Thursday, August 6, 2020

தாகூர் யாருக்குச் சொன்னாரோ?


 

ரவீந்திரநாத் தாகூர் 120 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் எழுதிய கவிதை என்று  ஒரு மேற்கு வங்கத் தோழர் அனுப்பிய கவிதையை தமிழில் அளிக்க முயற்சித்துள்ளேன்.

 

தாகூர் இக்கவிதையை எழுதிய போது இன்றுள்ள அரசர்கள் யாரும் பிறந்திருக்கவே இல்லை. அவர் யாரைச் சொன்னார் என்பது தெரியவில்லை. ஆகவே யாரையாவதோ அல்லது இன்றைய சூழலையோ குறிப்பதாக யாராவது கருதினால்

 அதற்கு கவிதை எழுதிய தாகூரோ

அல்லது

தமிழாக்கம் செய்த நானோ

பொறுப்பல்ல.

 

அவர்கள் அப்படி கருதும் படியான செயலை செய்தவர் யாராவது இருந்தால் அவர்  மட்டுமே காரணம்.


 அந்தக் கோயிலில் கடவுள் இல்லை

சொன்னார் ஒரு சாது.

 

கடவுள் இல்லையா?

என்னய்யா சாது

ஒரு நாத்திகனைப் போல் பேசுகிறாய்?

தங்கத்தில் மின்னும் விக்கிரகம்

அமர்ந்துள்ள அரியாசனம் மட்டுமே

விலை மதிப்பற்ற ரத்தினங்கள் பதிக்கப்பட்டு

பிரகாசிப்பதைப் பார்த்துமா

கோயில் காலியாய் உள்ளதென்று உரைக்கிறாய்

கோபத்துடன் கேட்டான் அரசன்.

 

அது காலியாய் இல்லை அரசே,

அங்கே உங்கள் அரசின்

செல்வச் செருக்கு

 நிரம்பிஇருக்கிறது.

உங்களைத்தான் சிறப்பாய்

காட்சிப்படுத்தியுள்ளீர்கள்,

இந்த உலகின் கடவுளை அல்ல

பதில் சொன்னார் சாது.

 

வானத்தை முத்தமிட்டு நிற்கும்

கோபுரம் கொண்ட கோயிலுக்காக

இருபது லட்சம் பொற்காசுகளை

மழையாய் பொழிந்தேன்.

அனைத்து சடங்களுக்குப் பிறகு

நான்கடவுள்களுக்கு அளித்த

காணிக்கை ஏராளம்.

இத்தனை பிரம்மாண்டமான கோயிலில்

கடவுள் இல்லை என்று சொல்ல

என்ன துணிச்சல் உமக்கு

கொந்தளித்தான் அரசன்.

 

சாது நிதானமாய் பதிலளித்தார்.

அதே வருடத்தில்தான்

உம் குடிமக்களில் இருபது லட்சம் பேர்

கடும் பஞ்சத்தால் அவதியுற்றனர்.

வறுமையில் தவித்த அம்மக்கள்

உணவின்றி, உறைவிடமின்றி

உன் கதவோரம் அடைக்கலம் நாடி

உதவி கேட்டு கதறி அழுதனர்.

ஆனால் அவர்களோ

உன்னால்  துரத்தப்பட்டனர்.

 

காடுகளிலும் குகைகளிலும்

சாலையோரங்களிலும்

பாழடைந்த பழைய கோயில்களிலும்

வேறு வழியின்றி தஞ்சம் புகுந்தனர்.

 

இருபது லட்சம் தங்கக்காசுகளைக் கொட்டி

யாருக்காக என்று சொல்லி

ஒரு பிரம்மாண்டமான கோயிலைக்

கட்டினாயோ  அன்றுதான்

அக்கடவுள் சொன்னார்.

 

நான்  நித்தம் வசிக்கும் வீடு

நீல வானின் நடுவே

மின்னும் விளக்குகளால்தான்

 ஒளியேற்றப்படுகிறது.

என் இல்லத்தின் அடித்தளம்

உண்மை, சமாதானம், கருணை, அன்பு

ஆகிய மதிப்பு மிக்க பொருட்களால்

அமைக்கப்பட்டது.

வீடற்ற தன் குடிமக்களுக்கே

அடைக்கலம் தர இயலாத,

இதயத்தில் வறுமை படைத்த

அக்கஞ்சனால் நிஜமாகவே

எனக்கு ஒரு இருப்பிட த்தை

அமைக்க முடியுமா என்ன?”

 

என்று கேட்டு

 

 

அந்த நாளில்தான் கடவுள்

நீ கட்டிய கோயிலிலிருந்து வெளியேறி

சாலையோரத்தில் மரத்தடிகளில்

வாழும் அந்த வறிய மக்களோடு

இணைந்து கொண்டார்.

 

விரிந்த கடலின் நுரையின்

வெறுமையைப் போலவே

உன் கோயிலும் வெற்றிடம்தான்.

செல்வச் செறுக்கின் நீர்க்குமிழி மட்டும்தான்.”

 

கோபமுற்ற அரசன்

உரத்த குரலில் அலறினான்

அற்பப் பதரே

உடனே என் நாட்டிலிருந்து வெளியேறு

 

மீண்டும் சாது நிதானமாகச் சொன்னார்.

தெய்வீகத்தை எங்கிருந்து வெளியேற்றினாயோ,

அங்கிருந்து  பக்தர்களையும்

 தயவு செய்து வெளியேற்றிவிடு

 

 

 



3 comments: