Saturday, July 10, 2010

நெஞ்சை நெகிழ வைத்த ஒரு விழா
















இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டமான
வேலூர் சிப்பாய் புரட்சியை கொண்டாட தமிழ்நாடு
முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்
இன்று விழா நடத்தியது. மூன்றரை மணி நேரம்
நம்மை கட்டிப்போட்ட விழா.

குறுமன்ஸ் பழங்குடி இன மக்களின் துடிப்பான 
நடனம், காளையாட்டம், புலியாட்டம், மற்றபடி 
சிறப்பான பாடல்களைத் தொடர்ந்து ஒரு கூட்டம்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு ராஜேந்திரனும் 
சட்டப் பேரவை உறுப்பினர் திரு ஞானசேகரனும்
முக்கியப் பேச்சாளர்கள். ஞானசேகரன் உரை 
வழக்கமான  அரசியல்வாதியின் உரை. ஆனால்
மாவட்ட ஆட்சியரின் உரை யதார்த்தமாக 
அமைந்திருந்தது ஒரு ஆச்சர்யம்.

அவர் பேசியதிலிருந்து

சிப்பாய் கலகம் என மாவட்டத்தில் எங்கெல்லாம் 
பதிவு செய்யப்பட்டதுள்ளதோ அவையெல்லாம் 
சிப்பாய் புரட்சி என மாற்றப்படும்.

காந்தியின் அஹிம்சைப் போராட்டம் மட்டுமல்ல
நேதாஜியின் முயற்சிகள், மற்ற அமைப்புக்களின்
போராட்டங்கள் எல்லாமும் சேர்த்துத்தான் 
இந்தியாவிற்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்தது. 
(ஒரு மாவட்ட ஆட்சியர் இந்த உண்மையை 
சொல்வது கூட இன்று ஒரு அதிசயம்தான்) 

வேலூர் புரட்சியை வட இந்திய வரலாற்று 
ஆசிரியர்கள் திட்டமிட்டு மறைத்து விட்டார்கள்.

சுதந்திரப் போராட்டம் குறித்த புரிதலை 
மாணவர்கள் மத்தியில் விதைக்க முயற்சிகள்
மேற்கொள்ளப்படும்.

112  வெள்ளை சிப்பாய்களும் அதிகாரிகளும் 
கொல்லப்பட்டனர். அவர்களைப் பற்றிய 
பதிவு உள்ளது. ஆனால் கொல்லப்பட்ட இந்திய
சிப்பாய்கள் பற்றியோ அவர்கள் எங்கு புதைக்கப் 
பட்டார்கள் என்பது பற்றியோ எந்த விவரமும் 
இல்லாமல் பார்த்துக்கொண்டது  வெள்ளையர்களின் 
திமிர்தான். 

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்   எந்த ஒரு 
பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொண்டது  
ஒரு தமிழ்க்கலாச்சார மாண்பு. இதை மற்றவர்களிடம்
எதிர்பார்க்க முடியாது. (சிங்களர்களை சொல்கிறாரா?) 

இந்த புரட்சியைக் காட்டிக்கொடுத்தது ஒரு 
குடிகாரன். இப்போது நாம் ஏராளமான டாஸ்மாக்
திறந்து வைத்துள்ளோம்.

சமீபத்தில் காலமான சாரல் கலைக்குழுப் பாடகர்
தோழர் மணிவேலன் குடும்ப நிதியாக ரூபாய் 
இருபத்தி ஐந்தாயிரம் வழங்கப்பட்டது. ௦௦அப்போது
அவர் பாடிய பாடல் ஒளிபரப்பானது. அந்தக் குரல்
கேட்டு  பக்கத்து வரிசையில் அமர்ந்திருந்த அவரது
உறவினர்கள் அழுதது மனதை ஏதோ செய்து 
கொண்டே இருக்கிறது.

வேலூர் சிப்பாய் புரட்சியின் முக்கியமான ஒரு
அம்சமான இந்து முஸ்லிம் வீரர்களின் ஒற்றுமை
குறித்து ஏன் யாருமே குறிப்பிடவில்லை  என்பதுதான்
ஒரு நெருடலாக உள்ளது.
   

     

1 comment: