Saturday, December 27, 2025

வாஜ்பாய்க்கு பிறந்த நாளில் நேர்ந்த கதி

 


ஏன் என்ற கேள்விக்கு கீழேயுள்ள படம் விளக்கம் சொல்லும் . . .




கட்டாக்கில் முதல் முறையாக

 




நான் கலந்து கொண்ட முதல் அகில இந்திய மாநாடு 1990 ல் ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்ற 14 வது மாநாடு. சொல்லப் போனால் வேலூர் கோட்டத்திற்கே அதுதான் முதல் மாநாடு. 12.06.1988 அன்றுதான் வேலூர் கோட்டம் உதயமானது.

வேலூர் கோட்டத்திலிருந்து பங்கேற்ற தோழர்களில் நெய்வேலியிலிருந்து கலந்து கொண்ட நாங்கள் எழுவர் மட்டும் சென்னையிலிருந்து சென்னை கோட்டத் தோழர்களுடன் பயணித்தோம்.  மற்ற தோழர்கள் வேலூர் காட்பாடியிலிருந்து  நேரடியாகவே கட்டாக் செல்லும் வண்டியில் சென்று விட்டனர்.  நாங்கள் அத்தனை பேரும் ஒரே பெட்டியில் பயணிக்கவில்லை. வேறு பெட்டியில் பயணித்த இரண்டு தோழர்கள் விசாகப்பட்டிணத்தில் இரண்டு தோழர்கள் பெட்டியின் கதவை தட்டி மீண்டும் இங்கே ஏறிக் கொண்டார்கள். 

ஏன்?

அவர்களை அந்த பெட்டியிலிருந்து வட மாநிலப் பெண்கள் இறக்கி விட்டு விட்டார்கள்.

ஏன்?

அதில் ஒருவர் நிறத்தில் மிகவும் கருப்பாக இருப்பார். அதனால் அவரை எல்.டி.டி.இ என்று சொல்லி இறக்கி விட்டுள்ளனர். இத்தனைக்கும் அப்போது ராஜீவ் காந்தியெல்லாம் கொல்லப்படவில்லை.

கட்டாக்கில் உள்ள  ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில்தான் மாநாடு நடைபெற்றது. ஒடிஷா முன்னாள் முதல்வர் பிஜு பட்னாயக்கின் பங்களா ஒன்றில் மதுரை, தஞ்சை, வேலூர் கோட்டத் தோழர்கள் தங்க வைக்கப் பட்டிருந்தோம். காலை 5 மணிக்கெல்லாம் டீயுடன் தொண்டர்கள் எழுப்பி விடுவார்கள். எங்களை எழுப்பி விட்டவர் அருகில் உள்ள பாரதீப் துறைமுகத்தின் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் என்பது கடைசி நாளன்று தெரிந்தது.

ஒவ்வொரு நாளும் தோழர் ஜோசப் மதுரை, தோழர் ஜகதீசன், வேலூர், தோழர் எஸ்,ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூன்று கோட்டப் பொதுச்செயலாளர்கள் தலைமையில் தினசரி மகாநதியில் குளிக்கச் செல்வோம். வழியெங்கும் தலைவர்கள் பேசிக் கொண்டு வருவார்கள். நாங்கள் கேட்டுக் கொண்டு வருவோம், அதுவே ஒரு நல்ல அனுபவம்.

மாநாட்டை மேற்கு வங்கத்தின் அன்றைய நிதியமைச்சர் தோழர் அசோக் மித்ரா துவக்கி வைத்தார். அவர் பேசியதில் பல, அன்றைக்கு புரியவில்லை என்பதை மனசாட்சியோடு சொல்ல விரும்புகிறேன்.

விவாதங்கள் மிகச் சிறப்பாக இருந்தன. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை நாடு முழுதும் வழி நடத்திச் செல்லும் தூண்கள் யார் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. 

வி.பி.சிங் ஆட்சி கலைக்கப்பட்டு, பின்பு சந்திரசேகர் ஆட்சியும் கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம் அது.  ரத யாத்திரை முடிந்திருந்தது. மண்டல் கமிஷனுக்கு எதிராக போராட்டங்களும் நடந்து முடிந்திருந்த காலம்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மத வெறிக்கு எதிரான அமைப்பு, சமூக நீதிக்கு ஆதரவான அமைப்பு என்பதை அனைத்து தோழர்களுக்கும் உறுதி செய்தது கட்டாக் மாநாடு.

