Sunday, November 2, 2025

சங்கிகளின் நேர்மை பிடிச்சுருக்கு

 


தமிழ்நாட்டிற்கு வந்த து.ஜ, கலைஞரைப் பாராட்டி முரசொலி படிப்பேன் என்றும் சொல்லி விட்டார். அதன் அரசியல் என்னவோ?



ஆனால் பாவம் சங்கிகளால் இதை சகித்துக் கொள்ள முடியவில்லை. சக கலவர சங்கியாக இருந்தாகும் து.ஜ வை கழுவி கழுவி ஊற்றி விட்டார்கள்.









தங்களுக்கு எதிரான ஒருவரை எப்படி பாராட்டலாம் என்று பொங்கியதை படித்தீர்களா?

அதிலும் ஒரு பெண்மணி, தன் ஜாதிய மேட்டிமை புத்தியோடு தோழர் தொல்.திருமாவை வேறு நிந்தனை செய்துள்ளார்.

ஆனாலும் ஒன்று யாராக இருந்தாலும் வன்மம் கக்குவது என்ற சங்கிகளின்  நேர்மை எனக்கு பிடித்திருக்கிறது. சோனியா காந்தி பிரதமராவதை தடுப்பதில் முக்கிய பங்காற்றிய சுஷ்மா ஸ்வராஜையே கடுமையாக திட்டி அவர் மரணமடைந்த போது மகிழ்ச்சியடைந்தவர்கள் தானே சங்கிகள்!

Friday, October 31, 2025

அந்த பயம் இருக்கனும் சங்கி


 மத்யமர் ஆட்டுக்காரன் குழுவின் மாடரேட்டரான ஒரு முரட்டு சங்கி பற்றி ஏற்கனவே இங்கே பதிவிட்டுள்ளேன்,

நீதி, நேர்மை, நியாயம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை உபதேசித்து ஒரு பின்னூட்டம் போட்டிருந்தார். 


சாத்தான் வேதம் ஓதுகிறதே என்று கடுப்பாகி சூடாக ஒரு பதில் கொடுத்தேன்.


பார்ட்டி கடுப்பாகி இன்னும் ஒரு முறை இடை நீக்கம் செய்யும் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால் பம்மி பதுங்கி விட்டது.

இடை நீக்கம் செய்தால் இன்னும் அதிகமாக கழுவி ஊற்றுவேன் என்ற பயம் போல.

அந்த பயம் இருக்கனும் சங்கி . . .

தமிழர்களை இழிவு படுத்தும் மோடியை துரத்துவோம்

 


ஒடிஷா மாநில சட்டமன்ற தேர்தலின் போது தமிழர்களை திருடர்கள் என்று இழிவுபடுத்திய மோடி அதே நச்சை இப்போது பீகாரிலும் கக்கியுள்ளார்.


இரண்டாண்டுகள் முன்பாக பீகாரிகள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக சங்கிகள் ஒரு போலி வீடியோ மூலமாக பொய்ப்பிரச்சாரம் செய்ய, அந்த பொய்யர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தது. இப்போது அதே பொய்யை மோடி கட்டவிழ்த்துட்டுள்ளார்.

இப்படி தொடர்ந்து தமிழர்களை பொய் சொல்லி இழிவுபடுத்தும் மோடி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டுக்குள் வந்து தமிழ் மொழி, திருக்குறள் என்றெல்லாம் வேஷம் போடும் மோடியை இனி தமிழ்நாட்டுக்குள்ளேயே அனுமதிக்கக் கூடாது.

மோடியே வெளியேறு என்று உரக்க குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனுடைய கடமையும் ஆகும்.

உரக்கச்சொல்வோம்

GO BACK MODI


Wednesday, October 29, 2025

நீதிபதியின் கேள்விக்கு பதிலென்ன ஜட்ஜய்யா?


 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு பி.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் எனும் ஜாதி, மத வெறியன் காலணி வீசிய பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்காத போது ஓய்வு பெற்ற நீதிபதி திரு ஹரிபரந்தாமன் ஒரு கேள்வி எழுப்பினார்.


இந்த கேள்வி அதீதமானது என்று சங்கிகள் கூச்சலிட்டனர்.

ஆனால் நியாயமான கேள்விதான் என்பதை செவ்வாய்கிழமை அன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை நிரூபித்து விட்டது. 

