Showing posts with label தண்ணீர். Show all posts
Showing posts with label தண்ணீர். Show all posts

Thursday, June 20, 2019

ஏன் கேரளத் தண்ணி வேணாம் எடப்பாடி?




தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னையில் நிலவுகிற தண்ணீர் பஞ்சத்தினை சமாளிக்க தமிழகத்திற்கு உதவும் பொருட்டு தினசரி இருபது லட்சம் லிட்டர் தண்ணீரை ரயில் மூலம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு அனுப்ப கேரள அரசு முன் வந்துள்ளது.

தோழர் பினராயி விஜயனின் இந்த முன்மொழிவை கேரள முதல்வர் அலுவலகத்திலிருந்து தமிழக முதல்வர் அலுவலகத்தில் தெரிவித்து உள்ளனர். 

உங்கள் மாநில தண்ணீர் அவசியமில்லை என்று எங்கள் முதலமைச்சர் மறுத்து விட்டதாக நம் மாநில அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்?

ஏன் எடப்பாடி ஏன்?

கேரளாவிலிருந்து தண்ணீர் வந்தால் உமக்கு என்ன பிரச்சினை?

தண்ணீர் பஞ்சம் என்பது மாயை என்ற உமது அறிக்கை பொய்த்துப் போய் விடும் என்பதாலா?

கேரள மாநிலத்திலிருந்து தண்ணீர் பெற்றால் உங்க எஜமான் மோடி கோவித்துக் கொள்வார் என்பதாலா?

தண்ணீர் இல்லாமல் கழிவறைகள் பூட்டப்பட்ட அரசு மருத்துவ மனையில் படுத்துக் கொள்ளாமல் நாம்தான் அப்பல்லோவில் அட்மிட் ஆகியுள்ளோமே! கேரளத் தண்ணீர் நமக்கு தேவையில்லை என்ற அலட்சியமா?

நாடாளுமன்றத் தேர்தலில் நம்மை தோற்கடித்த மக்கள் தண்ணீருக்காக அலைந்து சாகட்டும் என்ற நல்லெண்ணமா?

ஏன் எடப்பாடி? ஏன்? 


Friday, June 22, 2018

கோவை - இன்னொரு பொலிவியா ?????



90 களின் இறுதியில் லத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவின் இரண்டாவது பெரிய நகரமான கோச்சாபாம்பா நகரத்தின் தண்ணீர் வினியோகம் "பெக்டெல்" என்ற பன்னாட்டு நிறுவனத்தின் துணை நிறுவனமான "அக்வாஸ் டெல் டுனாரி" என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கே இருந்த நதி கூட அவர்கள் வசம் சென்றது.

அவர்கள் தண்ணீரின் கட்டணத்தை உயர்த்திக் கொண்டே இருந்தனர். குடிதண்ணீர் மட்டுமல்லாது அனைத்து தேவைகளுக்கான தண்ணீரும் அவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

கிடைக்கிற ஊதியத்தில் பெரும்பகுதியை பெக்டெல் லிடமே கொட்டி அழ முடியாத சூழலில் மக்களின் போராட்டம் வெடித்தது. எடப்பாடி வகையறா போல போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட, போராட்டம் மேலும் சூடு பிடித்தது.

இறுதியாக "அக்வாஸ் டெல் டுனாரி" உடன் போடப் பட்டிருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

தண்ணீரை தனியார்மயமாக்கும் சதி முறியடிக்கப்பட்டு விட்டதால் அடுத்த படியாக காற்றை தனியார்மயமாக்கும் கொடுமைகள் எல்லாம் நடைபெறவில்லை.

பொலிவியாவில் பெக்டெலிடம் தண்ணீரை அடமானம் வைத்தது போல இப்போது கோவையில் குடிதண்ணீர் வினியோகத்தை "சூயஸ்" என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார்கள். 

வரும் முன் காப்பது நல்லது.
கோவை மக்கள் போராட்டத்தை உடனடியாக துவக்கிட வேண்டும். 

கோவை மௌனமாக இருந்தால் தமிழகம் முழுதும் இக்கொடுமை பரவும். 

பி.கு : பெக்டெல் எதிர்ப்புப் போராட்டத்தின் முன்னணிப் போராளி தோழர் இவா மொரேல்ஸ் பின்னர் அந்நாட்டின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இன்னும் அப்பொறுப்பில் தொடர்கிறார்.