Monday, July 23, 2012

மகத்தான தலைவரின் மறக்க முடியாத நேர் காணல்

இந்திய சுதந்திரப் போர்  பற்றிய வரலாற்றில் இந்திய தேசிய ராணுவத்தின்
பணி பெருமளவு மறைக்கப் பட்ட ஒன்று. காந்தியையும் நேருவையும்
அறிந்துள்ள இளைஞர்களுக்குக் கூட நேதாஜியைப் பற்றி தெரிந்திருக்க
வாய்ப்பில்லை. அப்படி இருக்கையில் இந்திய தேசிய ராணுவத்தின்
மகளிர் பிரிவான ஜான்சி ராணி ரெஜிமெண்டின் தலைவரான கேப்டன்
லட்சுமி பற்றி அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இன்று மறைந்த அந்த மகத்தான தலைவர் இருபத்தி மூன்று மாதங்கள்
முன்பு அளித்த நேர் காணல் இங்கே. இதனை பல தோழர்களுக்கு
மின்னஞ்சலில் அனுப்பிய  தோழர் பாரதி புத்தகாலயம் நாகராஜன்
அவர்களுக்கு நன்றி.

கடலின் ஒரு துளியாய், கேப்டன் லட்சுமி அவர்களின் வீர வாழ்வை
அறிந்து கொள்ள இப்பேட்டி உதவும்.

செவ்வணக்கம் கேப்டன் லட்சுமி
 Captain Lakshmi Sahgal. File Photo: K.V. Srinivasan


நீங்கள் ஒரு மருத்துவர். மருத்துவப் படிப்பு முடிந்தவுடன் உங்களுக்குப் பலவிதமான எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள் இருந்திருக்கக்-கூடும். வாழ்க்கை இனிமையாக இருந்திருக்கும். நீங்கள் இந்த சுதந்திரப் போராட்டத்தில் கலந்து-கொண்டு கஷ்டங்களை அனுபவிக்க உங்களைத் தூண்டியது எது?
எங்கள் குடும்பமே அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமான ஈடுபாடு உடையதுதான். குறிப்பாக என் தாயார் திருமதி அன்னு ஸ்வாமிநாதன் மிகவும் அதிகமாக எனக்கு ஆதர்சமாக விளங்கினார். அவர் காங்கிரஸ் சேவகி. சென்னை முனிசிபல் கார்ப்ப-ரேஷன் அங்கத்தினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1942ல் நடந்த விடுதலைப் போராட்டங்களில் கலந்து-கொண்டு சிறை சென்றார். பிற்காலத்தில் சாசன நிர்ணய சபைக்கு இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருமுறை லோக்சபாவுக்கு மற்றொரு முறை ராஜ்ய சபாவுக்காக. இப்படி இருக்கும்போது நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே அரசியல் சூழ்நிலையிலும் பலவிதமான போராட்டங்களுக்கும் இடையில்தான். மிகச்சிறு வயதிலேயே, நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட வேண்டும் என்ற எண்ணம் என் உள்ளத்தில் வேரூன்றியதும், இந்தச் சூழ்நிலையில் நான் வளர்ந்ததால்கூட இருந்திருக்கலாம்.
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விடுதலைப் போரில் ஈடுபடுவதை விட்டு நீங்கள் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தது ஏன்? இதற்கு ஏதேனும் தனிப்பட்ட காரணங்கள் உண்டா?
இளம் வயதினரான நாங்கள் எல்லோருமே நேதாஜியின்பால் ஈர்க்கப்பட்டோம். நான் என்னுடைய எம்.பி.பி.எஸ் படிப்பை கவனமாக படித்தேன். இடையில் இரண்டாவது உலக மகா யுத்தம் வந்தது. ஆங்கிலேய ராணுவம் எங்களுக்கு பல சலுகைகளை அறிவித்து இராணுவத்தில் நல்ல பதவிகளைத் தருவதாக ஆசை காட்டியது. என் சக மாணவ, மாணவிகளில் சிலர் இவற்றை ஏற்றுக்-கொண்டனர். ஆனால், நான், எந்த சூழ்நிலையிலும் ஆங்கில ராணுவத்தில் சேருவதில்லை என்று முடிவு செய்துகொண்டேன். அந்தக் காலத்தில் சென்னையில் தனியார் வைத்தியசாலை வைப்பதோ, மருத்துவம் பார்ப்பதோ மிகக்கடினம். மிகவும் குழம்பிப்போனேன். அந்தச் சமயம் எதுவுமே என் மனதிற்கு பிடித்தமான வேலையாக கிடைக்கவும் இல்லை. சிங்கப்பூரில் இந்திய தேசிய ராணுவம் தோன்றியதும் என் உள்-மனத்தில் ஏக்கங்களுக்கு இதுதான் வடிகால் என்று உணர்ந்தேன். உடனே அதில் சேர்ந்து விட்டேன்.
