Friday, February 28, 2014

'வானுயர்ந்த சோலையிலே' - பாவலர் வரதராஜன் பாட்டில்லையா?

இன்றுதான் கடந்த வார குங்குமம் இதழ் படித்தேன்.
இதயக் கோயில் படத்தில் வரும் "வானுயர்ந்த
சோலையிலே" பாட்டைப் பற்றி எழுதியுள்ள
எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் " இளையராஜாவின்
சகோதரர் பாவலர் வரதராஜன் எழுதியதாக
குறிப்பிடப் படுகிற இந்த பாட்டு" என்று சொல்கிறார்.

ஏன் அப்படி சொல்லியுள்ளார்?

பின் அது யார் எழுதிய பாட்டு?

எது எப்படியானாலும் பிரிவின் துயரம் அனுபவிக்காதவர்கள் கூட
அந்த வலியை உணர்த்தும் பாடல் இது. இளையராஜாவின்
மேதமையின் இன்னொரு உதாரணம்.

Thursday, February 27, 2014

மோடியால் இப்படியா? இல்லை இப்படி இருப்பதால் மோடி அப்படியா?



1  மகாத்மா காந்தி அக்டோபர் முப்பதாம் நாள் இறந்து போனார்.

2 கோபால கிருஷ்ண கோகலே, தாதாபாய் நௌரோஜி ஆகியோர் தீவிரவாதிகள்.

3  இந்தியாவிலிருந்து இஸ்லாமாபாத் என்ற நாட்டை பிரித்தார்கள்.

இவையெல்லாம் குஜராத் மாநிலம் வெளியிட்டுள்ள எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள தகவல்கள்.

நரேந்திர மோடி வரலாற்றை தப்பும் தவறுமாக அவ்வப்போது பேசி அம்பலப்பட்டு வருகிறார்.

என் சந்தேகம் என்னவென்றால்

குஜராத் மாநிலத்தில் பாடப்புத்தகங்கள் தப்பும் தவறுமாக இருப்பதால் அதை படித்து விட்டு நரேந்திர மோடி தவறுதலாக உளருகிறாரா?

இல்லை

நரேந்திர மோடியின் உளரல்களுக்கு ஏற்றார்போல பாடப்புத்தகங்களை தவறாக வெளியிடுகிறார்களா?

யார் யாரை கெடுத்தார்கள்?

நரேந்திர மோடியை பாடப்புத்தகங்களா?
இல்லை பாடப் புத்தகங்களை நரேந்திர மோடியா?

Wednesday, February 26, 2014

இலங்கைப் பிரச்சினையில் இந்திய தலையீடு - இத்தகவல் உங்களுக்கு தெரியுமா?

இதுவும் நான் முன்பு எழுதிய ஒரு பதிவுதான்.

இந்திய அரசு எவ்வளவு திட்டமிட்ட முறையில் நடந்து
கொண்டுள்ளது என்றும் அதன் பலன் தமிழர்களுக்கு
கிடைக்கவில்லை என்பதையும் உணர்வீர்கள். 

இந்த இணைப்பை படியுங்கள்.

 

Tuesday, February 25, 2014

காவிக் கோட்டையில் பறந்த சிவப்புக் கொடி



நாக்பூரில் நடைபெற்ற எங்கள் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மீதான விவாதத்திலிருந்து
எங்கள் இதழ் சங்கச்சுடருக்காக தொகுத்தது


மேற்கு வங்கத்தில் நடைபெற்ற மாற்றம் 103 தற்காலிக ஊழியர்கள் நிரந்தரப் பணி பெறுவதை பாதித்து விட்டது. அசன்சால் கோட்டத்தில் தேர்வு நடைபெறுவதை திரிணாமுல் குண்டர்கள் தடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். தேர்வு மையத்திற்கு காவல்துறை வரவில்லை. ஆனால் ஆளும்கட்சி குண்டர்கள்தான் வந்தார்கள். இதுதான் மேற்கு வங்கத்தின் இன்றைய நிலை.
-    தோழர் ஜெயந்தோ முகர்ஜி,
கிழக்கு மண்டலம்

பல பேராசிரியர்களை விட நமது கிளைச்செயலாளர்கள் கூடுதல் ஞானம் உள்ளவர்கள். முனைவர் பட்டத்திற்கான பல ஆய்வுக்கட்டுரைகளை விட இன்சூரன்ஸ் வொர்க்கரில் வெளியாகும் கட்டுரைகள் உன்னதமானவை

தோழர் சந்தோஷ் குமார் மொகபத்ரா,
கிழக்கு மத்திய மண்டலம்

லால் பகதூர் சாஸ்திரி “ ஜெய் ஜவான், ஜெய் கிசான்” என்ற முழக்கத்தை முன்வைத்தார். ஆனால் இன்றோ ஒரு மத்திய அமைச்சரால் “கொல்லப்படுவதற்காகவே ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள்” என்று தைரியமாக சொல்ல முடிகிறது.

இன்சூரன்ஸ், வங்கி ஆகிய துறைகள் அரசின் வசமே இருக்க வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் எழுதினார். ஆனால் அவரை பின்பற்றுவதாக சொல்லும் பலர் அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளவில்லை.

தோழர் வி.எஸ்.நால்வாடே,
மேற்கு மண்டலம்

விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் விதர்பா பகுதியின் அவுரங்காபாத் நகரில் ஒரே நாளில் 152 மெர்சிடிஸ் பென்ஸ் கார்களும் விற்பனையாகியிருக்கிறது. பென்ஸ் கார் வாங்க 7 % வட்டியில் கடன் தரும் வங்கிகள், விவசாயத்திற்கு அவசியமான ட்ராக்டர் வாங்க மட்டும் 14 % வட்டி வசூலிக்கிறார்கள்.

தோழர் எம்.கிரிஜா,
தென் மண்டலம்

எப்படி உலகமயமாக்கலுக்கு வேறு மாற்று இல்லை என்று கதைத்தார்களோ, அது போலவே ஊழியர் பற்றாக்குறையை சமாளிக்க கட்டாய இட மாறுதலைத் தவிர வேறு மாற்று கிடையாது என்று நம்மைத் தவிர மற்ற அனைவரும் சொல்லி வந்தார்கள். புதிய பணி நியமனம் மட்டுமே தீர்வு என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி போராடியதால்தான் இன்று பொது இன்சூரன்சில் 2600 உதவியாளர்கள் பணி நியமனம் நடந்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ளதால் நாக்பூர் நகரை காவிக்கோட்டை என்று சொல்வார்கள். அந்த காவிக்கோட்டையில் சிவப்புக் கொடியை பறக்க விட்ட பெருமை நமது சங்கத்திற்குத்தான் உண்டு. பேரணி செல்லும் வழியெல்லாம் நாக்பூரை சிவக்க வைத்த நம் நாக்பூர் கோட்டத் தோழர்களுக்கு  பாராட்டுக்கள்.

தோழர் ஜி.ஆனந்த்,
பொது இன்சூரன்ஸ்

450 பில்லியன் டாலர்கள் வரக்கூடிய அளவிற்கு 1986 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் நரேந்திர மோடி கையெழுத்திட்டார். ஐம்பத்தி நான்கு லட்சம் வேலைகள் உருவாகும் என்றும் சொன்னார்கள். ஆனால் அவையெல்லாம் வெறும் காகித ஒப்பந்தங்களே தவிர நிஜத்தில் எதுவும் நடக்கவில்லை என்பது குஜராத்தைச் சேர்ந்த எங்களுக்குத்தான் தெரியும்.

தோழர் பிரம்ம பட்,
மேற்கு மண்டலம்

மாற்றம் வந்த பிறகு மேற்கு வங்கத்தில் எங்கள் மாவட்டத்தில் மட்டும் 1024 பெண்கள் பாலியல் தொல்லைகளை அனுபவித்துள்ளனர். 200 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்கள். அதிலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் 24 பெண்கள். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. ஆனால் பாலியல் தொல்லைக்கு 20,000 ரூபாய், பாலியல் வன் கொடுமைக்கு 60,000 ரூபாய் என்று இழப்பீடு தொகையை முதலமைச்சர் பெருமையோடு அறிவிக்கிறார்.

த்ரூபஜோதி கங்குலி,
கிழக்கு மண்டலம்.

படேலின் சிலைக்கு இரும்பு சேகரிப்பவரை தேச பக்தர் என்று பாராட்டுபவர்கள், பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்கும் போராட்டத்திற்கு நிதி திரட்டுபவர்களை கம்யூனிஸ்டுகள் என்று கிண்டல் செய்கிறார்கள். இவர்களின் கண்ணோட்டத்தின்படி தேச பக்தராக இருப்பதை விட கம்யூனிஸ்டாக இருப்பதே பெருமைக்குரியது.

நிதி அடிப்படைவாதிகளுக்கு மூலதனம்தான் மதம்.
மத அடிப்படைவாதிகளுக்கு மதம்தான் மூலதனம்.
இந்த இருவருமே இப்போது கைகோர்த்துக் கொண்டுள்ளார்கள்.

