Wednesday, July 28, 2010

திருமண மந்திரம் என்ற ஆணாதிக்க அபத்தம்.

இன்று மகளிர் செய்ய முடியாத பணிகள் என எதுவுமே கிடையாது
என்ற நிலை ஏற்பட்டிருந்தாலும் மதங்கள் மகளிரை சற்று தள்ளியே
நிறுத்தியுள்ளன. வேதங்களை பயிலுவதோ ஏன் உச்சரிப்பதோ கூட
மகளிர் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. (அது அவசியமற்றது
என்பது வேறு விஷயம்.) அக்காலத்தில் முனிவர்களாக, ரிஷிகளாக
பெண்கள் இருந்திருக்கிறார்கள் என சிலர் வாதம் புரிந்தாலும் மகளிர்
புறக்கணிக்கப்பட்ட ஒரு துறையாகத்தான் வேதம் பயிலுதல் என்பது
இருந்துள்ளது. பெண்களுக்கு எதிரான கருத்துக்களையே வேதங்கள்
கொண்டுள்ளதால்தான் அவ்வாய்ப்பு மறுக்கப் பட்டுள்ளது என்பதை
சமீபத்தில் உணர்ந்து கொண்டேன்.

திருமண மந்திரங்களின் முக்கியத்துவத்தை விளக்கி அதன் தமிழ்
அர்த்ததுடன் கூடிய ஒரு புத்தகம் ஒரு திருமணத்தில் தரப்பட்டது.
திருமண விருந்தை விட அப்புத்தகம் பரபரப்பை உருவாக்கியிருந்தது.
அப்புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்த போது திருமண மந்திரங்கள்
உண்மையிலேயே மிகுந்த அதிர்ச்சியை அளித்தது.

அப்படி என்னதான் சொல்லப்பட்டுள்ளது?

மணமகளை "பரிசாகப்" பெற்ற மணமகன் கீழ்க்கண்டவாறு பிரார்த்தனை   செய்ய வேண்டுமாம்.

" என்னிடம் சகல சௌபாக்கியங்களுடன் வரும் இந்நங்கை எனது சகோதரர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்கட்டும்.  ஹே பிரகஸ்பதியே!  பதியான எனக்கு தீங்கு செய்யாதவளாக இவள் இருக்கட்டும்  இந்திரனே, எங்களின்   மழலைச்செல்வங்களுக்கு இவளால் 
தீங்கு வராதவாறு ஆசீர்வாதம்    செய் சூரியனே!"

திருமணத்திற்கு முன்பே மனமகளால் தனக்கோ, தன சகோதரர்களுக்கோ, இனி பிறக்கப்போகும் குசந்தைகளுக்கோ தீங்கு விளையும், அது கூடாது  என    அட்வான்ஸ் பிரார்த்தனை செய்தால்  மணவாழ்வு  எப்படி  இனிமையாக அமையும்? ஆனால் இதே போன்ற பிரார்த்தனையை மணமகள் செய்ய முடியாது. அதற்கான மந்திரங்களே கிடையாது.

அடுத்து வரும் மந்திரம் இன்னும் சிறப்பு:

" மணமகளே! உன் கண்கள் கருணை நிரம்பியதாக இருக்கட்டும். உன்
பதியாகிய எனக்கு உன்னால் எத்தீங்கும் வரவேண்டாம். என்னைச்சார்ந்த  என் உறவினர்களிடம் அன்பாக இரு. நீ
பெருந்தன்மை உள்ளவளாகவும் ஒளி படைத்தவளாகவும் இரு. உன்
குழந்தைகள் நிறை ஆயுள் பெற்றவர்களாக இருக்கட்டும்.  எனது
பந்துக்கள் நலனில் அக்கறை உள்ளவளாகவும், எங்களது
உடமைகலாகிய பிராணிகளின் நலனில் கவனமாகவும் இரு "


அடேங்கப்பா!  என்னவெல்லாம் எதிர்பார்ப்பு!       உறவினர்களை கவனித்துக்  கொள்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் ஆடு, மாடு, தொழுவம் என எல்லா  வேலைகளையும் நீதான் பார்த்துக் கொள்ளவேண்டும் என கண்டிப்புடன்  சொல்லி விட்டது வேதம்.


அடுத்து வருவது இன்னமும் மோசம்.


" கட்டை விரலாலும் மோதிர விரலாலும் தர்ப்பத்தை எடுத்து    பெண்ணின் இரு புருவங்களிடையில் துடைத்து மேற்குபுறமாக   எறிந்து விடவேண்டும். அதன் கருத்து ' ஒ பெண்ணே! உனது  பதியான என்னைக் கெடுக்கும் படியான எண்ணம் ஏதேனும்  உன்னிடம் இருந்தால் அதை இந்த தர்ப்பையுடன் தூர எரிகிறேன்"

பெண்கள்  மீது  எப்படிப்பட்ட  மதிப்பு  வேதத்திற்கு  உள்ளது  பாருங்கள்.  உன்னால்       எந்த  தீங்கும்  வரக்கூடாது  என மீண்டும்  மீண்டும்  மிரட்டுகிறது  வேதம்.  