நேதாஜி சிங்கப்பூருக்கு எப்போது வந்தார்? நீங்கள் அவரை எப்படி சந்தித்தீர்கள்?
சிங்கப்பூர் யுத்தம் 1942 பிப்ரவரி 15ம் தேதி முடிவுற்றது. மறுநாள் இந்திய இராணுவ வீரர்களின் மிகப்பெரிய ஊர்வலம் (அவர்களின் அதிகாரிகளும் கலந்துகொண்ட) நடைபெற்றது. ராஷ்பீஹாரி போஸ், புஜிவாரா மோகன்சிங் மூவரும் இந்த ஊர்வலத்தில், இந்திய ராணுவ வீரர்களை வரவேற்றுப் பேசினர். இந்திய தேசிய ராணுவம் தோற்றுவிக்கப்பட்டது. இவை நடந்த சமயம் நான் சிங்கப்பூரில் இருந்தேன். சிங்கப்பூர் ஊர்வலம் நடந்த ஓராண்டிற்குப் பிறகு நேதாஜி சிங்கப்பூர் வந்தார்.
அவர் சொன்னார் : “நேரம் வீணாகிக் கொண்டிருக்-கிறது. இந்த உலக யுத்தத்துக்கும் நமக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நமது முதன்மையான நோக்கம் தாய்நாட்டு விடுதலையேயாகும். 48 மணி நேரத்தில் ஒருவர் செய்யும் வேலையை 24 மணி நேரத்தில் முடிக்குமளவுக்கு நமக்கு பொறுப்புகள் காத்திருக்-கின்றன. இதுவொரு புதுமையான இராணுவப் படை. இதில் சிப்பாய்களுக்கும், சாதாரண பொது ஜனங்களுக்கும் எந்தவிதமான பாகுபாடும் கிடையாது. 18லிருந்து 25 வரையிலான எல்லா இளைஞர்-களையும் நாங்கள் இந்தப் படையில் நியமிக்க உள்ளோம்.’’
நேதாஜி வருமுன் இந்தப் படையில் 30 ஆயிரம் வீரர்கள் இருந்தார்கள். நேதாஜி விடுத்த உணர்ச்சிமிகு வேண்டுகோளுக்குப் பிறகு,  இரண்டே வாரத்தில் படையின்எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தொட்டது.  பெண்களை பார்த்து நேதாஜி சொன்னார் : “உங்களுக்குத்தான் நாட்டுச் சுதந்திரம் மிகவும் முக்கியம். வெளிநாட்டு ஆட்சி என்ற பொருந்தாத தளையிலிருந்து மட்டுமல்ல, சமூக அளவில் உங்களைப் பாதிக்கும் தளைகளிலிருந்தும் விடுபட பாடுபடுங்கள்’’ என்றார். “பார்க்கப் போனால் இந்தியப் பெண்களை இந்த விடுதலைப் போராட்டத்தில் சேர்த்துக் கொள்வது மிக இன்றியமையாத ஒன்றாகும்’’ என்றார். முழுவதும் பெண்களாலேயே ஆன ஒரு ரெஜிமெண்டை துவக்கும் எண்ணம் அவருக்குத் தோன்றியது. அவர் இந்த உரை ஆற்றுவதற்கு முதல்-நாள்தான் நான் அவரை சந்தித்தேன்.
நீங்கள் நேதாஜியை முதன்முதலாக சந்தித்ததைப் பற்றி இன்னும் விபரமாக சொல்ல முடியுமா? இந்த சந்திப்பில் உங்களின் மறக்க முடியாத அனுபவங்கள் என்ன என்பதையும் சொல்லுங்கள்?