இராக்கின் சதாம் ஹூசேனை வில்லனாக சித்தரித்த ஊடகங்கள், நரேந்திர மோடியை அவ்வாறு சித்தரிப்பதில்லை. ஏனென்றால் ஊடகங்களின் சந்தைக்கு  அவர் தேவைப்படுகிறார்.
தோழர் ஸ்ரீகாந்த மிஸ்ரா,
கிழக்கு மத்திய மண்டலம்

முதலாளித்துவம்தான் சிக்கலின் அடிப்படை. முதலாளித்துவத்தை அகற்றும் போது மக்களும் தங்களின் பிரச்சினைகளிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.

ஊதிய உயர்வு, பென்ஷன், எல்.ஐ.சி தனியார்மயம், புதிய நியமனம் என எல்லாமே அடிப்படை கொள்கைப் பிரச்சினைகள், அரசியல் பிரச்சினைகள், தேர்தலோடும் தேர்ந்தெடுக்கப்படும் அரசின் கொள்கைகளோடு இணைந்த பிரச்சினைகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ், பாஜக விற்கு மாற்றாக இடதுசாரிகள் மட்டுமே இருக்க முடியும் என்பதை இன்சூரன்ஸ் ஊழியர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் வலிமை அதிகரிப்பதுதான் நமக்கு நன்மை பயக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

குத்துச்சண்டை போலவோ, மல்யுத்தம் போலவோ விளையாட்டு அரங்கில் இருவர் மோதிக் கொண்டு முடிவு செய்வதல்ல பிரதமர் பதவி.
தோழர் பி.சன்யால்,
மத்திய மண்டலம்

செக்காஸ்லோவாகியா நாட்டின் புரட்சியாளர் தோழர் ஜூலியஸ் ஃபூசிக், சிறைச்சாலைக்குள் இருந்தபடி தனது “தூக்கு மேடைக் குறிப்புகளை” எழுதத் தொடங்கிய போது “ நான் இதனை எழுதி முடிப்பதற்குள் தூக்குக் கயிறு என் கழுத்தை இறுக்கினாலும் இதன் மகிழ்ச்சியான நிறைவுப் பகுதியை எழுத லட்சக்கணக்கான உழைப்பாளி மக்கள் இன்னும் இருக்கிறார்கள்” என்று குறிப்பிடுகிறார். தொழிலாளி வர்க்கத்தால் மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற அவரது நம்பிக்கையை அவரது வார்த்தைகள் வெளிப்படுத்துகிறது. இந்திய உழைப்பாளி மக்களின் ஒரு பகுதியாக உள்ள நாமும் அதே நம்பிக்கையோடு நம் கனவுகளை செயலாக்க முன்னேறுவோம்.

தோழர் எஸ்.ராமன்,
தென் மண்டலம்

பொது இன்சூரன்ஸ் நிறுவன பங்கு விற்பனைக்கு எதிராகவோ, புதிய பணி நியமனம், ஊதிய உயர்வு, பென்ஷன் திட்டத்தில் இணைய வாய்ப்பு, முன்னேற்றங்கள் ஆகிய கோரிக்கைகளுக்காக இதுவரை எந்த முயற்சியும் எடுத்திராத அமைப்புக்கள், ஏ.ஐ.ஐ.இ.ஏ வின் முயற்சிகளால் கொண்டு வரப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை சீர்குலைப்பதற்காக மட்டும் அரசு அதிகாரிகளை சந்திக்கிறார்கள். அவர்களாகவே தங்களின் போலித்தனத்தை அம்பலப்படுத்திக் கொள்கிறார்கள்.
தோழர் ஜே.குருமூர்த்தி
பொது இன்சூரன்ஸ்

பள்ளிப் படிப்பை தொடராத பெண் குழந்தைகளின் தேசிய சராசரி 47 % என்றால் குஜராத்தில் மட்டும் 55 %. ஆயிரம் ஆண்களுக்கு 930 பெண்கள் என்பது தேசிய சராசரி என்றால் குஜராத்தில் 886 பெண்கள்தான். இந்த அவலமான நிலையைத்தான் மோடியின் அதிசயம் என்று பாராட்டுகிறார்கள்.

