Showing posts with label போலி எண்கவுண்டர் மரணங்கள். Show all posts
Showing posts with label போலி எண்கவுண்டர் மரணங்கள். Show all posts

Saturday, May 21, 2022

போலீஸ் செய்த கொலைகள்தான்

 

ஹைதராபாத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு கால்நடை மருத்துவர் கூட்டுப் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்பட்டதையும் அந்த குற்றவாளிகள் அதே இடத்தில் போலீஸால் எண்கவுண்டர் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்டதையும் அதை மக்கள் கொண்டாடியதையும் கொஞ்சம் நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

"போலீஸ் கையிலிருந்த பிஸ்டலை பிடுங்கி குற்றவாளிகள் அவர்களை சுட்டார்கள், அதனால் போலீஸ் தற்காப்புக்காக இருவரை சுட்டார்கள். குற்றவாளிகள் சரமாரியாக சுட்டதில்தான் அவர்கள் கூட்டாளிகள் இருவரும் இறந்தார்கள்"

இதுதான் போலீஸின் வாதம்.

அதை உச்ச நீதிமன்றம் நியமித்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் கமிஷன் நிராகரித்து விட்டது. 

அனுபவமில்லாத யாரும் அந்த பிஸ்டலை பயன்படுத்த முடியாது. ஆகவே குற்றவாளிகள் பிஸ்டலைப் பறித்து  ஒரு நொடிப் பொழுதில் அதனை கற்றுக் கொண்டு சுட்டார்கள் என்பதெல்லாம் கட்டுக்கதை என்று சொல்லி விட்டது விசாரணைக் கமிஷன்.

அதே போல் மீதமுள்ள இரண்டு பேர் உடலில் இருந்ததும் பிஸ்டலின் தோட்டாக்கள் அல்ல, போலீஸ் பயன்படுத்திய ஏ.கே 47 துப்பாக்கிகளின் தோட்டாக்கள் என்பதும் நிரூபணமாகி விட்டது.

எனவே இந்த போலி எண்கவுண்டர் மரணங்களுக்காக உச்ச நீதிமன்றம் அவர்கள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என்று சொல்லி தெலுங்கானா உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை வாங்கித்தர இயலாத கையாலாகாதவர்கள் கண்டுபிடித்த குறுக்கு வழிதான் போலி எண்கவுண்டர்கள். அதை கொண்டாடுவது சரியல்ல என்று அன்று எழுதியதை இன்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.

அப்போது எழுதிய பதிவு இங்கே மீண்டும் . . .

எண்கவுண்டர்களை கொண்டாடும் முன்பு




ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியை பாலியல் கொடுமை செய்து கொடூரமாக எரித்துக் கொன்ற கொலையாளிகள் இன்று அதே இடத்தில் எண்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்கள் காட்டுமிராண்டிகள், அவர்கள் செய்த குற்றத்திற்கு அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்கப் பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அந்த மரண தண்டனையை அளிக்கும் அதிகாரத்தை காவல்துறையே கையில் எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்வியை அவ்வளவு சுலபமாக புறக்கணித்துச் செல்ல முடியாது.

இந்த பதிவை மிகுந்த சிந்தனைக்குப் பிறகே எழுதுகிறேன். அப்படி சிந்திக்க வேண்டிய அவசியத்தை அந்த எண்கவுண்டர் மரணங்களை கொண்டாடுகிற மன நிலையில் பலர் இருப்பதுதான் அளித்தது.

அந்த எண்கவுண்டர் நிஜமானதுதானா அல்லது போலியா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

எண்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று ஊடகங்கள் அந்த காவல்துறை அதிகாரியை பாராட்டுகிற போதே அது திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை உணர்த்துகிறது.

பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அது முறையான வழியில் நீதிமன்ற தீர்ப்பு மூலமே வழங்கப்பட வேண்டும் என்பதையும் இணைத்தே வலியுறுத்துகிறேன்.

இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்து விட்டதே என்று மக்கள் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இந்த எண்கவுண்டர் மூலம் காவல்துறை தன் மீது எழுந்த விமர்சனங்களை அழகாக அடக்கி விட்டு நாயகர்களாக மாறி விட்டது.

காவல்துறை என்ன செய்திருக்க வேண்டும்?

குற்றவாளிகளை கைது செய்து விட்டார்கள். உடனடியாக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் முன் அவர்களை நிறுத்தி அதிகபட்ச தண்டனை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். விரைவு நீதிமன்றத்தில் வழக்கை தொடுத்திருக்கலாம். 

காவல்துறை சட்டரீதியான நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்கு பதிலாக சுலபமான தீர்வை நாடியுள்ளது என்பதுதான் யதார்த்தம். இதன் மூலம் சட்டத்தை மதிக்காத முதல் அமைப்பாகவும் காவல்துறையே திகழ்கிறது.

சட்டத்தின் தண்டனையை வாங்கித் தர முடியாத காவல்துறையின் கையாலாகத தனம் எண்கவுண்டர் என்பதை இப்போது உணர்ச்சிமயப் பட்ட நிலையில் அதை கொண்டாடுபவர்கள் யோசிப்பார்களா என்று தெரியவில்லை.

நீதிமன்றத்தின் அதிகாரத்தை காவல்துறை ஆக்கிரமிப்பதை கொண்டாடுவது எதிர்காலத்தில் எப்படிப்பட்ட சூழலை உருவாக்கும் என்பதை கணிப்பதெல்லாம் அவ்வளவு சுலபமல்ல.

இன்று ஹைதராபாத்தில் குற்றவாளிகளை துலைத்த தோட்டாக்கள், உத்திரப்பிரதேசத்தில் பாலியல் கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணை எரித்துக் கொலை முயற்சி செய்த பாஜக புள்ளி மீதும் 

பொள்ளாச்சி அயோக்கியர்கள் மீதும் 

ஆசிபாவை கொன்ற படுபாவிகள் மீதும்

பாயுமா?

தோட்டாக்களுக்கும் வர்க்கமும் அரசியலும் உண்டு என்பதை நாம் மறந்து விடக்கூடாது. 



மேலே ஒரு பட்டியல் உள்ளது. அரசு இயந்திரம் அவர்களையும் எண்கவுண்டர் செய்ய முன்வருமானால் எண்கவுண்டரை ஆதரிப்பது பற்றி யோசிக்கலாம்.

Sunday, July 12, 2020

உண்மைகளை எண்கவுண்டரில் புதைத்தாயிற்றா?


உ.பி யில் எட்டு போலீஸ்காரர்களை கொன்ற விகாஸ் துபேயை போலி எண்கவுண்டரில் போட்டுத் தள்ளி விட்டார்கள். விகாஸ் துபே இறக்க வேண்டிய மனிதன் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது, ஆனால் அது நீதிமன்றம் மூலமாகத்தான் நிகழ்ந்திருக்க வேண்டுமே தவிர போலி எண்கவுண்டர் போன்ற குறுக்கு வழி மூலமாக அல்ல.

எட்டு போலீஸ்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை படித்த உடனேயே விகாஸ் துபேயை நிச்சயமாக கைது செய்து நீதிமன்றம் முன்பு நிறுத்த மாட்டார்கள், அவனை கைது செய்ய முயன்ற போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் செத்து விட்டான் என்றுதான் முடிப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால் பாவம் உபி காவல்துறைக்கு கற்பனை வளம் குறைவு போல. கைது செய்து அழைத்து வரும் போது ஜீப் கவிழ்ந்ததாகவும் அப்போது அவன் தப்பிக்கையில் ஒரு போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியை கைப்பற்றி சுட முயற்சிக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் ஒரு பலவீனமான கதையை கட்டியுள்ளார்கள்.

இந்த போலி எண்கவுண்டரில் இறந்து போனது விகாஸ் துபே மட்டுமல்ல.

அவனை வளர்த்து விட்ட காவல்துறை அதிகாரிகள்?
அவனுக்கு அரணாக இருந்த அரசியல் தலைவர்கள்?
அவனுடைய நிழலுக தொடர்புகள் யார்?
யாரோடெல்லாம் இப்போது அவனுக்கு வணிகத் தொடர்பு உள்ளது?
அவன் யாருக்கு பினாமி?
அவனுக்கு யார் பினாமி?

இப்படி ஏராளமான கேள்விகளுக்கான விடைகளும் அவனின் மரணத்தோடு சேர்ந்து புதைந்து விட்டது.

