Thursday, November 27, 2014

அவனுக்கு நாய், இவனுக்கு பேய்







சில மாதங்கள் முன்பாக நாக்பூரில் நடைபெற்ற எங்கள் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டில் எங்கள் அகில இந்திய தலைவர் தோழர் அமானுல்லாகான் அவர்களின் உரையை பகிர்ந்து கொண்டிருந்தேன். தென் ஆப்பிரிக்காவில் நிற வெறி உச்சத்தில் இருந்த காலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வை அவர் அப்போது கூறினார்.

அச்சம்பவம் இதுதான்

“வெள்ளையர்களுக்கான பூங்கா ஒன்றில் நுழைந்த ஏழு வயது கறுப்பின பெண் குழந்தையை ஒரு வெள்ளையன் சுட்டுக் கொன்றான். அந்த பெண் குழந்தை நாய் போல இருந்தது என்று காரணமும் சொன்னான். நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோது “அந்த குழந்தையை கொன்றதில் தவறில்லை, அது நாய் போலத்தான் இருந்தது” என்று நீதிபதியும் தீர்ப்பளித்தார். ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகத்தான் நீதிபதிகளும் இருப்பார்கள். நீதிமன்றங்களும் இருக்கும்.”

காலம் வேகமாக உருண்டாலும் நிற வெறி என்பது மாறவில்லை, மறையவில்லை என்பதை அமெரிக்க சம்பவம் உணர்த்துகிறது.

கையில் எந்த ஆயுதமும் இல்லாத மைக்கேல் பிரவுன் என்ற கறுப்பின இளைஞனை அமெரிக்காவில் டாரென் வில்சன் என்ற காவல்துறை அதிகாரி சுட்டுக் கொன்று விட்டான். நீதி விசாரணை நடத்தி அந்த போலீஸ்காரர் மீது தவறு எதுவுமில்லை என்று வழக்கு பதியாமலே விடுதலை செய்து விட்டார்கள்.

அந்த நீதிமன்ற விசாரணையில் அந்த போலீஸ்காரன் "மைக்கேல் பிரவுன் பார்ப்பதற்கு பேய் போலவும்  ஹல்க் குரங்கு போலவும் அச்சுறுத்தும் தோற்றத்தில் இருந்ததாக சொல்லியுள்ளான். விடுதலையும்  ஆகியுள்ளான். 

ஆப்பிரிக்காவில் ஒரு நிற வெறியன் தான் கொன்ற குழந்தையைப் பார்க்க நாய் போல இருந்தது என்று சொன்னான்.

இப்போது தான் கொன்ற வாலிபன் பார்க்க பேய் போல இருந்ததாக டாரென் வில்ஸன் கூறியுள்ளான்.

வெறி தலைக்கேறி மனிதத்தன்மை இழந்தவர்களுக்கு மனிதர்கள் கண்ணில் படமாட்டார்கள் போல. 

இந்த வெறியனை விடுதலை செய்துள்ளதுதான் அமெரிக்க நீதி.

மனித உரிமை வேதத்தை  அமெரிக்க சாத்தான் ஓதுவது எவ்வளவு பெரிய கொடுமை.....


2 comments:

  1. மனித உரிமை வேதம் மற்ற நாடுகளுக்குத்தான்

    ReplyDelete
  2. ஆமாம் ஜெயகுமார் சார். சிறைகளில் மோசமான சித்திரவதைகள் நடப்பதிலும் முதலிடத்தில் இருப்பது அமெரிக்காதான்

    ReplyDelete