தோழர் வி.காமேஸ்வரி
தென் மத்திய மணடலம்

அபத்தமாக உளருவதே மேற்கு வங்க முதல்வரின் வாடிக்கையாக மாறி விட்டது. அதை சுட்டிக்காட்டும் தைரியம் கூட எந்த ஊடகத்திற்கும் கிடையாது. மம்தாவால் பாதிக்கப்பட்ட மாணவி, பேராசிரியர், விவசாயி ஆகியோர் அவர்கள் கண் முன்னால் நிற்கிறார்களே. போராட்டங்களை முடக்க வேண்டும் என்பது அவர் ஆசை. அதனால் வேலை நிறுத்தங்கள் வெற்றிகரமாக நடக்கும் போது அவர் வெறி கொண்டவராய் மாறி விடுகிறார்.
தோழர் கௌதம் மைத்ரா,
பொது இன்சூரன்ஸ்


சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய் போன்ற உலக அழகிகள் இருப்பதாலா இந்தியா அழகாக இருக்கிறது? மலைகளும் நதிகளும் கடல் அலைகளுமா இந்தியாவை அழகாகக் காண்பிக்கிறது? இயற்கைக் காட்சிகளும் எழில் மிகுந்த கட்டிடங்களுமா இந்தியாவின் அழகிற்குக் காரணம்?

கங்கையும் காசி விஸ்வநாதர் கோயிலும் இருக்கும் வாரணாசியை விட்டு நான் வேறு எங்கும் வர மாட்டேன் என்று புகழ்பெற்ற ஷெனாய் இசை மேதை பிஸ்மில்லாகான் எப்போதும் கூறுவார்.

பர்வீன் சுல்தானா பாடும் மீரா பஜனைக்  கண்ணீர் மல்கக் கேட்காதவர்கள் யாராவது உண்டா?

கே.ஜே.யேசுதாஸின் குருவாயூரப்பன், ஐயப்பன் பாடல்களைக் கேட்டு உருகாதவரும் உண்டோ?

பல்வேறு இனம், மொழி, மதம் என்று இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்று என்ற  இந்தியாவின் பாரம்பரியக் கலாச்சாரமே இந்தியாவை மிகவும் அழகாக காண்பிக்கிறது.

தாய்நாடு சொர்க்கத்தை விடவும் முக்கியமானது, புனிதமானது.  

தோழர் எஸ்.கே.கீதா,
தென் மத்திய மண்டலம்

Monday, February 24, 2014

பிரெட் பேரிச்சம்பழ அல்வா – ஆணின் சமையல் குறிப்பு






வலைச்சரத்தில் எனது வலைப்பக்கம், அதிலும் சமையல் குறிப்பு  அறிமுகமானதால் கிடைத்த உற்சாகத்தால் செய்யப்பட்ட  புது முயற்சி.

தேவையான பொருட்கள்

பிரெட் – துண்டுகளாக்கி  பொறித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
தேங்காய் துறுவல், வெல்லம், நறுக்கி வைத்த பேரிச்சம்பழம்,
வறுத்த முந்திரி பருப்பு.

வெல்லத்தை பாகு காய்ச்சிக் கொள்ளவும். காய்ச்சிய பாகில் முதலில்
தேங்காய் துறுவலைச் சேர்க்கவும், அதன் பின்பு பேரிச்சம்பழத்தையும் சேர்த்து கலக்கவும். பிறகு பொறித்த பிரெட் துண்டங்களையும் அதில் நன்கு கலக்கவும். பிறகு முந்திரியை சேர்த்து ஏலக்காய் பொடி போட்டு நெய் ஊற்றி எல்லாம் நன்றாக கலந்த பின்பு அடுப்பிலிருந்து எடுத்து விடவும்.

எப்படி உள்ளது என்று சொல்லுங்கள்.

Sunday, February 23, 2014

சூர்யா, அரவிந்த் ஸ்வாமி, மோகன்லால் மற்றும் பின்னே நானும்

நேருக்கு நேரில் சூர்யாவும்
பம்பாயில்  அரவிந்த் ஸ்வாமியும்
இருவரில் மோகன்லாலும்

தோன்றிய மதுரை திருமலை நாயக்கர் மஹாலை
எனது கேமரா கைப்பற்றிய புகைப்படங்கள்
இதோ இங்கே.

இதை இன்னும் கொஞ்சம் ஒழுங்காக நமது
ஆட்கள் பராமரிக்கலாமே.