மாநாடு நடைபெற்ற உள்ளரங்கிற்கு அடுத்தாற்போல் இருந்தது பாரபதி ஸ்டேடியம். மாநாட்டின் கடைசி நாளன்று இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. முதல் நாளன்று அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் என்.எம்சுந்தரம் "No Comrade should be tempted to see a cricket match" என்று தெளிவாக சொன்னார். 

மாநாடு முடிந்து பேரணி நடந்து கொண்டிருந்த போது ஸ்டேடியத்தில் இருந்து  ஏழெட்டு தோழர்கள் மட்டும் ஓடி வந்து பேரணியில் இணைந்து கொண்டார்கள். கிட்டத்தட்ட 1500 பேரில் மிகவும் சொற்ப எண்ணிக்கையில்தான் போட்டிக்கு போயிருந்தனர். அந்த போட்டியில் இந்தியா தோற்றுப் போனது என்பது வேறு விஷயம்.

நான் கலந்து கொண்ட முதல் மாநாடு கட்டாக் மாநாடு. அநேகமாக முழுமையாக கலந்து கொள்ளக் கூடிய இறுதி மாநாடு புவனேஸ்வர் மாநாடு. இரண்டும் ஒடிஷா மாநிலத்தில்தான்.

பிகு" மேலே உள்ள படத்தில் உள்ள வேலூர் கோட்டத் தோழர்களில் தோழர் பாலாஜி, பாலு ஆகிய இருவர் மட்டும் அதிகாரிகளாக பணியில் உள்ளனர். தோழர்கள் ஆர்.வெங்கடேசன், டி.எஸ்.முத்துசாமி, கே.ஆர்.ஸ்ரீதர், ஜி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் காலமாகி விட்டனர். இரண்டு படங்களிலும் எங்கள் கோட்டத்தின் முதல் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.ஜகதீசன் அருகில் நான் உள்ளேன். 




Friday, December 26, 2025

புவனேஸ்வர் புறப்படும் வேளை இது . . .

 


28 ம் தேதி அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 27 வது பொது மாநாடு ஒடிஷா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் துவங்குகிறது. இந்தியாவின் மிக முக்கியமான பொருளாதார நிபுணர் தோழர் பேராசிரியர் பிரபாத் பட்னாயக் மாநாட்டை துவக்கி வைக்கிறார்.

நாளை மாலை அகில இந்திய செயற்குழுக் கூட்டம் இருப்பதால் இதோ சென்னை நோக்கி என் பயணத்தை தொடங்குகிறேன். சங்க அலுவலகத்தில் இன்றிரவு தங்கி விட்டு நாளை அதிகாலை விமானத்தை பிடிக்க வேண்டும்.

புவனேஸ்வர் பல விதத்திலும் எனக்கு மிகவும் பிடித்தமான ஊர். 1990 ல் கட்டாக்கில் அகில இந்திய மாநாடு நடைபெற்ற போது அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த நெய்வேலி கிளை தோழர்களோடு புவனேஸ்வர் சென்றுள்ளேன்.

அடுத்த முறை சென்றது மயக்க இயலாத பயணம். நான், மனைவி, மகன் மூவரும் விடுமுறைப் பயண சலுகையில் புவனேஸ்வர் மற்றும் கொல்கத்தா சென்றோம். நாங்கள் சென்ற கொரமாண்டல் எக்ஸ்பிரஸ் இரவு எட்டு மணிக்குப் பதிலாக நள்ளிரவு 12 மணிக்கு சென்றது. 

எல்.ஐ.சி விருந்தினர் விடுதி முன்பதிவு சென்றிருந்தேன். எல்.ஐ..சி கிளை அலுவலகம் 1 க்கு பின் பக்கம் உள்ளதாக எனக்கு வந்த கடிதம் சொன்னது. ஆனால் அந்த அலுவலகத்தின் பின்னால் எந்த ஒரு கட்டிடமும் இருப்பதாக தெரியவில்லை. கதவுகள் பூட்டப்பட்டிருந்தன.

