Showing posts with label பிற்போக்குத்தனம். Show all posts
Showing posts with label பிற்போக்குத்தனம். Show all posts

Thursday, November 20, 2025

பத்திரிக்கையாளர் மன்றமா? பாஜக மன்றமா?

 


சில நாட்கள் முன்பாகத்தான் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தை பாராட்டியிருந்தேன். திரைக்கலைஞர் கௌரி கிஷனிடம் அநாகரீகமான நடந்து கொண்ட யூட்யூபரை கண்டித்தமைக்காக அந்த பாராட்டு. அந்த யூட்யூபரின் பெயரை குறிப்பிடாமல் இருந்தது தவறு என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

பத்திரிக்கையாளர் மன்றத்தின் நேற்றைய நடவடிக்கை கண்டிக்கத் தக்கது. கரூர் நெரிசல் மரணங்கள் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் வந்த போது பு.த பத்திரிக்கையாளர் சுப்பையாவிற்கும் யூட்யூபர் கரிகாலனுக்கும் இடையில் நடந்த சர்ச்சை வைரலானது.

அதிலே ஆணவத்துடன் நடந்து கொண்டது புதிய தலைமுறை சுப்பையாதான் என்பதை காணொளி பார்த்த அனைவருக்கும் தெரியும். கரிகாலன் ஆற்றியது எதிர்வினைதான். நான் சென்னை ப்ரஸ் க்ளப் மெம்பர், நீங்கள் மெம்பரா என்று கேட்டது எத்தனை பேருடைய உறக்கத்தை கெடுத்தது என்று தெரியவில்லை.

அந்த சர்ச்சை பாஜக- தவெக விற்கு இடையிலான ரகசிய கூட்டை அம்பலப்படுத்தியது. அதனுடைய விளைவோ என்னமோ இப்போது கரிகாலனை பத்திரிக்கையாளர் மன்றத்திலிருந்து நீக்கியுள்ளார்கள்.


இப்போதைய பொறுப்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற போது முற்போக்காளர்கள் நிறைந்த அவை அது என்று நம்பினேன். 

ஆனால் இப்போதுதான் தெரிகிறது.

புதிய தலைமுறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாஜக மன்றம் என்று . . .

Saturday, September 13, 2025

பெருமையில்லை து.ஜ, அசிங்கம்

 


மனிதனை மனிதன் சுமக்கும் பல்லக்குகளில் பவனி வருவது இழிவாக பார்க்கப்படும்  காலகட்டம் இது. 

ஏதோ ஒரு ஆதீனம் பல்லக்கில்தான் பட்டிணப் பிரவேசம் செய்வேன் என்று அடம் பிடித்ததையும் அதற்கு வக்காலத்து வாங்கிய ஆட்டுக்காரன் நானே பல்லக்கை தூக்கி வருவேன் என்று சொன்னதை எள்ளி நகையாடிய மாநிலம் தமிழ்நாடு.

சடலங்களை நான்கு  பேர் சுமப்பது என்பது கூட காலப்போக்கில் மிகவும் குறைந்து விட்டது. 

இப்படிப்பட்ட சூழலில் ஒரு காணொளியை பார்க்கையில் எரிச்சலாக இருந்தது.

அதிலிருந்து இரண்டு படங்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.



வேலூருக்கு அருகாமையில் உள்ள மகாதேவமலை என்ற இடத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இப்படிப்பட்ட தேர்ப்பவனியை, தங்களை மனிதர்கள் இழுத்துச் செல்வதை இந்தியாவின் இரண்டாம் குடிமகன் அனுமதிக்கலாமா?

அசிங்கமாக இருக்கிறது.

இவ்வளவு பிற்போக்குத்தனமான சிந்தனை கொண்டவருக்கு தமிழ்நாட்டு எம்.பிக்கள் ஓட்டு போடவில்லை என்று மோடி ஆதரவாளர்கள் ஒப்பாரி வேறு வைக்கிறார்கள். 

Saturday, October 21, 2023

பொட்டுக்கான புலம்பலின் பின்னே . .

 


கஜானா ஜ்வெல்லரியின் பொட்டு வைக்காத பெண்ணின் விளம்பரத்தைக் கண்டு புலம்பிய பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகரு எனும் சங்கி அடுத்து நல்லி விளம்பரத்தைப் பார்த்து புலம்பியுள்ளது.

அந்த ட்வீட்டில் சிலர் போட்ட கமெண்ட்தான் மேலே படமாக உள்ளது.

அது நக்கலுக்காக போடப்பட்டது.

ஆனால் இந்த சங்கி விதைப்பது ஒற்றைக் கலாச்சார சிந்தனையைத்தான். பெண் என்றால் பொட்டு வைத்திருக்க வேண்டும் என்பதை கட்டாயப் படுத்த விழைகிறான். பொட்டு இல்லாமல் இருப்பவர்கள் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், அவர்களை அடையாளப்படுத்தி விளம்பரம் கூடாது என்ற சிந்தனையை வெளிப்படுத்துகிறான்.விதவைகள் என்றால் பொட்டு வைக்கக்கூடாது என்ற சங்கிகளின் பிற்போக்குத்தனமான சிந்தனையையும் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு இந்திய ஜனாதிபதி அழைக்கப்படாததையும் இணைத்துப் பாருங்கள்.

"பொட்டு பொட்டு" என்று சேகர் புலம்புவதின் பின்னணி இந்த கீழ்த்தர எண்ணம்தான். 


Sunday, April 15, 2018

பொட்டு வைத்தால் பென்ஷன் கிடையாதாம். . .



அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்களுக்கான பென்ஷன் திட்டங்களில் பென்ஷன் பெறும் ஓய்வூதியர் இறந்து போனால் அவரது துணைவி அல்லது துணைவருக்கு குடும்ப பென்ஷன் வழங்கப்படும். 

தாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்று ஒவ்வொரு ஆண்டும் பென்ஷனர்கள் அளிக்கிற சான்றிதழோடு இந்த குடும்ப பென்ஷனர்கள் "தாங்கள் மறுமணம் செய்து கொள்ளவில்லை" என்ற சான்றிதழும் அளிக்க வேண்டும். இப்படி ஒரு விதியே கொடுமையாகத்தான்  தோன்றும். அதுவும் எழுபது, எண்பது வயது பெண்களும் கொடுப்பதும் அதற்கு நாம் சாட்சிக் கையெழுத்திடுவதும் அபத்தமாக இருக்கும். 

ஆனால் போர்ட் ட்ரஸ்ட் நிறுவனத்தில் நிகழ்ந்தது வேறு ஒரு கொடுமை!

துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் பென்ஷன் பெறும் 82 வயது ஓய்வூதியர் ஒருவர் இறந்து போய் விட்டார். அவருக்கான குடும்ப பென்ஷனை பெற 75 வயதான அவரது மனைவி விண்ணப்பம் அளிக்கையில் விண்ணப்பத்தில் இணைக்கப்பட்ட புகைப்படத்தில் பொட்டு வைத்திருந்ததால் அதனை ஏற்க அந்த பென்ஷன் அதிகாரி மறுத்துள்ளார்.

கணவனை இழந்தவர்கள் பொட்டோ, பூவோ வைத்திருக்க மாட்டார்கள். எனவே பொட்டு இல்லாமல் விபூதி வைத்துள்ள இன்னொரு புகைப்படத்தோடு வந்தால்தான் பென்ஷன் என்று கறாராக பேசியிருக்கிறார். 

கணவனை இழந்தவர்கள் பொட்டு, பூ, தாலி போன்ற அடையாளங்களை அகற்ற வேண்டிய அவசியமில்லை என்ற நிலை இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி வருகிறது.

அந்த பெண்மணியின் உறவுகள் கூட சொல்லத் துணியாத ஒன்றை பென்ஷனை சேங்ஷன் செய்யும் அதிகாரம் உள்ளதால் ஒரு பிற்போக்குப் பேர்வழி சொல்லியுள்ளான். அவனுக்கு மேலே உள்ள அதிகாரிகளும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்றே சொல்லியுள்ளார்கள்.

குடும்ப பென்ஷன் பெறுவதற்கு ஓய்வூதியரின் இறப்புச் சான்றிதழும்  வாரிசு என்று நியமித்திருந்தால் அது மட்டுமே போதுமானது.

அதை விடுத்து இப்படி பிற்போக்குத்தனமாக நடந்து கொண்ட அந்த அதிகாரி மீது போர்ட் ட்ரஸ்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இவ்விஷயத்தில் தலையிடும் என முக நூலில் அமைப்பின் அகில இந்திய துணைத்தலைவர் தோழர் உ.வாசுகி உறுதியளித்துள்ளார்.

அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை இப்படிப்பட்ட பிற்போக்குவாதிகளுக்கு தக்க பாடமாக அமையும். 

இறுதியாக ஒன்று சொல்லிட வேண்டும்.

இப்படிப்பட்ட பிற்போக்குத்தனங்களுக்கு எதிராக மீண்டும் பெரியார் இங்கே வேண்டும்.