Thursday, October 28, 2010

சுனாமி நினைவலைகள்

இந்தோனேஷியாவில் தற்போது நிகழ்ந்த சுனாமி தாக்குதல்கள் 2004 ல் தமிழகத்தின்
கடற்கரையை தாக்கிய சுனாமி, அப்போது நாங்கள் செய்த நிவாரணப்பணிகள் பற்றிய
நினைவுகளை கிளறி விட்டது. கற்பனை செய்ய முடியாத அந்த பேரழிவு மனித
நேயம் இன்னமும் உயிர்ப்போடு உள்ளது என்பதையும் நிரூபித்தது.

அந்த ஆண்டு சி.ஐ.டி.யு சங்கம் வெண்மணி நினைவு தினத்தை ஒட்டி மாநிலம் தழுவிய ஒரு பிரச்சார நடைப்பயண இயக்கத்தை நடத்தி வெண்மணி செல்வதாக
திட்டமிட்டிருந்தார்கள். இப்பயணத்தில் நீயும் வருகின்றாயா என்று சி.ஐ.டி.யு வின்
வேலூர் மாவட்டச்செயலாளர் தோழர் காசிநாதன் கேட்டார். ஆனால் அப்பயணம்
புறப்பட்ட நாளில்தான் பதவி உயர்வு முடிவுகள் வர வேண்டிய நாள். அதன் பின்பு
பதவி உயர்வு பெற்றவர்களுக்கான பணியமர்த்தல் குறித்து நிர்வாகத்துடன் பேசி
முடிவு செய்ய வேண்டியிருக்கும் என்பதால் அப்பயணத்தில் இணைய வாய்ப்பில்லை
என்று கூறி விட்டேன். ஆனால் அது வரை வெண்மணி சென்றதில்லை என்பதால்
எப்படியாவது அந்த ஆண்டு செல்ல வேண்டும் என்ற வேகம் மட்டும் உருவானது.

பொறுப்பாளர்கள் கலந்து பேசினோம். பதவி உயர்வு பணியமர்த்தல் வேலை 22  தேதிக்குள் முடிந்து விடும். எனவே 24 அன்று புறப்படுவது, அதனை ஒரு சிறு
இயக்கமாக நடத்துவது என்றும் முடிவெடுத்தோம். 24 காலையில் கோட்ட அலுவலகத்தில்  ஒரு கூட்டம். சுதந்திரப் போராட்ட வீரரும் குடியாத்தம் தொகுதியின்
முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான தோழர் கே.ஆர்.சுந்தரம் எழுச்சி மிக்க ஒரு
உரையாற்றி பயணத்தை துவக்கி வைத்தார். தோழர் கே.ஆர்.எஸ் அவர்கள் இறுதியாக
பங்கேற்ற எங்கள் சங்க நிகழ்வு அதுதான்.

எங்களின் தற்போதைய தென் மண்டல பொதுச்செயலாளரும் அன்றைய துணைத்
தலைவருமான தோழர் கே.சுவாமிநாதனும் எங்களோடு வந்திருந்தார். போளூர்,
திருவண்ணாமலை,  விழுப்புரம், பண்ருட்டி, கடலூர், புதுவை ஆகிய மையங்களில்
ஊழியர் கூட்டம் நடத்தி விட்டு நள்ளிரவு திருவாரூர் சென்றோம்.

மறுநாள் வெண்மணி சென்று தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு ( வெண்மணி அனுபவங்கள் பற்றி தனியாக விரிவாக எழுதிட வேண்டும்)   வேலூர் திரும்பும் வழியில்  பூம்புகார் சென்றிருந்தோம். கடற்கரை அருகே இருந்த மீனவர் குடியிருப்பைப் பார்த்து  புயல் வந்தால் இவர்களின் நிலை என்ன ஆகும் என்றெல்லாம் பேசிக்கொண்டோம்.  வேளாங்கண்ணி  செல்லலாமா என்று ஒரு தோழர் கேட்ட போது  மறுநாள் செயற்குழு  என்று முன்னரே முடிவெடுத்து  கடிதம் அனுப்பியிருந்ததால் நேரமாகும் என்று அவர்
விருப்பத்தை நிராகரித்து நாகை, புதுவை வழியாக திரும்பிக் கொண்டிருந்தோம்.
கடைசியில் விழுப்புரத்தில் வாகனம் பழுதானதால் சரி செய்ய தாமதமானதால்
செயற்குழுவை ஒத்தி வைக்க நேரிட்டது ஒரு தனிக்கதை.

வீட்டிற்கு வரும்போது   காலை இரண்டு மணி  இருக்கும். எட்டரை மணிக்கு தொலைபேசி  உறக்கத்தை கலைத்தது. திருவண்ணாமலையில் இருந்த கோட்டத்
துணைத்தலைவர்  தோழர் அழகுதுரை  கலவரத்தோடு பேசினார். தோழரே டி.வி
பார்த்தீர்களா, நேற்று நாம் சென்ற இடங்கள் எல்லாம் இன்று அழிந்து போயிருக்கிறது என்று.  கடல் சீற்றம் என்று மட்டுமே அப்போது தொலைக்காட்சியில் சொல்லிக் கொண்டிருந்தார்கள், பாதிப்பு பற்றிய சரியான புரிதல் யாருக்கும் இல்லை. அடுத்த
தொலைபேசி வேளாங்கண்ணி செல்லலாம் என்ற தோழரிடமிருந்து. ஒரு வேளை
நாம் அங்கே சென்று தங்கியிருந்தால் நம் நிலைமை என்னவாகியிருகுமோ என்ற
கேள்வியே இருவர் மனதிலும் மேலோங்கியிருந்தது. 

புதுவையிலிருந்த மூத்த தோழர் ஆர்.பி.எஸ் (தற்போது இவர் மறைந்து விட்டார்)  அடுத்து பேசினார். பலரையும் அரசு  புதுவைப்    பலகலைக்கழகத்தில் தங்க வைத்துள்ளார்கள். ஏராளமான குழந்தைகள் உள்ளனர். அவர்களின் உணவிற்கான
 ஏற்பாடு எதுவும் இல்லை என்று கூறிய  அவரே  பிரெட் பாக்கெட்டுகள் வாங்கி தரலாம்  என்று யோசிக்கிறோம் என்றார். தாராளமாக செய்யுங்கள், பணத்தைப்பற்றி கவலை
வேண்டாம் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்றேன். 1000 பிரெட் பாக்கெட் வாங்கி பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டபோது நேரம் 11 .30
அன்று மாலையே வேலூரிலிருந்த பொறுப்பாளர்கள் அவசரமாகக் கூடி நம்மால்
இயன்ற நிவாரணப் பணிகளை மேற்கொள்வது என்று முடிவெடுத்து தங்களால்
இயன்ற பங்களிப்பை அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை உறுப்பினர்களுக்கு
கையால் எழுதிய சுற்றறிக்கை மூலம் அன்றே அனுப்பினோம். மறுநாள் பாதிக்கப்
பட்ட பகுதிகளுக்கு நேரில் செல்வது என்றும் முடிவெடுத்தோம்.  இதற்கிடையில் எங்கள் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் கே.வேணுகோபால் ஹைதராபாத்
நகரிலிருந்து தொலைபேசியில் அழைத்தார். நம் ஊழியர்கள் யாருக்காவது ஏதேனும்
பாதிப்பு உள்ளதா என்று அக்கறையோடு விசாரித்த அவர் நிவாரணப் பணிகளில்
நாம் முழுமையாக ஈடுபட வேண்டும் என்றும் நிர்வாகத்தையும் இப்பணியில்
இணையுங்கள் என்றும் அவர் வழி காட்டினார்.  அதன் படி கோட்ட மேலாளரிடம் பேச உணவளிக்கும் பணியில் எல்.ஐ.சி நிர்வாகம் தன்னை இணைத்துக் கொண்டது.

மீண்டும் தோழர் ஆர்.பி.எஸ் தகவல் அளித்தார். மாற்று உடை கூட இல்லாத நிலையில் பலர் உள்ளனர். குளிர் காலமாக உள்ளதால் போர்வைக்கான தேவை
அதிகமாக உள்ளது. அதே நேரம் அங்கே உள்ள கடைகள் கூடுதல் விலைக்கு விற்க
ஆரம்பித்து விட்டதால் வேலூரிலிருந்தே போர்வைகள் வாங்கி வந்தால் சரியாக
இருக்கும் என்றும் கூறினார்.

மறுநாள் கோட்ட அலுவலகத்தில் ஒரு அஞ்சலிக்கூட்டம் நடத்தி பங்களிப்பிற்கான
அறைகூவலையும் அளித்தோம். பல தோழர்கள் அதிலும் பெரும்பாலும் மகளிர்
தோழர்கள் அப்போதே தங்கள் கையில் இருந்த பணத்தை அளித்தார்கள். வங்கியில்
இருந்தும் பணத்தை எடுத்துக் கொண்டு கடைப்பக்கம் வந்து போர்வை, லுங்கி, புடவை போன்ற பொருட்களை வாங்கினோம். எங்கள் நோக்கம் அறிந்து மிகவும்
குறைவான விலைக்கே அளித்தார்கள். ஹரியானா ஹாண்ட்லூம் என்ற ஒரு சர்தார்ஜியின் கடையின் உரிமையாளரான சீக்கியப் பெரியவர் கடைசியாக ஒரு
25  சால்வைகளை கட்டிக் கொடுத்து இது எனது காணிக்கையாக இருக்கட்டும் என்று
தூய தமிழில் கூறினார். அப்பகுதி நடை பாதை வியாபாரிகள் குழந்தைகளுக்கான
ஆயத்த ஆடைகளை மிகவும் சொற்பமான விலைக்கு தந்தார்கள்.

டாடா சுமோ வாகனத்தின் மேற்கூரை முழுவதுமும் பின்பக்கம் முழுவதும்
பொருட்களை நிரப்பி நாங்கள் நால்வர் (நான், தோழர்கள் நாராயணன், தசரதன்,
ரமேஷ் பாபு ) புதுவை நோக்கி புறப்பட்டோம். அன்று புதுவை சென்று விட்டு
மறுநாள் கடலூர் சிதம்பரம் பார்த்து விட்டு திரும்புவது எங்களது திட்டம்.

சுனாமி தாக்கிய பகுதிகளை நோக்கிய பயணம் அவ்வளவு சுலபமாக முடியப்போவதில்லை  என்று அப்போது நாங்கள் அறிந்திருக்கவில்லை.

                                                                     நினைவலைகள் அவ்வளவு சீக்கிரம் ஓயாது

Tuesday, October 26, 2010

குற்றவாளிக் கூண்டில் ராமர்


ராமர் மீது வழக்கு வந்தால் - நிஜமல்ல,  கற்பனைதான் ஆனாலும் ?

அலகாபாத் நீதிமன்றம் இன்று மீண்டும் பரபரப்பாக காட்சியளித்தது. அயோத்தி நிலம்
தொடர்பான வழக்குதான் இருவழியாக டெல்லிக்கு போய்விட்டதே, இன்று ஏன் இவ்வளவு கூட்டம், இத்தனை டிவிக்காரர்கள்  என்று நீதிமன்றம் எதிரில் டீக்கடை
வைத்திருந்த முன்னாராம் பக்கத்து பெட்டிக்கடை அப்துல்லாவைக் கேட்டார். யாரோ
புதிய பிரச்சினைகளோடு மீண்டும் வழக்கு தொடுக்கப் போகின்றார்களாம் என்று
விளக்கம் சொன்னார் அப்துல்லா. கோவில் வந்தால் என்ன? மசூதி வந்தால்தான் என்ன
நம் வாழ்க்கை என்னவோ டீ விற்பதிலும் சிகரெட் விற்பதிலும்தான்  முடிந்து போகப்
போகிறது என்று அங்கலாய்த்தபடியே கிளாஸ்களை கழுவத்தொடங்கினார் முன்னாராம்.

நீதிமன்றம்  கூடியது.  மூன்று நீதிபதிகள் தங்கள் இருக்கையிலே வந்து அமர்ந்தார்கள்.
சமீபத்தில் இறந்து போன தந்தையின் ஆன்மா சாந்தி அடைய சங்கமத்தில் காரியம்
செய்ய வந்த உச்ச நீதிமன்ற நீதிபதி கூட பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தார்.
அயோத்தி வழக்கு அவரிடம்தான் வரும் என்ற செவி வழிச்செய்திகள் இவ்வழக்கு
என்னவாக இருக்கும் என்ற ஆவலை அவருக்கு உருவாக்கி இருந்தது.

கை நிறைய கற்றைக் காகிதகங்களோடு  நீதிமன்ற அறையில் வழக்கறிஞர்களோடு
நின்று கொண்டிருந்தவர்களின் தோற்றமே மிகவும் வித்தியாசமாக இருந்தது.
ஒருவரின் முகத்தை உன்னிப்பாக கவனித்தால் குரங்கின் சாயல் தென்பட்டது.
இன்னொருவரின் முகமோ பலமுறை சினிமாவில் பார்த்த பகவதி, ரங்காராவ்
போலவே இருந்தது.

வழக்கு தொடங்கியது. ராமர் மீதும் லட்சுமணர் மீதும் விபிஷணன் மீதும் வழக்கு
பதிய வேண்டும் என அந்த இரண்டு மனிதர்களின் வக்கீல் சொன்னபோது நீதிமன்றம் அப்படியே அதிர்ந்து போனது. மயான அமைதி அங்கே உருவானது.
ஒரு நிமிடம்தான் இந்த நிலை. அடுத்த நிமிடம் சந்தைக்கடை போல அவரவர்
பேசத் தொடங்கினர். என்ன தைரியம் இருந்தா ராமர் மேல வழக்கு போடணும்னும்
சொல்லுவ, மவனே வெளியே வா! என்று காவியுடையும் நெற்றியில் திலகமும்
இட்ட ஒரு தலைப்பாகைக்காரர்  கத்த, நிதிபதிகள் மரச்சுத்தியலை தட்டி தட்டி
அமைதியை உருவாக்க சிரமப்பட்டனர்.

வழக்கறிஞரை   தனது வாதத்தை தொடங்குமாறு நீதிபதிகள் கூறினர். அவரும் தொடங்கினார்.

கனம் கோர்ட்டார் அவர்களே, இங்கே உள்ள எனது கட்சிக்காரர்கள் கிஷ்கிந்தா அரசன்
வாலியின் சந்ததியைச் சேர்ந்த  அங்கதன் மற்றும் இலங்கைச்சக்கரவர்த்தி ராவணின்
பரம்பரையைச சேர்ந்த சிங்கமுகன். இவர்கள் இருவரும் தங்களது முன்னோருக்கு
இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டு வந்துள்ளார்கள். பல தலைமுறைகளுக்கு
முற்பட்ட வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்லும் ஆற்றல் இந்த நீதிமன்றத்திற்கு மட்டுமே
உள்ளது என்பதால் இங்கே வந்துள்ளனர்.

அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே சாமியார் போல தோற்றமளித்த ஒருவர்  அவசரம் அவசரமாக உள்ளே வந்து வக்கீலின் உதவியாளரின் காதைக்கடிக்க,
அவர் வக்கீலின் காதைக்கடிக்க பரபரப்பாக மீண்டும் நீதிபதிகளை வணங்கி
மை லார்ட் சீதா பிராட்டியின் தந்தை ஜனக மகாராஜாவின் குடும்பத்தினரும்
இவ்வழக்கில் இணைந்து கொள்ள அனுமதி கோருகின்றனர். தங்களின் அனுமதி
வேண்டும் என்று பணிவோடு கோரினார். நீதிபதிகள் தங்களுக்குள் ரகசியமாக
ஏதோ பேசி விட்டு பிறகு அதற்கு அனுமதி தந்தார்கள். இவ்வழக்கு பற்றிய
விசாரணையை மதிய உணவிற்கு பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று சொல்ல
அவை கலைந்தது.

இதனை நாளா இவனுங்க எங்க இருந்தானுங்க, புதுசா என்ன சிக்கலை கொண்டு
வந்துருக்கானுங்க என்றவாறே மக்கள் முணுமுணுத்துக் கொண்டே கலைந்து
போனார்கள். அங்கதன், சிங்க முகன், ஜனகர் வகையறாக்களை தூரத்திலிருந்தே
வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மதிய உணவிற்குப்பிறகு நீதிமன்றம் கூடியது. பத்திரிக்கையாளர்களுக்கே இடம்
போதவில்லை. வாதம் தொடங்கியது.

முதலில் ராவணன் தரப்பு வாதத்தை முன்வைத்தார். ராவணன் வதத்தைப் பற்றி
எதுவும் சொல்வதற்கில்லை ஏனென்றால் அடுத்தவர் மனைவியை கடத்திய குற்றம்
அவர் மீது உள்ளது. ஆனால் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தெறிந்தது என்பது
லட்சுமணன் செய்த குற்றம். ஈவ் டீசிங் சட்டப்படியும் ஐ.பி.சி 354 பிரிவின் படியும்
அவர் மீது வழக்கு பதிய வேண்டும் என்றார். அதே போல் விபீஷணன் மீது
கட்சித் தாவல் தடைச்சட்டப்படியும் ராவணன் அரசு பற்றிய ரகசியங்களை ராமரிடம்
கூறியதாலும் அவர் மீது தேசத்துரோகச்சட்டப்படி நடவடிக்கை வேண்டும் என்று
வலியுறுத்தினார்.

வாலிக்கும் ராமனுக்கும் எந்த பிரச்சினையும்    இல்லாதபோது வாலியை கொலை
 செய்தது , அதுவும் மறைந்திருந்து கொலை செய்தது என்பது திட்டமிட்ட படுகொலை.  இதற்கு 302  பிரிவின்படி தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டார் வக்கீல். அடுத்து
சீதா பிராட்டி தரப்பு வாதங்களை அவர் முன்வைக்கும்   முன்னால்    அந்த சாமியார் எழுந்து   ஐயா, நான் கொஞ்சம் பேசலாமா என்று
பணிவோடு கேட்டார்.

நீதிபதிகள் அனுமதிக்க அவர் பேசத் தொடங்கினார்.
" ஐயா எங்கள் வம்சத்திற்கே மிகப்பெரிய பெருமை சீதா எங்கள்
குலத்தில் பிறந்ததுதான். அயோத்தி இளவரசரை அவர் திருமணம் செய்து
கொண்டபோது மிகவும் மகிழ்ந்தார்கள் எங்கள் முன்னோர்கள். ராமருக்கு
பட்டாபிஷேகம் என்ற போது எங்கள் உற்சாகத்திற்கு அளவேயில்லை. ஆனால்
அவள் கணவரோடு காட்டிற்குப் போனபோது வருத்தமும் ஏற்பட்டது. கணவர்
மீது இவளுக்கு எவ்வளவு மரியாதை என்று பெருமிதமும் அடைந்தோம். அவளைக்
கடத்தி சென்ற போது கவலைப்பட்டோம். மாவீரன் ராமன் இருக்கையில் என்ன
கவலை என்றும் பேசிக்கொண்டோம்.

ஆனால் போர் முடிந்து தீக்குண்டத்தில் சீதையை இறங்கச்சொன்னபோதுதான்
உள்ளம் வலித்தது. எம் குலப்பெண்ணிற்கு  இப்படி  ஒரு கொடுமையா என்று
பதைத்துப் போனோம். ஆனால் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்வது
எப்படி ஐயா சரியாக இருக்கும்? கர்ப்பமடைந்த பெண்ணை காட்டிற்கு துரத்தினார்கள்.
மீண்டும் அதே போல் குற்றம் சுமத்தி பூமிக்குள் செல்லும்படி செய்தார்கள்.
இதை நியாயம் என்று ஐயா ஒப்புக்கொள்வீர்களா ? என்று கண்ணீரோடு கேள்வி
கேட்டார் அந்த பெரியவர்.

அப்போது எழுந்த வக்கீல் ஐயா ராமபிரான் மீது ஐ.பி.சி யின் பல பிரிவுகளில்
வழக்கு பதிவு செய்யலாம்.

பெண்ணை இழிவு படுத்தியதற்கு 498 ஏ மற்றும் 499
தற்கொலைக்கு தூண்டியதற்கு  306
அஸ்வமேத யாகத்தின் போது சீதைக்குப் பதிலாக தங்கச்சிலையை
வைத்ததற்கு ஆள்மாறாட்ட வழக்கு பதிவு செய்யலாம் என்ற போது என் கட்சிக்காரர்
அதனை விரும்பவில்லை. ஆக எனது வாதங்களின் அடிப்படையில் வழக்கினை
நடத்தி தவறிழைத்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன், யுவர்
ஹானர் என்று கூறி முடித்தார்.

நீதிமன்றத்தில் நிலவிய நிசப்தத்தை ஒரு நீதிபதி கலைத்தார்.

நீங்கள் கூறியவர்கள் யாருமே இப்போது இல்லாதபோது எப்படி வழக்கை நடத்த
முடியும்? நீங்கள் கூறுவதற்கெல்லாம் என்ன ஆதாரம்?  சாட்சிகள் வருவார்களா?

பணிவோடு வழக்கறிஞர் பதிலளித்தார்.
ஐயா,  ராமர் எந்த இடத்தில் பிறந்தார் என்று தாங்கள் எந்த அடிப்படையில் தீர்ப்பு அளித்தீர்களோ, அந்த அடிப்படையில்தான் இந்த வழக்கில் நீதி கேட்கிறோம். அது
சரி என்றால் இதுவும் சரியல்லவா? ராமர் பிறந்தது நம்பிக்கை என்றால் அவரது
வாழ்நாளில் நடந்ததாக சொல்லப்பட்ட சம்பவங்களும் உண்மைதானே? ராமருக்கு
நியாயம் வழங்கியது போல இவர்களுக்கும் நியாயம் வழங்க வேண்டும் என்று
சொல்லி அவர் அமர நீதிபதிகளுக்கு இதயத்தில் மெல்லமாய் வலித்தது.

உச்சநீதி மன்ற நீதிபதி தனக்குள்ளாக சொல்லிக் கொண்டார். தன்னிடம் அயோத்தி
வழக்கு வந்தால் எப்படியாவது அதை வேறு யாருக்காவது மாற்றி விட வேண்டும்.

Saturday, October 23, 2010

கையில் விலங்கு.. கண்ணில் ஒளி... நெஞ்சில் உறுதி







பாக்ஸ்கான் தொழிற்சாலைப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட  சி.ஐ.டி.யு சங்க மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் அ. சவுந்தரராஜன், காஞ்சி மாவட்டச்செயலாளர்
தோழர் முத்துக்குமார், மற்றும் பாக்ஸ்கான் கம்பெனித் தொழிலாளர்கள் பத்து
தோழர்கள் என பனிரெண்டு தோழர்களும் நேற்று மாலை பிணையில் விடுதலை
ஆனார்கள். உள்ளிருப்புப் போராட்டத்திற்காக முதலில் கைது செய்யப்பட்ட 319
தோழர்களில் இந்த பனிரெண்டு தோழர்கள் மீது மட்டும் தமிழக அரசு முதல் வழக்கிற்கு பிணை பெற்றபோதே மீண்டும் ஒரு பொய்வழக்கு போட்டு மறுபடியும்
வேலூர் சிறைக்கே அனுப்பி விட்டது.  நீதிமன்றம் செல்லும் வழியில் கைவிலங்கு
பூட்டி இழிவு படுத்தியது. அப்படி ஒரு கொடுமை நடக்கவேயில்லை என்று கூசாமல்
பொய் கூறிக்கொண்டே  இருக்கிறது.  

வேலூரில் உள்ள தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் எல்லோருமே  'சிறைப்பணிகள்  ஒருங்கிணைப்புக் குழு'   என்று தனியாக ஆட்களுக்கு வேலைப் பிரிவினை  செய்து கொடுக்கக்கூடிய அவசியத்தை தமிழக அரசு உருவாக்கி வருகின்றது. சகிப்புத்தன்மையும் பொறுமையும் சிறிது கூட இல்லாததால் போராடுபவர்களை சிறைக்கு அனுப்புவதே தற்போதைய நிகழ்வாகி விட்டது.

கைது செய்யப்பட்ட தோழர்கள் நேற்று விடுதலையானார்கள். சரியான தகவல்
பரிமாற்றத்திற்கான  கால அவகாசம் இல்லாத போதும் வேலூரின் கடைக்கோடியில் 
உள்ள தொரப்பாடி மத்திய சிறை முன்பு கிட்டத்தட்ட இருநூறு தோழர்கள் குவிந்து
விட்டனர். சிறைச்சாலை வளாகமே அதிரும் வண்ணம், " அஞ்ச மாட்டோம், அஞ்ச 
மாட்டோம், அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டோம்" என்ற முழக்கங்களுக்கு இடையே 
தோழர்கள் வெளியே வந்தனர்.  

குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் தோழர் ஜி.லதா, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச்செயலாளர் தோழர் நாராயணன் ஆகியோர் சிறை சென்ற தோழர்களுக்கு
மாலை அணிவித்து கவுரவிக்க சிறை வாசலிலேயே ஒரு கூட்டமும் நடைபெற்றது.
தோழர் ஏ.எஸ் பேசுகிறபோது பின்னால் நின்று கொண்டிருந்த அந்த பத்து
பாக்ஸ்கான் தொழிலாளர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். செவி பேச்சைக்
கேட்டுக்கொண்டிருந்தாலும் பார்வை பத்து தோழர்கள் மீதே இருந்திருந்தது.

அவர்களின் வயது அதிகபட்சம் இருபத்தி ஐந்துக்கு மேல் இருக்காது. அத்தனை பேரும் இளைஞர்கள். பத்து நாள் சிறைவாசத்திற்குப் பிறகு வெளியே வந்த
அவர்களின் முகத்தில் சிறிதுகூட பதட்டமோ, வாட்டமோ இல்லை. உற்சாகமாகவே
இருந்தார்கள். தோழர் ஏ.எஸ் போராட்டம் தொடரும் என்றும் மற்ற தோழர்கள்
அடிபணியாமல் உறுதியோடு உள்ளனர் என்று கூறும்போது இவர்களின் முகத்தில்தான்
என்ன ஒரு ஒளி!

இருபத்தி ஐந்து வயதிற்குள் அவர்கள் சந்தித்த சோதனைகள்தான் எத்தனை?
போராட்டத்திற்காக கைது ஆகி விடுதலை பெறும் நேரம் மீண்டும் கைது, வழக்கு.
கொலை, கொள்ளை குற்றவாளிகள் போல கைவிலங்கு மாட்டி அவமானம்,
அடக்குமுறைக்கு உள்ளனார்கள். தோழர் சவுந்திரராஜனுக்கோ, அல்லது தோழர்
முத்துக்குமாருக்கோ சிறைவாசமோ, அடக்குமுறை மிரட்டல் தர்பார் எல்லாம்
புதிதல்ல. அவர்கள் அதிலேயே ஊறிப்போய் உரம் பெற்றவர்கள்.

பொதுவாக இந்த வயது இளைஞர்கள், ஊதியம் வாங்கினோமா, உல்லாசமாய்
பொழுதைக் கழித்தோமா என்று இருக்கையில் உரிமைக்கான போராட்டம் நடத்தி
சிறைவாசம் அனுபவித்தும் உறுதியோடு அந்த இளைஞர்கள் நின்ற காட்சி
உண்மையிலேயே பிரமிப்பை உருவாக்கியது.

பாவம் தமிழக முதல்வர்! அடக்குமுறை மூலம் போராட்டங்களை ஒடுக்கி விடலாம்
என்று காவல்துறையை ஏவி விட ஏவி விட தொழிலாளர்களோ உறுதியாகிக் கொண்டே வருகிறார்கள். போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
உறுதியான போராளிகள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள்
தொழிலாளர்களுக்கு எதிரான நிறுவனங்களின் நிர்வாகங்களை மட்டுமல்ல
அவர்களுக்கு வால் பிடிக்கும் தமிழக அரசு போன்ற தொழிலாளர் விரோத
அரசுகளையும் வீழ்த்தி விடுவார்கள்.

Saturday, October 16, 2010

(வெறியேறிய) குரங்கின் கையில் பூமாலை- தமிழகம்?

தமிழக முதல்வர் கருணாநிதிக்கு  (இத்தனை நாளாக கலைஞர்  என்று
மரியாதையாகத்தான்  எழுதி வந்தேன். ஆனால் அவரது நடவடிக்கைகள் மூலம்
அந்த மரியாதையை அவர் அனைத்து தரப்பு மக்களிடமும் இழந்து வருகின்றார்.
நானும் மக்களில் ஒரு பகுதிதானே!)  பதட்டம்  வந்து விட்டது. இரும்புக்கரம்
வந்து விட்டது.

"தொழிலாளர் தோழன் நான்தான், பெரியார், அண்ணாவை
சந்திக்காவிட்டால் நானும் கம்யுனிஸ்டாக  இருந்திருப்பேன், மேதினத்திற்காக
விடுமுறை விட்டவன் நான்தான், மேதினப்பூங்கா அமைத்தவன் நான்தான்"
இதெல்லாம் அவர் வழக்கமாக பீற்றிக் கொள்வது. அவர் கம்யூனிஸ்டாக
மாறாமல் போனது ஒரு நல்ல விஷயம். அப்படியே இருந்திருந்தாலும் என்றோ
அவர் திருப்பூர் ஆசாமி போல ஓடிப் போயிருப்பார்.

