Thursday, March 5, 2026

எச்சரிக்கையாக இருப்பீர் அதிகாரிகளே! பலியாடாகாதீர்

 



திருச்சி கோட்ட ரயில்வே அலுவலகத்தில் ஒரு அலங்கார வளைவு வைத்து அதற்கு "கர்த்தவ்ய த்வார்" என்று இந்தியில் பெயர் வைக்கிறார்கள்.

தோழர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவிக்கிறார். முதல்வரும் இணைகிறார். கண்டனம் வலுக்கிறது.  எடப்பாடி கூட மெல்லமாக செல்லமாக சிணுங்கி வைத்தார். இறுதியில் அந்த "கர்த்தவ்ய த்வார்" எழுத்துக்கள் நீக்கப்பட்டது.

இது  அப்பட்டமான இந்தி திணிப்பு. மோடி அரசின் இந்தி வெறிக்கு ஒரு உதாரணம். 

இந்த வெறிக்கு அதிகாரிகள் பலியாடுகள் ஆகக்கூடாது.

நான் இதைச் சொல்வதற்கு காரணமுண்டு. 

ரயில்வேயில் நிகழ்ந்த இந்தி திணிப்பிற்கு முட்டு கொடுக்க முடியாமல் இந்தியிசை, அதிகாரிகள் மீது  பழி போடுகிறார்.


"சில அதிகாரிகள் செய்யும் தவறுக்கு தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயல்வதாக மத்தியரசு மேல் தேவையின்றி பழி போடப்படுகிறது" என்று அவர் பிரச்சினைக்கான காரணியை திசை திருப்புகிறார்.

அனைத்து அதிகாரிகளும் இதிலிருந்து பாடம் கற்க வேண்டும்.

மத்தியரசு சொல்கிறது, அமைச்சர் சொல்கிறது என்று நீங்கள் அரசியல் சாசன, ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராக செயல்பட்டால் பிரச்சினைகள் வரும் போது கடைசியில் நீங்கள்தான் மாட்டிக் கொள்வீர்கள். 

ஆட்சியாளர்களின் கைப்பாவைகள் அல்ல நீங்கள்!

ஒரு காலத்தில் அதிகாரிகளுக்கு தவறினை சுட்டி காட்டும் தைரியம் இருந்தது. 

ஆனால்

மோடி காலத்தில் எல்லாமே மாறி விட்டது.

பதவிக்காக சலாம் போடும் அதிகாரிகள் எதிர்காலத்தில் வருந்துவார்கள். 


Wednesday, March 4, 2026

சஞ்சு சாம்சனும் சங்கி கம்பீரும்

 


இந்தியாவும் மேற்கிந்தியத்தீவுகள் அணியும் விளையாடிய டி-20 போட்டியை என் மக்னோடு நானும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கேரளாவின் சஞ்சு சாம்சன் போட்டியில் வென்ற பின் மண்டியிட்டு சிலுவை போட்டு கடவுளை வணங்கினார்.   மத வெறி கிரிக்கெட்டிலும் ஊடுறுவிய காலத்தில் இப்படி செய்கிறாரே என்று எனக்கு தோன்றியது. போச்சு அவரை ட்ரால் பண்ணி நோகடிச்சுடுவாங்க என்று மகனும் சொன்னான்.

அன்றை போட்டியின் வெற்றிக்கு காரணமான சஞ்சு சாம்சனின் சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் எப்படி சிறுமைப்படுத்துகிறார் பாருங்கள்.


பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தசங்கி கம்பீரால் எப்படி அவருக்கு பிடிக்காத செயலை செய்த சாம்சனை எப்படி பிடிக்கும்!

நல்ல வேளை இந்த போட்டி அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் நடக்கவில்லை. மத வெறியர்கள் இந்த ஸ்டேடியத்தில் ஏற்கனவே இந்தியாவிற்கு இழிவை தேடிக்கொடுத்துள்ளார்.

விளையாட்டும் சங்கிகளுக்கு அரசியல் . . .

Tuesday, March 3, 2026

மீண்டும் மீண்டும் அசிங்கப்படும் அதிமுக

 

மோடி கலந்து கொண்ட மதுரை கூட்டம் தொடர்பாக நயினார் நாகேந்திரன், கூட்டத்திற்கு முதல் நாள் பகிர்ந்து கொண்ட படம் கீழே உள்ளது.


மேலே உள்ள படத்தில் உள்ள மோடியின் படத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது கீழே உள்ள படத்தையும் அதில் உள்ள மோடியின் படத்தையும் நன்றாக பார்த்துக் கொள்ளவும். இதுவும் நயினார் நாகேந்திரன் பகிர்ந்து கொண்டதுதான்.


என்ன நன்றாக கவனித்தீர்களா/?

முதல் நாள் பொதுவாக வெற்றியின் சின்னம் என்று கருதப்படுகிற இரண்டு விரல்களை காண்பித்துக் கொண்டிருந்த மோடியின் படம், கும்பிட்டுக் கொண்டிருக்கும் மோடியின் படமாக மாறி விட்டது.