இதுவரை எனக்கும் .என்.. அதிகாரிகளுக்கும் இடையே மிக குறைந்த அளவில்தான் பழக்கம் இருந்தது. நான் அவர்களை நேதாஜியை சந்திக்க ஏற்பாடு செய்ய நச்சரித்தேன். நேதாஜியுடன் தன்னைச்-சார்ந்த அதிகாரிகளிடம் ஒருமித்த கருத்துடைய பெண்கள் தன்னை சந்திக்க விரும்பினால், எப்பவுமே தான் தயார் என்றும் உடனே அது போன்ற சந்திப்-பிற்கு ஏற்பாடு செய்யும்படி கட்டளையிட்டி-ருந்தார். இந்த அதிகாரிகள்தான் என்னை நேதாஜிக்கு அறிமுகப்-படுத்தினர். யாரிடத்திலும் வீர உணர்வை எழுப்பும் வசீகரமான தோற்றம் உடையவர் நேதாஜி. நாங்கள் ஐந்து மணி நேரம் பேசினோம். முதல் சந்திப்பிலேயே முழு ஐந்து மணி நேரமும் நாங்கள் உரையாடினோம்.
பெண்களாலேயே நடத்தப்படும் ஒரு ரெஜிமெண்-டைத் துவக்கும் விஷயத்தில் என் அபிப்ராயத்தைக் கேட்டார். நல்ல யோசனைதான். நான் சேரத் தயார். மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது என்றும் சொன்னேன். அவர் சொன்னார், “மற்றவர்களைப் பற்றி நான் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன். நீ நமது சரித்திரத்தைச் சற்றுப் புரட்டிப்பார். எப்போதும் பெண்கள் தாங்கள் சார்ந்த ஆண் மக்களுக்குத் துணை-யாக போராடியே வந்திருக்கிறார்கள். 1857ல் ராணி லட்சுமிபாய், பேகம் ஹஸரத் மஹல் மட்டுமல்ல, சாதாரண நாட்டுப்புற பெண்கள்கூட வீரத்துடன் போராடியிருக்கிறார்கள். வங்காளத்தில், புரட்சித் தலைவிகளாக சாந்தி, ப்ரீதி, லதா போன்ற-வர்கள் இருந்தார்கள். இதுதவிர, கணக்கிட-லடங்காத பொது-மக்களில் பெண்கள், காந்திஜியின் வன்முறை-யற்ற போராட்டங்களில் தொண்டர்களாக வந்து, துப்-பாக்கிக் குண்டுகளையும் அடிகளையும் தாங்கிய-படி தைரியமாக எதிர்த்து நின்றிருக்கின்றனர். நமது-நாட்டுச் சரித்திரத்தில் பெண்களுக்குப் பஞ்சமே-யில்லை. இந்த வழிமுறை இன்னமும் தொடர-வேண்டும் என்றார்.
நேதாஜி மேலும் கூறியதாவது : இந்தியாவில் நடந்துவரும் விடுதலைப் போராட்டங்களில் இருந்து நமது யுத்த முறை முற்றிலும் வேறானது என்பதை நான் அறிவேன். இது அபாயகரமானதுதான். நாம் ஜீவனுள்ள ஒரு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  யுத்த களத்தை நோக்கி வேகமாக முன்னேறிக்-கொண்டுபோய், குண்டு மழைகளைத் தாங்க நம்மை நாமே தயார் செய்துகொள்ளும் நிலையில் இருக்கி-றோம். என்னால் உங்களுக்குத் தரக்கூடியது வீர-மரணத்தைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆனாலும், தேசத்தின் விடுதலை, நமது சொந்தக் கஷ்டங்-களுக்கும், அபாயங்களுக்கும் அப்பாற்பட்டது. நாம் ரத்தம் சிந்தியே ஆகவேண்டும். நான் எந்தவிதமான தியாகத்-திற்கும் தயாராக இருப்பதாக நேதாஜியிடம் தெரிவித்தேன்.
நமது விவசாயிகளும், தொழிலாளர்களும் போராட்-டத்திற்கும், புரட்சிக்கும் தயக்கமின்றி முன்வரு-வார்கள். முடிந்த அளவு தொழிலாளிகள், விவசாயி-கள் வர்க்கங்களிலிருந்து பெண் தொண்டர்களைச் சேர்த்து வரும்படி எனக்கு ஆணையிட்டார். அதற்கு அவர் எனக்குக் கொடுத்த கெடு மிகக்குறைவே.
