Wednesday, September 17, 2025

எல்.ஐ.சி யை, எல்.ஐ.சி யாகவே நீடிக்க வைத்தவர்


 அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர் சுனில் மைத்ரா அவர்களின் நினைவு நாள் இன்று.

பி.யு.சி படிக்கும் காலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு பத்து மாத காலம் சிறைத்தண்டனை பெற்றவர். சுதந்திரப் போராட்ட தியாகிக்கான எந்த சலுகையையும் பெறாதவர்.

தனியார் கம்பெனிகள் காலத்தில் பணியில் சேர்ந்த அவர், சங்கத்தின் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்ட காரணத்தால் நாக்பூர், கோவை, அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ரூகர் ஆகிய இடங்களுக்கு மாற்றப்படுகின்றார்.  என்ன ஆனது? அங்கேயெல்லாம் சங்கம் வலிமையானது.

தேச உடமையாக்கப்பட்ட பிறகு  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னணித் தலைவராகிறார். சங்கத்தின் போர் அமைச்சர் என்று வர்ணிக்கப்படும் அளவிற்கு உத்திகளை வகுப்பதில் விற்பன்னர்.

அவரது போராட்ட உணர்வும் திறமையும் ஞானமும் அவரை மேலும் மேலும் உயரங்களுக்கு எடுத்துச் சென்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவரை 1980 ல் கல்கத்தா வட கிழக்கு தொகுதியில் மக்களவைக்கு போட்டியிட வைத்தது. ராஜிவ் காந்தி காலத்தில் அமைச்சரான  அஜித் குமார் பஞ்சா என்ற பெரும் பணக்காரரை வென்று நாடாளுமன்ற உறுப்பினர்.

பின்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் பீப்பிள்ஸ் டெமாக்ரஸியின் ஆசிரியராகவும் இறுதி மூச்சு வரை செயல்பட்டவர்.

நாடாளுமன்ற உறுப்பினராக அவர் செயல்பட்ட காலத்தில்தான் எல்.ஐ.சி நிறுவனத்தை ஐந்து கூறுகளாக பிரிக்கும் மசோதாவை 19.12.1983 அன்று  அன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முன்மொழிகிறார். அப்போதே தோழர் சுனில் மைத்ரா கடுமையாக  எதிர்க்கிறார். 48 மக்களவை உறுப்பினர்களிடமிருந்து உடனடியாக கடிதம் பெற்று சபாநாயகரிடம் அளிக்கிறார்.

அவரது கடுமையான முயற்சி காரணமாக மசோதா நிதியமைச்சகத்தின் நிலைக்குழுவின் ( STANDING COMMITTEE)  பரிசீலனைக்குச் செல்கிறது. அங்கே ஒருமனதான கருத்து எட்டப்படாததால் நாடாளுமன்றத்தின் தேர்வுக்குழுவின் (SELECT COMMITTEE)  பரிசீலனைக்கு அனுப்பப்படுகிறது. அந்த தேர்வுக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்ட தோழர் சுனில் மைத்ரா, யாரெல்லாம் தங்களின் கருத்துக்களை சொல்ல வேண்டும் என்று விழைகிறார்களோ, அவர்கள் அனைவரது கருத்துக்களையும் குழு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அதனை குழுவும் ஏற்றுக் கொள்கிறது. 

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஒரு புறத்தில் வேலை நிறுத்தம், பிரச்சார இயக்கம், கையெழுத்து இயக்கம் போன்ற நடவடிக்கைகளையும் மறுபுறம் தொழிற்சங்க அமைப்புக்கள், அறிவு ஜீவிகள், பல துறை ஆளுமைகள் ஆகியோரை தேர்வுக்குழுவிற்கு தங்களின் கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று கடிதம் எழுத வைக்கிறது.

இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று தேர்வுக்குழு நூற்றுக் கணக்கானவர்களின் கருத்துக்களை கேட்கிறது. தேர்வுக்குழுவின் முன்பாக நானும் சாட்சியம் சொன்னேன் என்று இந்தியாவின் முக்கிய பொருளாதார நிபுணர்களில் ஒருவரான தோழர் வெங்கடேஷ் ஆத்ரேயா அவரோடு  பேசிக் கொண்டிருக்கையில்  ஒரு முறை கூறினார்.

ஆளும் கட்சியே பெரும்பான்மை என்பதால் தேர்வுக்குழு எல்.ஐ.சி யை பிரிப்பதற்கு ஆதரவாகவே பரிந்துரை அளித்தது. 25.08.1984 அன்று மசோதா மீது விவாதம் நடக்கிறது. தோழர் சுனில் மொய்த்ரா ஆவேசமாக உரையாற்றுகிறார். முடிவு எதுவும் எடுக்கப்படாமல் அவை ஒத்தி வைக்கப்படுகிறது. கூட்டத் தொடரும் கூட.

சில மாதங்களிலேயே இந்திரா அம்மையார் கொல்லப்படுகிறார். புதிய பிரதமரான ராஜீவ் காந்தி மக்களவையைக் கலைத்து தேர்தலுக்கு ஆயத்தமாகிறார்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தேர்தல் காலத்தில் இதனை ஒரு முக்கியமான பிரச்சினையாக முன்வைக்கிறது. அனைத்து வேட்பாளர்களிடமும் ஆதரவு கோருகிறது.

தேர்தலுக்குப் பின்பு மீண்டும் பிரதமரான ராஜீவ் காந்தியை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தலைவர்கள் சந்தித்து எல்.ஐ.சி யை ஐந்து கூறுகளாக பிரிப்பதன் பாதகங்களை விளக்கி பேசுகின்றனர்.

மத்தியரசு தன் முடிவை கைவிடுகிறது. தன் அன்னை எடுத்த முடிவை மாற்றுவதா என்று ராஜீவ் காந்தி ஈகோ பார்க்கவில்லை. எல்.ஐ.சி யை ஐந்து கூறுகளாக பிரிக்கும் முடிவை கைவிடுகிறோம் என்று ராஜீவ் காந்தியே தோழர் சுனில் மைத்ராவுக்கு நேரடியாக கடிதம் அனுப்புகிறார். 


எல்.ஐ.சி இன்று 54 லட்சம் கோடி சொத்து மதிப்புள்ள பெரும் நிறுவனமாக, இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, பாலிசிதாரர்களின் நம்பிக்கையாக திகழ்கின்றதென்றால் அது ஒரே நிறுவனமாக நீடிப்பதால்தான் சாத்தியமானது. ஐந்து கூறுகளாக பிரிக்கும் சதி முறியடிக்கப்பட்டதன் காரணமாக மட்டும் எல்.ஐ.சி ஒரே நிறுவனமாக நீடிக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் தோழர் சுனில் மைத்ரா என்பதற்கு ராஜீவ் காந்தியின் கடிதமே சான்று.

எல்.ஐ.சி யின் இயக்குனர் கூட்ட அறையில் (BOARD ROOM)  ஆயுள் இன்சூரன்ஸ் துறையை தேசியமயமாக்கிய அன்றைய நிதியமைச்சர் திரு சிந்தாமணி தேஷ்முக் அவர்களின் படம் உள்ளதாம். அங்கே வைக்க வேண்டிய இன்னொரு படம் தோழர் சுனில் மைத்ராவுடையது. எல்.ஐ.சி, எல்.ஐ.சியாகவே நீடிப்பது அவரால்தானே!

செவ்வணக்கம் தோழர் சுனில் மைத்ரா 

பிகு: அவரைப் பற்றி எழுத இன்னும் எவ்வளவோ உள்ளது. அவை பிறிதொரு சந்தர்ப்பத்தில் . . .


மோடியை பெரியாராக்கும் பாஜக

 



பாஜக சென்னையில் ஒட்டியுள்ள சுவரொட்டி கீழே உள்ளது. 



