Monday, June 18, 2012

அந்த நாள் இனி வருமா?

இன்று காலை முக நூலில் பார்த்த இந்தப்படம் பழைய 
நினைவுகளைக் கிளறி விட்டது.


டேப் ரிகார்டர்  ஒரு காலத்திய கனவு. கல்லூரிக் காலத்தில்
விடுதி அறையில் பக்கத்து அறையில் இருந்த பணக்கார
மாணவன் ஒரு சின்ன டேப் ரிகார்டரைக் கொண்டு வர
அவன் அந்த  நிமிடமே ஹாஸ்டலின் வி.ஐ.பி யாகி 
விட்டான். மற்றவர்களுக்கு அதை எட்டி நின்று பார்க்க
மட்டும்தான் அனுமதி, அவன் விரும்பும் பாடல்களை
மட்டும்தான் கேட்க வேண்டும், மற்றவர்கள் படிக்கும் போதோ
எழுதும் போதோ அவன் பாட்டு போட்டால் அவர்கள் அந்த
வேலைகளை அப்படியே விட்டு விட்டு பாட்டு கேட்க வேண்டும்
என்றெல்லாம் நிபந்தனைகள் போடத் தொடங்கி விட்டதால்
திராட்சை கிட்டாத நரிகளாக ஒரு கட்டத்தில் வெளியேறி
விட்டோம். 


எனது  இரண்டாவது அண்ணன் முதன் முதலில் ஒரு டோஷிபா
வாங்கி வந்தான். கூடவே இரண்டு காஸெட்டுகள், ஒன்று 
ஜேம்ஸ் பாண்டு படங்களின் டைட்டில் பாடல்கள், இன்னொன்று
ஒரு போனியெம் காஸெட் என்று நினைக்கிறேன். புரிந்ததோ
புரியவில்லையோ, பிடித்ததோ, பிடிக்கவில்லையோ, அதைக்
கேட்டுக் கொண்டே இருந்தது ஒரு காலம். 

எல்.ஐ.சி பணிக்கு சேர்ந்த பின்பு முதன்முதலாக ஒரு காஸெட்
பதிவு செய்தேன். இளைய ராஜா பாடல்கள் அடங்கியது அந்த
காஸெட். பின்பு நான் நெய்வேலி எல்.ஐ.சி ஊழியர் குடியிருப்பிற்கு
வந்து  நான்கைந்து மாதங்களுக்குப் பின்பு ஒரு புதிய பி.பி.எல்
டேப் ரிகார்டர் வாங்கினேன். முதல் காஸெட் கர்ணன் பாடல்கள்.

அப்போது இருந்த சம்பளத்திற்கு ஒரு மாதத்திற்கு ஒரு காஸெட்
வாங்குவதே சிரமமாக இருக்கும். அலுவலக விஷயமாக 
வேலூர் வந்தால் கிடைக்கும் பயணப்படியை மிச்சம் பிடித்து
காஸெட்டுகள் வாங்கிய காலமும் உண்டு.

ஒரு முறை எனது பெரிய அண்ணன் நெய்வேலி வந்த போது
அவன் வைத்திருந்த யேசுதாஸின் கர்னாட சங்கீத காஸெட் 
கேட்ட போது, தேவகாந்தாரி ராகத்தில் ஷீரசாகர சயனா என்ற
பாடல் அப்படியே ஈர்த்தது.  அதே காஸெட்டில் இருந்த கல்யாணி
ராகப் பாடலான ' ஏதா  உணரா" வில்  யேசுதாஸ் பிரயோகித்த
வேகமான ஸ்வரங்கள் அப்படியே மயக்கியது.

பள்ளி படிக்கும் காலத்தில் திருவையாறு தியாகராஜ ஆராதனைக்கு
என்.சி.சி, என்.எஸ்.எஸ், கூட வரும் உறவினர்களுக்கு துணையாக
சென்ற பூர்வ ஜன்ம ஞாபகமும் இணைந்து கொள்ள பிறகு வாங்கத்
தொடங்கியது கர்னாடக இசை காஸெட்டுக்களை.