மிகக்கடுமையான உழைப்புக்குப் பலனாக, சிங்கப்-பூரில் ஆறாயிரம் பெண் தொண்டர்களைத் திரட்டி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்தேன். அவர்களில் அநேகமாக எல்லோருமே படிப்பறிவு இல்லாதவர்கள். தமிழும், மலையாளமுமே தெரிந்து கொள்வார்கள் என்பதை நேதாஜியிடம் சொன்னேன். நேதாஜி தமது சொற்பொழிவை, ஹிந்துஸ்தானில் செய்ய, நான் அதை மொழிபெயர்த்து இந்தப் பெண்களுக்குச் சொன்னேன். நேதாஜியின் பேச்சைக் கேட்டு இந்தப் பெண்கள், ஆச்சரியத்தினால் ஸ்தம்பித்து நின்றார்கள். கடைசியில் நேதாஜி .என். படையில் தானாக முன்வந்து தொண்டர்களாக சேர யாருக்கெல்லாம் விருப்பம் என்று கேட்க கூட்டம் மொத்தமுமே, மேடையை நோக்கி ஓடிவந்தது. கையில் குழந்தை-யுடன் பலர் இருந்தனர். கடுமையாக மழை பெய்யத் தொடங்கிவிட்டது. ஆனால், இவையெல்லாம் அவர்-களின் உற்சாகத்தைக் குறைக்கவில்லை. நேதாஜியின் வார்த்தைகளில் என்ன மாயம் இருந்தது. எப்படி மந்திரத்திற்கு கட்டுப்படுவது போல எல்லோரும் ஒருமித்த குரலோடு அவரை ஆதரித்தனர் என்பதை கண்ணால் காணாத நீங்கள் ஒப்புக்கொள்வதோ, எண்ணிப் பார்ப்பதோ கடினம்.
ஜான்சிராணி ரெஜிமெண்டைப் பற்றியும், அதில் உங்கள் பங்கு என்ன என்பதையும் சற்று  விளக்கிச் சொல்லுங்களேன்.
எங்களுடைய ரெஜிமெண்ட் அதாவது படை சிங்கப்பூரில் பயிற்சி பெற்றது. மூன்று மாத பயிற்சிக்குப் பிறகு நாங்கள் பர்மா வந்து சேர்ந்தோம். இங்கும் சில நேரடிப் பயிற்சிகள் எங்களுக்கு அளிக்கப்பட்டன. இதன்பிறகு முன்னேறச் சொல்லி எங்களுக்குக் கட்டளை பிறந்தது. இந்திய தேசிய ராணுவம் இம்பால் நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது. அவர்களுக்கு உதவி செய்யும்படி நாங்கள் பணிக்கப்பட்டோம். ஆனால், வழக்கத்துக்கு மாறாக முன்னதாக வந்துவிட்ட மழைக்காலம், கடுமையாகப் பொழிந்தது. எங்கள் நடமாட்டத்தைத் தடுத்தது. சாதாரணமாக இந்தப் பகுதிகளில் மழை, மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத ஆரம்-பத்தில்-தான் பெய்யும். அந்த ஆண்டு மழை ஏப்ரல் மாதமே துவங்கிவிட்டது. இது மிகவும் பயங்கரமான மறக்க முடியாத போர் அனுபவம். இந்திய தேசிய ராணுவத்தினர், தங்கள் வீரத்தை பொன்-னெழுத்துக்-களால் பொறிக்கும்படியான, சரித்திரத்தை இங்கு நிகழ்த்திக் காட்டினார்கள் என்றால் மிகையாகாது. ஆரம்பத்தில் பிரிட்டிஷ் ராணுவம் பின்வாங்கும்படி ஆயிற்று. நாங்கள் மணிப்பூரை விடுவித்து, ஜோர்ஹட் வரை எங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிவிட்டோம். ஆனால் கடும் மழை தொடர்ந்தது. இந்த அளவு மழையை சமாளிக்க நாங்கள் தயாராக இல்லை. முன்னேறி தொடர்ந்து போக முடியாமல் அது தடுத்தது. யுத்தம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்தது. உணவும் யுத்த தளவாடங்களும் எங்களுக்கு பற்றாக்குறையாகப் போயிற்று. மிகவும் கஷ்டப்பட்டு சமாளித்தோம் என்றால் மறுபுறம் பயங்கரமான விஷப்பாம்புகள், பூச்சிகள், போதாததற்கு கொட்டும் மழை வேறு. எங்களுடைய இந்த நெருக்கடியை பிரிட்-டிஷ் இராணுவத்தினரும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். வேறு வழியின்றி நாங்கள் பின்வாங்கி-னோம். ஆனால் அது மிக பயங்கரமான போருக்குப் பிறகுதான்.
பிரிட்டிஷ் படைகள் முன்னேறிக் கொண்டிருக்க, ஜப்பானியர்கள் பின்வாங்கும் நிர்ப்பந்தம் வந்தது. இதனால் ஐஎன்ஏ பெரிதும் பாதிக்கப்பட்டது. உணவு, யுத்த தளவாடங்கள் பற்றாக்குறை வேறு ஐஎன்ஏக்கு சோர்வை தந்தது. ஆனாலும், தைரியசாலியான அந்த வீரர்கள் புல்லையும், இலைகளையும் தின்றும்கூட, விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினர். இந்த சமயத்தில் உங்கள் அனுபவம் எப்படி இருந்தது? கொஞ்சம் விவரித்து சொல்ல முடியுமா?
உயிரைத் தக்கவைத்துக் கொள்வதற்காக நானும் இலை தழைகளைத் தின்றேன். (சிரிக்கிறார்). 1944ல் பிரிட்டிஷ் படை முன்னேறியதால் எங்களுக்கு உணவு முதலியவை வரும் வழிகள் அடைக்கப்பட்டன. அதனால் எங்களுக்கு வந்து சேரவேண்டிய பொருள்-கள் வரமுடியவில்லை. பர்மாவில் காடுகளில் பலா மரங்கள் ஏராளமாக இருக்கும். இது எங்களுக்கு உதவியது. சில நாட்கள் பலாப்பழங்கள் எங்கள் உணவுப் பிரச்சினையைத் தீர்த்தது. ஆனால், சீக்கிரத்-திலேயே நாங்கள் இலை, தழைகளை உண்டு உயிரைக் கையில் பிடித்து வைத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். தென்னிந்தியர்களும், வங்காளி-களும் பச்சை இலைகளைப் பற்றியும் அதை உணவாக உட்கொள்ளும் முறைகளையும் அறிந்திருந்தனர். ஆனால், பஞ்சாபிகள் அப்படி அல்ல.  எப்போதுமே கோதுமையை உணவாகக் கொண்டவர்கள். உண-வாகக்-கூடிய தாவர வகைகளே அவர்களுக்குத் தெரிந்-திருக்கவில்லை. பல சிப்பாய்கள் விஷத்தன்மை கொண்ட பழங்களைச் சாப்பிட்டனர். நச்சுத்தன்மை கொண்ட சில செடிகளின் இலைகளை மென்றனர். பலன், ஒரு சிலர் வயிற்றுப்போக்கால் சிரமப்பட்டனர். மற்றவர்கள் மலேரியாவினால் பாதிக்கப்பட்டனர். என்னுடைய மருத்துவ அறிவு அந்த சமயம் மிகவும் உதவியது. பல சிப்பாய்களுக்கு நான் சிகிச்சை அளித்தேன்.



தோல்வியைத் தழுவிய நேரம், ஜப்பானியர்கள் இந்திய தேசிய ராணுவத்தை நம்பிப் பயனில்லை என்று எண்ண ஆரம்பித்து விட்டார்களோ?
அப்படியில்லை. அந்த நிலைமையை நீங்கள் உருவகப்படுத்திப் பார்க்கக்கூட முடியாது. கற்பனைக்-கெட்டாத ஒரு சூழ்நிலை அது. முதலில் இதை உணர்ந்துகொள்ளுங்கள். ஆரம்பத்தில் ஜப்பானியரும் நமது படையின் ஆற்றலை சற்று அவநம்பிக்கை-யோடு-தான் மதிப்பிட்டனர். ஆனால், நமது வீரர்களின் அட்டகாசமான வீரதீரச் செயல்கள், அவர்களை நம்மை வெகுவாக மதிப்புடன் நோக்கச் செய்தது. அடிமட்டத்தில் ஜப்பானிய அதிகாரிகளும், சிப்பாய்களும், நாங்களும் மிக அன்னியோன்மாகவே இருந்தோம். நண்பர்களாகப் பழகினோம். சில சமயங்களில் மேலிடத்தில் சில தவறுகள் நேரும். அதாவது எங்களுடைய தேவைக்கேற்ப பொருட்கள் வந்து சேருவதில் காலதாமதம் ஆகும். போக்குவரத்து சாதனங்கள் கிடைக்காது. இந்தச் சிறிய அடிமட்டத்தில் நாங்கள் நல்ல நண்பர்களாகவே இருந்தோம். சுமூகமாக உறவு நிலவியது.