கண்ணீரால்  ஏற்படும்  புனிதத்தன்மையை  அகற்ற  அடுத்து  ஒரு  மந்திரம்  வருகிறது.


மணமகளைப் பிரியும் போது    பெற்றோர்கள், உறவினர்கள் கலங்குவது, 
கண்ணில் நீர் வருவது     பாசத்தின்  இயல்பான  வெளிப்பாடு.   அப்படிப்பட்ட கண்ணீர் புனிதம்  அற்றதாம். எனவே அதனைக் களைவதற்கு ஒரு மந்திரமாம்.   மனிதர்களின் இயல்பான உணர்வுகளை மறுக்கிறதா வேதம்? அல்லது திருமணத்திற்குப் பிறகு பெண்கள் சிந்தும் கண்ணீர் புனிதமற்றது என்பதை முன்கூட்டியே சொல்லி வைத்து விடுகிறது போலும்.

அடுத்து வருவது மணமகளை பரிசுத்தம் செய்யும் படலம்.


" ஒ இந்திர! நுகத்தடியின் துவாரத்தில் ஜலத்தை விட்டு நீ   அபாலா என்ற கன்னிகையை சுத்தமாக்கி சூரியன் போல்  பிரகாசிக்கச்செய்தாய். அப்படியே இவளையும் பிரகாசமுள்ளவளாக  செய். உடல் வலிமையுள்ளவளாக, நோய் அற்றவளாக செய்"  

மணமகளிடம் ஏதேனும் நோய் அல்லது குறைபாடு இருந்தால் இம்மந்திரம்
அதனை அகற்றி விடுமாம். அதற்காக ஒரு முன்கதை சுருக்கம் வேறு    சொல்லப்படுகின்றது. நோயோ, குறைபாடோ அது இருவருக்கும்   பொதுவானதுதானே!   பரிசுத்தமாக வேண்டியது இருவரும்தானே. ஆனால்   வேதமோ மணமகள் பற்றி மட்டுமே கவலைப்படுகிறது. என்னே பெருந்தன்மை!இல்லை இன்றைய சில பணக்கார வக்கிரங்கள் செய்யும் கன்னித்தன்மை சோதனையின் வேதகால வடிவம் இம்மந்திரமோ?


மாங்கல்யம் தந்துனா என்று திரைப்படங்கள் மூலம் அனைவருமே
அறிந்துள்ள மந்திரத்தின் அர்த்தம் என்ன தெரியுமா?


நான் சிரஞ்சீவியாக இருப்பதற்குக் காரணமான இந்த   திருமாங்கல்ய நானை உன் கழுத்தில் கட்டுகிறேன். ஏ பாக்யவதி  நீயும் நூற்றாண்டு காலம் வாழ்வாயாக"

அப்பா என்ன ஒரு பேராசை! மணமகன் இறப்பே வராமல் சிரஞ்சீவியாக
வாழ்வாராம். அதற்குக் காரணமாக உள்ள பெண்ணுக்கு மட்டும் போனால்
போகட்டும் என நூறாண்டு ஆயுள் தருவாராம். வேடிக்கையாக இல்லை?

கடைசியாக வருகின்ற மந்திரம்தான் மிகக்கொடுமையானது.  அதற்கு
தேவர்களின் தொடர்பை நினைவூட்டல் என்று பெயராம்.

"மணமகளே! சோமதேவனுக்கு  நீ முதலில் கிடைக்கப் பெற்றாய்.  அதன் பிறகு கந்தர்வதேவனுக்கு  துணையானாய். பின்னர்  அக்னி   தேவன் உன் கணவனாக இருந்தான். இப்போது மனிதப்பிறவியாக   நான் உனது நாலாவது  கணவன்"

இதைப்படிக்கும் போதே கோபம் வரவில்லை? குமட்டிக்கொண்டு 
வரவில்லை? 
மொத்தத்தில் பெண்களை அடிமைகளாக மட்டுமே வேதம்கருதுகிறது  
என்பதும்  அதற்கான  சட்டபூர்வ  அடிமை சாசனமாகவே  திருமண மந்திரங்கள் உள்ளது   என்பதும் தெளிவாகிறது. 

