Wednesday, April 29, 2026

இதுவும் திமுக சதிதானே விஜய்?

 


சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் சி.சி.டிவி மையம் அமைத்துள்ள ஒப்பந்ததாரரின் பதிவை முகநூலில் யாரோ பகிர்ந்திருந்தார்கள்.


இது மிகப் பெரிய விதி மீறலாயிற்றே! கைது கூட செய்வார்களே என்று நினைத்தேன்.

கைது செய்யப்பட்டு விட்டார் என்று இன்றைய நாளிதழ் செய்தி சொன்னது. பார்க்கும் பணியின் தீவிரத்தன்மை கூட புரியாமல் அதன் விளைவுகளைப் பற்றிக் கூட கவலைப்படாதவர்களாகத்தான் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம் இந்த சம்பவம்.

இந்த கைதைக் கூட விஜய்யும் அவர் கட்சி தொண்டர்களும் "என்ன ஸ்டாலின் சார் பயமா? வாக்கு எண்ணும் மையத்திலிருந்து என் கட்சிக்காரரை வெளியே அனுப்ப சதி செய்யறீங்களா?" என்று வீர வஜனம் பேசுவார்களே என்பதுதான் என் கவலை.

Tuesday, April 28, 2026

மாட்டுச்சாணத்திற்கு வெங்காயம் மேல்

 


கோடை வெப்பத்தை சமாளிக்க மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்றை காங்கிரஸ் கட்சியிலிருந்து தன் கோஷ்டியோடு தாவி ம.பி யில் பாஜக அமைச்சகத்தை உருவாக்கிக் கொடுத்தமைக்காக மத்திய அமைச்சர் பதவியென்ற எலும்புத்துண்டை  ருசித்துக் கொண்டிருக்கும் ராஜ வம்சத்து வாரிசு ஜோதிராதித்யா சிந்தியா சொல்லியுள்ளார்.


இப்படி ஒரு சுலபமான வழி இருப்பது தெரியாமல் நான் வீட்டிற்கு ஏ.சி போட்டு பணத்தை விரயம் செய்து விட்டேன்.

கடந்த வருடம் ஒரு கல்லூரி முதல்வர் இன்னொரு அறிவியல் கண்டுபிடிப்பை தன் கல்லூரியில் அமலாக்கினார்.


வகுப்பறைகளின் சுவரில் மாட்டுச்சாணம் பூசினார் அவர். அந்த காலத்தில் வீடுகளின் தரைகளில் சாணி மொழுகினார்களே என்று நியாயப்படுத்தினார்கள் பலர். அவர்கள் எல்லாம் தங்கள் வீட்டின் சுவர்களில் மாட்டுச்சாணத்தை பூசிக் கொண்டார்களா என்பதுதான் தெரியவில்லை.

மாட்டுச்சாண தொழில் நுட்பத்திற்கு வெங்காய தொழில் நுட்பம் பரவாயில்லை என்று தோன்றுகிறது. வெங்காயத்தின் விலை உயர்வு, வெங்காயம் அழுக அழுக புதிதாய் வைப்பது ஆகியவற்றுக்கு ஆகும் செலவு, மாட்டுச்சாண நாற்றத்தில் வாழ்வதை விட மேல். 

வெங்காயத்தை கக்கத்தில் வைத்து காய்ச்சல் வரவழைக்கிற டெக்னிக் எங்களுக்கு ஏற்கனவே தெரியும். இந்த வெங்காய விஞ்ஞானி சொல்றதை பிரதமர் அலுவலகம், ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் ஆகிய இடங்களிலும் அங்கிருப்பவர்களிடமும் சோதித்துப் பார்க்கவும்.

மேலே நீல நிறத்தில் இருப்பது தமுஎகச தலைவர் தோழர் ஆதவன் தீட்சண்யா எழுதிய பதிவு.

என்னுடைய ஆலோசனை மாறானது.

வெங்காய தொழில் நுட்பத்திற்கு மாறாக மாட்டுச்சாண தொழில் நுட்பத்தை மாட்டுக்குண்டர்கள் சூழ் பிரதமர் அலுவலகம், ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் பயன்படுத்துவதுதான் பொருத்தமாக இருக்கும்.