இவ்வளவு கஷ்டகாலங்களில் நீங்கள் எப்படி நேதாஜியை இடைவிடாது சந்திக்க முடிந்தது?
செய்தி தரும் ஆட்கள் இருப்பர். கம்பியில்லாத் தந்தியோ, தொலைபேசியோ, ரேடியோவோ எங்களுக்குக் கிடையாது. நேதாஜி கட்டளைகள் தவறாமல் அந்தந்த நேரங்களில் வெளியிடுவார். அதை கம்பெனி கமாண்டர்களும், டிவிஷனல் கமாண்டர்-களும் எங்கள் அனைவருக்கும் படித்துக் காட்டுவர்.
நேதாஜியுடன் கடைசி சந்திப்பு முக்கியமாக கட்டமாக இருந்திருக்கும். அந்தச் சந்திப்பில் என்ன நடந்தது?
பலமுறை நேதாஜி கேட்டார். “நீங்கள் எல்லோரும் எங்களுடன்  வரப்போவதில்லையா? தயவுசெய்து வாருங்கள். எங்கள் வண்டியில் இடம் இருக்கிறது. ரங்கூன் சென்றவுடன் நாம் நமது நடவடிக்கைகள் பற்றித் தீர்மானிப்போம்’’ என்றார். நான் சொன்னேன். “இந்தப் போர்முனையை விட்டு இந்தச் சமயம் வரமாட்டேன்.’’ நேதாஜி எங்களுடைய மனஉறுதியைக் குலைக்க விரும்பவில்லை. அவ்வளவு நெருக்கடியான சமயத்திலும் அவரது புன்சிரிப்பும், தன்னம்பிக்கையும், அவர் முகத்தில் பிரதிபலித்ததைக் காணமுடிந்தது. ஷா எஸ்டேட்டில் நிறைய உளவாளிகள் சுற்றிக்-கொண்டு இருந்திருக்கின்றனர். நேதாஜி எங்களை விட்டுச் சென்றபின், அந்த ஆஸ்பத்திரியில் குண்டு வீச்சு பயங்கரமாக இருந்தது. ஆஸ்பத்திரி முழுவதும் பாழாகியது. டாக்டர்கள் எப்படியோ காப்பாற்றப்-பட்டனர். ஆனால், நோயாளிகள் பெரும்பாலும் கொல்-லப்பட்டனர். அப்படியும் உயிர் பிழைத்தவர்-களை மாட்டு வண்டிகளில் ஏற்றி ரங்கூனுக்கு அனுப்ப முயற்சித்தோம். கொரில்லாக்கள் எங்களை பின்-தொடர்ந்து, வழிமறித்தனர். நாங்கள் கைதானோம். போர்க்கைதிகளாக ரங்கூனுக்கு கொண்டுவரப்பட்டோம்.
போர்க்கைதியாக உங்களுடைய அனுபவம் எப்படியிருந்தது?
எங்கள் ரெஜிமெண்ட் பிரித்து தனியாக வைக்கப்-பட்டிருந்தது. என்னை ஒருவரும் சித்ரவதை செய்ய-வில்லை. எங்களை கேள்விகள் கேட்கும்போது அடிக்கடி ஒரு கேள்வி வரும். ஜப்பான், பிரிட்டனை விட உயர்ந்ததா? என்பதுதான் அது. நான் சொல்வேன் எனக்கு ஜப்பானும் சரி, பிரிட்டனும் சரி, ஒரு விதத்திலும் உயர்வு என்று தோன்றவில்லை. எங்களுக்கு வேண்டியதெல்லாம் தாய்நாடான இந்தியாவில் விடுதலைதான் என்று. நாங்கள் ஒருபோதும் ஜப்பானியார்களுக்கு அடிமையாக மாட்டோம். நிச்சயமாக எங்கள் சுதந்திர அரசாங்-கத்தை எங்கள் நாட்டில் ஏற்படச் செய்வோம்.
பிரிட்டிஷ் இராணுவத்தில் இருந்த ஸ்காட் சிப்பாய்கள் எங்கள் உறுதியைக் கண்டு வியந்தார்கள். எப்போதும் எங்களைப் பாராட்டுவார்கள். நாங்கள் செய்வது மிக புனிதமான தொண்டு என்று சொல்-வார்கள். இந்த சிப்பாய்களுக்கும் பிரிட்டனைப் பிடிக்காது. அவர்களுள் பலரும் எங்களிடம் ஒத்துக்-கொள்வார்கள். “ஆம், சுதந்திரத்திற்கு இணையாக வேறு எதுவுமே கிடையாது. நாங்களும் அதை அடைந்தே தீருவோம்’’ என்பார்கள்.