மந்திரங்களின் அர்த்தத்தை உணர்ந்தோ உணராமலோ இந்த மந்திரங்களோடு ஏராளமான திருமணம்  அன்றாடம்  நடைபெற்றுக்
கொண்டே  இருக்கிறது.  பெண்கள் இவற்றின் உட்பொருளை உணர்ந்து கொண்டால்பொங்கி எழுவார்கள் என்பதால்     வேதம் பயிலும்    வாய்ப்பு   அவர்களுக்கு    மறுக்கப்பட்டுள்ளது   என்பதும்  தெளிவு.

கற்பு என்றால் அதனை இருவருக்கும் பொதுவில்  வைப்போம்  என்று  பாரதி பாடினான். ஆனால்வேதமோ பெண்களுக்கு  மட்டும் உபதேசிக்கிறது.  

பெண்களை  மட்டும்  சந்தேகிக்கிறது  .பெண்களுக்குமட்டுமேகட்டளையிடுகிறது. பெண்களை  அடிமைகளாக மட்டுமே கருதுகிறது. 

திருமண மந்திரங்கள் என்பது  இன்று  வெற்று  சடங்காக  மட்டுமே கூட  இருக்கலாம்.  ஆனாலும் நாம்  கவலைப்பட வேண்டிய   அவசியம்   ஒன்றுள்ளது.  வேத காலம் திரும்பிட  வேண்டும். வேதங்களின்  அடிப்படையில்  ஆட்சி  நடைபெற வேண்டும் என   
சங்பரிவாரக்கூட்டம் ஆசைப்படுகின்றது. மகளிருக்கு  எதிரான 
பிற்போக்குக் கருத்துக்களை அவ்வப்போது விதைத்துக் கொண்டே இருக்கிறது. 

ஊருக்கு மட்டும் உபதேசம் செய்பவர்களை  ஒதுக்கி வைப்பது என்பது  ஒரு 
உலக  இயல்பு. பெண்களுக்கு  மட்டும்  உபதேசம்  செய்கிற வேதங்களை  நாம்     ஒதுக்கிட வேண்டும். அதுதான்  எங்களின்  அடிப்படை தத்துவம்   என்று  சொல்பவர்களையும்  சேர்த்தே ஒதுக்கி வைக்க வேண்டும்.


( டிசம்பர் 2006  மகளிர் சிந்தனை  இதழில்  வெளியான எனது 
கட்டுரை  மேலே தரப்பட்டுள்ளது.)     






6 comments:

  1. அருமை.
    நீங்கள் மொழிப் பெயர்த்த மந்திரத்தின் மூல மந்திரத்தை தரமுடியுமா?

    ReplyDelete
  2. நல்ல கட்டுரை தோழா..
    தொடர்ந்து எழுதுங்கள்..

    www.tamilish.com
    www.tamil10.com
    www.thalaivan.com
    www.valaipookkal.com

    போன்ற தளங்களில் பதிவு செய்தீர்களானால் தங்களது கட்டுரை இன்னும் பலரை சென்றடையும்.

    facebook.com கிற்கும் வாருங்கள்.

    ReplyDelete
  3. நல்ல கட்டுரை தோழர் ... மிகவும் பயனுள்ளதாக இருந்தது ..தொடரட்டும் உங்கள் விழிப்புணர்வூட்டும் பணி ...

    ReplyDelete
  4. அன்பான ஸ்மார்ட், யாநிலாவின் தந்தை , நியோ

    நன்றி தோழர்களே, உங்கள் வருகையும் வாழ்த்தும் எனக்கு உற்சாகமளிக்கிறது. மேலும் எழுத ஊக்கமளித்துள்ளது

    ReplyDelete
  5. //smart said...

    அருமை.
    நீங்கள் மொழிப் பெயர்த்த மந்திரத்தின் மூல மந்திரத்தை தரமுடியுமா?//

    நான் சமஸ்க்ரிததில் இதை படித்து இருக்கிறேன்.

    நீங்கள் இவர்களை அணுகுங்கள்; உங்களுக்கு "original and unabridged version" மந்திரங்கள் கிடைக்கும்.

    அணுக வேண்டிய முகவரி:

    சங்கமித்திரன்
    மதிமாறன்
    தமிழச்சி
    தமிழ் ஓவியா.
    Periyar.org
    விடுதலை
    உண்மை

    இப்படி ஏராளாமான இடங்கள் உள்ளது.
    அவர்களை அணுகவும்.

    ReplyDelete
  6. நண்பரே, தமிழர்களின் மானத்தைக் கப்பலேற்றும் விதமான இந்த சமற்கிருத மந்திரங்களுக்குப் பதிலாக புதிய செம்மொழித் திருமண மந்திரம் இயற்றப்பட்டுள்ளது. நீங்கள் விரும்பினால் அதனைக் கீழ்க்காணும் தளத்தில் படிக்கலாம். நன்றி. https://thiruththam.blogspot.com/2019/02/blog-post.html

    ReplyDelete