அப்படியென்றால் வெங்காய தொழில் நுட்பத்தை எங்கே பயன்படுத்துவது?

கண்டிப்பாக நிதியமைச்சர் நிர்மலா அம்மையாரின் வீட்டிலும் அலுவலகத்திலும்  . . .

அப்போதாவது அவர் வெங்காயத்தின் அவசியத்தை புரிந்து கொள்வார் என்று எதிர்பார்ப்போம். 

Monday, April 27, 2026

அத்வானி, நிதீஷ்குமார் அடுத்து நாயுடு

 


வளர்த்த கடா மார்பில் பாயும் என்ற பாடத்தை முதலில் அத்வானிக்கு மோடி கற்றுக் கொடுத்தார்.


அந்த பாடத்தை நிதீஷ்குமாருக்கு சாம்ராட் சவுத்ரி கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.


முதல் பாடம் பாஜகவிற்குள்ளேயே நடந்தது.
இரண்டாவது பாடத்தை பாஜக, கூட்டணிக் கட்சிக்கு கற்றுக் கொடுத்தது.

அடுத்த பாடத்தை கற்றுக் கொள்ளப் போகிறவர்

சந்திரபாபு நாயுடு.

நேரடியாக பாஜக உறுப்பினராக இல்லாவிட்டாலும்  ஆர்.எஸ்.எஸ் சங்கிக்கான அத்துணை குணாம்சங்களும் கொண்ட பவன் கல்யாண்தான் அந்த பாடத்தை நாயுடுவிற்கு கற்றுக் கொடுப்பார்.


அது எப்போது என்பதுதான் கேள்வி . . .

மோடி நண்பன் ட்ரம்பை சுட்டுட்டாங்களாம்

 


அமெரிக்கத் தலைநகர் வாஷிங்க்டனில் உள்ள ஒரு விடுதியில் பத்திரிக்கையாளர்களுக்கான விருந்தில் ட்ரம்பை சுட்டுக் கொல்ல முயற்சி நடந்ததாம். 

தாக்குதலை நடத்திய டாமஸ் ஆலன் கைவசம் இரண்டு துப்பாக்கிகளும் எண்ணற்ற கத்திகளும் இருந்ததாம். அவன் சுட்டது புல்லட் ப்ரூஃப் உடை அணிந்த ஒரு அதிகாரி மீது பட்டதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லையாம்.

அதெப்படி ட்ரம்பின் நண்பன் முதலமைச்சராக இருந்த போது எப்போதெல்லாம் செல்வாக்கு குறைகிறதோ, அப்போதெல்லாம் அவரை கொல்ல தீவிரவாதிகள் வந்து அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்களோ, அது போலவே ட்ரம்பின் செல்வாக்கு குறையும் போது அவரை கொல்லவும் முயற்சிகள் நடக்கிறது?

ஆயிரக்கணக்கான பாதுகாப்பு சோதனைகளை தாண்டி செல்ல முடிகிற துப்பாக்கி ஏந்திய கொலை காரர்களால் ஏன் இலக்கை நோக்கி கச்சிதமாக சுட முடிவதில்லை?

இதுதான் உதைக்கிறது.

இங்கேயும் அங்கேயும் ...

நாடகம் என்றே நினைக்க வைக்கிறது. 

Sunday, April 26, 2026

கேஜ்ரிவால் பகைத்துக் கொண்ட இருவர்

 


கேஜ்ரிவால் எடுத்த ஒரு முயற்சி அவரை பலி வாங்கும் என்று அச்சப்படுவதாக நேற்று நான் எழுதியிருந்தேன்.

கீழேயுள்ள நியூஸ் கார்டை படியுங்கள்.


ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் அதே நேரம் ஆர்.எஸ்.எஸ் ஸால் காவி மயமாக்கப்பட்ட நீதிபதிகளையும் குறை சொன்னால் விடுவார்களா?

மாநிலங்களவையின் ஏழு எம்.பி க்களோடு பாஜக திருப்தி அடையாது.

பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க இப்போது கட்சி மாறிய கருங்காலிகளை பயன்படுத்தி கலகம் செய்ய கண்டிப்பாக முயற்சி எடுப்பார்கள். இப்போதாவது அரவிந்த் கேஜ்ரிவால் விழித்துக் கொள்ளட்டும். தன்னைப் பற்றிய அதீத மதிப்பீட்டிலிருந்து வெளியே வரட்டும். 


Saturday, April 25, 2026

கட்டை விரல் கவிதையை காப்பியடிக்கும் துரோணர் கூட்டம்

 


தேர்தலுக்கு முன்பாக கவிஞர் பழனிபாரதி முகநூலில் பகிர்ந்து கொண்ட கவிதை கீழே . . .


இந்த கவிதையை பலரும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இதில் கொடுமை என்னவென்றால் ஏகலைவனின் கட்டை விரலை காவு கேட்ட துரோணர் கூட்டத்து வாரிசான பாஜக சங்கி ஒருவரும் அந்த கவிதையை பகிர்ந்து கொண்டு பாஜகவிற்கு ஓட்டு கேட்டதுதான்.




இவர்களுக்கெல்லாம் வெட்கம் என்பது கொஞ்சம் கூட இருக்காதா!


AAP - பிய்ந்த துடைப்பம்


 
அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் பத்து பேரில் ஏழு பேர் அங்கிருந்து பாஜகவிற்கு தாவி தங்களை மோடி வாஷிங் மெஷின் மூலமாக புனிதமாக்கிக் கொள்கிறார்கள். 

ஆம் ஆத்மி கட்சி ஊழல் கட்சியாகி விட்டது என்று அவர்கள் குற்றம் சுமத்துவது உண்மையாக இருக்கலாம். அதற்காக அவர்கள் சென்று சேருமிடம் பாஜக என்பதுதான் காமெடியாக இருக்கிறது.

கட்சித்தாவல் தடைச்சட்டம் என்பது இன்னொரு காமெடி.

யாரும் தனியாக கட்சி மாறக்கூடாது. மூன்றில் ஒரு பங்கு ஆட்களோடுதான் கட்சி மாற வேண்டும் என்ற விதி பாஜகவிற்கு மட்டுமே உதவிக் கொண்டிருக்கிறது.

இந்த கட்சித்தாவல் சில உண்மைகளை உணர்த்தி விட்டு போயுள்ளது.

எந்த வித கொள்கையும் இல்லாமல் வெற்று முழக்கங்கள் மூலம் உருவாகும் கட்சி கண்ணாடி போன்றது. எப்போது வேண்டுமானாலும் சர்வ சாதாரணமாக நொறுங்கிப் போகும். எதிர்கால தவெக நிலைக்கு இது ஒரு முன்னோட்டம்.

கொள்கைகள் அற்ற கட்சியின் உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது பாஜகவிற்கு மிகவும் சுலபம் என்று தெரிகிறது.

இப்போது தேர்தல் நடக்கும் மாநிலங்களில் எதிர்காலத்தில் பாஜக என்ன செய்யும் என்பதற்கான முன்னோட்டம் இந்த சம்பவம்.

ராகவ் சாதா என்ற அந்த சின்ன பையனுக்கு ராஜ்ய சபை துணைத்தலைவர் பதவி கொடுத்தது கேஜ்ரிவாலின் முதல் தவறு. அதை பறித்த முறை இன்னொரு தவறு. ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்ய சபை உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி அங்கே பதவியை பறிப்பதற்கு பதிலாக ராஜ்யசபை தலைவருக்கு கடிதம் அனுப்பியது ஜனநாயக நடைமுறை அல்ல. அப்போதே சிக்கல் வரும் என்று நினைத்தேன். 

அதை விட கேஜ்ரிவால் எடுத்த இன்னொரு முயற்சி அவரை பலி வாங்கும் என்று அச்சப்பட்டேன். அதுதான் நடந்துள்ளது. 

அது என்ன முயற்சி?

நாளை பார்ப்போம்.