இந்த பயணத்திற்காகவே புதிதாக ஒரு நோக்கியா மொபைல் வாங்கி, ஒடிஷா, கொல்கத்தாவில் செயல்படுமா என்று பல முறை கேட்டு உறுதி செய்தி கொண்டு வாங்கிய பி.பி.எல். இணைப்பு ஆந்திராவை தாண்டிய உடனேயே காணாமல் போயிருந்தது. எங்கள் டாக்ஸி டிரைவரிடம் போன் இல்லை.

ஒரு மருத்துவர்கள் மாநாடு நடந்து கொண்டிருந்ததால் எந்த விடுதியிலும் அறை கிடைக்கவில்லை. புவனேஸ்வரில் ஒரு உறவினரின் வீடு இருந்தது. அவர்கள் வீட்டிற்கு சென்று ஒரு ஹலோ சொல்லி காப்பி குடித்து விட்டு வரும் திட்டம் இருந்தது. இப்போது வேறு வழியில்லை. ஒடிஷா மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் விடுதியிலிருந்து அவர்களோடு பேசினேன். 

தங்கள் வீட்டிற்கு உடனே வரச்சொன்ன அவர் டாக்சி ட்ரைவருக்கும் வழியை சொன்னார். அப்போது ஒடிஷா சுற்றுலா அலுவலர் அந்த டாக்சி ட்ரைவரின் ஓட்டுனர் உரிமத்தை வாங்கி வைத்துக் கொண்டு எங்களிடம் ஒரு அட்டையை கொடுத்தார். வீடு போய் சேர்ந்ததும் அதில் கையெழுத்திட்டு அனுப்ப வேண்டும் என்றும் தொலைபேசியிலும் உறுதி செய்ய வேண்டும் என்றார். 

ஏன் என்று கேட்டதற்கு நீங்கள் எங்கள் மாநிலத்தின் விருந்தினர்கள். நீங்கள் செல்லும் வழியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சவுக்கு தோப்பு உள்ளது. அதனால் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு என்றார்.

கடைசியாக சென்றது புவனேஸ்வரில் நடைபெற்ற அகில இந்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள. அதற்கு  முன்பாக அகில இந்திய மகளிர் மாநாடும் நடைபெற்றது. எங்கள் கோட்டத்திலிருந்து பிரதிநிதியாக பங்கேற்ற மகளிர் பொறுப்பாளர் ஒருவரும் நானும் சென்றோம்.  சிறப்பான ஏற்பாடுகளால் அந்த பயணம் இன்றும் நினைவில் உள்ளது.

பிகு" புவனேஸ்வர் செல்வதால் வலைப்பக்கத்திற்கு விடுமுறையா?


நோ, நோ, நோ

இதுவரை கலந்து கொண்ட அகில இந்திய மாநாடுகளைப் பற்றிய சிறு குறிப்புக்கள், காப்பீட்டு ஊழியர் இதழிற்காக எழுதிய நூல் அறிமுகங்கள், நீண்ட காலமாக ட்ராப்டிலேயே உள்ள பதிவுகள் என்று 03.01.2026 அன்று அதிகாலை வீடு திரும்பும் வரை பதிவுகள் தயாராகவே உள்ளது. 

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று . . .

 


ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று பென்ஷன் வங்கிக் கணக்கில் சேர்ந்து விட்டது என்று வரும் குறுஞ்செய்தியை பார்க்கையில் எங்களின் மகத்தான தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் அவர்களை நன்றியோடு நினைத்துக் கொள்வேன். வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் அமைப்புக்களோடு ஒரு கூட்டு நடவடிக்கைக் குழுவை உருவாக்கி பென்ஷன் கோரிக்கையை வென்றெடுத்தது, ஓய்வூதிய நிதியில் பற்றாக்குறை வருமானால் நிறுவனமே அதை ஈடு செய்யும் என்ற ஷரத்தை இணைத்தது, பென்ஷனில் மூன்றில் ஒரு பங்கை காசாக்கிக் கொள்ளும் வசதியான கம்யூடேஷன் பலன், ஒரு ஊழியர் பணியில் இருக்கும் போது இறந்து போனால் அக்குடும்பம் இழந்து போகும். அப்பலனை ஈடு செய்ய ஒரு பிரத்யேக குழுக் காப்பீட்டுத் திட்டம், -இதெல்லாம் தோழர் என்.எம்.எஸ் இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு அளித்த கொடை. 

