Thursday, June 8, 2017

கொள்ளையர்களே, தூண்டி விட்டதே நீங்கதானே!!!!!!!



கோடி ரூபாய் கொடுக்கும் கொள்ளையனே உயிர் கொடுப்பாயா?????

போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கித் தோட்டாக்களை பாய்ச்சி உயிர் பறித்த மாட்டரசு முதல்வர் சிவராஜ்சிங் சௌஹான், உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தருவதாக அறிவித்துள்ளார்.

வியாபம் ஊழலில் பல்லாயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்த, கொள்ளையடித்த பணத்தை பாதுகாக்க நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் மர்ம மரணங்களுக்கும் கொலைகளுக்கும் காரணமாயிருக்கிற மத்தியப் பிரதேச பாஜக முதல்வருக்கு உயிர்களை எடுப்பதோ அல்லது கோடிகளை அள்ளி விடுவதோ சாதாரணமான விஷயம்தான்.

எங்கள் ஆட்சிக்கு எதிராக போராடுவதா என்ற ஆணவத்தின் வெளிப்பாடே துப்பாக்கிச்சூடு. துப்பாக்கிச்சூட்டையும் நிகழ்த்தி விட்டு இழப்பீடும் தருவது என்பது மோசடி வேலை. அரசு அறிவித்துள்ள இழப்பீட்டுத்தொகையைப் போல இரு மடங்குத் தொகையை அந்த குடும்பத்தினரே அரசுக்குத் தந்தாலும் போன உயிர்களை மீட்டுத் தருகிற வல்லமை அரசுக்கு உண்டா? சர்வரோக நிவாரணி, சஞ்சீவணி என்று கதைக்கிற கோமியத்தைக் கொண்டு முயற்சி செய்வார்களா?

அராஜக செயல்பாடுகளால் மோடியும் யோகியும் ஊடக வெளிச்சத்திலேயே இருக்கையில் நான் என்ன அவர்களுக்கு குறைந்தவனா என்று நிரூபிப்பது போல இருக்கிறது மத்தியப்பிரதேச பாஜக முதல்வரின் கொடூரம்!

இனி எந்தெந்த மாநிலங்களில் என்னென்ன அராஜகம் நிகழப்போகிறதோ?

பின் குறிப்பு : நேற்றே பதிவிட்டிருக்க வேண்டும். தோழர் சீத்தாராம் யெச்சூரி மீதான தாக்குதலால் இயலவில்லை.

ஏவல்துறையின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் ம.பி மாநில விவசாயிகள் தொடர்ந்து போராடுவது நிறைவளிக்கிறது. விவசாயிகளை தூண்டி விட்டவர்கள் யாரென்பதை கண்டறியுமாறு ம.பி அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். கைப்புண்ணிற்கு கண்ணாடி எதற்கு? விவசாயிகள் மடிவதை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் அவர்கள் பிரச்சினைகள் தீர எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மீண்டும் உலகம் சுற்ற கிளம்பிவிட்ட மோடியைத் தவிர வேறு யாரால் விவசாயிகளால் போராட்டத்தை தூண்டிவிட முடியும்?

மாட்டின் பெயரால் அரசியல் நடத்திக்கொண்டு மனிதர்களை வதைக்கும் பாஜக மோடியின் ஆட்சிதான் அனைவரது துயரங்களுக்குமான அடிப்படைக் காரணம்.

No comments:

Post a Comment