிவர் (?) என்ற அறிமுகத்தோடு. 



நாம் அனைவரும் தமிழ்ப் பதிவர்கள் என்ற உணர்வோடு ஒரு விடுமுறை நாளை பதிவர் விழாவிற்காக ஒதுக்கி புதுக்கோட்டைக்கு பயணம் செய்தது என்பதுதான் வலைப்பதிவர் விழாவின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம். 

இந்த விழாவிற்குப்பிறகு பலர் மீண்டும் தீவீரமாக எழுதி வருவது இந்த விழா உருவாக்கியுள்ள தாக்கம். 

மீண்டும் சந்திக்கும் போது இன்னும் அதிகமான தமிழ்ப்பதிவர்கள் உருவாகியிருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு புதுகை வலைப்பதிவர் விழா குறித்த பதிவுகளை நிறைவு செய்கிறேன். 

பின் குறிப்பு ஒன்று : இந்த விழாவில் கண்டிப்பாக  சந்திக்கலாம் என்று நம்பியவர் பெரியவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ரத்தினவேல் அவர்கள். ஆனால் அவர் வராதது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.

பின் குறிப்பு இரண்டு : திரு தமிழ் இளங்கோ என்னை இளைஞர் என்று கூறியதை பெருமையாக என் மனைவியிடம் கூறினேன். அவருடைய பதிலோ "அவர்  ஒரு சபை நாகரீகத்திற்காகக் கூறியிருப்பார். அடுத்த வருடம் உங்களுக்கு ஐம்பது வயதாகி விடும் என்பதை மறந்து விட வேண்டாம்"  என்று வந்து விழுந்தது.

20 comments:

  1. அடுத்த ஆண்டு ஐம்பதை எட்டும் தங்களுக்கு எண்பதைத் தாண்டிவன் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்திற்கு மிகவும் நன்றி ஐயா,

      Delete
  2. அவருடைய பதிலோ "அவர் ஒரு சபை நாகரீகத்திற்காகக் கூறியிருப்பார்.....well said....100% true....

    ReplyDelete
    Replies
    1. யப்பா அனானி, உனக்கென்ன இதில இவ்வளவு சந்தோஷம்? யாருப்பா நீ? இந்த கமெண்டை உன் முகம் காண்பிச்சே சொல்லலாமே?

      Delete
  3. sorry .....with too many faces... poor indian......forget the original face.....understood the entire world is the stage for drama...

    ReplyDelete
    Replies
    1. நடிப்பெல்லாம் ரொம்ப நாள் எடுபடாது. உண்மை முகம் ஒரு நாள் அம்பலமாகும். அப்போது வருந்துவதற்குப் பதில் இப்போதாவது திருந்தலாம்

      Delete
  4. அழகான விவரிப்பு ஐயா... நன்றி...

    வேலூர் போல் இந்த விழாவில் அதிகம் பேச முடியாதது வருத்தமே...

    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  5. கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள் என்று தனி "லேபில்" உருவாக்கப்பட்டு...

    நம் தளத்தில் இணைத்தாகி விட்டது ஐயா... நன்றி...

    இணைப்பு : →கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்

    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
    Replies
    1. பார்த்தேன். இதுவும் உங்களின் இன்னொரு சிறப்பான பணி

      Delete
  6. வலைப் பதிவர் சந்திப்பின்போது தங்களைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் நண்பரே.
    தங்களின் நூலினைப் படித்து, படித்து வியந்து போனேன். எத்துனை எத்துனை அறியாச் செய்திகள்.
    தர்ங்கள் இந்த நூலிற்காக உழைத்திருக்கும் உழைப்பு மலைக்க வைக்கிறது நண்பரே
    விரைவில் தங்களின் நூலினைப் பற்றியும் எழுத ஆவல் மலர்கிறது
    நன்றி நண்பரே
    தங்களின் பதிவில் இந்த எளியேனையும் குறிப்பிட்டமைக்கு
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிகுந்த தன்னடக்கத்தோடு உங்களை குறிப்பிட்டுக் கொள்கிறீர்கள். உங்களின் எழுத்துப் பணி அபாரமானது