பாக்ஸ்கான் தொழிற்சாலைப் பிரச்சினையிலும் சரி என்.எல்.சி ஒப்பந்த
ஊழியர் போராட்டத்திலும் சரி திமுகவின் தொ.மு.ச தனது கருங்காலி
குணாம்சத்தின்படியே  நடந்து கொண்டிருக்கிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதல் ஆட்சிக்காலத்தில்  என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை விற்க முயற்சி நடந்தபோது  அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராடினார்கள். பங்குகளை   தொழிலாளிகளுக்கு விற்கலாம்  என ஆலோசனை வழங்கினார் கருணாநிதி.
 ஆனால் இந்த ஆலோசனையை   ஏற்கமுடியாது என்று   வெளிப்படையாகவே  என்.எல்.சி தொ.மு.ச அன்றைய தலைவர் ராஜ வன்னியன்   கூற  , போராட்டத்தில் தொ.மு.ச வும்     தொடர்ந்தது. அதன்   பின்தான்  அமைச்சரவை விலகல் என திமுக கூற  அப்பிரச்சனை   முடிவிற்கு வந்தது.
ஆனால் அடுத்து வந்த தொ.மு.ச தேர்தலில் ராஜ வன்னியன் தோற்றுப்
போவதை திமுக தலைமை உறுதி செய்தது. இது நெய்வேலி மக்கள்
அனைவரும் அறிந்த உண்மை.

 தொ.மு.ச வை ,அதன்  துரோகத்தை பாதுகாக்க  போராடிய   பாக்ஸ்கான் தொழிலாளர்களை, சி.ஐ.டி.யு வின் தமிழ் மாநிலப் பொதுச்செயலாளர்  தோழர்  அ.சவுந்தரராஜன்  உள்ளிட்ட தலைவர்களை  மீண்டும் மீண்டும்
கைது செய்கிறது பொய் வழக்கு  போடுகிறது.   இவரது தலையீட்டாலும்
தொமுச துரோக ஒப்பந்தம் செய்து கொண்டதாலும்தான்  நெய்வேலி
ஒப்பந்ந்த தொழிலாளர் போராட்டம் நீடிக்கிறது. ஆனால் இவரோ வழக்கம்
போல் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் போடுகிறார். (யாராவது   கருணாநிதியின்
கடிதங்கள் என்ற தலைப்பில்   முனைவர் பட்டம் பெற ஆய்வு செய்யலாம். புத்தகமாய்
வெளியிட்டால் கற்பனை  இலக்கியத்திற்கான  நோபல் பரிசு கிடைக்குமோ!
அத்தனை கடிதங்களின் எண்ணிக்கையை கூட்டிப்பார்த்தால் கின்னஸ் பரிசு கூட
கிடைக்கலாம்!)   இது என்ன இரட்டை வேடம்?

வயதாகி விட்டதாலோ, அல்லது குடும்பப் பிரச்சினைகள் காரணமாகவோ
குவித்து வைத்துள்ள கோடிகளை  எப்படி பாதுகாப்பது என்ற அச்சமோ அல்லது
தோல்வி பயமோ தமிழக முதல்வரை இன்று யாராவது போராட்டம் என்று
சொன்னாலே எரிச்சலூட்டுகிறது. தான் உருவாக்கி வருகின்ற மாயை கலைந்து
போகின்றதே என்று ஆத்திரம் வருகின்றது.  வார்த்தைகளில் காட்டி வந்த
கடுமை காவல்துறை  நடவடிக்கைகளிலும் இப்போது தெரிகின்றது.

வெறியேறிய குரங்கின் கைகளில் சிக்கிய பூமாலையாக தமிழகத்தின்
தொழிலாளர்கள் நிலை மாறி விட்டது.

Friday, October 8, 2010

யாராவது விளக்கம் சொல்லுங்களேன்?






மேலே உள்ள படங்களை பாருங்கள், என் வீட்டு முனையில் உள்ள
மின் கம்பம் மீது லாரி மோதி மின் கம்பம் இரண்டாக உடைந்து
விட்டது. நள்ளிரவு நேரத்திலும் மின் வாரிய அதிகாரிகள் அங்கே
வந்து வேறு கம்பம் வைப்பதற்கான இழப்பீட்டு தொகையை
லாரிக்காரர்களிடம் வாங்கி மூங்கில் கம்புகளில் முட்டு கொடுத்து
விட்டு சென்று விட்டனர். மறு நாளே மாலைக்குள்ளாக வேறு
புதிய கம்பமும் நிறுவி விட்டார்கள்.

எனது கேள்விகள் என்னவென்றால்
 என்னத்தான் லாரி மோதினாலும் கான்கிரீட் கம்பம் இப்படி
இரண்டாக உடையுமா?

அல்லது உற்பத்தியின்  மாமூல் கோளாறு விபத்தின் மூலம்
அம்பலமாகி விட்டதா?