ராகேஷ் கிஷோர் மீது எந்த நடவடிக்கையும் வேண்டாம் என்று தலைமை நீதிபதியே சொல்லி விட்டதால் வழக்கறிஞர் சங்கம் தொடுத்த வழக்கிற்கு அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் சொல்லியுள்ளனர். 

தலைமை நீதிபதி பெருந்தன்மையாக இருக்கலாம். சட்டத்திற்கும் பெருந்தன்மை உண்டா? இழிவு செய்யப்பட்டது திரு கவாய் மட்டும்தானா? உச்ச நீதிமன்றம் இழிவு படவில்லையா? நீதிபதிகளின் மரியாதை இழிவுபடவில்லையா? அரசியல் சாசனம் இழிவுபடவில்லையா?

அதற்கெல்லாம்  நடவடிக்கை கிடையாதா?

இது தனி நபர் பிரச்சினை கிடையாது.  இதுவே ராகேஷ் கிஷோர் திரு கவாயை வெட்டியிருந்தாலோ கொன்றிருந்தாலோ, இப்படித்தான் நீதிமன்றம் வேடிக்கை பார்க்குமா?

உச்ச நீதிமன்றம் கருணையோடு மன்னிக்க ராகேஷ் கிஷோர் தகுதியானவனா?

தான் செய்தது சரி என்றும் வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் அதே அசிங்கத்தை செய்வேன் என்று சொன்னவனுக்கு மன்னிப்பா?

அவனை மன்னித்தால் ஆயிரமாயிரம் ராகேஷ் கிஷோர் உருவாக மாட்டார்களா?

இப்படிப்பட்ட சூழலில்தான் திரு ஹரிபரந்தாமனின் கேள்வி நியாயம் என்று தோன்றுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் அணுகுமுறை எப்படி இருந்திருக்கும்?

சந்திரசூட் திரு கவாய் போல பெருந்தன்மையாக இருந்திருக்க மாட்டார். ஏனென்றால் அவரே மத வெறி ஊறிப்போனவர்தான். அவரது சமீபத்திய பேட்டிதான் அதற்குச் சான்று.

சரி, நீங்கள் சொல்லுங்கள் யுவர் ஆனர்? முன்னாள் நீதிபதியின் கேள்விக்கு இந்நாள் நீதிபதிகளின் பதில் என்ன? 

பூவு போல விழுந்திருப்பாரோ விஜய்?

 


கீழேயுள்ள செய்தியை படியுங்கள்...




அதனை படித்தவுடன் வில்லாதி வில்லன் திரைப்படத்தின் ஒரு காட்சிதான் நினைவுக்கு வந்தது.


விஜய் இப்படியெல்லாம் காலில் விழுந்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். வேண்டுமானால் மோடி, அமித்ஷா கால்களில் 


23ம் புலிகேசி போல விழலாம்...

Tuesday, October 28, 2025

தெரு நாய்கள் -உச்ச நீதிமன்றம் - மாநில அரசுகள்

 


"தெரு நாய்கள் பிரச்சினை தொடர்பாக நாங்கள் அளித்த வழிகாட்டுதல்களை அமலாக்கியது தொடர்பாக ஒவ்வொரு மாநில அரசும் பிரமாண வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட்டும் எட்டு வார அவகாசம் அளித்தும் மேற்கு வங்கம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தவிர வேறெந்த மாநிலங்களும் தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து பிரமாண வாக்குமூலம் அளிக்கவில்லை. டெல்லி மாநகராட்சி கொடுத்த பிரமாண வாக்குமூலம் என்பது போதுமானதல்ல. நாங்கள் மாநில அரசைத்தான் கேட்டோம்.

எனவே வரும் 03.11.2025 அன்று மேற்கு வங்கம், ஆந்திரா தவிர மற்ற அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களும் காலை பத்து மணிக்கு எங்கள் முன்பாக ஆஜராக வேண்டும்."

இது நேற்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளின் அமர்வு பிறப்பித்த உத்தரவாகும்.

ஆக இந்த உத்தரவு தெளிவுபடுத்துவது ஒரு விஷயத்தைத்தான். 

தெரு நாய்கள் கடித்து எத்தனை பேர் இறந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை. உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டாலும் அதனை எச்.ராசாவின் உயர் நீதிமன்றமாக கருதி அலட்சியப்படுத்துவோம் என்று மாநில அரசுகள் இருக்கின்றன. 

முதன் முதலில் தெருநாய்ப் பிரச்சினை வந்த போதே எழுத நினைத்தேன். ஆனால் அப்போது ஏனோ இயலவில்லை. 

இன்று நிகழ்ந்த ஒரு சம்பவம் எழுத வைக்கிறது. அது பற்றி தனியாக எழுதுகிறேன்.

தெருநாய் பிரச்சினை என்பது பல்வேறு வருடங்களாக பல்கி பெருகியுள்ளது. ஏதாவது பெரு நகரத்தில் இறப்பு நேர்கிற போது பெரிய சர்ச்சையாக வருகிறதே தவிர மற்ற சமயங்களில் பேசு பொருளாக இருப்பதில்லை.

வேலூரில் ஒவ்வொரு தெருவிலும் குறைந்த பட்சம் பத்து நாய்களுக்கு மேல் இருக்கும். இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களும் பாதசாரிகளும் உயிரை கையில் பிடித்த படி அச்சத்துடனே பயணிக்க வேண்டியுள்ளது. அவர்கள் துரத்துவதால் ஏற்படும் விபத்துக்களுக்கு அளவே இல்லை. சில மாதங்களுக்கு முன்பு கூட எங்கள் நிறுவன அதிகாரி ஒருவர் வண்டியில் இருந்து கீழே விழுந்து எலும்பு முறிந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சில வாரங்களுக்கு முன்பாக எங்கள் வீட்டை புதுப்பித்த பொறியாளர் கூட நாய் குறுக்கே வந்ததால் ப்ரேக் போட்டு கீழே விழுந்து முழங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை நடந்து இன்னும் நடக்க முடியாமல் தவிக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம் இருக்கும். நானெல்லாம் பல வருடங்களாக இரவு பத்து மணிக்கு மேல் இரு சக்கர வாகனத்தை தொடவே மாட்டேன்.

நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வது எதிர்காலத்தில் தெரு நாய்ப் பெருக்கத்தை தவிர்க்கலாம். ஆனால் இப்போது உள்ளவற்றை, அதனால் வரும் பிரச்சினைகளை எப்படி சமாளிக்கப் போகிறோம்?

குடும்பக் கட்டுப்பாடு செய்வதால் அவற்றின் வெறித்தனமும் போவோர் வருவோரை துரத்துவதும் மாறிப் போய் விடப் போகிறதா என்ன?

முன்பு போல தெரு நாய்களை பிடித்து கொல்வது வேண்டுமானால் கொடூரமானதாக இருக்கலாம். ஆனால் அவற்றை பிடித்து தனியானதொரு இடத்தில் அடைக்கலாமே! அது செலவுதான். ஆனால் அத்தியாவசியமான செலவுதான். மக்களின் பாதுகாப்புக்கான செலவுதான். தெருநாய் புரவலர்கள் இதை எதிர்த்தால் அவர்கள் வீட்டில் வைத்து பராமரிக்கட்டும்.

தெருநாய் புரவலர்கள் தெரு நாய்களுக்கு பொது வெளியில் உணவளித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவும் உதாசீனம் செய்யப்படுகிறது. இதனை அமலாக்கினாலே கொஞ்சம் பிரச்சினை தீரும்.

எங்கள் வீட்டு வாசலில் ஒரு ஒரவலன் இரண்டு ஐந்து ரூபாய் டைகர் பிஸ்கெட் வாங்கி அதை உடைத்து உடைத்து போட்டுக் கொண்டிருப்பான், அவனிடம் ஒரு முறை சண்டை போட்டேன். "இது என்ன உங்கப்பன் வீட்டு ரோடா? " என்று அவன் கேட்க, "தெரு நாய்க்கு பிஸ்கெட் போட இது உங்கப்பன் வீட்டு ரோடா?" என்று திருப்பி கேட்டதற்கு பின்னே அடங்கினான். இப்போதும் அவன் சைக்கிளில் செல்லும் போது அவன் பின்னே பத்து நாய்களாவது துரத்திக் கொண்டே ஓடும். அவை ஒரு நாள் அவனை கடித்தால்தான் புத்தி வரும். இது எல்லா தெரு நாய் புரவலர்களுக்கும்தான். 

தெரு நாய்களை அரசு தெருக்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.  அதனை மாநில அரசுகள் செய்வதை உச்ச நீதிமன்றம்தான் உறுதி செய்ய வேண்டும்.


பிகு: மேலே உள்ள படம் 05.10.2025 அன்று காலை 04.47 மணிக்கு என் வீட்டு வாசலில் எடுத்தது. அன்று ஒரு வேளையாக சென்னை செல்லப் புறப்பட்டு கதவை திறக்கும் வேளையில் இத்தனை தெரு நாய்கள். கூடவே மாடுகளும்.


Monday, October 27, 2025

தோழர் ஏகாம்பரம் - மிகச் சிறந்த வழிகாட்டி

 


நேற்றைய இரவு துயரமான இரவாக முடிந்தது.

எங்கள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், வேலூர் கோட்டத்தின் முன்னாள் தலைவர் தோழர் என்.ஏகாம்பரம் நேற்று இரவு இயற்கை எய்தினார்.  அவருடனான நினைவுகள் மனதில் அலை அலையாய் மோதிக் கொண்டிருந்தது.

அவரை நான் முதன் முதலில் அறிந்தது 12.06.1988 அன்று நடைபெற்ற வேலூர் கோட்டத்தின் அமைப்பு மாநாட்டில்தான்.

வேலூர் கோட்டத்தின் இணைச்செயலாளராக அந்த மாநாட்டில்தான் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகே அவருடனான பரிச்சயம் தொடங்கி பின்னாளில் வேலூர் கோட்ட அலுவலகத்திற்கு மாறுதலில் வந்த பிறகு அது நெருக்கமாக மாறியது.

எனக்கு திருமணம் நிச்சயமான சூழலில் அப்போது நான் பணியாற்றிக் கொண்டிருந்த நெய்வேலிக்கு  கும்பகோணம் கிளையில் பணியாற்றிக் கொண்டிருந்த என் மனைவிக்கு மாறுதல் கிடைக்காது என்ற நிலையில் என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருந்த எனக்கு "வேலூருக்கு இருவரும் வாருங்கள்" என்ற ஆலோசனையை அவர்தான் வழங்கினார்.

தோழர் ஏகாம்பரம், எல்.ஐ.சி நிறுவனம் உருவான பின்பு முதலில் பணி நியமனம் செய்யப்பட்ட உதவியாளர்களில் ஒருவர். பணியில் சேர்ந்த போதே சங்கத்திலும் சேர்ந்தவர். சங்கத்தின் உறுப்பினர்களை, தலைவர்களை நிர்வாகம் வேட்டையாடிக் கொண்டிருந்த நேரம் அது. எந்த அச்சமும் இல்லாமல்  சங்கத்தில் இணைந்தது மட்டுமன்றி செயற்பாட்டாளராகவும் திகழ்ந்தவர்.

பணியில் சேர்ந்து பல வருடங்களுக்குப் பிறகுதான் பயிற்சி வகுப்பே நடத்தினார்கள் என்பார். அந்த பயிற்சி வகுப்பில் அவரோடு பங்கேற்றவர் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம். அப்போதே தென் மண்டல இணைச்செயலாளராக இருந்த தோழர் என்.எம்.எஸ், பயிற்சி வகுப்பின் தேநீர் இடைவேளையின் போதும் மதிய உணவு இடைவேளையின் போதும் மாநாட்டு அறிக்கையை எழுதிக் கொண்டிருப்பார், அவர் மிகப் பெரிய உயரத்துக்குச் செல்வார் என்று அப்போதே தெரிந்தது என தோழர் என்.எம்.எஸ் அவர்களைப் பற்றி தோழர் ஏகாம்பரம் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார். 

ஊழியர்கள் பலன் பற்றிய அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார். அவர் அலுவலகத்தில் செய்த பணியும் "ஓய்வுக்கால பலன்களை  பட்டுவாடா செய்தல், பதவி உயர்வு பெறுவோருக்கான ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்தல்" ஊழியர்களுக்கு அதிகபட்ச பலன் கிடைப்பதையும் அவை உரிய காலத்தில் கிடைப்பதையும் உறுதி செய்தவர். 

ஊழியர்களுக்கான பணியிட மாறுதல்களின் போது அதிகபட்ச மாறுதல்கள் கிடைப்பதற்கான சூட்சுமங்கள் அறிந்தவர். அவர் உருவாக்கிய ராஜபாட்டை இன்றும் பல தோழர்களுக்கு பயனளித்துக் கொண்டிருக்கிறது. 

