Wednesday, December 5, 2018

சின்ன தொகை, பெரிய நம்பிக்கை




கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்ய எங்கள் தோழர்களிடம் நிதி கேட்டு அறைகூவல் விடுத்தோம்.  தோழர்களும் தாராளமாக அள்ளிக் கொடுத்தனர். கிட்டத்தட்ட இரண்டே முக்கால் லட்சம் ரூபாய். தஞ்சைக் கோட்டச் சங்கத்தின் வழிகாட்டுதல்படி, அவர்களின் கடுமையான பணியின் ஒரு பகுதியாக இப்போது பட்டுக்கோட்டை நோக்கி எங்களால் இயன்ற உதவியை வழங்க சென்று கொண்டிருக்கிறோம்.  

நிதி வசூல் தொடர்பாக சில தகவல்களை மன நிறைவோடு பகிர்ந்து கொள்வதுதான் இப்பதிவின் நோக்கம்

எங்கள் அரக்கோணம் கிளைச் செயலாளர் தோழர் ஆர்.குமரேசன் பகிர்ந்து கொண்ட ஒரு தகவல் .

அரக்கோணம் கிளைப் பொறுப்பாளர்கள், அரக்கோணம் கிளைத் தோழர்களிடம் பட்டியலைக் கொடுத்து நிதியை சேகரிக்கையில் தனது இன்சூரன்ஸ் பிரிமியத்தை செலுத்த வந்த ஒரு பாலிசிதாரர், என்ன விபரம் என்பதைக் கேட்டறிந்து என்னுடைய பங்களிப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு ஐநூறு ரூபாயை அளித்துள்ளார். இத்தனைக்கும் அந்த பாலிசிதாரருக்கு எந்த ஒரு ஊழியரோடும் நேரடியாக பரிச்சயம் கிடையாது.

இருப்பினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானும் உதவ வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தன்னால் முடிந்த தொகையை கொடுத்துள்ளார்.

வேலூர் கிளையின் ஒரு மூத்த முகவர், உங்கள் சங்கம் நிவாரண உதவி செய்யவுள்ளதா என்று கிளைத்தலைவர் தோழர் பி.எஸ்.பாலாஜியிடம் தொலைபேசியில் கேட்டு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

எங்கள் கோட்டத்தின் முதல் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.ஜகதீசன், இப்போது ஹைதராபாத்தில் உள்ளார். நிவாரண நிதியாக ஆயிரம் ரூபாய் கொடுக்க விரும்புவதாக மெஸஞ்சர் மூலம் தொடர்பு கொண்டு வங்கி எண்ணை அனுப்பிய அடுத்த நிமிடம் பணத்தை அனுப்பி வைத்தார். 

சின்ன கல்லு, பெத்த லாபம் என்பது திரைப்பட வசனம். 

சின்ன தொகை என்று சொல்லி அவர்கள் கொடுத்தார்கள். ஆனால் அவையெல்லாம் மனிதம் இன்னுடன் உயிர்ப்போடுதான் இருக்கிறது என்ற பெரிய நம்பிக்கையை விதைத்தது அவர்கள் செயல்.



No comments:

Post a Comment