Friday, September 30, 2022

காஷ்மீர் ஆப்பிளின் கண்ணீர்

 

நேற்றைய ஆங்கில இந்து இதழில் படித்த செய்தி.

20 டன் ஆப்பிளை ஏற்றிய 5000 லாரிகள் (மொத்தம் பத்தாயிரம் டன் ஆப்பிள்கள்)  மூன்று நாட்களாக ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. கிட்டத்தட்ட அதே அளவு ஆப்பிள்கள் தோட்டங்களிலும் அவல நிலையில் உள்ளனவாம். அவை அழுகிப் போனதால் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் இழப்பு என்று சொல்கிறது செய்தி.

 போக்குவரத்து நெரிசலை சரி செய்ய ஜம்முகாஷ்மீர் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குளிர்சாதனக் கிடங்குகளில் ஆப்பிள்களை அனுப்ப வேண்டும் என்பதற்காக அரசு நிர்வாகம் செய்கிற சதி என்று விவசாயிகள் குற்றம் சுமத்துகிறார்கள்.

 மிகப் பிரம்மாண்டமான குளிர்சாதனக் கிடங்குகளை மோடியின் முதலாளி அதானி கட்டியுள்ளார் என்ற செய்தியை நினைவு படுத்திக் கொண்டு இந்த செய்தியை மறுபடியும் படியுங்கள்.

 காஷ்மீர் ஆப்பிள் விவசாயிகளின் கண்ணீரில் அதானியின் செல்வத்தை பெருக்கப் பார்க்கிறார்கள்.

 

பொன்னியின் செல்வனின் நினைவு நாள் இன்று

 



 நான் சோழர் கால பொன்னியின் செல்வனைச் சொல்லவில்லை. காவிரி உற்பத்தியாகும் கர்னாடக மாநிலத்தில் பிறந்து காவிரி நதி பாய்ந்து மண்ணில் பொன் விளையச் செய்த தஞ்சைத் தரணியில் அற்புதப் பணி செய்த அருமையான மனிதரைப் பற்றி நான் சொல்கிறேன்.

 அடிமை விலங்குகளால் பிணைக்கப்பட்டு சவுக்கடி, சாணிப்பால் போன்ற சித்திரவதைகளுக்கு உள்ளாகி நரக வாழ்வில் உழன்று கொண்டிருந்த கீழத் தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு விடிவெள்ளியாய் வந்து சேர்ந்தவரைப் பற்றி எழுதுகிறேன்.

 “அடித்தால் திருப்பி அடி” என்றும் “ஏண்டி என்றால் ஏண்டா என்று கேள்” என்று அவர்களுக்கு நம்பிக்கை அளித்தவர். அமைப்பாய் திரட்டியவர், போராட்டப்பாதைக்கு அழைத்துச் சென்றவர். செங்கொடியை உயரப் பறக்க வைத்தவர்.

 “நான் உத்தரவிட்டால் நூற்றுக்கணக்கான போலீஸார் உன்னை உடனே கைது செய்வார்கள் என்று மிரட்டிய அமைச்சரிடம்  “மிஸ்டர் பாஷ்யம், நான் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜே” என்று ஒரு முழக்கம் எழுப்பினால் ஆயிரக்கணக்கானவர்கள் இங்கே சேர்ந்து விடுவார்கள்” என்று எதிர்வினை ஆற்றியவர்.

 தஞ்சைத்தரணியின் ஏழை மக்களின் அடிமைத்தளையை அறுத்தெரிந்து, நிலப்பிரபுக்களின் கொட்டத்தை அடக்கிய மகத்தான தலைவர் தோழர் பி.சீனிவாசராவ் தானே இன்றைய காலத்தின் பொன்னியின் செல்வன்!

 

இன்று அவருடைய நினைவு நாள்.

 

தோழர் பி.சீனிவாசராவ் அவர்களுக்கு செவ்வணக்கம்.

 

Thursday, September 29, 2022

கல்கி பின்பு இறந்திருக்கலாம்.

 


1954 ல் கல்கி இறந்தார். 1956 ல் மணி ரத்னம் பிறந்தார். அவர் கல்கியின் மறு அவதாரம். அதனால்தான் அவர் பொன்னியின் செல்வன் நாவலை படம் எடுக்கிறார் என்று சொல்கிறது இந்த நிலைத்தகவல்.

