Wednesday, May 14, 2025

மாதர் சங்கத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

 இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பின்பே பதிவுகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். அது எப்போது சாத்தியமாகும் என்பது தெரியாததால் ஒரு பாராட்டை பதிவு செய்யவே இந்த இடைக்கால பதிவு.


பொள்ளாச்சி பாலியல் அராஜக வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் "சாகும் வரை ஆயுள் தண்டனை" வழங்கப் பட்டுள்ளது. 

தங்களின் உறுதியான போராட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நின்று   இத்தீர்ப்பினை  சாத்தியமாக்கிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திற்கும்  அதன் பொறுப்பாளர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன்.

போராட்டங்களுக்காக அவர்கள் மீதும் மாணவர், வாலிபர் சங்கத் தோழர்க மீதும்  பதியப்பட்ட வழக்குகளை  அரசு திரும்பப் பெற வேண்டும். 

Sunday, May 4, 2025

தொடரும் ரத்த பாரம்பரியம்

 வெள்ளிக்கிழமை அன்று மோசமான ஒரு விபத்து. இரண்டு இடங்களில் எலும்பு முறிந்து அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என்று தெரியவில்லை.

இத்தனைக்கும் நடுவில் சின்ன நிறைவு.

சிகிச்சைக்கு ரத்தம் தேவைப்பட்டது. எங்கள் தோழர் கணேசன் ரத்தம் கொடுத்தார்.

ரத்த வங்கிக்கு  என் மகனும் என் சகலையின் மகனும் உடன் சென்றனர். மற்றவர்கள் பயன் பெற நீங்களும் ரத்த தானம் தருகிறீர்ளா என்று கேட்க இருவரும் ஒப்புக் கொண்டு முதல் முறையாக ரத்த தானம் செய்தனர். என் மகன் இதற்கு முன்பு இரு முறை முயற்சித்தும் வெய்ன் சரியாக கிடைக்கவில்லை. 


நான் 65 முறை ரத்தம் கொடுத்துள்ளேன். என் சகலையும் 25 முறைக்கு மேல் கொடுத்துள்ளார்.


எங்கள் வாரிசுகள் புதுக் கணக்கை துவக்கியுள்ளது மகிழ்ச்சியே.


Thursday, May 1, 2025

தினமலரின் வழக்கமான அயோக்கியத்தனம்

 


தினமலரின் ஜால்ரா முடியல

கீழே உள்ள தின மலர் செய்தியை ஒரு தோழர் மெனக்கெட்டு கொண்டு வந்து கொடுத்தார். எதுக்கு என்னை டென்ஷன் செய்கிறாய் என்று கேட்டதற்கு நீங்க எழுத மேட்டர் கொடுத்திருக்கேன் என்றார்.



ஒரு பிரதமராக உருப்படியாக எதையும் செய்ய துப்பில்லாத மோடி, மாறு வேடப் போட்டியில் கலந்து கொள்வது போல விதம் விதமாக ஆடைகள் மட்டும் அணிந்து கொள்வார்.

 அவர் அணியும் ஆடைகள் எதுவும் எளிமையானது கிடையாது. இயல்பானது கிடையாது. யாருக்கோ வாழ்வு வந்தால் அர்த்தராத்தியில் குடை பிடிப்பார்கள் என்று சொல்வார்களே, அந்த ரகம் இதெல்லாம்.

 அந்த அற்பத்தனத்தின் உச்சம்தான் அவர் பெயர் பொறிக்கப்பட்ட பத்து லட்ச ரூபாய் கோட்டை ஒபாமா வந்த போது அணிந்தது. நாட்டில் உள்ள அனைவரும் கழுவி கழுவி ஊற்றிய பின்பு அந்த ஆடையை ஏலம் போட்டார்கள்.

 ஒரே நாளில்  நாலு முறை, ஐந்து முறை என்று உடை மாற்றுவதெல்லாம் கொழுப்பன்றி வேறில்லை, அல்லது மோடிக்கு ஏதாவது தோல் வியாதி இருந்து பக்கத்தில் உள்ளவர் மூக்கை சுளிப்பார்கள் என்பது காரணமாக இருக்கலாம்.

 அப்படி இருக்கையில்  “உங்களில் ஒருவன் – உடை வழி உணர்த்தும் பிரதமர்” என்றெல்லாம் தலைப்பு கொடுத்திருப்பதெல்லாம்  தினமலரின் வழக்கமான அயோக்கியத்தனம்.

 நியாயப்படிப் பார்த்தால் மேலே உள்ள படத்தில் வடிவேலு கேட்பது போன்ற கேள்வியைத்தான் தின மலர் கேட்டிருக்க வேண்டும்.

சங்கிகள் சினிமாவுக்கு கதை எழுதலாம்

 சங்கிகளால் மட்டுமே இப்படிப்பட்ட கதைகளை உருவாக்க முடியும். இந்த கதையை ஒரிஜினலாக எழுதிய ஆள் திரைப்படத்துறைக்கு சென்றால் ஒளிமயமான எதிர்காலம் உண்டு.

 இந்த கதையை எங்கே படித்தேன் என்று நீங்கள் சுலபமாக ஊகித்து விடுவீர்கள். ஆமாம். மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில்தான்.

 மத வெறியேற்றுவதற்காகவே  பொய்ப்பிரச்சாரங்களோடும் சிகண்டிகளோடும் செயல்படும் குழு அது.

 


சம்பவம் நடந்த அன்று பஹல்காம் சுற்றுலாவிற்கு சென்று வந்த, மேற்கு வங்கத்தை சேர்ந்த ஏக்தா திரிவேதி என்ற பெண்மணி கொடுத்த வாக்குமூலம் மிகவும் முக்கியமான ஆதாரமாக உள்ளது.

 தாக்குதல் நடந்த நாளிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு பஹல்காம் சென்ற அவரும் & அவரது குடும்பத்தினரும், குதிரை ஓட்டிகளின் சந்தேகத்திற்கிடமாக நடத்தைகளால் mini Switzerland அருகில் வந்தும் உள்ளே செல்லாமல் திரும்பியிருக்கின்றனர்.

 அவரது குதிரையோட்டி, நல்ல ஆங்கிலத்தில் இவரோடு பேசிக் கொண்டே வந்ததில், இவருக்கு சந்தேகம் தோன்றுகிறது. அதற்கு அந்த ஆள், தான் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்ததாகவும், பின் அந்த வேலையை விட்டு ponywala வந்ததாக சொல்கிறான். பணம் எத்தனை கிடைத்தாலும், எந்த ஒரு மனிதனும் ஆசிரியர் வேலையை விட்டு விட்டு கழுதை மேய்க்க வர மாட்டான்

 மேலும், மிகச் சிறியதான satellite ஃபோன் ஒன்றை வைத்துள்ளான். அதில் அழைப்பு வரவே, குதிரையை ஓரிடத்தில் நிற்க வைத்து விட்டு, சற்று தள்ளி சென்று பேசி விட்டு திரும்பியிருக்கிறான். உருதுவில் பேசியதில் , சில முக்கிய விஷயங்கள் , இந்த பெண்மணியின் காதில் விழுந்திருக்கின்றன. அதில் முக்கியமானது 35 துப்பாக்கிகளை இன்று மேலே கொண்டு சென்று பதுக்கியிருக்கிறோம் என

 இதையெல்லாம், கேட்டு அந்த பெண்மணி mini Switzerland செல்ல சந்தேகப்பட்டு, தன் குழுவினரை அழைத்து திரும்ப சொல்லியிருக்கிறார். அவர்கள் 'இத்தனை தூரம் வந்து விட்டோம், photos எடுத்துக்கொண்டு உடனே திரும்பி விடலாம்' என சொன்னதற்கெல்லாம் ஒத்து கொள்ளாமல் 'உடல் நிலை சரியில்லை, அவசரம்' என சொல்லி, எதற்கும் எங்கும் நிற்காமல் திரும்பியிருக்கிறார்கள். அதற்குள் இன்னோரு ponywala அந்த பெண்மணியிடம் ' yahan rahna teen nahi mam. Sheegra vapaz chale jaayiye ' (இங்கிருப்பது பாதுகாப்பு அல்ல, சீக்கிரம் இங்கிருந்து சென்று விடுங்கள்' என்றிருக்கிறான். அவர்களோடு இரண்டு மணி நேரத்தில் ஜம்மு காஷ்மீரிலிருந்து வெளியேறி, போலீஸூக்கு அழைத்து தகவல் சொல்லியிருக்கின்றனர்.

 இதேபோன்று பல சுற்றுலாப் பயணிகள் சம்பவத்தன்று போலீஸ் அவசர எண்ணில் அழைத்துள்ளனர் ஆனால் எதிர்ப்பக்கம் "அப்படியா ஓகே" என்று சாதாரண பதில் மட்டுமே வந்ததுள்ளது. ஆனால், அந்த புள்ளிகளை இணைக்க போலீஸார் தவறியது ஏன்.!!?

 

 பிகு: ஏக்தா திவாரி என்றொரு உ.பி யைச் சேர்ந்த தொலைக்காட்சி விளம்பர மாடல் சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக பஹல்காம் போனதாகவும்  அந்த தீவிரவாதிகளை பார்த்ததாகவும் சொல்லியுள்ளார். அவரது அறிக்கையே பல முரண்பாடுகளும்  சந்தேகங்களும் நிறைந்துள்ளதாக தெரிகிறது. அதை பட்டி டிங்கரிங் பார்த்து மாநிலம், பெயர் எல்லாம் மாற்றி கதை சொல்லி விட்டார் மத்யமர் சங்கி.