இரண்டு விரல்களை காண்பிப்பது இரட்டை இலை சின்னத்தை குறிக்கிறது என்று பாஜக கருதியதால் அந்த படம் தூக்கப்பட்டு விட்டது.

முதலில் தந்தை பெரியார் படத்தை தூக்கச் சொன்னார்கள்.

பிறகு அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை குறிப்பது போல இருக்கக் கூடாது என்று மோடியின் படத்தையே மாற்றி விட்டார்கள்.

அதிமுக ஆட்சி என்று எடப்பாடி சொன்னால், என்.டி.ஏ ஆட்சி என்று மோடி சொல்கிறார்.




பேச்சு வார்த்தையில் எடப்பாடிக்கு கொடுக்கப்பட இடம் கூட, ஒரு கூட்டணியின் தலைவருக்கான இடம் இல்லை.

அதிமுக,வை பாஜக மீண்டும், மீண்டும், மீண்டும் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறது. கிரி "வீரபாகு" போல ரொம்ப நல்லவனாக அதிமுக அந்த அசிங்கங்களை மனமுவந்து சகித்துக் கொண்டிருக்கிறது. 



அவர்கள் காந்தியின் குரங்குகள் அல்ல தோழர்

 


இரானின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி யை அமெரிக்க, இஸ்ரேல் கொலைகாரப்படைகள் கொன்றது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் எம்.ஏ.பேபி அவர்களுடைய பதிவு கீழே உள்ளது.



இரானிய அரசின் சில ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் சில கருத்து வேறுபாடு இருப்பினும் அந்நாட்டின் உச்சபட்ச தலைவரையும் மற்ற உயரதிகாரிகளை அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஜியோனிஸ்ட் இஸ்ரேலும் இரானின் இரையாண்மைக்கு எதிராகவும் சர்வதேச விதிகளுக்கு முரணாகவும் கொன்றதை ஏற்றுக் கொள்ள முடியாது. கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய செயல் இது.

லத்தீன் அமெரிக்காவிலும் மற்ற பல நாடுகளிலும் கடைபிடித்த அதே உத்திகளைத்தான் அமெரிக்கா கையாள்கிறது. இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா அளந்து விட்ட பொய்கள் அம்பலமானதை நாம் பார்த்திருக்கிறோம். ஆப்கானிஸ்தான், லிபியா மர்றும் சிரியா அனுபவங்கள் நம் கண் முன்னே உள்ளது.

அமெரிக்க ராணுவத்துறை உலகிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது. இரானில் அமெரிக்க, இஸ்ரேல் கூட்டணி இரானில் செய்து வரும் குற்றங்களுக்கு எதிராக உலகளாவிய அளவில் குரல் எழுப்ப இந்தியா முன்னெடுக்க வேண்டும். 

உலக அமைதிக்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ள சூழலில் அனைத்து ஜனநாயகக்குரல்களையும் ஒன்றிணைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுக்க வேண்டும். அப்போதுதான் வன்முறைத் தாக்குதல்களும் அதற்கான எதிர்வினைகளும் நிறுத்தப்படும்.

தோழர் எம்.ஏ.பேபி சொன்னது மிகவும் அருமையான ஆலோசனை. முன்னொரு காலத்தில் அணி சேரா நாடுகள் அமைப்பின் தலைவராக இது போல செயல்பட்ட நாடுதான் இந்தியா. 

ஆனால் இந்த ஆட்சியாளர்கள் கேட்பார்களா?

அயத்துல்லா அலி காமேனி கொலையை கண்டிக்காத ஆள் மோடி. இஸ்ரேலோடு நிற்பேன் என்று வெளிப்படையாக கூவியவர் அவர்.

மகாத்மா காந்தியின் குரங்குகளுக்கு முற்றிலும் முரணானவர்கள் இவர்கள்.

இவர்கள் நல்லதை பார்க்க மாட்டார்கள்,
இவர்கள் நல்லதை கேட்க மாட்டார்கள்,
இவர்கள் நல்லதை பேசவும் மாட்டார்கள். 

Monday, March 2, 2026

எடப்பாடி எங்கே நயினார்?

 


மதுரை என்.டி.ஏ கூட்ட அரங்கின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் படத்தை பாஜக கட்டளையின் பேரில் நீக்கியது பற்றி நேற்று எழுதியிருந்தேன்.

அந்த பதிவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து போது பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பக்கத்தைப் பார்த்தேன்.

இன்று  நடைபெறவுள்ள கூட்டத்திற்கான பின்னணித்திரையின் படத்தை அவர் பகிர்ந்தார். 

அதையெல்லாம் பாருங்கள்.









ஒரு பக்கத்தில் மோடி படம் இருப்பது போல இன்னொரு பக்கத்தில் எடப்பாடியின் படமும் உள்ளது. ஆனால் நயினார் நாகேந்திரன் பகிர்ந்த எந்த ஒரு படத்திலும் எடப்பாடியை காணவில்லை.

முதல் கூட்டத்திலேயே ஒரு சாதாரண ட்விட்டர் பதிவில் கூட எடப்பாடியை மதிக்காத பாஜக மாநிலத்தலைவர் தயாராக இல்லை. போகப் போக இன்னும் என்னென்ன அவமானங்கள் எடப்பாடிக்கும் அதிமுகவிற்கும் காத்திருக்கிறதோ?

பாவம் அந்த கட்சியின் தொண்டர்கள் !!!!

பிகு: நேற்று பகிர்ந்து கொள்வதற்காக நேற்று முன் தினம் எழுதியது. தோழர் தயாநிதி அவர்களின் மறைவினால் இன்று பகிர்ந்து கொள்கிறேன். 

இம்சை அரசன் நடிப்பு மோடி

 


வல்லவராயனிடமிருந்து தன் உயிரை காத்துக் கொல்ல காலில் விழுந்த இம்சை அரசன் புலிகேசி வடிவேலுவின் நடிப்பை விட தமிழ்நாட்டு மக்களின் வோட்டுக்களை ஏய்த்துப் பறிக்க மோடி திருப்பரங்குன்றம் கோயில் விழுந்து கும்பிட்ட மோடியின் நடிப்பு சிறப்பு. . .

ஆமாம். கோயில் பிரகாரத்தில் இப்படி சிவப்புக் கம்பளம் விரிப்பதற்கு ஆகம விதிகள் இடம் தருகிறதா? கோயில் நடைமுறைகள் அனுமதிக்கிறதா? 

இதைப் பற்றியெல்லாம் சங்கிகள் கவலைப்பட மாட்டார்கள். அவர்களுக்கு கடவுள் வெறும் அரசியல் மட்டும்தான். ராசாவின் ஐகோர்ட் அளவிற்குக் கூட அவர்கள் கடவுளை மதிக்க மாட்டார்கள். 

Sunday, March 1, 2026

அவசரம் ஏன் தோழர்?


 இன்றைய காலைப் பொழுது ஒரு துயரச் செய்தியோடு விடிந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ன் மாவட்ட செயற்குழு உறுப்பினர், கட்சியின் முன்னாள் மாவட்டச்செயலாளர், தற்போதைய மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.டி.சங்கரி அவர்களின் கணவரரும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் தோழர் ஆர்.தயாநிதி நேற்று நள்ளிரவு காலமானார்.

கடந்த ஜனவரி மாதம் இதய பை பாஸ் சர்ஜரி செய்து கொண்ட தோழர் தயாநிதி அவர்களை கடந்த புதன் கிழமையன்றுதான் நாங்கள் (இன்சூரன்ஸ் ஊழியர் சங்கப் பொறுப்பாளர்கள்) சந்தித்து நலன் விசாரித்து வந்தோம்.

மிகுந்த நம்பிக்கையோடு பேசிய தோழர் தயா விரைவிலேயே எப்போதும் போல இயக்கங்களுக்கு, களத்திற்கு வருவேன் என்று தெரிவித்தார். ஆனால் அவரது நம்பிக்கை பொய்த்துப் போனது கொடுமை. 63 வயது என்பது இறப்பதற்கான வயதா என்ன? 

நான் வேலூருக்கு வந்த காலம் முதல் அறிவேன்.  எங்களது எத்தனையோ கூட்டங்களில் அவர் உரையாற்றியுள்ளார்.  களத்தில் கடுமையாக உழைப்பவர், ஒன்றிணைந்த வேலூர் மாவட்டத்தை அங்குலம் அங்குலமாக அறிந்தவர்.  துல்லியமான திட்டமிடல் அவரது சிறப்பு. 

மிகச் சிறந்த ஓவியர். 1996 ல் எங்கள் தென் மண்டல மாநாடு வேலூரில் நடைபெற்ற போது அனைத்து விளம்பரப் பணிகளையும் அவர்தான் செய்தார். பிரம்மாண்டமான பேனர்கள், அலங்காரமான, அழகான பின்புலம், டயர் தட்டிகள் என்று பல வடிவங்களில் அவர் கைவண்ணம் மிளிர்ந்தது.

நல்ல வாசிப்பாளர். கடைசி சந்திப்பின் போது கூட தான் அப்போது படித்து முடித்த நூல்களைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.

வேலூர் மாவட்ட கட்சிக்கென ஒரு மாதாந்திர செய்தி மடல் வெளியிட வேண்டும் என்பது அவர் நீண்ட நாள் விருப்பம். நாம் இது தொடர்பாக உட்கார்ந்து விவாதிக்க வேண்டும் என்று பலமுறை சொல்லியுள்ளார். அது ஏனோ கைகூடவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனது உண்மையான செயல் வீரரை இழந்துள்ளது,  வாழ்வுக்குப் பிறகும் தன் வாழ்வை அர்த்தமுள்ளதாக்க, மக்களுக்கு பயன் கிடைக்கும் வண்ணம் தோழர் தயா உடல் வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட உள்ளது. 

செவ்வணக்கம் தோழர் தயாநிதி . . .

பிகு: எங்கள் சங்க அலுவலகம் சரோஜ் இல்லத் திறப்பு விழாவில் தோழர் தயாநிதி வாழ்த்துரை வழங்கிய போது எடுக்கப்பட்ட படம் மேலே உள்ளது.