 


ஐயா கல்கி அவர்களே, 1954 ல் இறப்பதற்கு பதிலாக மணி ரத்னம் பிறந்த பின் இறந்திருக்கலாமே! இந்த மறு அவதாரக் கொடுமைகளைக் கேட்காமல் நாங்கள் தப்பித்திருப்போமே!.

 இப்போதே இப்படி . . .

 நாளை பொன்னியின் செல்வன் வெளியான பின்பு என்ன மாதிரியான இம்சைகளை பார்க்கபோகிறோமோ . . .

Wednesday, September 28, 2022

அவர்களுக்கு எப்போது தடை?

 


பாபுலர் ஃப்ரண்ட் அமைப்பிற்கு ஐந்தாண்டுகள் தடை விதித்துள்ளது ஒன்றிய அரசு.

மோடியைக் கொல்ல திட்டமிட்டதாக அதற்காக கதை கட்ட தொடங்கியுள்ளனர். இந்த குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை சந்தேகிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசே நினைக்க வைக்கிறது.

அண்ணல் அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்ப்டே உட்பட பல மனித உரிமை செயற்பாட்டாளர்கள் UAPA சட்டத்தின் படி கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். மோடியை கொலை செய்ய திட்டமிட்டார்கள் என்பதுதான் இவர்கள் மீதான குற்றச்சாட்டு.

பிரதமரை கொலை செய்ய திட்டமிட்டவர்கள் மீது வழக்கு தொடுத்து அவர்களுக்கு தண்டனை வாங்கித் தந்தால்தானே மற்றவர்களுக்கு அது ஒரு எச்சரிக்கையாக இருக்கும்!

ஆனால் இன்று வரை அந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யவில்லை. ஒன்றிய அரசின் நோக்கம், அவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவதில்ல, சிறையி;ல் அடைத்து துன்புறுத்த வேண்டும் என்பதுதான். அதனால்தான் குற்றப்பத்திரிக்கை இன்னும் தாக்கல் செய்யவில்லை.

இதனால்தான் இந்த பிரச்சினையிலும் சந்தேகம் வருகிறது. சிறுபான்மை மக்களுக்கான ஒரு அமைப்பை தடை செய்து அவர்கள் மனதில் அச்சத்தை உருவாக்குவது மட்டுமே இத்தடையின் நோக்கம்.

நிற்க

தமிழ்நாட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பான வழக்கில் அந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீதுதான் தாக்குதல் என்று ஆட்டுக்காரன் துள்ளியதையும் மறந்து விடக் கூடாது.

இப்போது இரண்டு உண்மைகள் வெளியாகியுள்ளது.






கோவையிலும் திருவள்ளூரிலும் சங்கிகளின் கார்களை சங்கிகளே கொளுத்திக் கொண்டு இஸ்லாமிய அமைப்புக்களின் மீது பழி போட்டுள்ளனர். மதக் கலவரத்தை தூண்ட முயற்சித்த  ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஒன்றிய அரசு எப்போது தடை செய்யப் போகிறது.

 

அவர்கள் இந்து முன்னணிதானே! இந்து மக்கள் கட்சிதானே, எதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டுமென்று நீங்கள் கேட்கலாம்.

 

இந்து முன்னணி,

இந்து மக்கள் கட்சி,

விஸ்வ இந்து பரிஷத்,

பஜ்ரங் தள்,

ஸ்ரீராம் சேனா,

பாரதீய ஜனதா

 

என்று வெவ்வேறு பெயர்களில் இருந்தாலும் அவை ஆர்.எஸ்.எஸ் என்ற நச்சு மரத்தின் விஷக் கிளைகள்தான்.

 ஆகவேதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத்தான் தடை செய்ய வேண்டும்.

