Thursday, November 4, 2010

சுனாமி நினைவலைகள் - மூன்றாம் பகுதி

29  டிசம்பர் 2004 ம்  நாள் காலையில் மதுரைக் கோட்டத் தோழர்களும் சேலம்
கோட்டத் தோழர்களும் வந்து சேர்ந்தார்கள், வேன் முழுதும் பொருட்களோடு.
தென் மண்டலப் பொறுப்பாளர்கள் தோழர்கள் சுவாமிநாதன் மற்றும் கிரிஜா
ஆகியோரும் வந்திருந்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக் குழு
அலுவலகம் சென்று அங்கிருந்து கடலூர் மாவட்டச்செயலாளர் தோழர் எஸ்.
தனசேகரன் அவர்களை அழைத்துக் கொண்டு செல்வதாக ஏற்பாடு. கட்சி
அலுவலகத்தில் அனைத்து தோழர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான
ஏற்பாட்டினை செய்திருந்தனர். நாங்கள் அன்று செல்வதாக திட்டமிட்டிருந்த
இடங்கள் எல்லாமே பெரிய அளவில் உயிரிழப்பு நடந்த இடங்கள் என்றும்
கடற்கரை முழுதும் இன்னமும் துர்வாசம் கடுமையாக வீசிக் கொண்டிருப்பதால்
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று தோழர் எஸ்.டி.எஸ் விளக்கினார்.
அதே போல் முகத்தை மூடிக் கொள்ளும் துணியும் வரவழைக்கப்பட்டிருந்தது.
தடுப்பூசி மற்றும் துணிக்கான ஏற்பாட்டை மருத்துவப் பிரதிநிதிகள் சங்கத்
தோழர்கள் செய்திருந்தனர்.

கடலூரில் இருந்த திருமண மண்டபங்களிலேயே பலரும் தங்க வைக்கப்
பட்டிருந்தனர். சொந்த வீடு இருந்தும் இப்படி அனாதைகளாய் நிற்கிறோமே
என்ற கதறல் எல்லா இடங்களிலும் கேட்க முடிந்தது.  உணவு என்பது
ஒரு பிரச்சினையாக இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. அரசோ
அல்லது மற்ற அமைப்புகளோ ஏற்பாடு செய்த உணவு என்பது அடிப்படையாக  சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், புளி சாதம், தயிர் சாதம்
என்றுதான் இருந்தது. கடலிலே வாழ்க்கை நடத்தியவர்களுக்கு மீன்
இல்லாமல் உணவு மிகவும் அந்நியமாய் இருந்தது. இதனை சரியாக
உணர்ந்து கொண்டது மார்க்சிஸ்ட் கட்சி மட்டும்தான். சமைக்கப்பட்ட
உணவாக வழங்குவதற்குப்  பதிலாக  பொருட்களை அளித்து விட்டால்
அவர்களின் ருசிக்கேற்ப சமைத்துக் கொள்வார்கள் என்று மாவட்ட
நிர்வாகத்திடம் ஆலோசனை அளிக்க அதுவும் பின்பு அமுலானது.
இந்த நிலவரம் தெரியாமல் ஒரு மார்வாடி ஆயிரக்கணக்கில் சப்பாத்தி
செய்து கொண்டு வர அவை சீண்டுவாரில்லாமல் போயிற்றே என்று
புலம்பிய கதையும் நடந்தது.

அப்படி ஒரு மண்டபத்தில் நாங்கள் சந்தித்த பெண் தாழங்குடா என்ற
கிராமத்தைச்சேர்ந்த பாக்கிய லட்சுமி. அப்பெண்ணின் தந்தை சுனாமியில்
இறந்து போயிருந்தார். எதிர் காலத்தை பற்றிய கவலையை பத்தாவது
படித்துக் கொண்டிருந்த அப்பெண் வாய் விட்டு அழுதே வெளிப்படுத்தினாள்
எனக்கு உணவோ, உடையோ வேண்டாம், நான் படிப்பை தொடர்வதற்கு
மட்டும் உதவி செய்யுங்கள் என்ற கோரிக்கை வைத்தாள். இன்று அந்தப்
பெண் ஒரு பட்டதாரி. பதினொன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலான  அனைத்து கல்விச்செலவுகளையும் காப்பிட்டுக் கழக
ஊழியர் சங்கம் வேலூர் கோட்டம் தான் ஏற்றுக் கொண்டது. அதற்காக
நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பற்றியே தனியாக எழுத வேண்டும்.

சுனாமி உருவாக்கிய பாதிப்புக்கள் பற்றி அன்றைய பயணத்தின் போது
நன்றாக அறிந்து கொள்ள முடியும். கனமான படகுகள் உருக்குலைந்து
போயிருந்தன. தென்னை மரங்கள் உடைந்து அந்தரத்தில் தொங்கிக் கொண்டு  இருந்தன. கேக்கை கத்தியால் வெட்டி எடுத்தால் எவ்வளவு
கச்சிதமாக இருக்குமோ அது போல வீட்டின் சுற்றுச்சுவர்கள்,  சிறிய
கல்வெர்டுகள்  ஆகியவை துண்டிக்கப்பட்டிருந்தன. எவ்வளவு உயரம் வரை
தண்ணீர் வந்ததற்கு அடையாளமாக வீடுகளில் ஈரமான கோடுகள் இருந்தன.

ஒரு சுற்றுலா தளமாக உருவாக்கப் பட்டிருந்த கடலூர் வெள்ளிக் கடற்கரையில் செய்யப்பட்டிருந்த அழகுப் பணிகள் எல்லாமே அழிந்து
போயிருந்தது. ஒரு வீட்டில் திருமணத்திற்கு காத்திருந்த பெண்ணையும்
திருமணத்திற்காக பாடுபட்டு சேர்த்த நகைகளையும் கடல் கொண்டு போக
அந்தப் பெண் வாழ்ந்ததற்கு சாட்சியாக இருந்த ஒரே ஒரு புகைப்படத்தைக்  காட்டி காட்டி ஒரு தாய் அழுது கொண்டிருந்தார். இது போல
எத்தனையோ கதறல்கள், சோகங்கள்.

கொண்டு போயிருந்த அனைத்துப் பொருட்களும் தீர்ந்து போன பின்பு 
பெரியகுப்பம் என்ற கிராமத்தில்  அமர்ந்து அடுத்து என்ன செய்வது  என்று 
விவாதித்தோம்.  உணவு, உடை போன்ற கட்டங்களுக்குப் பிறகு அடுத்த 
கட்டத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் உருவாக்கி விட்டது என்பதால் 
அடுத்த கட்ட நிவாரணப் பணியை வீட்டு உபயோகப் பொருட்களாக வழங்குவது , முறையாக திட்டமிட்டு அமுலாக்குவது என்ற 
முடிவோடு அவரவர் ஊர் திரும்பினோம். 

கடைசியாக வாகனத்திலிருந்து எனது வீட்டில் இறங்கி ஓட்டுனருக்கு 
கணக்கு பார்த்து பணம் கொடுக்கையில்  அவர் ஒரு ஐநூறு ரூபாயை 
திருப்பி அளித்தார். நீங்கள் செய்யப்போகும் அடுத்த கட்ட பணிக்கு 
எனது பங்காக இருக்கட்டும் என்று கூறி. 

அடுத்த கட்ட பணி  ?  இன்றும் மலைக்க வைக்கும் வாழ்நாள் பணி !

                                                                                                நினைவலைகள் ஓயாது 

5 comments:

  1. நினைவலைகள் அருமையாக இருக்கு. டெல்லி மானாட்டுக்கு போவதற்குள்ளாக முடிக்கப் பாரும்யா! ---காஸ்யபன்

    ReplyDelete
  2. அன்பான தோழர் காஷ்யபன்,

    உங்களை நாக்பூரில் நேரில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. ஏற்கனவே ஒரு விபத்தில் காலில் அடிபட்டு முழுமையாக குணமாகாத நிலையில்தான் டெல்லி மாநாட்டிற்கு வந்திருந்தேன். பேரணியில் நடக்க வேண்டாம் என்று எங்கள் கோட்டத்தோழர்களும் சொல்லி இருந்தார்கள். நானும் அப்படித்தான் யோசித்திருந்தேன். ஆனாலும் ஒரு உற்சாகத்தில் பேரணியில் நடந்ததும் புது டெல்லி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ஏறி இறங்கியதும் மீண்டும்
    கால்வலி கொடுத்ததால் அன்று உங்களோடு அதிகமாக பேச முடியவில்லை. அது இன்னமும் வருத்தமாகவே உள்ளது. பார்ப்போம்,
    அடுத்த வாய்ப்பு கிடைக்காதா என்ன? பிறகு உங்கள் வலைப்பக்கத்தில் உள்ள உங்களின் படம் உங்களை மேலும் வயதானவராகக் காண்பிக்கிறதாய் தோன்றுகிறது.


    உலகப் பொருளாதார நெருக்கடி தொடர்பாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர் தோழர் அமானுல்லாகான் அவர்கள் எழுதிய
    புத்தகத்தை தமிழாக்கம் செய்யும் பணியை துவக்கியுள்ளேன். எல்.ஐ.சி தமிழ் மாநில ஐந்தாவது மகளிர் மாநாடு ஜனவரி முப்பது அன்று
    வேலூரில் நடைபெறவுள்ளது. ஆகவே தற்காலிகமாக சுனாமி நினைவலைகளுக்கு விடுப்பு அளித்துள்ளேன். நெஞ்சில் பதிவானதை
    என்று வேண்டுமானாலும் எழுத முடியுமல்லவா?

    மற்றபடி உங்கள் பதிவுகள் மீண்டும் மீண்டும் பல அரிய செய்திகளை அள்ளித் தரும் பொக்கிஷமாகவே அமைந்து வருகின்றது.

    தொடரட்டும் உங்கள் பணி!

    வாழ்த்துக்களுடன்

    ராமன், வேலூர்

    ReplyDelete
  3. வணக்கம்

    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி. இதோ

    http://blogintamil.blogspot.com/2015/01/4_23.html?showComment=1421971764341#c6362785305064150399



    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. வலைச்சரத்தில் திருமதி மனோ சாமிநாதன் தங்கள் வலைப்பூவை அறிமுகப்படுத்தியுள்ளார். வாழ்த்துக்கள்.
    http://drbjambulingam.blogspot.com/
    http://ponnibuddha.blogspot.com/

    ReplyDelete


  5. வணக்கம்!
    இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
    வாழ்த்துக்கள்!
    ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
    திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
    பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
    படைப்புகள் யாவும்.

    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.com

    (இன்றைய எனது பதிவு
    "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
    சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
    குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
    படரட்டும்!
    (குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)

    ReplyDelete