உங்களை எந்நாளும் மறவோம் தோழரே . . .

தோழர் சுந்தரம் அவர்கள் மறைந்த போது எழுதிய இரண்டு பதிவுகளை இங்கே மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்று எங்களை தாக்கிய சுனாமி



26 டிசம்பர் மீண்டும் ஒரு முறை துயரம் தோய்ந்த நாளாய் அமைந்து விட்டது. எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான தலைவரும், மிகச் சிறந்த பொருளாதார அறிஞரும் உழைக்கும் வர்க்கத்தின் வழிகாட்டியுமான தோழர் என்.எம்.சுந்தரம் அவர்கள் இன்று மறைந்தார் என்ற செய்தி சுனாமியாய் எங்களை தாக்கியது.

ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் எப்படி சமரசம் இன்றி உறுதியாக இருப்பாரோ, அது போலவே ஊழியர்கள் அலுவலகப் பணியை செய்ய வேண்டும் என்பதிலும் சமரசம் இல்லாமல் கண்டிப்பாக இருப்பார்.

உலகமயத்தின் தீமைகளைப் பற்றியும் சர்வதேச நிதி மூலதனத்தின் லீலைகளைப் பற்றியும் மிகவும் நுணக்கமாக ஆராய்ந்து அவர் எழுதியுள்ள பல்வேறு கட்டுரைகள் உழைக்கும் மக்களுக்கு அவர் வழங்கிய சக்தி மிக்க ஆயுதங்கள்.

1986 ல் எல்.ஐ.சி பணியில் இணைந்தாலும் அவரைப் பார்க்கிற, அவர் உரையைக் கேட்கிற வாய்ப்பு என்பது 1988 ல் தான் கிடைத்தது. அவர் என்னை அறிந்து கொள்ளும் வாய்ப்பு என்பது 1989 ல் நான் அடியாட்களால் தாக்கப்பட்ட பிறகே கிடைத்தது. அந்த சம்பவத்திற்குப் பிறகு  ஒரு முறை சென்னை சென்ற போது அப்போதைய தென் மண்டல இணைச்செயலாளர் தோழர் கே.நடராஜன் அறிமுகப் படுத்தி வைத்தார். கைகளைப் பற்றிக் கொண்டு "Be Brave and Bold. You can face any challenge" என்று சொன்னதை வாழ்நாளில் மறக்கவே முடியாது. இன்றளவும் அந்த வார்த்தைகள்தான் எதையும் சந்திக்கும் தைரியத்தை அளித்து வருகிறது. சோர்வுற்ற வேறொரு நாளில் அவரோடு தொலைபேசியில் நிகழ்த்திய உரையாடலும் உற்சாகம் அளிக்கும் டானிக் 

எங்கள் கோட்டத்தின் வெள்ளி விழா ஆண்டு துவக்க நிகழ்வில் அவர் பங்கேற்று உரையாற்றிய புகைப்படத்தைத்தான் அந்த நாள் முதல் முக நூலில் Cover Photo வாக பெருமிதத்துடன் வைத்துள்ளேன்.  அந்த புகைப்படத்தை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.



தன் வாழ்நாள் முழுதையும் இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கும் இந்தியாவின் தொழிலாளி வர்க்கத்திற்கும் அர்ப்பணித்த தோழர் என்.எம்.சுந்தரம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வெளியிட்ட சுற்றறிக்கையை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். 


இன்சூரன்ஸ் ஊழியர்களின்  இமயம் சரிந்தது.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாபெரும் தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் அவர்கள் இன்று காலை சென்னையில் இயற்கை எய்தினார் என்பதை பெருந்துயரத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

அறுபதுகளின் துவக்கத்தில் எல்.ஐ,சி நிறுவனத்தில் பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் இணைச்செயலாளராக ஒரு மிகப் பெரிய பொறுப்பை தன் இளந்தோள்களில் ஏற்றவர் தோழர் என்.எம்.எஸ்.  இரண்டாண்டுகளிலேயே இருபத்தி ஐந்து வயதில் தென் மண்டலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் என்.எம்.எஸ் தன் உழைப்பாலும் அறிவாற்றலாலும் உழைப்பாளி மக்களின் மீதான நேசத்தாலும் நாடறிந்த தலைவராக மாறினார்.