 

நீங்கள் நகர்ந்தால் எல்லாம்

 


*நீங்கள் நகர்ந்தால் எல்லாம் நகரும்!*

 

 _*சு வெங்கடேசன் எம். பி*_ 

########################

 

[ _மதுரையில் நடைபெற்ற தென் மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாநாட்டில் வரவேற்புக் குழு தலைவர் சு. வெங்கடேசன் ஆற்றிய உரை]_ 

_______________

 

உலக மயச் சூழலில் எவ்வாறு தொழிற்சங்கங்கள் செயல்பட வேண்டியுள்ளது? என்ற கேள்வி ஆழமாக விவாதிக்கப்பட வேண்டியுள்ளது

 

மதுரையில் பிட்டுக்கு சுமந்த கதையில் ஆண்டவனுக்கே பிரம்படி விழுந்தது. இன்று ஆள்பவர்கள் பொதுத்துறையை சீரழிக்கிறார்கள். போராட்டம் என்ற பிரம்பை தொழிலாளர் இயக்கம் கைகளில் எடுக்க வேண்டும். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்றுமே போராட்ட பிரம்பை கை நழுவ விடாத இயக்கம்

 

*வரலாற்று முரண்*

 

இந்த மாநாடு கூடுகிற காலம் இந்தியா 75 ஆண்டு விடுதலையை கொண்டாடுகிற நேரம். ஓர் இந்தியக் கனவை நமது விடுதலை இயக்கம் பிரசவித்தது. கல்வி, சுகாதாரம், வேலை, குடிமை உரிமை, வருமான பகிர்வு, பாலின நிகர் நிலை, சமூக நீதி, மக்கள் ஒற்றுமை, ஜனநாயகம், பொதுத் துறை எல்லாமே அக் கனவின் பல்வேறு கூறுகள். இக் கனவே வெகு மக்கள் எழுச்சியின் வேர்களாக அமைந்தன. இக் கனவே உயிரையே தியாகம் செய்த உன்னத மனிதர்கள் சுதந்திரப் பயிருக்கு ஊற்றிய நீராகவும் அமைந்தது. இன்று இந்த விழுமியங்கள் அனைத்துமே ஒரு சேர தாக்கப்படும் காலம். விடுதலைப் போருக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கிற பெரும் வரலாற்று முரணை நமது காலத்தில் காண்கிறோம். இதை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம் என்பதே தொழிற் சங்கங்களின் குவி கவனமாக அமைய வேண்டும்

 

நான் நாடாளுமன்றத்தை மூன்று ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். நாடாளுமன்றத்தில் சட்டங்கள் விவாதமின்றி நிறைவேறும் அவலம். நிலைக் குழுக்கள் சட்ட வரைவுகளை பரிசீலிக்கிற ஜனநாயகப் பண்பு அறவே கை கழுவப்பட்டுள்ள சோகம். சட்ட வரைவுகளின் ஆங்கில இந்தி வரைவுகளுக்கு இடையே கூட வித்தியாசம் உள்ளது. கேள்விகளை எழுப்பினால் அவை நீக்கம் என்று கரங்களில் எடுக்கப்படும் ஆயுதம். இச் சூழலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்! நாடாளுமன்றத்தின் உயிர் நாடாளுமன்றத்திற்கு வெளியே மக்கள் விழிப்பில் இருக்கிறது. மக்கள் கருத்தில் இருக்கிறது. மக்கள் திரட்டலில் உள்ளது. பொது இன்சூரன்ஸ் தேசிய மய (திருத்த) சட்டத்திற்கு எதிராக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நடத்திய கருத்து திரட்டல் ஒரு உதாரணம். நீங்கள் உருவாக்கிய சிறு தீப்பொறி நாடாளுமன்றத்தில் பெருந்தீயாக எழுந்தது. எனது குரலும் அதில் இருந்தது. எதிர்க் கட்சிகள் மத்தியில் ஏற்கெனவே இருந்த கோபம் நீங்கள் ஒரு பிரச்சினையை கூர் கவனத்திற்கு கொண்டு வந்தவுடன் ஒன்றுபட்ட எதிர் வினையாக வெளிப்பட்டது. மாநிலங்களவையில் கடந்த காலங்களில் நவீன தாராளமயத்தை ஆதரித்த கட்சிகள் கூட எதிர்ப்பு தெரிவித்தன. ஆகவே அரசாங்கம் விவாதங்களை தவிர்க்க முனைந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம். பிக்கள்தான் அவையில் இருந்து நீக்கப்பட்டனர். பொதுத் துறையை பாதுகாக்கிற போராட்டம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை எதிர்த்த போராட்டமாகவும் பரிணமித்தது

 

உங்களின் இந்த அனுபவம் இதர உழைப்பாளி மக்களின் அனுபவமாக மாற வேண்டும். நாடாளுமன்றத்திற்கு வெளியேயான பெருங் களம் சூடாக இருந்தால்தான் அது உள்ளே பிரதிபலிக்கும் என்ற அனுபவம் மக்களுக்கு கிடைக்க வேண்டாமா

 

*தலையாய கடமை என்ன?*

 

இந்த மாநாடு நடைபெறும் வேளையில் வெளியாகி இருக்கிற தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் அறிக்கை உங்கள் மனதில் ஆறாக் காயத்தை உருவாக்கி இருக்குமென்று நம்புகிறேன். இந்தியாவில் நடந்த மொத்த தற்கொலைகளில் 25 சதவீதம் அமைப்பு சாரா அத்தக்கூலி தொழிலாளர்களுடையது என்பது. "Organise the Unorganised" - அமைப்பு சார்ந்த தொழிலாளர்களின் கடமை, அமைப்பு சாரா தொழிலாளர்களை திரட்டுவது என்பதை எத்தனை மாநாடுகளில் பேசுகிறோம். அறிக்கைகளில் எழுதி வைக்கிறோம். ஆனால் களத்தில் நமது பங்கு என்ன? கொஞ்சமாவது நகர்ந்துள்ளோமா? 42000 தற்கொலைகள் தினக் கூலி தொழிலாளர்கள் மத்தியில் நிகழ்ந்து அவர்களின் உயிர்கள் பறி போயிருப்பது உங்கள் தூக்கத்தை தொலைக்கவில்லையா? உரிமையோடு கேட்கிறேன். தொழிற்சங்கங்களின் தலையீடு, பங்களிப்பு போதுமானதா? இது இந்தியத் தொழிற் சங்க இயக்கத்தின் அமைப்பு அக்கறை தேவைப்படும் இடம். தொழிற் சங்கங்களிடம் எதிர்பார்க்காமல் வேறு எவரிடம் எதிர்பார்க்க முடியும்?

 

விவசாயிகள் - தொழிலாளர் ஒற்றுமை இன்றைய முன்னுரிமை கடமையாகும். டெல்லி விவசாயிகள் போராட்டம் ஒரு திருப்பு முனை. தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தத்தை விவசாயிகள் அமைப்பு ஆதரித்ததும், விவசாயிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் குரல் தந்ததும் நல்ல துவக்கம். விவசாயிகள் டெல்லியை முற்றுகை இட்டு ஓராண்டு அமர்ந்து இருந்த போது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் நேரில் சென்று சகோதர ஆதரவை வெளிப்படுத்தியதும், நிதி ஆதரவு தந்ததும் நல்ல முன்னுதாரணம். இந்த இணைப்பு உடனடிக் கோரிக்கைகளை கடந்தது. அவை இன்னும் வலுப் பெற வேண்டும். மதுரையில் கிராமங்களுக்கு சைக்கிளில் வந்து விவசாய சங்க உறுப்பினர் பதிவுக்கு இன்சூரன்ஸ் ஊழியர்கள் 1970, 80 களில் உதவியதை கேள்விப்பட்டு இருக்கிறேன். இப்போதும் உங்களைப் போன்ற தொழிற் சங்கங்கள் முன்முயற்சி எடுக்க வேண்டும்.

