Sunday, July 12, 2015

மாதொரு பாகனுக்கு கூள மாதாரி பல மடங்கு மேல்

(நீண்ட நாட்களாக டிராப்டிலேயே இருந்ததை இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.  இந்த நான்கு நூல்களுக்குப் பிறகு இன்னும் சில புத்தகங்களும் படித்து முடித்தாகி விட்டது. அவற்றையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பகிர்ந்து கொள்கிறேன் ) 



இந்த முறை புவனேஸ்வர் செல்கையில் பயணத்தில் படிக்க பெருமாள் முருகனின் "கூள மாதாரி", தோழர் ச.தமிழ்ச்செல்வனின் "சந்தித்தேன்" செழியன் தமிழில் எழுதிய"பதேர் பாஞ்சாலி" திரைக்கதை, எஸ்.ராமகிருஷ்ணனின் "சஞ்சாரம்"  என நான்கு  நூல்களை எடுத்துச் சென்றிருந்தேன்.

பெரும்பாலான சமயங்களில் எடுத்துச் சென்ற நூல் எதையுமே ஒரு பக்கம் கூட படிக்காமல் அப்படியே கொண்டு வருவதோ இல்லை பாதி படித்து மீதி வைத்திருப்பதோ நடக்கும். ஆனால் இந்த முறை அனைத்து புத்த்கங்களையும் ப்டித்து முடித்து விட்டேன் என்பதை என்னைப் பொறுத்தவரை ஒரு பெரும் சாதனைதான்.

ஆக நான்கு  நூல்கள் பற்றிய எனது கருத்துக்கள் வரும் என்பதை ஒரு எச்சரிக்கையாக புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

முதலில் கூள மாதாரி பற்றிய பகிர்வோடு துவங்குகிறேன்.

ஆடு மேய்க்கும் சிறுவர்களின் வாழ்க்கையைப் பற்றிய கதை.  பண்ணையடிமைகளாக குடும்பத்தால் கொண்டு விடப்படும் சிறுவர்களை பண்ணைய்டமையாளர்கள் எப்படிப்பட்ட உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்குகிறார்கள் என்பதுதான் கதை.

மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டிச் செல்லும் சிறுவர்கள், சிறுமிகள், இவர்களுக்கு இடையிலான விளையாட்டுக்கள், சண்டைகள், தங்களது முதலாளிகள், குடும்பத்தினர் பற்றிய பேச்சுக்கள், என்று பல பக்கங்கள் நகர்கின்றன. 

கூளையன் என்ற ஆடு மேய்க்கும் சிறுவனோடு அவனது முதலாளியின் மகனும் வருகிறான். இவர்கள் நண்பர்கள் போலவும் காட்சியளிக்கிறார்கள். அதே நேரம் முதலாளியின் மகன் தனது மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ளவும் செய்கிறான். இறுதியில் ஒரு சண்டையில் முதலாளியின் மகன் கிணற்றில் விழுந்து செத்துப் போவதாகவும் கூளையன் என்ன செய்வதென்று அறியாமல் பதறுவதோடு கதை முடிந்து போகிறது.

அடிமைத்தனத்தையும் சுரண்டலையும் ஆணித்தரமாக எடுத்து வைத்த விதத்திலும் அந்த இடத்தில் நாமே இருப்பது போன்ற உணர்வை உருவாக்கியதிலும், சிறுவர்கள் மனதில் கூட ஜாதி வெறி வேரூன்றி வருகிற துயரத்தை அம்பலப்படுத்தியுள்ளதிலும் கூள மாதாரி, நிச்சயமாக மாதொருபாகனை" விட சிறப்பான நூல்தான்.

நாவலெங்கும் அங்கங்கே வந்து போகிற கெட்ட வார்த்தைகள் கொஞ்சம் எரிச்சலாக இருக்கிறது. வலிய திணித்தது போல பல இடங்களில் தோன்றுகிறது.

2 comments:

  1. அவசியம் வாங்கிப் படிக்கின்றேன் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  2. ஒருவருக்குப் புத்தகத்தை விட மேலான நண்பர் இல்லை. சமூகத்தின் அனுபவத்தை, வெறும் 100-500 ரூபாயிலேயே, ஓரிரவிலேயே அறிந்துகொள்ள முடிவது புத்தகத்தின் (உருப்படியான) தனிச்சிறப்பு. தொடர்ந்து நல்ல புத்தகத்தை அறிமுகம் செய்வீர்.

    ReplyDelete