1988 ல் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பதிமூன்றாவது அகில இந்திய மாநாட்டில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளராக தோழர் என்.எம்.எஸ் சுந்தரம் தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்கத்தின் தலைமையக்கம் கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு மாறியது. மிகுந்த சவால்கள் நிரம்பிய காலகட்டத்தில் அவர் அகில இந்தியப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார்.

உலகமயமாக்கலின் கோர விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை துல்லியமாக கணக்கிட்டு அதற்கெதிரான போராட்டங்களுக்கு ஊழியர்களை தத்துவார்த்த அடிப்படையில் தயார்படுத்திய பெருமை அவருக்குண்டு. 1990 களின் அமெரிக்கச் சட்டம் சூப்பர் 301, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்ற விழிப்புணர்வை  உருவாக்க புது டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டின் மூலம் ஒரு மிகப் பெரிய போராட்டத்தின் துவக்கப் புள்ளியாய் இருந்தது தோழர் என்.எம்.சுந்தரம் திகழ்ந்தார்.

இன்சூரன்ஸ்துறையில் தனியாரை அனுமதிக்க வேண்டும், எல்.ஐ.சி யின் பங்குகளில் 50 % ஐ விற்க வேண்டும் என்ற மல்ஹோத்ரா குழு அறிக்கை அளித்த போது அவை எப்படி தேசத்திற்கும் மக்களுக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று அவர் எழுதிய இரண்டு புத்தகங்கள், நம்முடைய போராட்டங்களின் சக்தி மிக்க ஆயுதங்கள்.

“எல்.ஐ.சி யை  பாதுகாப்பதற்கான நம் போராட்டம், பாலிசிதாரர்களுக்கு சிறப்பான சேவையை செய்வதன் மூலமாக நம்முடைய மேஜையிலிருந்துதான் துவங்குகிறது” என்று நம்மை தொடர்ந்து வலியுறுத்துபவர். அதனை கடைபிடிப்பதால்தான் நம்மால் இந்நாள் வரை மக்களிடம் தைரியமாக செல்ல முடிகிறது. எல்.ஐ.சி நிறுவனமும் இன்று வரை முழுமையான பொதுத்துறை நிறுவனமாக நீடிக்கிறது.  வங்கி ஊழியர் தொழிற்சங்கங்களை இணைத்து கூட்டு போராட்டக்குழு அமைத்து பென்ஷனை வென்றெடுத்ததில் தோழர் என்.எம்.எஸ் அவர்களின் பங்களிப்பு மகத்தானது. இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு எவ்வித பாதிப்பும் எதிர்காலத்தில் நேரக்கூடாது என்று அவர் காண்பித்த உறுதியை வார்த்தைகளில் விவரிப்பது கடினம்.

“இன்சூரன்ஸ் வொர்க்கர்” இதழின் ஆசிரியராக பல்லாண்டு காலம் செயல்பட்ட தோழர் என்.எம்.எஸ் எழுதிய “Let us play Politics” கட்டுரைத் தொடர், நமக்கெல்லாம் அவர் எடுத்த பாடங்கள். தொழிற்சங்கத் தலைவர் என்பதைத் தாண்டி மிகப் பெரிய பொருளாதார நிபுணராகவும் திகழ்ந்தார். சுரண்டலற்ற சோஷலிச சமுதாயமே நம்முடைய இலக்காக இருக்க வேண்டும் என்பதையும் அதற்கான பயணத்தில் நாம் முன்னேற வேண்டும் என்பதை எப்போதும் வலியுறுத்துபவர்.

2002 ம் ஆண்டு ராய்ப்பூரில் நடைபெற்ற பத்தொன்பதவாது மாநாட்டில் அகில இந்தியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் என்.எம்.எஸ் 2007ல் நாக்பூரில் நடைபெற்ற இருபத்தி ஒன்றாவது மாநாடு வரை அப்பொறுப்பில் தொடர்ந்தார்.  இந்த ஆண்டு துவக்கத்தில் எர்ணாகுளத்தில் நடைபெற்ற இருபத்தி நான்காவது மாநாட்டிலும் அவர் கலந்து கொண்டு வழி காட்டினார்.

1988 ல் வேலூர் கோட்டத்தை அவர் துவக்கி வைத்தார். வெள்ளி விழா கொண்டாட்டங்களை அவர்தான் துவக்கி வைக்க வேண்டும் என்று நாம் அழைத்த போது தன் உடல் நலனையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு சிறப்பித்தார். 1994ல் மல்ஹோத்ரா குழு அறிக்கைக்கு எதிரான சிறப்பு மாநாட்டில் மூன்று மணி நேரம் அவர் உரையாற்றியதை யாரால் மறக்க இயலும்!

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை தத்துவார்த்தப்பாதையில் அழைத்துச் சென்ற மகத்தான தலைவர் மறைந்துள்ளார். அவரது லட்சியங்களை உயர்த்திப் பிடிப்பதே நாம் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி.

தோழர் என்.எம்.எஸ் அவர்களுக்கு செவ்வணக்கம்

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்,

வேலூர் கோட்டம்

கண்களால் அவர் வாழ்வார்



மறைந்த எங்கள் தலைவர் தோழர் என்.எம்.எஸ் பற்றிய நேற்றைய பதிவில் விடுபட்டுப் போன இரண்டு விஷயங்களை இணைக்கவே இப்பதிவு.

World Federation of Trade Unions அமைப்பின் மாநாடு 1988 ல் பல்கேரியா நாட்டின் தலைநகர் ஸோபியா வில் நடைபெற்ற போது அவர் ஆற்றிய உரை என்பது மிகவும் முக்கியமானது.  அந்த உரை இன்சூரன்ஸ் வொர்க்கர் இதழில் வெளியானது. விரைவில் அதை பகிர்ந்து கொள்கிறேன்.

WFTU அமைப்பின் ஒரு அங்கம் Trade Union International of Public and Allied Sectors என்பது. அதன் நிர்வாகக்குழு உறுப்பினராக செயல்பட்டவர் தோழர் என்.எம்.எஸ்.

World Social Forum நிகழ்வுகளிலும் அவரது பங்கேற்பு, வழிகாட்டுதல் இருந்துள்ளது.

இந்தியாவைக் கடந்தும் அவரது பணி விரிவடைந்துள்ளது. 

இரண்டாவது முக்கியமான செய்தி.

அவரது விருப்பத்தின்படி அவருடைய கண்கள் கொடையாக அளிக்கப்பட்டது.

மரணத்திற்குப் பின்னும் தன் கண்களால் வாழ்கிற மாமனிதர். 

Thursday, December 25, 2025

மோடிக்கும் வெட்கமில்லை, சங்கிகளுக்கும் . . .

 


கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சங்கிகள் பல இடங்களில் தங்கள் புத்தியை காண்பித்துள்ளார்கள். 

கேரளா போன்ற மாநிலங்களில் கூட அவர்களின் மிரட்டல்களுக்கு பயந்து சில கல்வி நிறுவனங்கள் அவர்கள் வழக்கமாக நடத்தும் கிறிஸ்துமஸ் விழாக்களை ரத்து செய்து விட்டன. இத்தனைக்கும் கேரளாவில் சில கிறிஸ்துவ அமைப்புக்கள் பாஜகவைத்தான் ஆதரிக்கின்றன. அதை சங்கிகள் பெருமையாகவும் பீற்றிக் கொண்டிருக்கின்றனர். 

பாஜக ஆளும் பல மாநிலங்களில் இன்று கிறிஸ்துவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். ஒடிஷா, உத்தர்கண்ட், மத்தியப் பிரதேசம், டெல்லி, உ.பி என்று சொல்லிக் கொண்டே போகலாம். 


உத்திரப்பிரதேசத்தில் கிறிஸ்துமஸ் விடுமுறையை ரத்து செய்து விட்டார் மொட்டைச் சாமியார். 