தந்தை பெரியார் பெயரை பயன்படுத்தினால்தான் அவர்கள் ஒட்டிய சுவரொட்டியை மக்கள் பார்ப்பார்கள் என்ற அறிவு பாஜகவில் உள்ள ஏதோ ஒரு கோஷ்டிக்கு தெரிந்திருக்கிறது.

மோடியை பெரியார் என்று அழைத்ததைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால்  சமூக நல்லிணக்க பெரியார் என்று விளிப்பதெல்லாம் அநியாயம்.

மோடிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் என்னய்யா சம்பந்தம்?

சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும் விஷமல்லவா அவர்!

Tuesday, September 16, 2025

ஆட்டுக்காரன் குழுவின் திருந்தாத ஜென்மங்கள்

 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி கடந்தாண்டு மறைந்த போது அவரது உடல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அந்த புகைப்படத்தை வைத்துக் கொண்டு சங்கிகள் தோழர் யெச்சூரி மீது ஒரு அவதூறு பிரச்சாரத்தை செய்தனர். அதாவது அவர் கிறிஸ்துவராக மதம் மாறினாலும் சீத்தாராம் என்ற பெயரை மாற்றிக் கொள்ளாமல் ஏமாற்றி வந்துள்ளார் என்பது அந்த பொய்ப்பிரச்சாரம்.

அதனை மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் நான்கைந்து சங்கிகள் பதிவு போட்டு விஷத்தை கக்கியிருந்தனர்.

கடுமையாக சண்டை போட்டதால் என்னை ஒரு வாரம் குழுவிலிருந்து இடை நீக்கம் வேறு செய்திருந்தார்கள்.

அப்போது எழுதிய இரு பதிவுகளின் இணைப்பை கீழே அளித்துள்ளேன்.

அவசியம் படியுங்கள்.

கேவலமான, அயோக்கிய, அடி முட்டாள் சங்கிகள்


மத்யமர் சங்கிகளுடனான சண்டை ஓயவில்லை


இதோ ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் அதே பொய்யை பரப்பத் தொடங்கியுள்ளனர்.





இந்த பதிவிற்கு ஒரு சங்கி ஆபாசமாக ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தான். இதுதான் உங்கள் குழுவில் கடைபிடிக்கும் நாகரீகமா என்று அந்த சங்கி மாடரேட்டரை கேட்டவுடன் அந்த ஆபாச பின்னூட்டத்தை நீக்கி விட்டார்கள். 

ஒரே பொய்யை எவ்வளவு முறை பரப்புவீர்கள்? இந்த குழு பொய்களை, வெறுப்பை, விஷத்தைத்தான் பரப்புகிறது. இதை நீங்கள் ஏற்கிறீர்களா என்று அட்மினிடம் கேட்டதற்கு மட்டும் எந்த பதிலும் இல்லை. 

இவர்களுக்காகத்தான் அன்று வாலி

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் ?
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம் ?

என்று  எழுதியிருக்கிறார்,
இந்த ஜென்மங்கள் மனித குலத்திற்கே பெருத்த அவமானம்.

அஸ்ஸாமில் மோடியின் அற்ப அரசியல்

 


பூபென் ஹசாரிகா - இந்தியாவின் மிகச் சிறந்த திரைக் கலைஞர்களில் ஒருவர். அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அவர் பாடகராக, இசை அமைப்பாளராக, இயக்குனராக முத்திரை பதித்தவர். 2011 ல் இறந்து போனவர். 

2019 ல் அவருக்கு மோடி அரசு பாரத ரத்னா விருது கொடுத்தது. 2021 ல் அஸ்ஸாமில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

நேற்று முன் தினம் பச்சைக் கொடி ஆட்டி ரிப்பன் வெட்ட அஸ்ஸாம் போன மோடி புதிதாக ஒரு கதை விட்டார்.

"பூபென் ஹசாரிகாவிற்கு பாரத ரத்னா விருது  கொடுத்த போது  பாடகர்களுக்கும் நடனம் ஆடுபவர்களுக்கும் பாரத ரத்னா விருது கொடுக்கிறார் மோடி" என்று காங்கிரஸ் தலைவர் பேசிய காணொளியை அஸ்ஸாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வாஸ் காண்பித்தார்" என்று பேசிய மோடி பூபென் ஹசாரிகாவை காங்கிரஸ் இழிவு படுத்தி விட்டது என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

எந்த தலைவர்? எப்போது பேசினார்? என்றெல்லாம் மோடி சொல்லவில்லை. மோடிக்கு காணொளியை காண்பித்ததாக சொல்லப் பட்ட ஹிமாந்த பிஸ்வாஸ் மிகப் பெரிய மோசடிப் பேர்வழி.  அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது ஊழல்வாதி என்று மோடியால் குற்றம் சுமத்தப்பட்டு கட்சி மாறிய பின் பாஜக வாஷிங் மெஷினில் புனிதமாக்கப் பட்டு முதலமைச்சர் பதவி பெற்றவர். அவர் யோக்கியதையே பெரிய கேள்விக்குறி.

பூபென் ஹசாரிகா உயிருடன் இருக்கையில் காங்கிரஸ் அவருக்கு

பத்மபூஷன்,

தாதா சாஹேப் பால்கே விருது,

சங்கீத நாடக அகாடமி விருது,

நியமன மாநிலங்களவை விருது

ஆகியவற்றை அளித்துள்ளது. 

அவர் 2011 ல் இறந்த பின்பு 2012 ல் பத்ம விபூஷன் விருதும் அளித்துள்ளது. 

இத்தனை விருதுகளை அளித்த காங்கிரஸ் எப்படி அவரை இழிவுபடுத்தும்?

மேலும்

பண்டிட் ரவிசங்கர்,

பீம்சென் ஜோஷி,

எம்.எஸ்.சுப்புலட்சுமி

பிஸ்மில்லாகான்

லதா மங்கேஷ்கர்

போன்ற இசைக் கலைஞர்களுக்கு பாரத் ரத்னா விருது கொடுத்துள்ளது. அவர்கள் எப்படி பாடகர்களுக்கும் நடனமாடுபவர்களுக்கும் விருது கொடுப்பதை இழிவு படுத்துவார்கள்.

மொத்தத்தில் இது மோடியின் வழக்கமான அற்ப அரசியல்... 


Monday, September 15, 2025

மோடியின் அடுத்த அவதாரம் ??????

 



அஸ்ஸாமில் மோடி பேசிய வஜனம் 

"நான் சிவன் போல.  என் மீது சொல்லப்படும் வசைகளை சிவன் விஷத்தை தொண்டையிலேயே வைத்துக் கொண்டதை போல என் தொண்டையில் நிறுத்திக் கொள்கிறேன்."

மோடியின் அல்லக்கைகள் முன்பு அவரை ஜகன்னாதரின் அவதாரம் என்று உருட்டினார்கள். 

அந்த ஜகன்னாதரே அவர்தான் என்றும் சொன்னார்கள்.

அவரும் தன்னை தெய்வக்குழந்தை என்று சொல்லிக் கொண்டார்.

இப்போது அவர் தன்னை சிவனைப் போல என்று சொல்கிறார்.

சிவனின் வடிவம் என்று இனி அல்லக்கைகள் பேசுவார்கள்.

ஆனால் மோடி விஷத்தை தொண்டையில் நிறுத்திக் கொள்ளவில்லை. மூளையில் உருவாக்கி பேச்சின் மூலம் கக்கிக் கொண்டிருக்கிறார்.

அஸ்ஸாமில் விஷம் கக்கும் மோடி

 


அஸ்ஸாம் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கவுள்ளது. அதனால் அங்கே மக்களை பிளவு படுத்த விஷம் கக்குவதை மோடி தொடங்கி விட்டார்.

வட கிழக்கு மாநிலங்களில் ஊடுறுவல்கள் அதிகமாகி விட்டதாகவும் அதனால் அந்த மாநிலங்களில் சிறுபான்மை மதத்தினர் அதிகமாகி விட்டதாகவும் பெரும்பான்மை மதத்தினரான இந்துக்களின் எண்ணிக்கையை விட மற்றவர்கள் அதிகமாகி விட்டார்கள்.

காங்கிரஸ் கட்சி இந்த ஊடுறுவல்களை வாக்குகளுக்காக வேடிக்கை பார்க்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்,

மத்தியில் பாஜக 11 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. அநேகமாக அனைத்து வட கிழக்கு மாநிலங்களிலும் பாஜகதான் தேர்தலின் மூலமாகவோ அல்லது வெற்றி பெற்ற எம்.எல்.ஏ க்களை விலைக்கு வாங்கியோ ஆட்சியில் உள்ளது.

சமீப ஆண்டுகளில் ஊடுறுவல் அதிகமாகி உள்ளது என்பதற்கு எந்த ஆதாரத்தையோ புள்ளி விபரத்தையோ மோடி தரவில்லை. வழக்கம் போல வாய்க்கு வந்ததை அடித்து விட்டுள்ளார்.

ஊடுறவல் அதிகமாகி உள்ளதென்றால் அதை தடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள பாஜகவின் மத்தியரசும் மாநில அரசுகளும் தோல்வி அடைந்துள்ளது என்பதுதானே  அர்த்தம்!

தன்னுடைய தோல்விக்கு அடுத்தவர்கள் மீது பழி போடுவது என்ன நியாயம்?

தேர்தல் ஆதாயத்திற்காக மத வெறி நச்சை உமிழும் கேவலமான உத்தியை மோடி துவக்கியுள்ளார்.

பிரதமர் என்ற பொறுப்பிற்கு கொஞ்சமும் தகுதியற்றவர் என்பதைத்தான் அவரது விஷப்பிரச்சாரம் காண்பிக்கிறது.

பிகு: இன்னொரு பொய்யும் மோடியால் சொல்லப்பட்டுள்ளது. அது நாளை. 

Saturday, September 13, 2025

பெருமையில்லை து.ஜ, அசிங்கம்

 


மனிதனை மனிதன் சுமக்கும் பல்லக்குகளில் பவனி வருவது இழிவாக பார்க்கப்படும்  காலகட்டம் இது. 

ஏதோ ஒரு ஆதீனம் பல்லக்கில்தான் பட்டிணப் பிரவேசம் செய்வேன் என்று அடம் பிடித்ததையும் அதற்கு வக்காலத்து வாங்கிய ஆட்டுக்காரன் நானே பல்லக்கை தூக்கி வருவேன் என்று சொன்னதை எள்ளி நகையாடிய மாநிலம் தமிழ்நாடு.

சடலங்களை நான்கு  பேர் சுமப்பது என்பது கூட காலப்போக்கில் மிகவும் குறைந்து விட்டது. 

இப்படிப்பட்ட சூழலில் ஒரு காணொளியை பார்க்கையில் எரிச்சலாக இருந்தது.

அதிலிருந்து இரண்டு படங்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.



வேலூருக்கு அருகாமையில் உள்ள மகாதேவமலை என்ற இடத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இப்படிப்பட்ட தேர்ப்பவனியை, தங்களை மனிதர்கள் இழுத்துச் செல்வதை இந்தியாவின் இரண்டாம் குடிமகன் அனுமதிக்கலாமா?

அசிங்கமாக இருக்கிறது.

இவ்வளவு பிற்போக்குத்தனமான சிந்தனை கொண்டவருக்கு தமிழ்நாட்டு எம்.பிக்கள் ஓட்டு போடவில்லை என்று மோடி ஆதரவாளர்கள் ஒப்பாரி வேறு வைக்கிறார்கள்.