உங்களை எப்போது விடுதலை செய்தார்கள்?
1946ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நான் வீட்டுச் சிறையில் இருந்தேன். நான்தான் கடைசியாக விடுதலையானேன். இதற்குள் வழக்கு விசாரணைகள் முடிந்து அரசியல் சட்ட நிர்ணய சபை உருவாகி-விட்டது. எனக்கு விடுதலை கிடைத்ததும் நான் இந்தியாவுக்கு திரும்பி வந்துவிட்டேன்.
நீங்கள் பிறவியிலேயே புரட்சி மனப்பான்மை கொண்டவர். நிம்மதியற்ற அந்த இடைக்-காலங்-களில் நீங்கள் இந்தியா-விற்கு வந்து என்ன செய்தீர்கள்?
இந்தியாவைத் துண்-டாடும் திட்டம் ஏற்றுக்-கொள்ளப்பட்டு விட்டது. விடுதலைப் போராட்-டங்கள் ஓய்ந்துவிட்டன. நாட்டிலிருந்து பாகிஸ்தான் வெட்டி எடுக்கப்பட்டு, தனி நாடாக அறிவிக்கப்-பட்டது. நிலைமை சீர்குலைந்-திருந்தது. எங்கும் வெறுப்பும் உட்பகையும் விரோ-தமும், வன்முறையும், பைத்தியக்காரத்தனமான கோபா-வேசமும் நிலவியது. வடகிழக்கு தேசங்களிலிருந்து விடுதலையாகி வந்து .என்.. சிப்பாய்களுக்காக என்றே நாங்கள் ஓர் ஆண்டு வேலை செய்தோம்.
பிரிட்டிஷ் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்-களுக்கு பென்சன் கிடைத்தது. ஆனால், வெளிநாட்டு இந்தியர்கள். இந்திய தேசிய இராணுவத்தை சேர்ந்த-வர்கள் புறக்கணிக்கப்பட்டனர். மிகவும் அற்பத் தொகையே அவர்களுக்கு கிடைத்தது. அவர்களைப் போர்க் கைதிகள் முகாம்களிலிருந்து விடுவித்து இந்தியா-விற்கு கப்பல்கள் மூலம் அனுப்பினர். அதில் பலருக்கு தங்கள் சொந்த வீடுகளோ, உறவினர்களோ, இந்தியாவில் இருக்குமிடம் தெரியாது. அவர்களை செவிமடுத்துக் கேட்பாருமில்லை. நாங்கள் சென்னை போய் சேர்ந்தோம். சில நல்ல நண்பர்கள் உதவியுடன் உதவிக் கமிட்டிகளை நிறுவினோம். அப்போது சென்னையின் காங்கிரஸ் பிரிவின் தலைவராக இருந்தவர் திரு. காமராஜர். அவர் எங்களுக்கு பல விதத்-திலும் உதவினார். மிகப்பெரிய உதவி முகாம் நிறுவப்-பட்டது. இங்கிருந்து .என்.. சிப்பாய்கள் அவர்களுடைய இருப்பிடங்களைக் கண்டுபிடித்து போய்ச் சேர நாங்கள் நிறைய பாடுபட வேண்டி-யிருந்தது. சில சிப்பாய்களுக்கு வேலைவாய்ப்புகள் தேடித்-தரப்பட்டது. ஆனால், எங்களுடைய உழைப்பும் முயற்சியும் 30 ஆயிரம் சிவில் சிப்பாய்களுக்கு வாழ்க்கையை சீரமைக்கப் போதுமானதாக இல்லை.
பங்களாதேஷ் யுத்த சமயம் நீங்கள் சில உதவி முகாம்களை நடத்தினீர்கள். அதுபற்றிச் சொல்லுங்களேன்.
