Friday, April 20, 2012

குரல்வளை நெறிபட்ட போதும்

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுக்காவில் செஞ்சி என்று 
ஒரு கிராமம். அந்த கிராமத்து பஞ்சாயத்து தலைவர் முருகன்
என்பவர் ஆளும் அதிமுக கட்சிக்காரர். தலித் இனத்தைச்
சேர்ந்தவர். அவரை செயல்பட விடாமல் அதே கிராமத்தைச்
சேர்ந்த ஆளும்கட்சி பிரமுகர், ஆதிக்க சாதியைச் சேர்ந்த
வெங்கடேசன் என்பவர் தடுத்து வருகிறார். எல்லா பணிகளிலும்
லஞ்சம் தர வேண்டும். இவர் சொல்லும் வேலையைத்தான்
செய்ய வேண்டும் என்று மிரட்டுகின்றார்.

மறுத்த போது ஜாதியைச் சொல்லி, ஆபாசமாக திட்டுகின்றார்.
உன்னை கொலை செய்வேன், உன் மனைவியை பாலியல்
வன் கொடுமை செய்வேன் என்றெல்லாம் பேசுகின்றார்.
அரசியல் தரகரான இந்த வெங்கடேசன் ஜெயலலிதா பேரவையின்
மாவட்ட துணைச்செயலாளர். அந்த ஹோதாவில்தான் இந்த
ஆட்டம். 

காவல்துறையில் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதற்குப்
பதிலாக கட்டப் பஞ்சாயத்து செய்கின்றது. முதல் தகவல் அறிக்கை
பதிவு செய்யவே தயாராக இல்லை.

பிரச்சினை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கவனத்திற்கு வர
அந்த கிராமத்திற்கு பக்கத்தில் உள்ள லத்தேரி என்ற ஊரில்
ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்படுகின்றது. ஆனால் 
அனுமதி வழங்க காவல்துறை மறுத்து விட்டது.

அந்த வெங்கடேசன் அயோக்கியன்தான், ஆனாலும் அனுமதி
கிடையாது என்று மறுக்கிறார் காட்பாடி டி.எஸ்.பி. 

ஆனாலும் தோழர்கள் குழுமினர். உறுதியாய் ஆர்ப்பாட்டம்
நடந்தது. காவல்துறை அனுமதி இல்லாததால் ஒலி பெருக்கி
பயன்படுத்த முடியவில்லை. 

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டால் கைது செய்யப்படுவார்கள்
என்று அந்த ஊர் மக்களை வேறு மிரட்டி அந்த கிராமத்தை விட்டே
வெளியேற்றி விட்டது. கைது மிரட்டலுக்கு அஞ்சாமல் இன்று
ஆர்ப்பாட்டத்தை துவக்கிய போது காவல்துறை படையாக
அணி திரண்டிருந்த போதும் அப்போது எந்த மிரட்டலும் 
செய்யவில்லை.

ஒரு தலித் ஊராட்சி தலைவர் செயல்பட முடியாமல் தடை
வருகிற போது அவருக்கு பாதுகாப்பாக செயல்பட வேண்டிய
அரசு நிர்வாகம், தரகனுக்கு துணையாய் நிற்பதன் மர்மம்
என்ன?

பிரதமருக்கு எதிராகவோ, முதல்வருக்கு எதிராகவோ 
ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்காத காவல்துறை
ஒரு மூன்றாம்தர மனிதனுக்கு ஆதரவாக நிற்கிறது.

அனுமதி மறுப்பது என்பது ஜனநாயகத்தின் குரல்வளையை
நெறிக்கும் ஈனச்செயல். ஆனாலும் அஞ்சாமல் தீண்டாமை
ஒழிப்பு முன்னணியின் குரல் ஒலித்தது. 

அனுமதி அளித்திருந்தால் பிரச்சினை பற்றி மட்டும்
பேசியிருப்போம். தங்களை தோலுரிக்க காவல்துறையே
வழி ஏற்படுத்திக் கொடுத்தது என்பது ஒரு யதார்த்தமான
உண்மை. 

1 comment:

  1. என்ன இது அக்கிரமம்? பொது வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரை வேரொருவர் எக்காரணத்தைக் கொண்டும் அவமதிப்பது கூடாது. அவர் பொறுப்புகளை கடமைகளை நிறைவேற்றம் செய்யும் பணிகளுக்கு எந்த வித இடைஞ்சலும் செய்யவும் கூடாது. மக்களாட்சி முறைப்படி நியமிக்கப்பட்ட தலைவர் ஒருவரை அவமதிப்பது என்பது அவரை அப்பதவியை நிர்வகிக்கும் பொறுப்பையும் உரிமையையும் ஒப்படைத்த அனைத்து மக்களையும் அவமதிப்பதாகும். அனைத்து சட்டத்தையும் சமுதாயத்தையும் அவமதிப்பதாகும்.

    நபர் ஒருவர் ஏதோ ஒரு பதவிக்கு ஆசைப்பட்டு, தனது திறமையின்மையாலும் ஒழுக்கக் கேட்டாலும், தகுதியற்றவர் என்பதாலும் அவருக்கு அப்பதவி கிடைக்காமல் போவது நியாயமானதே. இதை உணர்ந்து இவர் அடங்கிப் போவதே நலம். இப்படி நடக்காமல், தகுதியான வேரொருவர் அப்பதவி பொறுப்பேற்ற பின்னரும் பொறாமையில் சாதிகளை குறிப்பிட்டு ஒருவரை அவமானப் படுத்துவது என்பது கீழ்த்தரமான செயலாகும்.

    பதவி ஒன்றுக்கு பொறுப்பேற்ற பின் தலைவர் ஆற்ற உள்ள கடமைகளை தடுக்கவோ இடைஞ்சல் செய்யவோ முயற்சிக்கும் நபர் யாராயிருப்பினும் அவர் அச்சமுதாயத்தின் எதிரியே ஆவார்.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete