மகளிர் இட ஒதுக்கீட்டை அமலாக்காமல் திமுகவும் மற்ற எதிர்க்கட்சிகளும் தடுத்து பாவம் செய்து விட்டார்கள் என்று பொய்யாக நடித்துக் கொண்டிருக்கின்றனர்.
மகளிர் மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளிக்கச் சொல்லி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கச் சொல்லி எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அறைகூவல் கொடுத்தது. (மகளிர் மசோதாவிற்காக எங்கள் சங்கம் நடத்திய இயக்கங்கள் பற்றி மட்டுமே தனியாக ஒரு பதிவு எழுத வேண்டும். ஒரு நூலுக்காக தொகுத்தது உள்ளது. அதனால் பகிர்வது சுலபம்)
வேலூர் எம்.பி யாக இருந்த முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் அவர்களை சந்தித்தோம்.
அப்போது அவர் ஒரு விஷயத்தை தெளிவாகச் சொன்னார்.
காங்கிரஸ், பிஜேபி என்றெல்லாம் இல்லை, எல்லா கட்சிகளிலும் உள்ள ஆண் எம்.பி க்கள் மகளிருக்கான இட ஒதுக்கீடு வருவதை அனுமதிக்க மாட்டார்கள். அவர்களுடைய தொகுதி பெண்களுக்கான தொகுதியாக மாறினால் அவர்களின் அரசியல் முடிந்து போகும் என்ற அச்சம் உள்ளது. எல்லாராலும் லாலு தன் மனைவியை முதல்வராக்கியது போல மனைவியை எம்.பி யாக்க முடியாதல்லவா! அதனால் வாய்ப்பு குறைவுதான் என்று சொன்னவர் இன்னொரு ஆலோசனையையும் சொன்னார்.
டி.கே.ரங்கராஜன் என்று ஒரு கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி ராஜ்யசபையில் இருக்கிறார். அவரை பாருங்கள். அந்த கட்சி வேண்டுமானால் இதற்காக குரல் கொடுப்பார்கள் என்பதுதான் அவர் ஆலோசனை.
மோடிக்கும் அமித்ஷாவிற்கும் எதிர்க்கட்சிகள் பேசினால் முகத்தை கடுப்பாகவே வைத்துக் கொள்ளும் சபாநாயகர் ஓம் பிர்லா, ஆவேசமாக பேசிய பிஞ்சிலே வெம்பிப் போன தேஜஸ்வி சூர்யா ஆகியோருக்கு மகளிர் இட ஒதுக்கீட்டில் ஆர்வம் இருந்தால் இப்போதுள்ள 543 என்ற உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஏற்ப 33 % இட ஒதுக்கீட்டை அளிக்கலாமே!
திமுக எம்.பி வில்சன் தனி நபர் மசோதா கொண்டு வந்துள்ளாரே, அதை பாஜக ஆதரிக்கலாமே!
செய்வார்களா?
பிகு: இந்த பதிவிற்கு தொடர்பில்லையென்றாலும் இன்றுள்ள சூழலில் இதனையும் பதிவு செய்வது மிகவும் அவசியம்.
நாங்கள் திரு காதர் மைதீன் அவர்களை சந்திக்க சென்ற போது அவர் வாசித்துக் கொண்டிருந்தது "திருவாசகம்"
அவர் மேஜையில் இருந்த இன்னொரு நூல் "நாலாயிர திவ்விய பிரப்பந்தம்"










