Wednesday, November 26, 2014

மகனின் கடிதம் – அதிர்ச்சியில் தந்தை, நாமும் கூட



http://resources1.news.com.au/images/2014/04/10/1226880/109969-d58cdbb6-c074-11e3-b362-fbc371d40a1d.jpg

மகனின் படுக்கையறைக்குள் நுழைந்த அந்த தந்தை ஆச்சர்யமடைந்தார். வழக்கத்திற்கு மாறாக அந்த அறை மிகவும் சுத்தமாக இருந்தது. கொடிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் உடைகள் எதையும் காணவில்லை. மேஜையும் சுத்தமாக இருந்தது. மேஜையின் மேலே ஒரு கடிதம் படபடவென காற்றில் துடித்துக்கொண்டிருந்தது.

கடிதத்தை கையில் எடுத்து படித்த அவர் வாழ்வின் உச்சகட்ட அதிர்ச்சிக்குச் சென்றார்.

அக்கடிதம்.

அன்புள்ள அப்பா, உங்களுக்கு வேதனையும் வருத்தமளிக்கும் செய்தியைச் சொல்வதற்கு என்னை மன்னித்து விடுங்கள். நான் எனது காதலியோடு இந்த ஊரை விட்டே செல்கிறேன். இதனைச் சொன்னால் நீங்களும் அம்மாவும் கோபப்பட்டு எங்களை திட்டுவீர்கள், அம்மா கண்ணீர் விட்டு அழுவார். அதையெல்லாம் எனது பலவீனமான இதயம் தாங்காது என்பதால்தான் உங்களிடம் சொல்லாமல் புறப்படுகிறோம்.

என் சினேகிதியின் உடை, அவள் கையிலும் உடலிலும் ஏராளமாக பச்சை குத்தியிருக்கிற வரைபடங்கள், பரட்டைத்தலை ஆகியவற்றை மட்டுமல்ல, அவள் என்னை விட ஐந்து வயது மூத்தவள் என்பதையும் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பது எனக்கு தெரியும். ஆனாலும் அவளது கர்ப்பத்திற்கு நான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறதே…

உங்களையெல்லாம் விட என்னை நன்றாக புரிந்து கொண்டவள் மட்டுமல்ல, ஹெராயின், அபின் போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவது தவறல்ல, அவை தரும் சுகமான அனுபவத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பதை எனக்கு கற்றுக் கொடுத்தவளும் அவள்தான்.

காட்டிற்கு நடுவே எங்களைப் போன்றவர்கள் வசிக்கும் விடுதி ஒன்று உள்ளது. அங்கே எங்கள் பொழுது இனிமையாகவே செல்லும். எங்கள் செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் நிறைய நகைகளும் எடுத்துச் செல்கிறோம். சரியான முடிவெடுக்கும் பக்குவத்தை அடைந்த பதினைந்து வயது வாலிபன் நான் என்பது உங்களுக்கு தெரியும். ஆகவே என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம். ஏராளமான பேரக் குழந்தைகளோடு ஒரு நாள் உங்களை சந்திப்போம்.

இதைப் படித்து முடிக்கையில் அந்த தந்தைக்கு நெஞ்சு வலியே வந்து விட்டது.

கடிதத்தில்  பின் பக்கம் பார்க்கவும் என்று எழுதியிருந்தது.

பின் பக்கத்தில்
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
அப்பா, முதல் பக்கத்தில் நான் எழுதியது எல்லாமே பொய். வாழ்வில் எத்தனையோ மோசமான விஷயங்கள் நிகழ வாய்ப்புள்ளது என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள். அவற்றோடு ஒப்பிடும் போது அரை இறுதித் தேர்வில் நான் வாங்கியுள்ள மதிப்பெண்கள் உங்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியளிக்காது. நான் என் நண்பன் வீட்டில்தான் இருக்கிறேன். என் மதிப்பெண் பட்டியலில் கையெழுத்திட்டு விட்டு அழைக்கவும்.

(முக நூலில் ஆங்கிலத்தில் படித்ததை தமிழில் அளித்துள்ளேன். எப்பவுமே ரொம்ப சீரியஸாவே எழுதனுமா என்ன? )

2 comments:

  1. தமிழாக்கம் மட்டும்தான் சார் நான். ஒரிஜினலாக எழுதியவர் யார் என்று தெரியாது

    ReplyDelete