Monday, November 1, 2010

சுனாமி நினைவலைகள் - இரண்டாம் பகுதி

27  ம் தேதி மாலை புதுவை சென்று முதலில் மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச
செயலாளர் தோழர் பெருமாள் அவர்களை சந்தித்தோம். நாங்கள் சென்ற போது
மாலை ஏழு மணிக்கு மேல் இருக்கும். அப்போது அவர் பாதிப்புக்கள் பற்றிய
விபரங்களைச்சொல்லி அந்த நேரத்திற்கு மேல் கடற்கரை பக்கம் செல்ல  வேண்டாம்  என்றும் மறுநாள் காலையில் சென்னையில் இருந்து தோழர்
என்.வி தலைமையில் ஒரு குழு வருகின்றது என்றும் அவர்களோடு
இணைந்து கொண்டு வந்த பொருட்களை மக்களிடம் அளிக்கலாம் என்று
அவர் வழி காட்டினார். தோழர் ஆர்.பி.எஸ் மற்றும் ராம்ஜி ஆகியோர்
எங்களோடு இணைந்து கொண்டனர்.

இருபத்தி எட்டாம் தேதி காலையில் சென்னையில் இருந்து வந்த குழுவில்
தோழர்கள் என்.வி, கே.பி, ஜி.ஆர், நன்மாறன், பாலபாரதி எஸ்.கே.மகேந்திரன்,  சுதா சுந்தரராமன் ஆகியோர் இருந்தனர். அவரவர்கள் தங்கள் குடும்பத்தில் 
ஏற்பட்ட இழப்புக்கள், பொருட்சேதம் ஆகியவற்றைப் பற்றி ஒரு குடும்பத்தின்  மூத்த பெரியவரிடம் கூறுவது போல தோழர் என்.வி யிடம் சொல்லி அழுதனர். பிள்ளைச்சாவடி, காலடிப்பட்டு ஆகிய இரண்டு இடங்களில்  நாங்கள்  எடுத்துக் கொண்டு போயிருந்த பொருட்களை 
தோழர் என். வி கையால் வழங்க வைத்தோம்.  நாங்களும் மக்களிடம் 
நேரடியாய் பொருட்களை தர வேண்டும் என்பதில் அவர் மிகவும் கறாராய் 
இருந்தார். அதுதான் தலைமைப் பண்போ ! 

புதுவைப் பல்கலைக் கழக வளாகத்திற்குப் போன போது அங்கே ஒரு 
தம்பதியின் அழுகை மிகவும் பாதித்தது. அவர்களின் இரண்டாவது குழந்தை 
ஒரு வருடக் கைக்குழந்தை. ஒரு முள் புதரில் அக்குழந்தையின் உடலைக் 
கண்டெடுத்து அப்போதுதான் அடக்கம் செய்து விட்டு வந்திருந்தார்கள். 
தேவர் மகன் படத்தில் ஒரு காட்சி வரும். ஏரி உடைபட்ட வெள்ளத்தில் 
ஒரு குழந்தை இறந்து போய் முள் செடிகளுக்குள் சிக்க கமலஹாசன் 
அதை பார்த்துக் கதறுவார். திரைப்படம் பார்த்தவர்கள் ஒரு கணம் 
அதிர்ச்சிக்குள்ளாவார்கள்.  அக்காட்சியை  தங்கள் சொந்த வாழ்வில் அனுபவித்த பெற்றோர், அதிலும் அந்த தாயின் கதறல் எனது பல நாள்
தூக்கத்தை தொலைக்க வைத்தது.

புதுவையில் பார்த்த காட்சிகளே எவ்வளவு மோசமான அழிவை சுனாமி
உருவாக்கி இருந்தது என்பதை உணர்த்தியது. கூடுதல் உதவி செய்ய வேண்டிய கடமை உள்ளது என்பதும் புரிந்தது. தாராளமாக உதவி
செய்யுங்கள் என்று முதல் சுற்றறிக்கையில் உறுப்பினர்களுக்கு  வேண்டுகோள்  விடுத்திருந்தோம். அதனை மாற்றினால் 
சரியாக இருக்கும் எனக் கருதி புதுவை அலுவலகத்திலேயே அமர்ந்து 
ஒரு நாள் ஊதியம் தாரீர் என்று புதிய சுற்றறிக்கை அனுப்பினோம். கோட்ட
மாநாடு அப்போதுதான் புதுவையில் நடைபெற்றிருந்தது. மாநாட்டு நிதி 
கொஞ்சம் பாக்கி இருந்தது. ஊழியர் பங்களிப்பு வரும்வரை காத்திராமல் 
இந்த நிதியை  தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்து 
போர்வைகள் வாங்கி காரைக்காலுக்கு எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்தோம்.

தமிழகத்தில் எட்டு எல்.ஐ.சி கோட்டங்கள் உண்டு. சென்னையில் இரண்டு கோட்டங்கள்,  வேலூர், கோவை, சேலம், மதுரை, தஞ்சை, திருநெல்வேலி ஆக மொத்தம் எட்டு. இவற்றிலே கோவை, சேலம், மதுரை கோட்டப் பகுதிகளில்   கடல் கிடையாது. மற்ற ஐந்து கோட்டங்களும் தங்களால் இயன்ற பணிகளை உடனடியாக துவக்கியிருந்தோம். கோவைக் கோட்ட மகளிர் துணைக்குழு எங்களுக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் அனுப்பி உடனடிப் பணிகளுக்கு இத்தொகையைபயன்படுத்தி கொள்ளுங்கள் என்றிருந்தார்கள். மதுரை மற்றும் சேலம் கோட்டத் தோழர்கள் தொலைபேசியில் கூப்பிட்டு தாங்கள் மறுநாள் நிவாரணப்பொருட்களோடு  வருகின்றோம் என்று சொல்லி நீங்களும் அங்கேயே இருக்க வேண்டும்  என்று அன்புக் கட்டளையிட்டனர்.  ஆக அன்று ஊர் திரும்புவதாக
போட்டிருந்த திட்டத்தை கைவிட்டோம்.


கடலூரில் சில பகுதிகளைப் பார்த்து விட்டு பொருட்களை அளித்து விட்டு
சிதம்பரம் தாண்டி கிள்ளை சென்றோம். பல பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்கள்  கிள்ளையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். சிதம்பரம்
கிளைச்செயலாளரும் எங்கள் கோட்ட இணைச செயலாளருமான
தோழர் சி.வெங்கடேசன் சுனாமி நிகழந்ததிலிருந்தே அங்கேதான் இருந்தார்.
(இவரது பணிகள் பற்றி மட்டுமே தனியாக ஒரு பதிவு எழுத வேண்டும். அவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வோடு செயலாற்றிய அற்புதத் தோழர் )

சென்னையிலிருந்து வந்த தலைவர்களும் அப்போது கிள்ளை வந்திருந்தனர்.  புடவை போன்றவை ஏதேனும் கையிலிருந்தால் எடுத்து
வாருங்கள் என்று தோழர் கே.பி சொல்ல உள்ளே நுழைவதற்குள்
அப்படியே கூட்டம் மொய்த்துக் கொண்டு விட்டது. மூச்சு விடக்கூட
முடியவில்லை. மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச்செயலாளர்
தோழர் எஸ்.தனசேகரனும் தோழர் மூசாவும் கூட்டத்தை ஒழுங்கு படுத்த
ஒரு வழியாக தப்பி வெளியே வந்தோம்.  இனி இந்த ஊர் பக்கமே
வரக்கூடாது என்று பேசிக்கொண்டே கடலூர் நோக்கிப் புறப்பட்டோம்.
கிள்ளை அவ்வளவு சுலபமாக எங்களை விடப்போவதில்லை என்பது
யாருக்கும் அப்போதும் தெரியாது.
                                                                                                   நினைவலைகள் தொடரும்

1 comment:

  1. //புதுவைப் பல்கலைக் கழக வளாகத்திற்குப் போன போது அங்கே ஒரு
    தம்பதியின் அழுகை மிகவும் பாதித்தது. அவர்களின் இரண்டாவது குழந்தை
    ஒரு வருடக் கைக்குழந்தை. ஒரு முள் புதரில் அக்குழந்தையின் உடலைக்
    கண்டெடுத்து அப்போதுதான் அடக்கம் செய்து விட்டு வந்திருந்தார்கள். //

    mikavum kavalikkuriya visayam . sunaami pakirvukal kettaal en palliyil oru aasiriyar eppothum mayakkam pottu vilunthu viduvaar. athuvum kaathal kettatharkke ippadi enraal ith thuyaraththai neril paarththavarkalai enna solvathu...

    ReplyDelete