 

1989 இல் தமிழகத்து தொழிற்சங்க இயக்கம், வேலையின்மை எதிர்ப்பு பிரசாரக் குழுவை (CCAU - Campaign Committee Against Unemployment) உருவாக்கி மாநிலம் தழுவிய பயணத்தை நடத்தியது. வேலையற்ற இளைஞர்களும் தொழிலாளர் படையின் அங்கம்தான். வேலை மறுக்கப்பட்டுள்ள அத்தொழிலாளர்கள் உடன் கை கோர்த்து 1989 அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துங்கள். நீங்கள் நகர்த்தினால் ஒட்டு மொத்த மத்திய தர ஊழியர்களும், அமைப்புகளும் நகர்வார்கள்

 

*கார்ப்பரேட் இந்துத்துவா கூட்டணி*

 

கார்ப்பரேட் இந்துத்துவா கூட்டணியை இன்று எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அரசு நிறுவனமான ஏர் இந்தியாவை டாடா கைவசப்படுத்தியதன் மூலம் இந்தியர்களின் வெளிநாடு பயண சந்தையை கல்ப் ஏர்வேஸ் இடம் இருந்து கைப்பற்ற முடியும் என்று பேசுகிறார்கள். எப்படி நுட்பமாக தனியார் மயத்தை மதவெறி நிகழ்ச்சி நிரலோடு இணைக்கிறார்கள் பாருங்கள். கல்ப் ஏர்வேஸ் என்றால் என்ன பிம்பம் மக்கள் மனதில் யோசித்து பாருங்கள்

 

கோவாவில் கட்சி தாவிய ஒரு முன்னாள் முதல்வர் "நான் கோயிலுக்கு சென்று கடவுளிடம் அனுமதி கேட்டேன், அவர் நினைத்ததை செய், முன்னேறு என்றார்" என்று கூறியுள்ளார். இதை விட மதத்தை யாரேனும் இழிவுபடுத்த இயலுமா

 

இதை எல்லாம் யார் பேசுவது. இந்துத்துவா வேறு இந்து மத நம்பிக்கைகள் வேறு என்பதை பேசுங்கள். மக்களிடம் போவது என்று முடிவெடுங்கள்

 

தொழிற்சங்க உரிமைகள் தாக்கப்படுகின்றன. ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. உலக மயத்தை எதிர்ப்பவர்களை திசை திருப்புவது என்கிற உத்தியை மட்டும் நம்பாமல் போராட்டங்களையே முடக்குவது என்றும் சிந்திக்கிறார்கள். இரு முனைத் தாக்குதலை இந்தியத் தொழிற் சங்க இயக்கம் எதிர் கொண்டு வருகிறது. ஓர் விரிந்த இயக்கத்தை உருவாக்குவதன் மூலம் காலா காலமாகப் போராடி பெற்ற உரிமைகளை பாதுகாக்க களம் காணுங்கள். உங்களின் களப் பிரவேசம் பல பகுதி தொழிலாளர்களையும் கொண்டு வந்து சேர்க்கும்

 

*மக்கள் கருத்தே மகத்தான ஆயுதம்*

 

எல்லாவற்றுக்கும் மேலாக அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை பாதுகாக்க நீங்கள் நடத்தும் போராட்டம். ஐந்தாவது, ஆறாவது தட்டு ஊர்களுக்கு கூட நான்கு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள்தானே செல்கின்றன! லாப நட்டக் கணக்கு பார்த்து இன்சூரன்ஸ் பாதுகாப்பு பற்றி சிந்திக்காத, யாருக்கும் மறுக்காத நிறுவனங்கள் உங்களுடையதுதானே. அரசின் மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட திட்டங்களை யார் கொண்டு போய் மக்களிடம் சேர்க்கிறார்கள்? அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை பாதுகாக்க நீங்கள் நடத்தும் போராட்டம் உங்கள் பொருளாதார பயன்களுக்கானது மட்டுமல்ல. தேசத்தின் சுய சார்பிற்கானது. மக்கள் நலனுக்கானது. மக்களிடம் செல்லுங்கள். பொதுத் துறை யாருக்கானது என்பதை பேசுங்கள். மக்கள் கருத்தை விட மகத்தான ஆயுதம் வேறு கிடையாது

 

உலக மய காலத்தில் "வலதுசாரி திருப்பம்" எல்லா வகை ஒடுக்குமுறைகளையும் ஒரு சேர ஏவுகிறது. அதற்கான எதிர் வினைகளும் பல முனைகளில் நிகழ வேண்டும். பொருளியல் ஒடுக்குமுறை எதிர்ப்பு மட்டுமின்றி பாலினம், சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும் உங்கள் குரல் கேட்க வேண்டும்.

 

நன்றி: *தீக்கதிர்* 26.09.2022