பணி ஓய்வு என்பது அவரது சங்க உணர்வுகளுக்குக் கிடையாது. நுகர்வோர் குறியீட்டு எண் என்ன என்பதை ஒவ்வொரு மாதமும் கண்டறிந்து ஒவ்வொரு மூன்று மாதமும் அகவிலைப்படி உயர்வு எவ்வளவு வரும் என்பதை கணக்கிட்டு தகவல் சொல்வார். அவர் எனக்கு இறுதியாக வாட்ஸப்பில் அனுப்பிய செய்தி கூட அகவிலைப்படி உயர்வு பற்றித்தான். 

அந்த ஆர்வம்தான் கடந்தாண்டு "அகவிலைப்படி- தோற்றமும் முன்னேற்றங்களும், ஒர் வரலாற்றுப் பார்வை" என்ற நூலை அவரது 86 வது வயதில் எழுத வைத்தது. அந்த நூல் வெறும் அகவிலைப்படியோடு நிற்கவில்லை. ஆட்சியாளர்களின் கொள்கைகள் உழைக்கும் மக்களை எப்படித்தாக்கும் என்பதை விளக்கும் நூலாகவும் இருந்தது.  திண்டிவனத்தில் நடைபெற்ற கோட்டச்சங்க மாநாட்டில் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா வெளியிட்டார்.

அவர் நிஜமாகவே "எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்"தான். கர்னாடக இசையில் ஆர்வம் உள்ளவர்கள். ராகங்களின் அழகை விளக்கக் கூடியவர். ஆபேரி ராகத்தின் அழகை "நகுமோ" கீர்த்தனையில்தான் உணர முடியும் என்பார். பல கர்னாடக இசை காணொளிகளை அனுப்பி அந்த ராகங்களின் சிறப்பையும் சேர்த்து சொல்வார்.

மார்க்சியத்தின் மீதும் மதச்சார்பின்மை கொள்கையின் மீதும் அசையாத நம்பிக்கை கொண்டவர். மத உணர்வுகளை அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்பவர்களை அம்பலப்படுத்த தயங்காதவர். இன்றைய ஆட்சியாளர்கள் பற்றி அவர்களை ஆதரிக்கும் உறவினர்களுக்கு இவர் அனுப்பிய சில செய்திகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார். கொள்கைக்காக யாரிடமும் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் கறாராக இருப்பவர் என்பதை அந்த செய்திகளே சொல்லும்.

வயது வித்தியாசம் இல்லாமல் பழகக் கூடியவர்.  அனைவரிடமும் தோழமை உணர்வை வெளிப்படுத்துபவர். 

பல சந்தர்ப்பங்களில் நான் அவருடைய ஆலோசனையை கேட்டுப் பெற்றுள்ளேன். பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டுமென எங்கள் கோட்டத்தின் முதல் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.ஜகதீசன் முன்மொழிந்த போது அந்த பொறுப்பை ஏற்று நம்மால் செயல்பட முடியுமா என்று மலைப்பு ஏற்பட்ட போது அவரிடம் ஆலோசித்தேன். நம்பிக்கையும் தைரியமும் உற்சாகமும் கொடுத்தார். 

பணி ஓய்வு பெற்று 27 ஆண்டுகள் ஆன பின்பும் சங்கத்தின் தகவல்களை கேட்டு தெரிந்து கொள்வார், எல்.ஐ.சி நிறுவனத்தின் சுற்றறிக்கைகளை அனுப்பச் சொல்லி தன்னை புதுப்பித்துக் கொண்டே இருப்பார். 

அவர் என்னை செல்லமாக கடிந்து கொண்ட ஒரு நிகழ்வும் உண்டு. 

1990ல் தென் மண்டல மாநாடு ஹைதராபாத் நகரில் நடக்கிறது. நான்கு நாட்கள் தென் மண்டல மாநாடு நடந்தது. ஐந்தாவது நாள் தென் மத்திய மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் அமைப்பு மாநாடு. மாநாட்டு அறிக்கையில் ஒரு வார்த்தை சொல்ல வந்த முக்கியக் கருத்தை எவ்வாறு சிதைக்கிறது என்று எங்கள் கோட்ட பிரதிநிதிகள் விவாதிக்கையில் சுட்டிக்காட்டினார். அவர் சொன்ன கருத்தை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்கையில் தோழர் ஜகதீசன் சுட்டிக் காண்பிக்க அதனை அறிக்கை மீதான விவாதத்திற்கு தொகுப்புரை வழங்குகையில் அந்த வார்த்தையை மாற்றுவதாக அன்றைய தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் எஸ்.ராஜப்பா குறிப்பிட்டார். 