      Delete
  7. 'இந்த விழாவிற்குப்பிறகு பலர் மீண்டும் தீவீரமாக எழுதி வருவது இந்த விழா உருவாக்கியுள்ள தாக்கம்" இந்த வரிகளில்தான் தோழரே, நமது விழா வெற்றி என்று மகிழ்கிறேன். இன்னும் தஇக அறிவித்த போட்டிகளினால் மின்னஞ்சல் உள்ளவர்பலர் வலைப்பதிவராக மாறிப் போட்டியில் கலந்து கொண்டதையும், “போட்டிக்குப் போட்டி“காரணமாக மின்னஞ்சல் உள்ள பலர் வலைப்பக்க இலக்கியங்களைப் படிக்கவும் அறிமுகப்படுத்திக் கொள்ளவும் வந்தனர். இவற்றையே நான் நல்ல விளைவுகளாகப் பார்க்கிறேன். இவற்றுக்கான தொடர்ந்து கொண்டுசெல்லும் (ஃபாலோ-அப்?) பணிகளைச் செய்வீர்கள் என்னும் நம்பிக்கையில்தான் இந்த “பிரபல மற்றும் மூத்த“ பதிவர் பட்டம் தங்களைப் போன்றோருக்கு..சரிதானே தோழரே? நன்றியும் வணக்கமும்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து எழுதுவோம். அனைவரையும் எழுத வைப்போம்

      Delete
  8. Refer Post: எழுத்தாளர் எஸ்.ரா விடம் சில கேள்விகள்

    வலைப்பதிவர் விழா சிறப்பாக அமைய திரு எஸ்.ரா
    அவர்களின் பங்கேற்பும் ஒரு முக்கியக் காரணம்.

    ஆனால் அதையும் விட முக்கியமான காரணம்

    என்ன தெரியுமா?

    நாளை?



    Innum Naalai Aagavillayaa sir


    Y.Anna.

    ReplyDelete
    Replies
    1. சார், இந்த பதிவு முழுதும் அதைத்தானே சொல்லியிருக்கிறேன்.

      // நாம் அனைவரும் தமிழ்ப் பதிவர்கள் என்ற உணர்வோடு ஒரு விடுமுறை நாளை பதிவர் விழாவிற்காக ஒதுக்கி புதுக்கோட்டைக்கு பயணம் செய்தது என்பதுதான் வலைப்பதிவர் விழாவின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம்.

      இந்த விழாவிற்குப்பிறகு பலர் மீண்டும் தீவீரமாக எழுதி வருவது இந்த விழா உருவாக்கியுள்ள தாக்கம்.

      மீண்டும் சந்திக்கும் போது இன்னும் அதிகமான தமிழ்ப்பதிவர்கள் உருவாகியிருப்பார்கள் என்ற நம்பிக்கை//

      // வலைப்பதிவர் விழாவை சிறப்பான வெற்றியாக்கியது அங்கே முழுமையாக சங்கமித்திருந்த வலைப்பதிவர்கள்தான்.//

      இது இதுதான் எல்லாவற்றையும் விட முக்கியமானது. சிறப்பானது


      Delete
  9. வலைப்பதிவர் சந்திப்பினைப் பகிர்ந்தவிதம் அருமையாக இருந்தது. பலரைச் சந்திக்கும்போது நாம் பிரபலம் என்று கொள்வோம். வாழ்த்துக்கள். தொடர்ந்து சந்திப்போம்.

    ReplyDelete
  10. சிறப்பாக பகிர்ந்து கொண்டீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. உங்கள் பதிவுகள் தவறாமல் வாசித்துவிடுவேன் சார். comment தான் எப்போதாவது இடுவது.
    தொடர்ந்து எழுதவும் சார்.

    ReplyDelete
  12. உங்கள் வாழ்த்துக்கு நன்றி !
    முதல் சந்திப்பு என்றாலும் என்னை மறக்கவில்லை ,உங்களுக்கு நல்ல ஞாபக சக்தி :)

    ReplyDelete