Wednesday, May 9, 2012

இது என்ன அபத்தம் யுவர் ஹானர்? சீதையும் வேண்டாம், ராமனும் வேண்டாமே...



நீதித்துறை  எவ்வளவு தூரம் காவிமயமாகி உள்ளது என்பதன்
அடையாளமாக மும்பை உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவர் 
அறிவுரை வழங்கியுள்ளார்.

விவாகரத்து பிரச்சினை நீதிமன்றத்திற்கு வருகின்றது. கணவன்
அந்தமான் தீவில் வசிக்க நினைக்கிறான். மனைவிக்கு மும்பையை
விட்டு வெளியே வர விருப்பமில்லை. எனவே அவன் விவாகரத்து
கேட்கிறான். 

இதற்கு மனைவியிடம் நீதிபதி கணவனோடு காட்டுக்குப் போன
சீதாபிராட்டியை பின்பற்றி நடக்க வேண்டும். அதுதான் நீதி என்று
கூறியுள்ளார். மனைவியின் விருப்பத்தை மதிக்காத கணவனுக்கு
அறிவுரை வழங்க அவர் தயாராக இல்லை. ராமன் இருக்கும் 
இடம்தான் சீதைக்கு அயோத்தி என்று உளுத்துப் போன அறிவுரை
மீண்டும் சொல்லப்பட்டுள்ளது. 

ராமன் இருக்கும் இடம்தான் சீதைக்கு அயோத்தி என்பதே ஒரு
ஆணாதிக்க சிந்தனைதான். ஒரு சமூகப் பிரச்சினையும் கூட.

கணவன், மனைவி இருவரும் பணி புரிந்தால் கணவன் இருக்கும்
இடத்திற்கே மனைவி மாற்றலில் செல்ல வேண்டும். மனைவி
இருக்கும் இடத்திற்கு கணவன் வர மாட்டான். இதிலே மனைவியின்
பணி என்பது பல முறை பலியாகியுள்ளது. 

மனைவி பணிபுரியும் இடத்திற்கு கணவன் மாற்றலில் வருவது
என்பது மிகவும் அரிய ஒன்று. என் தொழிற்சங்க அனுபவத்தில்
கண்கூடாக பார்த்து வருவது. 

இப்படிப்பட்ட நிலையில் இது போன்ற சிந்தனைகளை நீதிபதிகள்
விதைப்பது நல்லதல்ல. 

இந்த உதாரணமும் சரியானதா?

சின்ன மாமியார் கொடுமையை இளமையில் அனுபவித்தவர் 
சீதை. காட்டுக்கு செல்வது நியாயமா என்ற கேள்வியை கேட்கத்
தவறியதன் விளைவு அவர் கடத்தப்பட்டார். 

அத்தோடு நின்று போனதா அவர் அனுபவித்த கொடுமைகள்?

தீயில் குதிக்க நிர்ப்பந்தப்பட்டார். இதன் பின்பும் சந்தேகத்தின்
நிழல் படிந்ததால் காட்டுக்குத் துரத்தப்பட்டார். என்ன கொடுமை
இழைக்கப்பட்டாலும் அதை சீதை போல மௌனமாக ஏற்க 
வேண்டும் என்று நீதிபதி விரும்புகிறார் போலும்.

அனைத்து கொடுமைகளையும் பொறுத்துக் கொள்ளும் சீதை
போலவோ, தன்னை நியாயவான் என காண்பித்துக் கொள்ள
மனைவியை இன்னல் செய்த ராமன் போலவோ யாரும் 
இருந்திட வேண்டும்.

இந்த அபத்ததை கண்டிக்க வேண்டும். இல்லையென்றால்
பாஞ்சாலி போல, நளாயினி போல ஐவரை மணந்து கொள்,
கணவனை கூடையில் வைத்து தாசி வீட்டுக்கு எடுத்துச் செல்
என்று நீதிமன்றத்தில் உபதேசம் செய்யத் தொடங்கி விடுவார்கள்.

இனியும் இந்த அபத்தம் வேண்டாமே யுவர் ஹானர்.....
 

3 comments:

  1. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்ற பழமொழியை வழிமொழிந்த அறிவுரை. கல்லு குடித்து வந்தால் கல்லால் அடிப்போம் புல்லா குடித்து வந்தால் பெல்ட்டால் அடிப்போம் என்ற புது மொழி சமீபத்தில் படித்த ஒன்று.குடித்து வந்து பிரச்சனைப் பண்ணும் கணவனை அடித்தால் 10000 பரிசு தருவதாக சொன்ன காவல் துறை அறிவிப்பு நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

    ReplyDelete