என் திருமணத்தின் போது ஒரு சம்பவம். நெய்வேலி கிளை
ஊழியர்கள் எனது திருமணப் பரிசாக ஒரு வி.ஐ.பி பெட்டி,
அயர்ன் பாக்ஸ், மேஜை விளக்கு என வாங்கினார்கள். நானும்
கூட சென்றிருந்தேன். இவையெல்லாம் வாங்கியது போக மீதம்
பணம் இருந்தது. அதிலே தேடித்தேடி யேசுதாஸ், மகாராஜபுரம்
சந்தானம், டி.என்.கிருஷ்ணன், சிட்டி பாபு என காஸெட்டுகளாக
வாங்கினேன். 

திருமணத்திற்கு வந்த பரிசுப் பொருட்கள், பரிசுப்பணம்
 அனைத்தையும்  அந்த பெட்டியில்தான் வைத்திருந்தோம். 
அந்த பெட்டி மண்டபத்திலேயே  காணாமல் போய் விட்டது. 
பணம், பரிசுப் பொருட்கள் போனதை விட  தேடிப் பிடித்து 
வாங்கிய காஸெட்டுகள் போனதுதான் அப்போது  மிகவும் 
வருத்தமாக இருந்தது. அன்று வாங்கிய டி.என்.கிருஷ்ணன்
வயலின் பாடல்கள் பிறகு எங்குமே கிடைக்கவில்லை.


அரியக்குடி ராமானுஜய ஐயங்கார் பாடிய 'எவரி மாட' பாட்டு
போல வருமா என்று என் அப்பா சொல்லிக் கொண்டே இருப்பார்.
சென்னையில் கூட கிடைக்காத அந்த பாட்டு தற்செயலாக 
மும்பையில் கிடைத்தது. அதைக் கேட்கும் போது வழக்கமாக
இறுக்கமாக இருக்கும் அவர் முகம் கூட மலர்ந்தது.

இளையராஜாவின் " ஹவ் டு நேம் இட்" கேட்ட பின்புதான் 
நான் அவரது வெறி பிடித்த ரசிகனானேன். வாழ்க்கையில் நான்
இழந்த ஒரு வாய்ப்பு அகில இந்திய இன்சூரன்ஸ்  ஊழியர் 
சங்கத்தின்   மகத்தான ஒரு  தலைவரும்  நாடாளுமன்ற
உறுப்பினராக இருந்த தோழர் சுனில் மைத்ரா அவர்களின்
உரையை கேட்காததுதான். 

ஆனால் அவரது இரண்டு உரைகளின் டேப் பதிவுகளை 
ஒரு தோழர் வைத்திருந்து அதைக் கேட்கும் வாய்ப்பு 
கிடைத்தது. அதிலே ஒரு உரையை பல ஆண்டுகளுக்குப்
பின்பு தமிழாக்கம் செய்து  சிறு நூலாக வெளியிட்டோம்.
ஒரு முறை கேட்டது மொழியாக்கம் செய்ய மிகவும் 
உதவிகரமாக இருந்தது.  

எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒன்று உண்டு.
பாலமுரளி கிருஷ்ணாவின் தேன் குரலில் கேட்ட 
" வந்தனமு ரகுநந்தனா" என்ற சஹானா ராகப்பாடல்தான்
 எங்களுடைய  மகனுக்கு ரகுநந்தன் என்ற பெயரை அளித்தது. 


