Monday, December 31, 2018

நன்றி சொல்லி 2018 ஐ . . .





அவர்களால்தான் சாத்தியமானது . . .

























கஜா புயல் நிவாரண அனுபவத்தை என்னமோ தொடர்ச்சியாக எழுத இயலவில்லை. அதனால் இந்த வருடத்தின் இறுதிப் பதிவை எங்கள் தஞ்சைக் கோட்டச் சங்கத்திற்கு நன்றி சொல்லி நிறைவு செய்ய விழைகிறேன்.

புயல் தாக்கி கிட்டத்தட்ட  நான்கைந்து நாட்கள் ஆன பின்பே நிதி தருமாறு எங்கள் தோழர்களிடம் வேண்டுகோள் விடுத்தோம். ஒரு லட்சம் ரூபாய் வரை நிதி சேரும் என்றுதான் எதிர்பார்த்தோம். அப்படித்தான் எங்கள் தஞ்சைக் கோட்டச்சங்கத்திடமும் கூறி இருந்தோம்.

ஆனால் ஒரு கிளையை இன்னொரு கிளை மிஞ்சுவது என்று நிதி குவிந்து கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு லட்சத்து எழுபது ஆயிரத்தை தொட்டது.

நிவாரணப் பொருட்களை வேலூரில் வாங்கி எடுத்து வருவதா என்றும் என்ன பொருட்கள் வேண்டும் என்றும் கேட்டதற்கு 

அனைத்துப் பொறுப்புக்களையும் தஞ்சைக் கோட்டத் தோழர்களே சுமந்து கொண்டார்கள்.

பொருட்களை வாங்குவது,
அவற்றை ஒழுங்கமைப்பது,
எந்தெந்தப் பகுதிகளுக்கு என்ன அளிப்பது,
பயனாளிகளை தேர்ந்தெடுப்பது,
அந்த பகுதியில் உள்ள தோழர்களோடு ஒருங்கிணைப்பது,
அந்த பகுதிகளுக்குச் சென்று வினியோகிப்பது,

என்று அனைத்து பணிகளையும் அவர்களே பார்த்துக் கொண்டார்கள். எங்கள் கோட்டத்திற்கு மட்டுமல்ல, எங்களுக்கு முன்பாகச் சென்ற இதர கோட்டங்களுக்கும்தான். கிட்டத்தட்ட இருபது நாட்கள் தஞ்சைக் கோட்டத் தோழர்கள் இதே பணியாகத்தான் இருந்தார்கள்.

பட்டுக்கோட்டை கிளைத் தோழர்களின் பணி மகத்தானது. பட்டுக்கோட்டை கிளை அலுவலகத்தில் உள்ள விருந்தினர் அறை நிவாரணப் பொருட்களின் கோடவுனாகவே மாறி இருந்தது.

கடைகளில் இருந்த பொருட்களை இறக்கி வைத்து பேக் செய்வது,
பின் நிவாரணப் பணி வாகனத்தில் ஏற்றுவது,
பின்பு குறிப்பிட்ட இடத்தில் அதை இறக்கி வினியோகிப்பது போன்ற அனைத்து  நிவாரணப் பணிகளையும் அவர்களே பார்த்துக் கொண்டார்கள்.

தஞ்சைக் கோட்டச்சங்கத்தின் தலைவரும் தென் மண்டல துணைத்தலைவருமான தோழர் ஆர்.புண்ணியமூர்த்தி நிவாரணப்பணியினை முழுமையாக வழிகாட்டி எங்களோடு இருந்தார். தஞ்சைக் கோட்டத்தின் இளைய கோட்டப் பொறுப்பாளர் தோழர் விஜயகுமார் துல்லியமான திட்டமிடலோடு பணிகளை ஒருங்கிணைத்தார்.

தஞ்சைக் கோட்டத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மூத்த தலைவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான தோழர் என்.சீனிவாசன் அன்று முழுதும் எங்களோடு இருந்தது எங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய பெருமை.

பாளையம்
உதயசூரியபுரம்
நம்பிவயல்
திருவோணம்
பரவலாக்கோட்டை
சாந்தன் காடு

ஆகிய கிராமங்களில் உள்ள 715 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கினோம். 

தஞ்சைக் கோட்டத் தோழர்களால் மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான எங்களின் மிகச் சிறிய பங்களிப்பு என்பது சாத்தியமானது. பாதிக்கப்பட்டவர்களிடம்  நேரடியாக செல்ல முடிந்தது.

அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைச் சொல்லி 2018 ம் ஆண்டின் இறுதிப் பதிவை நிறைவு செய்கிறேன்.

நாளை சந்திப்போம்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

1 comment:

  1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete