Wednesday, December 24, 2014

பெங்களூர் டே




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiO-IXBC6AE0oS8slX98fKoqJTXAGihqJlkQChTYSCJc42eySz2uB64mpFBG_XGTC1WuG5ZVk3sy33PWC1mIxeClGKba0gqqxuNuGrTRbiQZfzoQYFQSt0hQE3EDSTIgSUvHTXBMUqH-UE1/s1600/SAT_5477.JPG

“இந்திய ரயில்வேயின் சரித்திரத்திலேயே அன்று ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். அன்றுதான் முதல் முறையாக திருப்பாதிரிப்பாலியூர் பாசஞ்சர் பெங்களூர் ரயில் நிலையத்தை சரியான நேரத்தில் வந்தடைந்தது”.

சுஜாதா எழுதிய வசந்த கால குற்றங்கள் தொடர்கதை (குங்குமத்தில் சுமார் முப்பத்தி ஐந்து ஆண்டுகள் முன்பாக வந்தது.) இப்படித்தான் தொடங்கும்.

நேற்று முன் தினம் சரியாக எட்டு நாற்பதிற்கு திருப்பதி பெங்களூர் எக்ஸ்பிரஸ் பெங்களூர் ரயில் நிலையத்தை அடைந்த போது என் மனதில் சுஜாதா எழுதியதுதான் நினைவிற்கு வந்தது. ஆனால் இன்று பெரும்பாலான ரயில்கள் பெரும்பாலான நாட்கள் சரியான நேரத்திற்கே வருகிறது என்பதும் பாராட்டத்தக்க ஒரு விஷயம்.

வசந்த கால குற்றங்கள் ஆறுமுகம் போல எந்த ஒரு பெரிய குற்றச் செயலைத் திட்டமிட்டும் நான் பெங்களூர் செல்லவில்லை. குடும்பத்தில் ஒரு சின்ன விழா. அதற்காக ஒரு நாள் பயணம். ஞாயிறு மாலை புறப்பட்டு திங்கள் மாலை ஓடி வந்து விட்டேன். ஆனாலும் மனதில் நின்ற ஒரு விஷயத்தையும் கண்ணில்பட்ட ஓரிரு விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு.

பெங்களூர் ரயில் நிலையத்தின் ஏழாவது பிளாட்பாரமில் ஏராளமான புத்த சன்னியாசிகள் குறைந்த பட்சம் ஒரு முன்னூறு பேராவது இருப்பார்கள். அடர் பழுப்பு உடை அணிந்து மொட்டை போட்டுக் கொண்ட, மொட்டையில் கொஞ்சமாக முடி வளர்ந்த, நல்ல ஆஜானுபாகுவான உடல் அமைப்போடே பலரும் இருந்தார்கள். அந்த கால ஷாவோலின், குங்ஃபூ  பட ஆசிரியர்கள் போல குறுந்தாடியோடு ஒரு பெரியவரும் துறுதுறு என்று ஒரு ஐந்து வயது சிறுவனும் அக்கூட்டத்தில் பளிச்சென்று வித்தியாசமாக தெரிந்தார்கள். எல்லோரும் எங்கு போகிறார்களோ?

இரவு எங்கள் விருந்தினர் விடுதிக்குச் செல்ல ப்ரீ பெய்ட் ஆட்டோ பிடித்தால் எண்பத்தி எட்டு ரூபாய் என ரசீது கொடுத்தது. எதற்கு தேவையற்ற சுமை என்று சால்வையோ ஜெர்கின்ஸோ எடுத்து வராமல் இருந்தது எவ்வளவு பெரிய தவறென்று ஆட்டோவில் நடுங்கிக் கொண்டே சென்றபோதுதான் தெரிந்தது. விடுதியின் வாசலில் இறங்கி நூறு ரூபாய் கொடுத்தபோது வயது முதிர்ந்த அந்த ஆட்டோ டிரைவர் மீதி பனிரெண்டு ரூபாயை நீட்டிய போது நிஜம்தானா என்று கிள்ளிப் பார்த்துக் கொண்டு அவரையே வைத்துக் கொள்ளச் சொல்லி விட்டு படியேறினேன். லிப்ட் வசதி இல்லாமல் செங்குத்தான அந்த இரண்டு மாடிக்கட்டிடத்தில் ஏறுவதற்குள் முட்டி தேய்ந்து விட்டது.

மறுநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் வந்து அழைத்துச் செல்வதாக என் அக்கா பையன் சொல்லியிருந்ததால் காலை ஐந்தரை மணிக்கே எழுந்து காபியோ, டீயோ சாப்பிட்டு வரலாம் என்றால் அந்த நேரத்தில் ஒரு கடை கூட திறக்கப்படாமல் பெங்களூர் உறங்கிக் கொண்டிருந்தது,தெரு நாய்கள் உட்பட. ஏற்கனவே ஜவ்வு கிழிந்த முட்டியோடு மாடி ஏறியதுதான் மிச்சம். பிறகு ஏழே கால் மணிக்கு வெளியே வந்த போதுதான் ஒரு ஹோட்டல் திறக்கலாமா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டு இருந்தார்கள்.

மீண்டும் ஒரு ஆட்டோ பயணம். மீட்டரில் காண்பித்த நூற்றி அறுபது ரூபாய்க்கு மேல் ஒரு பைசா கூட கூடுதலாக வாங்கவில்லை. இந்திய ரயில்வேயின் நவீன வரலாற்றின் பக்கங்கள் படி சரியாக மூன்று மணிக்கு புறப்பட்ட பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் மாலை ஆறு நாற்பதிற்கு காட்பாடியில் நின்றது.

ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தால் வழக்கமாக நூற்றி இருபது ரூபாய் ஆகிற எனது வீட்டிற்குச் செல்ல ஒரு ஆட்டோக்காரர் கொஞ்சம் கூட கூச்சப்படாமல் 

:முன்னூறு ரூபாய் கொடுங்க சார்" என்றார்.

பெங்களூரிலேயே இருந்திருக்கலாமோ?
 

4 comments:

  1. ஒரு ஆட்டோக்காரர் கொஞ்சம் கூட கூச்சப்படாமல்
    :முன்னூறு ரூபாய் கொடுங்க சார்" என்றார்.

    Indha madhiri aniyaam
    kandaal ....
    PONGI yelubhaVAREY!!

    communist...

    Neenga communist-thaney?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அனானி, காவி வேட்டி கட்டியிருந்த அவரை திட்டி விட்டு நியாயமான கட்டணத்தைக் கேட்ட வேறு ஒரு ஆட்டோகாரரின் வண்டியில் வந்தேன். அவர் இடதுசாரி அமைப்பான ஏ.ஐ.டி.யு.சி அமைப்பைச் சேர்ந்தவர் என்பதை அவர் வண்டியில் ஒட்டியிருந்த ஸ்டிக்கரிலிருந்து அறிந்து கொண்டேன்

      Delete
  2. he!
    iduthaan
    unmaiyaaana
    communisa
    idai-sorukal

    vaalthukkal

    ReplyDelete
    Replies
    1. உண்மை உங்களுக்கு இடைச்செறுகலாகத் தெரிந்தால் நான் என்ன சொல்ல முடியும்? சி.ஐ.டி.யு என்று எங்கள் அமைப்பையே சொல்லியிருக்கலாமே?

      Delete