ஒரு காலகட்டத்தில் கிட்டத்தட்ட முன்னூறு காஸெட்டுக்கள் வரை
சேர்ந்தது. பயணத்திற்காக ஒரு வாக்மேன், அதற்காக ஒரு பை,
என்றெல்லாம் வைத்திருந்தேன். இசையோடுதான் பயணம் 
நடக்கும். பழைய காசெட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக பழுதடைவதும்
சிக்கிக் கொள்வதும் தொடர்ந்தது. இதற்கிடையில் இரண்டு டேப்
ரிகார்டர்கள் மாற்றி விட்டேன். ஆனால் பழுதை சரி செய்ய முடியாத
நிலை, உதிரிகள் கிடைக்காத நிலை என்று வந்த பின்பு தூசி படியத்
தொடங்கியது. 


அலைபேசியில் பாடல்கள்  கேட்கும் வசதி, புதிதாக வாங்கிய 
கணிணியில் பாடல்கள் கேட்கும் வசதி என்று ஒரு புறம் வந்தது.
வாங்கும் புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க இடப் 
பிரச்சினையும் இணைந்தே வந்தது. 

புத்தகங்களா ? அல்லது பயன் படுத்த இயலாத டேப் ரிகார்டரா
என்று வந்த போது கனத்த இதயத்தோடு டேப் ரிகார்டர் மற்றும்
காஸெட்டுகளை கட்டி பரணில் போட்டேன். புத்தகங்கள் வைக்க
அலமாரியில் மூன்று வரிசைகள் கிடைத்தது. அதுவும் இப்போது
நிரம்பி வழிகிறது. 

இசையை இன்றும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். 
இசையோடுதான்  இப்போதும் பயணம் நடக்கிறது. ஆனால் 
அந்த காலம் அது தனி. பதிவு செய்ய கொடுத்து விட்டு இரண்டு
முறையாவது அலைந்து பெறுவது, ஒழுங்காக பதிவாகி 
உள்ளதா என்று தவிப்போடு கேட்பது போன்ற சின்னச்சின்ன
அனுபவங்கள் மறைந்து போய் விட்டது.

ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்த முக நூலில் பார்த்த படம்
சொல்வது போல இனி வரும் தலைமுறைக்கு காஸெட்டுக்கும்
பென்சிலுக்கும் உள்ள தொடர்பு பற்றி தெரிய வாய்ப்பேயில்லை.

காஸெட்டுக்களின் வருகையால் வாழ்விழந்த கிராமபோன்
ரிகார்டுகளின் நிலை பற்றி யாராவது எழுதினால் நன்றாக
இருக்கும்.

தோழர் காஷ்யபன், உங்கள் அனுபவத்தை பகிர்ந்து 
கொள்ளுங்களேன்






1 comment:

  1. ராமன் அவர்களே! வம்புக்கு இழுக்கிறீர்! இருந்தாலும் சொல்கிறேன். 1942 வாக்கில் இருக்கும். என் மாமாமுறை.அவர்மகன் என்சேக்காளி.அவர்கள்வீட்டில் H.M.V கிராமபோன் இருந்தது. அவர்கள் வீட்டில் போடுவார்கள். அதனை போடும் முன்னல் தெருவில் உள்ள எல்லா வீடுகளுக்கும் பொய் இன்று கிராமபோன் பொடுகிறார்கள் என்று சொல்வது எங்களைபோன்ற சிறுவர்களின் பொறுப்பு..என்.சி.வசந்த கோகிலம்,மதுரை மணி அய்யர்,அரியக்குடி ஆகியொரின் பாடல்கள் ஒலிக்கும். சீதா கல்யாணம் என்ற காமடி பிளெட்டையும் போடுவார்கள். ராவணன் வில்லை ஒடிக்கமுடியாமல்திணறுவான்.ஒட்டலில் போண்டாசாப்பிட்டதால் முடியவில்லை என்று காரணம் கூறூவான்.நாங்கள் விழுந்து விழுந்து சிரிப்போம். முதன் முதலில் கரண்ட் வந்தது,ரெடியோவந்தது எல்லாமே ஆச்சர்யம் தான் எங்களுக்கு---காஸ்யபன்

    ReplyDelete