அந்த சமயம் மேற்குவங்காளத்தின் கவர்னராக இருந்தவர் பத்மஜா நாயுடு. நான் உதவி. முகாம்களில் தன்னிச்சையாக சேவை செய்ய விருப்பம் தெரிவித்து அவருக்கு கடிதம் எழுதினேன். எனக்கு வங்காள மொழி தெரியாது மிகவும் இடையூறாக இருக்கும் என்றும், இந்த வேலை மிகவும் கடினமானது என்றும் பதில் எழுதினார். இதற்கு பதில் நான் பணம், மருந்து முதலியவைகளை வசூலித்து அனுப்பலாம் என்று யோசனை கூறினார். இதற்கிடையில் ஜோதிபாசு அவர்கள் பத்திரிகைகளில் ஒரு விண்ணப்பம் விடுத்-திருந்தார். சேவை மனப்பான்மை கொண்ட டாக்டர்களை அவர் வரவேற்றார். நான் கல்கத்தா போய்ச் சேர்ந்தேன். அங்கிருந்துமக்களின் நிவாரண கமிட்டி’’யில் மற்ற டாக்டர்களோடு எல்லைப் பிரதேசங்களுக்கு சென்றேன். அங்கு 5 அல்லது 6 வாரம் வேலை செய்தேன். இங்கும் வேலை கடினமாக இருந்தது. திடீர் திடீரென்று வெடி ஓசைகளும், துப்பாக்கியால் சுடுவதும், வெடிவைத்து தகர்ப்பது-மாக ஒரே களேபரமாக இருந்தது. ஆனால், இந்தச் சூழ்நிலை எனக்கு பழக்கமானதே அதனால் சமாளித்தேன்.
மருத்துவத் துறையைத் தவிர உங்களை கவர்ந்த மற்ற துறைகள் எவை?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர், மேலும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர். அதில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.
நான் பல புரட்சியாளர்களை, விடுதலைப் போராட்ட வீரர்களை சந்தித்திருக்கிறேன். அவர்கள் இந்தியாவின் தற்சமய அரசியல் நடவடிக்கைகளால் நொந்துபோய் இருக்கிறார்கள்.
அப்படியல்ல. இது சரியல்ல நாம் ஒரு குறிக்-கோளுடன் சண்டையிட்டோம். அந்தக் குறிக்கோள் சுதந்திரம். முழுமையான சுதந்திரம். அதனால் எங்கள் முயற்சிகள் வீண் என்று பொருள் அல்ல. அந்த போராட்டத்தின் உட்பொருள் அழியவில்லை. அதனுடைய பாதிப்பு இன்னமும் வெளிப்படை-யாகவே உள்ளது. எங்களுடன் புரட்சி செய்தவர்கள் பலரும் முக்கியமாக பெண் சேவகிகள் போராட்டக்-காரர்கள். குறிப்பாக வங்காளத்தில் வீராங்கனை-களான சாந்தி, சுந்தி போன்றவர்கள், தங்கள் குடும்பம் என்ற கூட்டுக்குள் நுழைந்து கொண்டு விட்டனர். ஒரேயடியாக ஜடமாக செயலற்று போய்விட்டனர். எங்களுடைய போராட்டம் இன்னமும் முடிவு பெற-வில்லை. ஒருபகுதி முடிந்தது. அடுத்த அத்தியாயத்தை துவக்க வேண்டிய நிலையில் உள்ளோம். என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். நானும் அமைதியான சிக்கலற்ற குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு இருந்-திருக்க முடியும். இந்த நாட்டை இதன் ஆரம்ப நாட்-களிலிருந்து நாங்கள் உன்னிப்பாகப் பார்த்து வந்திருக்கிறோம். எப்போது எங்கு இந்த அழிக்கும் நச்சு உள்ளே நுழைந்தது. குடைந்து அழிக்க முயலுகிறது என்று அறிவோம். நாம் நமது குரல் உயர்த்தி கோஷமிட்டு  இதை நிறுத்தியிருக்க முடியும். ஆனால், நாம் அமைதியாக இருந்துவிட்டோம். ஒதுங்கி இருந்துவிட்டோம். நீங்களே முனைந்து வளர்த்த ஒரு இயக்கத்தை நடுவழியில் கைவிட்டால், முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். நமது லட்சியத்தை அடையும்வரை இடையில் ஓய்வு எடுப்பதோ, ஒதுங்குவதோ விவேகமல்ல. நான் ஒதுங்கவில்லை. வாய்மூடி மௌனியாக நடப்பைப் பார்த்துக் கொண்டு இயலாமல் உட்காரவும் இல்லை. வருங்கால சந்ததியினருக்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும். நமது குழந்தைகளுக்கு விளக்கியாக வேண்டும். நான் மிகவும் கடினமாக உழைத்தேன். இன்னமும் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

No comments:

Post a Comment