Tuesday, April 30, 2013

பவுர்ணமி வந்தால் பாமக காரர்களின் பித்து அதிகமாகி விடுமோ?

PMK supporters hoist party flags atop Shore Temple during the party
conference on Thursday. Photo: ASI

மேலே உள்ள படத்தைப் பாருங்கள்.

மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலின் முக்கியத்துவமோ,
வரலாறோ, அதன் கலை நுட்பமோ எதுவும் தெரியாமல்
அதன் மீது ஏறி கொடி கட்டும் அதி புத்திசாலிகளைப்
பாருங்கள்.

இவர்களைச்  சொல்லி  குற்றமில்லை.

இவர்களை முட்டாளாகவே வைத்திருந்தால் பிழைப்பு
நடக்கும் என்றுள்ள மருத்துவர் ஐயாவைத்தான்
குறை சொல்ல முடியும்.

ஒரு வேளை 

பவுர்ணமி வந்தால் பாமக காரர்களின் பித்து அதிகமாகி விடுமோ?

Monday, April 29, 2013

நீங்களாவது கொஞ்சம் அறிவோடு பேசலாமே அன்புமணி ராமதாஸ் அவர்களே?

சின்னய்யா என்று அழைக்கப்படுகின்ற முன்னாள் மத்திய அமைச்சர்
டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு, 

சில வருடங்கள் முன்பு உங்களையும் அப்போதைய ரயில்வே
இணை அமைச்சர் திரு வேலுவையும் வேலூரில் ஒரு மனு அளிக்க
சந்தித்தோம்.

இன்சூரன்ஸ்துறையில் அன்னிய மூலதன வரம்பை உயர்த்தக்கூடாது,
எல்.ஐ.சி பங்கு விற்பனை கூடாது என்பது அந்த மனுவின் கோரிக்கை.
அப்போது நீங்கள் சொன்னது எனக்கு நினைவில் உள்ளது. " இந்த 
மசோதா குறித்த உங்கள் அச்சம் நியாயமானது. அமைச்சரவையில்
கூட விவாதம் வந்தது. நான் பேசாவிட்டாலும் கூட சில அமைச்சர்கள்
அவசியமில்லையே என்று சொன்னார்கள்.ஆனால் அரசுக்கு சில
நிர்ப்பந்தங்கள் இருக்கிறது என்று இறுதியில் பிரதமரே சொன்ன பிறகு
எங்களுக்கு ஏற்றுக் கொள்வதை தவிர வழியில்லை. எல்.ஐ.சி பங்கு
விற்பனை மட்டும் நடக்காது என்று கருதுகிறேன்"

பரவாயில்லையே, இவர் நேர்மையாக அமைச்சரவையில் நடந்ததை
வெளிப்படையாக சொல்கிறாரே என்று நாங்கள் பேசிக் கொண்டோம்.

ஆனால் மரக்காணம் கலவரம் தொடர்பாக நீங்கள் உதிர்த்துள்ள
வார்த்தைகள் மூலம் அந்த நேர்மையிலிருந்து விலகி சென்று 
விட்டீர்கள் என்பதை உணர்த்துகின்றது. தந்தைக்கேற்ற தனயன்
என்பதை நிரூபித்து விட்டீர்கள்.

இழப்பீடு தருவதற்காக தலித்களே தங்கள் வீடுகளை கொளுத்திக் கொண்டார்கள் என்ற உங்கள் வார்த்தையில் நேர்மை கிடையாது.
அது பற்றி நான் பேசப் போவதில்லை.

அது கொஞ்சமாவது அறிவுபூர்வமாக இருக்கிறதா என்று 
யோசித்தீர்களா?

என்றைக்காவது  இழப்பீடு என்பது இழப்பை ஈடு கட்டுவதாக
அமைந்துள்ளதா?

எந்த அரசாவது இழப்பை விட கூடுதலாக இழப்பீடு கொடுத்துள்ளதா?

இழப்பீடின் மூலம் இழந்த பொருட்களின் ஒரு பகுதியை வேண்டுமானால்
சரி செய்ய முடியும், ஆனால்  இழந்த உழைப்பை மீண்டும் பெற
முடியுமா?

தர்மபுரி கலவரத்தில் இழப்பும்  நீதிமன்றம் அளித்த இழப்பீடும்
ஒன்றா?

உங்கள் கட்சி ஆட்கள் தகராறு செய்யும்போதுதான் சரியாக
அவர்கள் தங்கள் வீட்டைக் கொளுத்திக் கொள்வார்களா?

இழப்பீடு கிடைக்கும் என்றால், அது லாபகரமாக இருக்கும்
என்றால் தமிழகமெங்கும் உள்ள மக்கள் தங்கள் வீட்டை
கொளுத்திக் கொண்டே இருப்பார்களே?

காப்பீடு செய்திருந்தால் கூட இழப்பை முழுமையாக
ஈடு செய்ய முடியாது என்கிற போது, அரசு இழப்பீடுக்காக
யாராவது  வீடுகளை கொளுத்திக் கொள்வார்களா?

எந்த லாஜிக்கும் இல்லாத வாதம் உங்களுடையது.

உண்மையை மறைப்பதற்கு, அரசியல் சந்தர்ப்பவாதத்திற்காக
 எந்த அளவிற்கும் தரம் தாழ தயாராக இருப்பவர் உங்கள்
தந்தை. 

நீங்களும் அது போல ஒரு சந்தர்ப்பவாதிதானோ?


Sunday, April 28, 2013

சன் டிவி யெல்லாம் மே தினம் கொண்டாடவில்லை என்று யார் அழுதார்கள்?

சன் டி.வி  மே தின  சிறப்பு நிகழ்ச்சிக்கான விளம்பரம் பார்த்து
நொந்து போனேன். 

மொக்கை காமெடி நிகழ்ச்சிகள், மானாட மயிலாட டைப்பில்
நடனங்கள், அருவாள் ஹரியின் திரைப்படம், ஐந்தறிவு 
உள்ளவரும் ஏற்றுக் கொள்ள முடியாத ஏழாம் அறிவு 
திரைப்படம் - இவைதான் மே தின சிறப்பு நிகழ்ச்சிகள்.

இவற்றுக்கும் மே தினத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

மே தினம் என்றால் என்ன என்று யாரும் தெரிந்து கொள்ளக்
கூடாது என்ற தெளிவான கருத்தோடுதான் இந்த நிகழ்ச்சிகளை
ஒளிபரப்பவுள்ளார்கள் போலும்.

எல்லா குப்பையையும் போடு, கல்லா கட்டு,
ஆனால் அதற்கு மே தினத்தை பயன்படுத்தாதே.

விஜய் டி.வி யும் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை
என்று நிகழ்ச்சிகள் போடுகின்றார்கள்.

மற்ற மகானுபாவன்கள்  என்ன செய்யப் போகின்றார்களோ?

 இவர்கள் எல்லாம் மே தினம் கொண்டாடவில்லை என்று யார் அழுதார்கள்?

Saturday, April 27, 2013

வாஷிங்டனில் போட்டியிடும் சிவகங்கைச் சீமான் சிதம்பரம்



 எங்களது தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர்
கே.சுவாமிநாதன் எழுதியுள்ள அற்புதமான கட்டுரை.
இதைப்படித்தால் ப.சி பதவியை ராஜினாமா செய்து
விட்டு ஓட வேண்டும். ஆனால் அந்த கோமகனுக்கோ
வெட்கம், மானம் ரோஷம் என்று எதுவுமே கிடையாதே

சிதம்பரத்திற்கு கிடைக்குமா தொகுதி! 



.சுவாமிநாதன் 


சிதம்பரம் அடுத்த முறை சிவகங்கையில் நிற்க மாட்டார், புதுச்சேரியை குறி வைக்கிறார்  என்ற செய்தி ஏற்கனவே வலம் வருகிறது. ஆனால் சிதம்பரம் போகிற போக்கைப் பார்த்தால் அவருக்கு பாதுகாப்பான தொகுதி இந்தியாவுக்குள் கிடைக்காது போல இருக்கிறது.



இந்திய நாட்டின் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்துகிற சட்ட வரைவு, நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும் என்று வாஷிங்டனில் உள்ள பீட்டர்சன் இன்ஸ்டிடியுட் ஆப் எகனாமிக்ஸில் ஆற்றிய உரையில் அறிவித்திருக்கிறார். இந்தியாவில் ஓர் அரசியல் கருத்தொற்றுமை ஏற்படாத முக்கியமான பொருளாதார முடிவை அந்நிய மண்ணில் அறிவிக்கிறோமே என்ற தார்மீக உறுத்தல் கொஞ்சமும் கூட அவரிடம் இல்லாதது புதிதல்ல. அதனால் நமக்கு ஒன்றும் ஆச்சர்யம் இல்லை.



விலை பேசும் விபரீதம் 



இன்சூரன்ஸ் சட்ட திருத்த வரைவு -2008 நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இவ்வளவு ஆண்டுகளாக அது நிறைவேறாததே அதன் மீது கருத்தொற்றுமை ஏற்படாததற்கும் , நாடாளுமன்றத்தில் போதிய எண்ணிக்கையைத் திரட்ட முடியாததற்கும் சாட்சியம் ஆகும். நாடாளுமன்றத்தின் நிதியமைச்சக நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அது அனுப்பப்பட்டது. அக்குழுவில் 34 உறுப்பினர்கள் உண்டு. ஆளும் கூட்டணி எம்.பி க்கள் 18 பேர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மட்டும் 12 பேர். அந்த நிலைக் குழு ஒருமித்த குரலில் அந்நிய முதலீடு உயர்வு கூடாது என பரிந்துரைத்துள்ளது. " மத்திய அரசாங்கம் எந்தவொரு ஆழமான, பரந்த ஆய்வும் இன்றி இன்சூரன்ஸ் சட்ட வரைவைக்" கொண்டு வந்திருப்பதாக அக்குழுவின் அறிக்கை தெரிவித்தது. இந்த அறிக்கை வெளிவந்து 16 மாதங்கள் உருண்டோடி விட்டன. இப் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கிய பின்னரும் கூட இதில் கருத்தொற்றுமை ஏற்பட்டு விட்டதாக சிதம்பரம் கூற முடியவில்லை. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு இந்த சட்ட வரைவை நிறைவேற்றுகிற  நம்பிக்கை எப்படி வருகிறது!



அவரே அந்த ரகசியத்தையும் போட்டு உடைக்கிறார். "இன்சூரன்ஸ் தொழிலகங்கள் இன்சூரன்ஸ் மசோதாவை எதிர்ப்பவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் கருத்தொற்றுமை ஏற்பட்டு விடும்" என்கிறார். ஏற்கனவே கார்பரேட்- அரசியல்வாதிகளின் கூட்டணி அடித்த ஊழல் கூத்துகளால் இந்திய மானம் உலக அரங்கில் காற்றில் பறக்கிறது

அரசியல் ரீதியாக ஓர் பொருளாதார முடிவை விளக்க வேண்டிய, மக்கள் மத்தியில் ஏற்பை உருவாக்க வேண்டிய ஜனநாயகம் பற்றியெல்லாம் இவருக்கு ஒன்றும் கவலை இல்லை.அந்த வேலையை கார்பரேட்களுக்கு அவுட் சோர்ஸ் செய்துவிட்டார்வால் மார்ட் ஏற்கனவே இந்தியாவில் சந்தை பிடிப்பதற்காக கோடி கோடியாய் லஞ்சம் கொடுத்துள்ளர்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதோ அடுத்த கதவை திறக்கிறார் சிதம்பரம். நானே வருகிறேன் என்று ராஜா சொன்ன பிறகும் அவரைக் கூப்பிட்டு கேட்காமல் நாடாளுமன்றக் குழு விசாரணைக் கோப்பை மூட முயற்சிப் ப்பவர்களிடம் வேறு என்ன நேர்மையை எதிர்பார்க்க முடியும்!





பூசணிக்காய் உண்மைகள் 



இன்சூரன்ஸ துறையில் அந்நிய முதலீட்டை அதிகரிப்பதற்காக சிதம்பரம் முன்வைத்த வாதங்கள் எல்லாம் இற்றுப் போய் பொல பொலவென்று உதிர்ந்து விழுந்துவிட்டன என்பதே அனுபவம். சிதம்பரமே 2013- பட்ஜெட்டில் என்ன அறிவித்திருக்கிறார் ? 10000 பேருக்கு மேல் மக்கள் தொகை உள்ள ஊர்களில் ஆயுள், பொது இன்சூரன்ஸ் அலுவலகங்கள் திறக்கப்படும் என்று புன்முறுவலோடு சொன்னார். இன்சூரன்ஸ் பரவலாக்கலுக்கு இன்சூரன்ஸ் சீர்திருத்தங்கள் வழிவகுக்கும் என்று சொல்லி வந்த சிதம்பரம் இந்த அலுவலகங்களைத் திறக்க வேண்டும் என்று டாட்டா, பிர்லா, அம்பானி, பஜாஜ் ஆகியோரோடு கைகோர்த்து இன்சூரன்ஸ் தொழில் செய்து வரும் எந்த பன்னாட்டு நிறுவனங்களிடமும் கேட்கவில்லை. அரசு நிறுவனங்களான எல்..சி, பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள்தான் புதிய கிளைகளை திறக்கும் என்று அறிவித்துள்ளார். இரட்டை நாக்கு எப்படியெல்லாம் அசைகின்றன பாருங்கள்.



தீவிர வாதத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் என்றால் தனியார்கள் போகமாட்டார்கள். வடகிழக்கு மாநிலங்களுக்கு போகமாட்டார்கள். நக்சல் நடமாட்டம் இருக்கிற சத்தீஸ்கருக்கு போக மாட்டர்கள். லாபம் கிடைக்காத சிற்றூர்களுக்கு போக மாட்டார்கள். அங்கேயெல்லாம் எல்..சி யும் , அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களும் போகவேண்டும். ஆனால் வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற தேசத்தில் ஒருமைப்பாட்டை பாதுகாக்கிற அரணை அந்நிய முதலீட்டு கோடாலியால்இடிப்பாராம்  சிதம்பரம்.



சமூகப் பொறுப்பு என்கிற சுமையை முதுகில் தாங்கவேண்டும் என்று பட்ஜெட்டில் அறிவித்துவிட்டு, எந்தப் பொறுப்பும் இல்லாத அந்நிய நிறுவனங்கள் சந்தையை பிடிக்க முதுகில்  தட்டிக் கொடுப்பேன் என்றால் உருப்படுமா



வக்கற்றவர்கள் எங்கே போவது!



இந்திய நாட்டில் இன்சூரன்ஸ் வணிகம் பெருக போட்டி வேண்டுமாம். கேட்டுக் கேட்டுப் புளித்து போன பொய் இது. எல்..சி யின் சராசரி ஆண்டு பிரிமிய வருமானம் ரூ 9000. தனியார் கம்பெனிகளில் இது ரூ 60000. என்ன அர்த்தம்? மாதம் ஆயுள் இன்சூரன்ஸ் சேமிப்பிற்காக ரூ 5000 வரை சராசரியாய் செலவழிக்க வக்குள்ளவர்கள் மட்டும்தான் தனியார் நிறுவனங்களின் வாசலில் காலடி எடுத்து வைக்க முடியும். டை கட்டாதவர்கள், கனத்த பை இல்லாதவர்கள் உள்ளே வரமுடியாது என்று போர்டு வைத்தாலும் ஆச்சரியம் இல்லை.



உலகிலேயே ஆயுள் இன்சூரன்ஸ் பரவலாக்கலில் தனிநபர் சராசரி வருமானத்தோடு பிரிமியத்தை ஒப்பிடுகையில் இந்தியாதான் முதல் இடம் என்று உலக பொருளாதார அமைப்பின் (  WORLD ECONOMIC FORUM )

அறிக்கை கூறுகிறது. பொது இன்சூரன்ஸ் பரவலாக்கலில் மூன்றாவது இடம் இந்தியாவுக்கு. இதற்கு யார் காரணம் ! அரசு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அல்லவா! இது மன்மோகன் சிங்கிற்கு தெரியாதா! சிதம்பரத்திற்கு தெரியாதா! மொத்த உள்நாட்டு உற்பத்தியையும், நிதிச் சேமிப்புகளையும் வளர்க்க வக்கற்ற பொருளாதாரப் பாதையை கடைப்பிடிக்கிற இவர்களுக்கு கொஞ்சமாவது மனச் சாட்சி நெளிய வேண்டாமா! உண்மையில் இவர்களின் யோக்கியதையை மீறிய சாதனையே  அரசு இன்சூரன்ஸ் நிறுவனங்களின் இன்சூரன்ஸ் பரவலாக்கல் சாதனை.  



தேசமையா.. தேசம்  



ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு எல்..சி யின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது! 11 வது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு ரூ 704151 கோடிகள் என்றால் இந்திய பொருளாதாரத்திற்கு ஆலங்கட்டி மழை பெய்த மாதிரி அல்லவா. எல்லா தனியார் நிறுவனங்களுக்கும் வந்து சேர்ந்த அந்நிய முதலீடு பத்தாண்டுகளில் ரூ 6813 தான் என்றால் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் அல்லவா. கண்ணை விற்று சித்திரத்தை, அதுவும் அலங்கோலத்தை யாராவது வாங்குவார்களா!



