Saturday, May 30, 2015

ஆர்.எஸ்.எஸ் பவனாகும் ஐ.ஐ.டி கள்

சென்னை ஐ.ஐ.டி யில் செயல்பட்டுக் கொண்டிருந்த அம்பேத்கர்- பெரியார் வாசகர் வட்டத்தை தடை செய்து மோடி அரசு தான் ஒரு பாசிச அரசு என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் கொண்டுள்ளது.

அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் - இருவருமே காவிக் கூட்டத்தால் வெறுக்கப்படுபவர்கள். காவிக் கூட்டத்தின் மேலாதிக்க சதிகளை அம்பலப் படுத்தியவர்கள் என்பதால் இருவருமே பரம வைரிகள். ஆகவே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இருவரையும் இழிவு படுத்த காவிக்கூட்டம் தயங்காது.

மோடியை விமர்சனம் செய்தார்கள் என்பது ஒரு சாக்காக இருக்க முடியுமே தவிர அவர்கள் உள் மனதில் ஒளிந்து கொண்டிருப்பது  ஆர்.எஸ்.எஸ் சின்  சிந்தனைக்கு எதிரானவர்களை இருட்டடிப்பு செய்வதுதான். 

சாதாரணமாகவே அவர்களின் குணம் இதுதான் என்கிற போது ஆட்சி கையில் இருக்கிற ஆணவத்தில் என்ன வேண்டும் செய்யலாம் என்ற ஆட்டத்தின் ஒரு பகுதிதான் இது.

ஐ.ஐ.டி யில் இவர்களின் முதல் அராஜக நடவடிக்கை இதுவல்ல என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்.

ஏற்கனவே ஒரு ஆர்.எஸ்.எஸ் பேர்வழியின் கடிதத்தின் அடிப்படையில் அசைவ உணவு பறிமாறுவதை நிறுத்துங்கள் என்று உத்தரவு வழங்கிய அரசுதான் இது.

இனி ஐ.ஐ.டி வளாகத்தில் யாரும் சாப்பிடுவதற்குக் கூட வாய் திறக்கக் கூடாது என்று உத்தரவு போட்டால் கூட ஆச்சரியப் படுவதிற்கில்லை.

ஆனால் அவர்கள் எதிர்பாராத ஒரு விஷயம் என்னவென்றால் இந்த பாசிச முடிவிற்கு எதிராய் நாடு முழுவதும் எழுந்துள்ள கண்டனக் குரல்கள். சுயமாய் சிந்திக்கும் மனிதர்கள் அனைவரும் பொங்கி எழுந்துள்ளனர். பெரும்பாலான அமைப்புக்கள் கண்டனக்குரல் எழுப்பியதோடு நிற்காமல் போராட்டங்களையும் துவக்கியுள்ளனர். அப்படி ஒரு கண்டனச் செய்தியை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.



பாசிச ஹிட்லருக்கு வரலாற்றில் என்ன மோசமான பெயர் கிடைத்துள்ளதோ அதை விட மோசமான பெயர் மோடிக்காக காத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் மோசமான கறுப்புக் காலம் மோடியின் ஆட்சிக்காலம்தான். 

1 comment:

  1. மிகவும் கண்டனத்திற்கு உரிய செயல் நண்பரே

    ReplyDelete