உடைந்து விழுந்த கான்கிரீட் கம்பத்தை மூங்கில் கம்புகள்
தாங்குமா?

அதுவும் நொறுங்கினால் மிகப் பெரிய அழிவு ஏற்படாதா?

இந்தக் கேள்விகளை மின் வாரியத்திடம் கேட்பதில் எவ்வித
பயனும் கிடையாது. மின் தடை ஏற்படும் வேளையில் மீண்டும்
எப்போது மின்சாரம் வரும் என்ற கேள்விக்கே பதில்
கிடைப்பதில்லை.

விஷயம் அறிந்தவர்கள் விளக்கம் தாருங்களேன்!

Saturday, October 2, 2010

கிராமத்து வரவேற்பு - சரியான கலக்கல்

பணியில் சேர்ந்த இருபத்தி ஐந்து  ஆண்டுகளில்  எத்தனையோ
தோழர்கள் பணி நிறைவு பெற்றுள்ளனர். பொதுவாக தோழர்கள்
ஒய்வு பெறும் நாளன்று பாராட்டு விழாக் கூட்டம் நடக்கும். நல்ல
வார்த்தைகள் பேசி நினைவுப்பரிசு அளித்து வீடு வரை கொண்டு
போய்விடுவோம். வீடு வரை செல்லும் தோழர்களின் எண்ணிக்கை
ஒய்வு பெறும் தோழர்களைப் பொறுத்து  மாறும். அவர்களது
வீட்டில் அளிக்கும் சிற்றுண்டியை சாப்பிட்டு விட்டு அரை மணி
நேரம் அல்லது ஒரு மணி நேரத்தில் திரும்பி விடுவோம். இதுதான்
வழக்கமான நடைமுறை.

நேற்று முன்தினம் ராமதாஸ் என்ற தோழர் ஒய்வு பெற்றார்.
வாட்ச்மேனாக பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர். அவருக்கும்
அலுவலகத்தில் நிர்வாகம் சார்பாக ஒரு விழா. அன்று ஒரு மூத்த
அதிகாரி ஒருவரும் ஒய்வு பெற்றதால் வெளிச்சம் என்னவோ அவர்
மீதே அதிகமாக இருந்தது.பின்பு அவர் பணியாற்றிய எங்களது
பிரிவில் ஒரு விழா. அலுவலக நேரம் முடிந்த பின்பு   சங்கத்தின்
சார்பில்  ஒரு  விழா. அங்கே உண்மையான உணர்வுகள்
பகிரப்பட்டு அவரது ஊருக்குப் புறப்பட்டோம்.

அப்போது அயோத்தி ஆலமரத்தடி தீர்ப்பு வந்திருக்கவில்லை.
அதனால் பெண் தோழர்கள் வீட்டிற்கு புறப்பட ஆண்கள் மட்டும்
ஒரு வேனிலும் இரண்டு சக்கர வாகனங்களிலும் புறப்பட்டோம்.
போகும் வழியெல்லாம் போலீஸ் படை, எவனாவது மாட்டினால்
அடித்து நொறுக்கும் வெறியோடு.

அவரது கிராமத்து எல்லை நெருங்கியபோது  ஆச்சர்யம் தொடங்கியது.
பேண்டு முழக்கத்தோடு கிராமத்து மக்களும் உறவினர்களும்
காத்திருந்தனர். அங்கேயே அவருக்கு மாலை, சால்வை எல்லாம் போட்டு
மோதிரம் அணிவித்து  உறவினர்கள் கௌரவிக்க பேரக்குழந்தைகள்
பூங்கொத்து அளித்தன. அவரது வீடு வரை ஊர்வலமாகவே அழைத்து
வரப்பட்டார்.

வீட்டில் நுழையும் முன்பு ஒரு பிரம்மாண்ட ஆளுயர மாலை அணிவிக்க,
பட்டாசின் சத்தத்தை மேளத்தின் முழக்கம் மூழ்கடித்தது. அவரது வீட்டு
மாடியில் நான்காவது கூட்டம். அங்கே அலுவலகத் தோழர்கள்  அனைவருக்கும்
கதராடை அணிவிக்கப்பட்டது. திருமண விருந்து போல அனைவருக்கும்
சிறப்பான விருந்து அளிக்கப்பட்டது.

எனது இருபத்தி ஐந்து ஆண்டு பணிக்காலத்தில்  ஒய்வு பெற்று வீடு திரும்பும்
ஒரு தோழருக்கு இப்படி ஒரு வரவேற்பளிப்பு அளிக்கப்பட்டு நான்
பார்த்ததில்லை.  இதிலே முக்கியமாய் சொல்ல வேண்டிய விஷயம்,
தோழர் ராமதாசிற்கு மகன்கள் கிடையாது. இரு மகள்கள்தான். அத்தனை
ஏற்பாடுகளையும் ஆசையாய் செய்திருந்தது அவரது  மறுமகன்கள்தான்.

பாசத்தை பரிமாறிக் கொண்ட அந்த வரவேற்பு என்றென்றும்
நினைவில் நிலைத்திருக்கும்.