அந்நிய முதலீடு வந்தால் என்ன! பொதுத்துறை நிறுவனங்கள் போட்டியிட பயப்படுவது ஏன் ! என்று கேட்கிறார்கள். 23 தனியார் நிறுவனங்கள் வந்த பின்னரும் எல்..சி 74 சதவீத சந்தைப் பங்கை வாடிக்கையாளர் ஆதரவோடு தக்க வைத்திருக்கிறது. பயம் என்ன பயம். கேள்வி என்ன வென்றால் இது என்ன ஜல்லிக் கட்டா , மோதவிட்டு வேடிக்கை பார்க்க? மக்களுடைய சேமிப்பு ; சமூகப் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது உலகம் முழுவதும் தோல்வி அடைந்த நிறுவனங்களை அனுமதிக்கிற விபரீதம் எதற்காக! எல்..சி இன்றும் 99.86 சதவீத் உரிமங்களை ஒழுங்காக பாலிசி தாரர்களுக்கு தந்து வருகிறதே. வாஷிங்டன் போன சிதம்பரம் அங்கே இப்படி ஒழுங்காக செயல்படுகிற நிறுவனத்தை ஒன்றையாவது பார்த்தாரா! வேறு எந்த மேலை நாடுகளிலாவது இந்த "பன்னாட்டு கம்பெனி வக்கீல் " இது போன்ற நிறுவனத்தை பார்த்திருக்கிறாரா!



இந்த சட்ட வரைவு  பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்கு விற்பனைக்கும் வழிவகுக்கிறது. எனவே இவர்களின் நோக்கம் பொதுத்துறையை ஒழித்துக் கட்டுவதே. தேசத்தின் சுயசார்பிற்கு, சமூகப் பாதுகாப்பிற்கு பங்களிப்பு செய்யும் பொதுத்துறை உருக் குலைந்தால் தேசம் , அதன் நலன் என்ன ஆகும்?



தொகுதி மாறலாம்!



அமெரிக்கர்கள் சிரித்து இருப்பார்கள். ஏனெனில் அங்கேயே சுதந்திரச் சந்தை சாயம் வெளுத்து போய்விட்ட காலம் இது. அமெரிக்க சுதேசி சந்தை சட்டத்தை  (BUY AMERICA  ACT ) பயன்படுத்தி வெளிநாட்டு தொழிலாளரை, அவுட்சோர்சிங்கை ஒபாமா அரசு தடுத்து வரும் நேரம் இது. இந்திய தொழிலாளர் வருகையை கட்டுப்படுத்த புதிய விசா நடைமுறைகள் விவாதிக்கப்படுகிற நேரமும் இது.



அங்கே போய் " மஞ்சள் அரைத்தாயா... மாமனா மச்சானா " என்றெல்லாம் வீர வசனம் பேசவேண்டும் என்று சிதம்பரத்திடம் நாம் எதிர்பார்க்கவில்லை. சுதந்திரச் சந்தையை இப்படி சிதைக்கலாமா என்று முணுமுணுத்தாவது இருக்க வேண்டுமா! மூலதனம் உலகம் முழுக்க வருகிற சுதந்திரம் மட்டும் வேண்டுமாம்; ஆனால் மூன்றாம் உலக நாடுகளின் தொழிலாளர் உள்ளே வரக் கூடாதாம்.



சிதம்பரத்தின் அறிவிப்பை எதிர்த்து அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மக்கள் கருத்தை திரட்டி வருகிறது. குமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கிராமம் கிராமமாக நடைபயணம் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மனித சங்கிலிகள், தீப்பந்த ஊர்வலம், தர்னாக்கள், மக்கள் சந்திப்பு இயக்கங்கள், அறிவார்ந்தோர் அரசுக்கு கடிதங்கள் என பன்முக எதிர்ப்புகள் வெளிப்பட்டு வருகின்றன



சிவகங்கை, புதுச்சேரி.. இப்படி எங்கே இந்தியாவிற்குள் தொகுதி மாறினாலும் ரிஸ்க்தான் சிதம்பரத்திற்கு. வாஷிங்டனில் போய் நின்றால் வாக்குகள் கிடைக்கலாம்.