உலகத்தில் உள்ள,
ஏன் தமிழ்நாட்டில் உள்ள
தமிழர்கள் யாருக்குமே தெரியாத ஊரில்தானா
1972 முதல் 1982 வரை எங்கள் குடும்பம் வாழ்ந்திருந்தது!
யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தானா, அழகப்பா ஆரம்பப்பள்ளியில் மூன்றாவது முதல் ஐந்தாவது வரையிலும் அழகப்பா மாதிரி மேல் நிலைப் பள்ளியில் ஆறாவது முதல் எட்டாவது வரையிலும் படித்தேன்!
யாருக்குமே தெரியாத அந்த ஊழில்தான் என் இரண்டு அக்காக்கள் அழகப்பா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் B.ED படித்தார்கள்!
யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தான் அவர்கள் இருவரின் திருமணமும் நடந்தது!
யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தான் அழகப்பர் கலைக் கல்லூரியில் வள்ளல் அழகப்பர் சிலை திறந்து வைக்க திறந்த ஜீப்பில் வந்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை சாலையோரத்தில் நின்று பார்த்தேன்!
யாருக்குமே தெரியாத அந்த ஊரிலா 1977 மக்களவைத் தேர்தலின் போதும் சட்டமன்றத் தேர்தலின் போதும் கலைஞர், எம்.ஜி.ஆர், சோ, ஆகியோரின் பொதுக்கூட்டங்களுக்கு என் அப்பா அழைத்துச் சென்றார்!
யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தான் ஜனதா கட்சியின் மாநாடு நடக்க, அந்த மாநாட்டிற்கு வந்த அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய், பின்னாளில் அவரைக் கவிழ்த்து பிரதமரான சரண்சிங், பிரதமராகும் கனவில் இருந்த ஜகஜீவன் ராம், பல வருடங்கள் கழித்து வி.பி,.சிங்கை கவிழ்த்து பிரதமரான சந்திரசேகர் ஆகியோரை பார்க்க குடும்பத்தோடு சென்றோம்!
யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தானா ராமவிலாசம், அருணாச்சலா, நடராஜா, நியூ சினிமா ஆகிய தியேட்டர்களில் குடும்பத்துடனும் பின்பு நண்பர்களோடும் தனியாகவும் திரைப்படங்களை பார்க்கப் போயிருந்தேன்!
யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தான் பூச்சொரிதல் விழாவின் போது அங்கங்கே இசை நிகழ்ச்சிகள் நடக்கும்! கொப்புடையம்மன் கோயில் பக்கத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஐயப்பன் பாடல்கள் புகழ் கே.வீரமணி, பைலட் பிரேம்நாத் படத்தில் வரும் "ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப்?" பாடலை டி.எம்.எஸ் ஸை விட கொடூரமாக பாட நண்பர்கள் நாங்கள் தெறித்து ஓடி வந்தோமே!
யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தானே சுப்ரமணியபுரம் ஒன்பதாவது வீதியில் நாங்கள் வசித்த வீட்டிற்கு எதிர் வரிசை வீட்டில் ஒரு குடும்பத்தை வசிக்க வைத்திருந்த நெடிதுயர்ந்த உருவம் கொண்ட கவியரசு கண்ணதாசன், காலை வேளையில் அந்த மனைவியின் கரம் கோர்த்து நடைப் பயிற்சி செய்வதை பார்த்து பிரமித்துள்ளேனே!
யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தானா கோடைக்காலத்தில் நடைபெறும் ராமாயண, மகாபாரத உபன்யாசங்களை கேட்டிருக்கிறேன்!
யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தான், உலகம் சுற்றும் வாலிபன் எம்.ஜி.ஆர் தொப்பியும் பஞ்சு மிட்டாய் கலரில் சட்டையும் பச்சை கலர் பேண்டும் , கிட்டத்தட்ட எப்போதுமே அதே விந்தையான கலர் காம்பினேஷனில் உடை அணிந்து எங்கள் நண்பர்கள் குழாமால் காமெடியனாக கருதப்பட்ட அந்த பயிற்சிக் கல்லூரி விளையாட்டுத்துறை ஆசிரியர் ஹரிஹர சர்மா (இந்நாள் கலவர சங்கி எச்.ராசாவின் தந்தை) சைக்கிளில் உலவியது நினைவில் உள்ளதே!
யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தானே அரச நர்த்தகியாக இருந்த சொர்ணமுகியின் நடனத்தையும் குறிப்பாக பாம்பு நடனத்தையும் கங்கை அமரன், எஸ்.பி.பி இசை நிகழ்ச்சியை பார்த்து ரசித்துள்ளேனே!
யாருக்குமே தெரியாத அந்த ஊரை காலி செய்து விட்டு நெய்வேலி புறப்படும் நாளின் முதல் நாளன்று நண்பன் பி.ரமேஷுடன் "ஆனந்த ராகம்" திரைப்படம் பார்த்து விட்டு சோகமாக வந்ததன் காரணம், திரைப்படம் கொடுத்த சோகமா இல்லை ஊரை பிரியும் சோகமா என்று இன்று வரை புரியாமல் இருக்கிறதே!
சரி, மேலே சொன்னதெல்லாம் சொந்தக்கதை.
இனி பொது விஷயங்களுக்கு வருவோம்.
யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தானா 1948 லேயே பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் (Central Electro Chemical Research Institute,) ஐ துவக்கினார்!
யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தான் வள்ளல் அழகப்பர், கலைக்கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகள், மேல் நிலைப் பள்ளி ஆகியவற்றை உருவாக்கி இன்று பல்கலைக்கழகமாக உருவெடுக்க வைத்தார்!
யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தான் 1977 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் பொ.காளியப்பனிடம் பின்னாளில் நிதியமைச்சரான ப.சிதம்பரம் 450 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்றுப் போக, ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட பல கட்சி மாறிய பழ.கருப்பையா தோற்றுப் போனதும் நடந்ததே!
யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தான் 1939 லேயே கம்பன் அடிப் பொடி சா.கணேசன், கம்பன் விழாவை நடத்தத் தொடங்கினார்!
யாருக்குமே தெரியாத அந்த ஊரை, தோற்பதற்காகவே இந்த வருடம் சட்டமன்றத் தேர்தலில் நின்று பிரபலமாக்கிய சீமான் அவர்களுக்கு நன்றி.
அவர் மட்டும் சொல்லாவிட்டால் யாருக்குமே அந்த ஊரைப் பற்றி தெரிந்திருக்காது.
ஆமாம்.
யாருக்குமே தெரியாத அந்த ஊரின் பெயர் காரைக்குடி,
காரைக்குடி என்றொரு ஊர் இருப்பதே இப்போதுதான் மக்களுக்கு தெரிந்துள்ளது.
நன்றி சீமான் அவர்களே!
அடுத்த முறை எங்கள் வேலூரில் நின்று தோற்று எங்களூரையும் பிரபலமாக்கவும்.