பார்வையாளர்களும் ஒத்துழைக்க வேண்டும்














 

Saturday, February 22, 2014

ராஜீவ் கொலை நியாயமென்று சொன்ன சி.பி.ஐ இன்ஸ்பெக்டர்







 ஏற்கனவே நான் எழுதிய பதிவை மீண்டும் இங்கே பதிவு செய்துள்ளேன்.
ராஜீவ் காந்திக்கு நியாயம் என்ன என்று கேட்பவர்கள் அறிந்து
கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த மீள் பதிவு



 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoL_MIVb4WBrlC9CEj4FfqHmI47c3u-rzcTmBN-TIH3CQsFXk-5Go2lNmNP6XoHBzprDzmgK0Fb0vST46wwt9TYg1wpVTDhf7cOhxOyIJTUApKH_5uzG-FqL7x0NkXj4leN-zAAXeq_nWp/s1600/rajiv_gandhi_assasination_20050829.jpg

1992 ம்  வருடம் துவக்கம் அது. அப்போது நான் நெய்வேலியில் 
பணி புரிந்து கொண்டிருந்தேன்.  மத்திய மின்சாரத்துறையின்
 ஒரு அதிகாரி  நெய்வேலியில்  உள்ள ஒரு  மத்தியரசு பயிற்சி
நிறுவனத்தில்  டெபுடேஷனில்  வந்திருந்தார். அவர் கைகள் 
மிக அதிகமாக நீள  காசு புரண்டது. கறுப்பாய்  வாங்கிய 
பணத்தை  வெள்ளையாக்க  அவரது மனைவி பெயரில் 
எல்.ஐ.சி   ஏஜென்சி  எடுத்தார். அவரது  ஊழல்கள் அம்பலமாக
 .சி.பி.ஐ   விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

  அவரது  மனைவி  எல்.ஐ.சி  ஏஜென்ட் என்பதால்  எங்கள் 
அலுவலகத்திற்கும்  அந்த ஏஜென்சி  தொடர்பான தகவல்கள்
 சேகரிக்க ஒரு  சிபிஐ  குழு  வந்தது. அதன் தலைமைப் 
 பொறுப்பில்  ஒரு  இன்ஸ்பெக்டர்.  அவர்  கேட்ட ஆவணங்கள்
எல்லாம் எடுத்துக் கொடுத்தோம். வேறு வழி?


அவர் கேட்ட ஆவணங்களை தேடிக் கொடுத்தது  அவரை 
நண்பராக்கியது. அவர்கள் பணி  முடிந்து கிளம்பும் முன்பாக
சாதாரணமாக  பேசிக் கொண்டிருந்தோம். நரசிம்மராவெல்லாம்
பிரதமராக அருகதை இல்லாத ஆள், நேரு குடும்பத்தைத் 
 தவிர வேறு  யாருக்கும்  இந்தியாவை  ஆள  தகுதியே 
 கிடையாது  என்றெல்லாம்  அவர்  சொல்லிக் கொண்டே
இருந்தார்.

  பேச்சு அப்படியே  ராஜீவ்  காந்தி கொலை  பக்கம் திரும்பியது.
    அப்போது   அவர்  சொன்னதை  அப்படியே   கீழே 
எழுதியுள்ளேன்.


" ராஜீவ்  கொலைக்குப் பின்  புலிகள் தங்கியிருந்த பல்வேறு
 வீடுகளில்  சோதனை செய்தோம். அப்போது   அமைதிப்படை
நடத்திய அட்டூழியங்கள்  குறித்த  புகைப்படங்கள்  அடங்கிய 
புத்தகங்கள் நிறைய கிடைத்தது. ஒவ்வொரு தொகுப்பிலும் 
பல புகைப்படங்கள். சிறுவர்களை, வயதானவர்களை கொலை
 செய்வது, பெண்களை பாலியல் கொடுமை செய்வது  என 
 பல  அராஜகங்களை  பதிவு செய்திருந்தார்கள். அமைதிப்படை
 அழிவுப்படையாகத்தான்  இருந்திருக்கிறது. அந்த 
புகைப்படங்களைப் பார்த்த போது  அமைதிப்படையை 
 அனுப்பிய  ராஜீவ்  காந்தியை கொலை  செய்தது 
நியாயம்  என்றே  எனக்கு தோன்றியது."
  

 நேரு  குடும்பத்தைத்   தவிர  வேறு  யாருக்கும் 
 இந்தியாவை   ஆள   தகுதி கிடையாது   என்று சொன்ன
   ஒரு  அதிகாரி   ராஜீவ்  காந்தி  கொலை  நியாயமானது
 என   சொன்னது  அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் 
மனசாட்சி இன்னமும்  அவருக்கு ஒட்டிக் கொண்டுள்ளது
என்பது மகிழ்ச்சியாகவும்  இருந்தது.