தென் மண்டல மாநாடு முடிந்த நாளன்று ஏதாவது தெலுங்குப் படம் பார்ப்போம் என்று கிளம்பினோம். அவரையும் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றோம். எதுவும் தெரியாமல் ஒரு திரை அரங்கில் நுழைந்தோம். கடைசியில் அந்த படம் மிக மோசமான முறையில் சொதப்பலாக எடுக்கப் பட்டிருந்த 16 வது வயதினிலே படத்தின் ரீமேக், "என் தூக்கத்தை கெடுத்து இப்படி ஒரு படத்துக்கு போய் கூட்டிட்டு  போனீங்களே" எறு கேட்டதுதான் அந்த நிகழ்வு.

கதவடைப்புப் போராட்டத்தின் ஐம்பதாவது ஆண்டை முன்னிட்டு ஒரு சிறு பிரசுரத்தை வெளியிட்டோம். அந்த நூலிற்கு ஒரு வாழ்த்துச் செய்தி அனுப்புமாறு கேட்டுக் கொண்டோம். மகிழ்வோடு இசைந்து உடனடியாக அனுப்பி வைத்தார். அச்சிடும் பணியின் இறுதிக்கட்டத்தில் தொலைபேசி செய்து வேலூர் கிளையின் அனுபவத்தைப் பற்றி ஒரு சிறிய கட்டுரை எழுத விரும்புகிறேன். உங்களால் அதனை இணைக்க முடியுமா என்று கேட்க அது எங்களுக்கான நல்வாய்ப்பு என்று சொல்ல மறுநாளே அருமையான ஆங்கிலத்தில் அனுப்பி வைத்தார். அவரின் சங்க உணர்வுக்கு அது ஒரு சான்று. 

கடந்த ஜூலை இறுதியில் 70 பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்ட ஒரு நோட்டை கொடுத்தனுப்பியிருந்தார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முக்கியப் போராட்டங்கள் பற்றி எழுதியிருந்தார். அதனை ஒரு நூலாக்கும் பணிகள் துவங்கும் முன்பே அவர் மறைந்து விட்டார். அந்த பணியை முடித்து உரிய காலத்தில் வெளியிட வேண்டும்.

இறுதி மூச்சு வரை சங்கத்தின் மீது கொண்ட பற்று மாறாமல் தான் அறிந்தவற்றை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று உழைத்தவர் தோழர் ஏகாம்பரம். அவர் வாழ்வே மற்றவருக்கான உதாரணம். 

நீங்கள் உயர்த்திப்பிடித்த தீபத்தை தொடர்ந்து பாதுகாப்போம் என்று உறுதியேற்று  செயல்படுவதே அவருக்கான சிறந்த அஞ்சலி.

செவ்வணக்கம் தோழர் ஏகாம்பரம்

சில முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள் கீழே . . .




அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வைரவிழாவை முன்னிட்டு வேலூர் கோட்டம் வெளியிட்ட நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டு பேசிய போது எடுக்கப்பட்ட படங்கள்.



வேலூர் கோட்டத்தின் வெள்ளிவிழா ஆண்டு துவக்க விழாவின் போது தோழர் என்.எம்.சுந்தரம் அவர்களை கௌரவித்த போது.


வேலூர் கோட்ட வெள்ளி விழா ஆண்டு மாநாட்டின் போது அகில இந்தியத் தலைவர் தோழர் அமானுல்லா கான், தோழர் ஏகாம்பரம் அவர்களை கௌரவித்த போது . . .



வேலூர் கோட்ட வெள்ளி விழா ஆண்டு மாநாட்டின் போது வெளியிடப்பட்ட வேலூர் கோட்ட 25 ஆண்டுகள் வரலாறு நூலின் முதல் பிரதியை பெற்ற போது. 



அவர் எழுதிய "அகவிலைப்படி, தோற்றமும் முன்னேற்றங்களும், ஓர் வரலாற்றுப் பார்வை" நூலை, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா வெளியிட்ட போது . . .