இவ்வளவு அக்கிரமங்களை சங்கிகள் நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் இன்றைய போட்டோ ஷூட்டுக்காக ஒரு சர்ச்சிற்கு சென்று அவர் பதிவு போட, மத்யமர் ஆட்டுக்காரன் குழு சங்கிகள் அதை பாராட்டி பதிவு போடுகிறார்.




தன் ஆட்கள்  அயோக்கியத்தனம் செய்யும் வேளையில் அமைதி, நல்லெண்ணம் என்று கதை விட மோடிக்கும் வெட்கமில்லை.

மோடியின் பொய்யான பதிவை பாராட்ட சங்கிகளுக்கும் வெட்கமில்லை.

பிகு : எதிரொலி திரைப்படத்தில் சிவாஜி சாட்சியை முறைத்துக் கொண்டே நிற்க, அந்த பார்வையை தாங்க முடியாமல் சாட்சி உண்மையை சொல்லி விடுவார். 



மனமெல்லாம் அங்கேதான் . . .

 


நிலப்பிரப்புத்துவ கொடுமைகளுக்கு எதிராக செங்கொடியின் கீழ் அணிவகுத்து தீரத்துடன் போராடிய தோழர்களை பழி வாங்க, முக்கியமான ஆண் தோழர்கள் ஊரில் இல்லாத சூழலில் கோபால கிருஷ்ண நாயுடு என்ற பண்ணையார் வெறியன் தலைமையில் அடியாட்கள் குடும்பம் நடத்திய தாக்குதலில் 44 மனித உயிர்கள் உயிருடன் கொளுத்தப்பட்ட நாள் இன்று. 

செங்கொடி இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் வருடம் தோறும் வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த கூடுவார்கள்.

2004 ம் வருடம் தொடங்கி ஒவ்வொரு வருடமும் வெண்மணி சென்றுள்ளேன். சர்க்கரை அப்போதுதான் எட்டிப்பார்த்த 2019 மற்றும் கொரோனா காரணமாக 2020 ஆகிய இரண்டு வருடங்கள் மட்டும் செல்ல இயலவில்லை.

கெடுவாய்ப்பாக இந்த வருடம் செல்ல இயலவில்லை. மே மாதம் நடந்த விபத்தின் காரணமாக வெண்மணி ஆர்ச்சிலிருந்து நினைவாலயம் வரை நடந்து செல்ல முடியாது. மேலும் புவனேன்ஸ்வரில் நடைபெறவுள்ள அகில இந்திய மாநாட்டிற்காக நாளை புறப்பட வேண்டும். உடல் நிலை பிரச்சினை இல்லாமல் இருந்திருந்தால் இரண்டாவது காரணம் கூட பெரிதல்ல.  வெண்மணி யின் கண்மணிகள் செய்த தியாகத்தை ஒப்பிடுகையில் பயணத்தால் உருவாகும் களைப்பெல்லாம் பெரிதே கிடையாது.

வெண்மணிக்கு செல்ல முடியாவிட்டாலும் மனம் என்னமோ அங்கேயேதான் இருக்கிறது. 


Wednesday, December 24, 2025

இது எந்த வில்லனின் சிலை?

 


கீழே உள்ள படத்தை முதலில் பாருங்கள்.


சாமி 2 படத்தில் பெருமாள் பிச்சைக்காக செய்யப்பட்ட சிலை மாதிரியே உள்ளதல்லவா? சமீபத்தில் இறந்த கோட்டா ஸ்ரீனிவாச ராவிற்குத்தான் சிலை அமைத்துள்ளார்கள் என்று முதலில் நினைத்தேன். ஒரு தமிழ்நாட்டுத் தலைவரின் சிலை என்பது அந்த பீடத்தை பார்த்த  பின்புதான்  தெரிந்தது. 

யாருடைய சிலை என்பதை உங்களால் யூகிக்க முடிகிறதா?

.

.


















இதோ பாருங்கள்


அதிமுக அலுவலகத்தில் முதன் முதலில் திறந்த ஏ1 சிலையை விட கொஞ்சம் பெட்டர் 



என்றாலும் அது கருப்பையா மூப்பனாரின் சிலை என்பது சொன்னால்தான் தெரிகிறது.