Friday, March 25, 2011

துயர வரி அகற்றப்பட்டது. கார்ப்பரேட் மருத்துவமனைகளின் பகற்கொள்ளை நிறுத்தப்படுமா?

மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைகள் மீது விதிக்கப்பட்ட  துயர வரி என்று  மருத்துவத்துறையால்  அழைக்கப்பட்ட சேவை வரி திரும்பப் பெறப்பட்டு விட்டது.  இது உண்மையிலேயே  நல்ல விஷயம்தான். 
எதிர்ப்புக்கு  அரசு  அடிபணிந்துள்ளது  என்று கூட  பலரும் பெருமைப் படலாம்.  நிதி நிலை அறிக்கையில் முன்மொழியப்பட்டு பின்பு அது நிறைவேறும் வேளையில்  திரும்பப்பெறப்பட்ட  அனுபவம்  ஏதேனும்   இதற்கு முன்பு உண்டா?  

பங்குச்சந்தை  தரகர்களுக்கு  முன்பு  சேவை வரி விதிக்கப்பட்டது. 
அவர்கள்  போராடினார்கள். மும்பை பங்குச்சந்தை  ஒரு நாள் முடங்கிப்
போனது. சிவகங்கைச்சீமான்  சிதம்பரம் மும்பை பறந்தார்.  தரகர்களை 
சமாதானம் செய்தார். விதித்த வரியை அகற்றினார். இப்போது துயர வரி.

ஆக  தரகர்களோ, பெரும் பணக்காரர்களோ, பெரிய மருத்துவமனைகளோ 
போராடினால்  மத்தியரசு ஓடோடி வரும், அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும்  என்பது துயர வரி விஷயத்திலும்  நிரூபணம் ஆகி விட்டது. 
என்னே ஒரு வர்க்க பாசம்! இதுவே  சாதாரண உழைப்பாளி மக்கள் போராடும் போது  மழைத்தண்ணீர்  மேலே விழுவதை  உணராத  
எருமைகளாய்தான்  மத்தியரசு உள்ளது. 

முந்தைய பதிவில் துயர வரி குறித்து டாக்டர் தேவி பிரசாத் ஷெட்டி 
எழுதியிருந்தது பற்றி குறிப்பிட்டிருந்தேன்.அரசு விதிக்கும்  வரிகளால்தான்  மருத்துவமனைகள்  ஏராளமான கட்டணம் விதிப்பதாக
அவர் எழுதியிருந்தார். வரிகள் மட்டும் இல்லையென்றால்  எதோ அரசு
மருத்துவமனைகளை விட கொஞ்சமே கொஞ்சம்தான்  அதிகமாக 
கட்டணம் வசூலிப்பார்கள்  என்பது போன்ற தொனி  அதில் இருந்தது. 


வரிகள்தான் மருத்துவக் கட்டண உயர்விற்குக் காரணமா? வேறு எதுவுமே
கிடையாதா? ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யில்லையா இது? 

ஆடம்பரக் கட்டமைப்புகள்  ஒரு முதலீடு. கார்ப்பரேட் மருத்துவமனைகளும்  சரி பெரும் வணிகப் பல்கலைக் கழகங்களும் 
தங்கள் கட்டிடங்களை பிரம்மாண்டமாகக் கட்டி காட்டி காசு பிடுங்க
முயற்சிக்கின்றன. மிகப் பெரிய மருத்துவமனைகளில் நுழைபவர்களில்
கணிசமான காசு பறிக்கப்படுவது  சோதனைகளுக்குத்தான். இந்த 
பரிசோதனைகள்  நோயாளிக்கு  அவசியமில்லாமல் இருக்கலாம். ஆனால்  வாங்கி வைத்துள்ள இயந்திரங்களுக்கு அவசியம். 


மருந்துகளைப் பொறுத்தவரை  நோயாளிகளின்  தேவையை பூர்த்தி
செய்யாத மருந்தாகக் கூட அது  இருக்கலாம், ஆனால் அவை மருத்துவரின்  விருப்பத்தை பூர்த்தி செய்த மருந்து நிறுவனம்  தயார்
செய்த மருந்தாக இருப்பது  முக்கியம்.  ஆடம்பரப் பொருட்கள், வெளி நாட்டு சுற்றுலா என்றெல்லாம் கவனிப்பதற்காக செய்யப்பட செலவினம் 
நோயாளியின் தலையில் தான்  விடிகிறது. 


அறுவை சிகிச்சைகளுக்கு  ஆகும்  செலவினம்  எல்லா  மருத்துவமனைகளிலும்  ஒன்று போல  உள்ளதா?  வேலூர் சி.எம்.சி 
மருத்துவமனைக்கும்   சென்னையில்  உள்ள  மருத்துவமனைகளுக்கும்
பல முக்கிய  மருத்துவ  சிகிச்சைகளில்   செலவினத்தில்   மிகப் பெரிய 
வித்தியாசம்  உள்ளதை   பல முறை  நான் கவனித்துள்ளேன். சி.எம்.சி 
மருத்துவமனைக்கு  வெளி நாட்டு நிதி வருவதாக வேண்டுமானால் 
சொல்வார்கள்.   


சென்னைக்கு உள்ளேயே  உள்ள மருத்துவமனைக் கட்டணங்களிலும் 
பலத்த முரண்பாடுகள்  உண்டு.  பல தோழர்களின்  மருத்துவ செலவின 
பில்களை பல ஆண்டுகளாகப் பார்த்து வருபவன்   என்ற முறையில்  
பல மருத்துவமனைகள்   செய்வது பகற்கொள்ளை  என்று  உறுதியாக 
சொல்ல முடியும்.  'ரமணா' திரைப்படக் காட்சி என்பது அதீதமல்ல. 
யதார்த்தத்தில் எனக்கே  அப்பல்லோ  மருத்துவமனையில்  ஒரு 
மோசமான  அனுபவம்  உண்டு.  அது பற்றி  தனியாக எழுதுகிறேன்.


ஏழை மக்கள் மீது அனுதாபம் உள்ளதாகச்சொல்லி  துயர வரியை 
ரத்து செய்ய வைத்து விட்டார்கள். நல்லது. அவர்கள் மீது கூடுதல்
பாரம் ஏறவில்லை  என்பது மகிழ்ச்சி.  துயர வரி வரும்போது வந்த
அனுதாபத்தை  இனியாவது  நோயாளிகள் மேல் கார்ப்பரேட் மருத்துவமனைகள் காண்பித்தால் அது மிக நல்லது.  
 
   

 

1 comment:

  1. நல்ல தகவல்.. ஆனால் மருத்துவனைக் கட்டணங்களை வரன்முறை செய்தல் மிக அவசியம்

    ReplyDelete