Friday, May 19, 2017

சொகுசுக் காருக்காக பொங்கலாம். சோறுக்காக????????





முதலாளித்துவ சமுதாயத்தில் நீதிமன்றங்களும் முதலாளித்துவ அமைப்பின் ஒரு கருவிதான். முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எப்போதெல்லாம் சோதனை வருகிறதோ, அப்போதெல்லாம் நீதிமன்றங்கள் முதலாளித்துவத்திற்கு ஆதரவாகவே நிற்கும். மற்ற படி சில நேரங்களில் வருகிற சில நல்ல தீர்ப்புக்களைக் கொண்டு நீதிமன்றங்கள் நல்லவை, நியாயமானவை என்ற பிரமைகள் நமக்கு அவசியமில்லை.

அப்படி எல்லாம் நீதிமன்றங்களை நம்பி விடாதீர்கள் என்று அடித்துச் சொல்லியுள்ளார்கள் மதுரை பெஞ்ச் நீதியரசர்கள். தங்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீண்டும் பெறுவதற்காக நடத்திய போராட்டத்தை சகித்துக் கொள்ள முடியாமல் எஸ்மா சட்டத்தை ஏவி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள். மருத்துவர்கள் போராட்டத்தின் போதும் இதே அறிவுரையைக் கேட்க நேரிட்டது.

போராட்டம் என்றால் ஏன் சில நீதிபதிகளுக்கு வயிறு பற்றி எரிகிறது? அரசுக்கு எதிரான போராட்டம் என்றால் பொதுமக்கள் நலன் பாதிக்கப்படுகிறது என்று இப்போது பொங்குகிற எந்த நீதிபதியும் சமாதி அம்மையாருக்கு பெங்களூர் சிறப்பு நீதி மன்றம் தண்டனை கொடுத்த போது ஆளும் கட்சி அடிமைகளால் தமிழகம் முடக்கப்பட்டதே அப்போது என்ன செய்தார்கள்? அப்போது பொது மக்கள் பாதிக்கப்படவில்லையா?

தொழிற்சங்க சட்டங்களின்படி முறைப்படி அறிவிப்பு கொடுத்து நடைபெறும் வேலை நிறுத்ததில் பங்கேற்ற தொழிலாளர்கள் மீதே எஸ்மா சட்டத்தை பாய்ச்ச வேண்டும் என்று துடித்த நீதிபதிகளுக்கு அதிமுக அடிமைகள் மீது குண்டர் சட்டத்தை பிரயோகியுங்கள் என்று ஏன் சொல்லவில்லை? வர்க்க பாசம்!

இதே நீதிபதிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஊதியத்தையோ அல்லது பென்ஷனையோ ஒரு மாதம் கால தாமதம் செய்து கொடுக்கட்டும்! அப்போது தெரியும் இவர்களின் லட்சணம்!

சொகுசுக் கார் வாங்கிக் கொடுப்பதற்கு அரசு கால தாமதம் செய்கிறது என்று வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தவர்கள்தான் நமது மாட்சிமை பொருந்திய நீதிபதிகள். என்பது எவ்வளவு பேருக்கு நினைவில் உள்ளது?

உங்களுக்கு சொகுசுக் கார் முக்கியம் என்றால், யுவர் ஹானர், தொழிலாளிக்கு சோறு அதை விட முக்கியம். அதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

ஹெச்.ராஜாக்கள் போல நீதிபதிகள் மாறுவது நல்லதல்ல.

1 comment:

  1. எல்லா வேலையிலும் உடல் உழைப்பு உண்டு. நீதித்துறையில்?!

    ReplyDelete