இப்போது அவன் தொடர்புடைய அத்தனை பேரும் நிம்மதியாக  இருப்பார்கள்.

மீண்டும் ஒரு முறை அழுத்தமாக சொல்கிறேன்.

சட்டப்படியான தண்டனை வாங்கித் தர துப்பற்ற,  கையாலாகாதவர்களின் ஆயுதமே போலி எண்கவுண்டர். 

Monday, December 9, 2019

போலி எண்கவுண்டர் - கோழைகளின் ஆயுதம்


மூன்று வருடங்களுக்கு முன்பு எழுதிய பதிவு இது. யதேச்சையாக இன்று கண்ணில் பட்டது.

இன்றைய சூழலுக்கும் பொருந்தும் என்பதால் அதனை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன். 

தலைப்பில் மட்டும் "போலி"யை சேர்த்து "துப்பில்லாத" நீக்கியுள்ளேன்.

படத்தில் உள்ளது செம்மரக்கட்டைகளை வெட்டச் சென்ற தமிழகத் தொழிலாளர்களை ஆந்திர போலீஸ் சுட்டுக் கொன்ற படம். 

அப்போதும் தோட்டாக்கள் தொழிலாளர்கள் மீது மட்டும் பாய்ந்ததே தவிர, அவர்களை மரத்தை வெட்டச் செய்து கோடிக்கணக்கில் கல்லா கட்டிய பெரிய மனிதர்கள் மீதல்ல என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்

என்கவுன்டர் – துப்பில்லாத கோழைகளின் ஆயுதம்.





என்கவுன்டர் கலாச்சாரத்தைப் போற்றி ஒரு அறிவார்ந்த பெருமகனார் சில நாட்கள் முன்பு எழுதியிருந்தார். அப்போதே எதிர்வினையாற்ற நினைத்தேன். இப்போதுதான் அதற்கான அவகாசம் கிடைத்தது.

என்கவுன்டர் என்பதைப்பற்றி ஒரு தவறான புரிதல் இருக்கிறது. எது என்கவுன்டர் என்று தெரியாமலேயே அதை துதிக்கும் மனநிலையும் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.

என்கவுன்டர் என்றால் என்ன பொருள் என்று அகராதி சொல்கிறது?

A minor short-term fight
A hostile disagreement face-to-face
A casual meeting with a person of thing
A casual or unexpected convergence

மேலே கொடுக்கப்பட்ட நான்கு பொருட்களில் கடைசி இரண்டு ரத்தம் சம்பந்தப்படாதது. ஆகவே அவற்றை நாம் கண்டு கொள்ள வேண்டாம்.

குறுகிய காலம் மட்டுமே நீடிக்கும் சண்டை, நேருக்கு நேராக ஒரு பகைமையான சூழலில் சந்தித்துக் கொள்வது ஆகியவையே என்கவுன்டர். பகைமையான சூழலில் சந்தித்துக் கொள்வது சண்டைக்கு இட்டுச் செல்லும் வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் சமீப கால வரலாற்றில் என்கவுன்டர் என நமக்கு காவல்துறை, ஊடகம் சொல்லியிருக்கும் சம்பவங்கள் என்ன?

வெங்கடேசப் பண்ணையார் மரணம்,
அயோத்திக்குப்பம் வீரமணி மரணம்,
சந்தனக்கடத்தல் வீரப்பன் மரணம்,
திருப்பூரிலோ, ஈரோட்டிலோ ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்திய காமுகன் மரணம்,
அல் உமா அமைப்பின் இமாம் அலி மரணம்,
வங்கிக் கொள்ளயர்கள் என வர்ணிக்கப்பட்ட வட நாட்டவர்கள் மரணம்.
திருப்பதி காட்டில் ஆந்திர போலீசால் கொல்லப்பட்ட தமிழ்நாட்டு கூலித் தொழிலாளர்கள்.

கொஞ்சம் அகில இந்திய அளவில் சென்றால்

மோடியின் செல்வாக்கு சரிந்த நேரத்தில் அதை தக்க வைக்க அவருக்கு கொலை மிரட்டல் இருப்பதாக காண்பிக்கப்பட்ட இஷ்ரத் ஜஹான் மரணம்.

ராணுவத்தால் அடிக்கடி காஷ்மீரில் கணக்கு காட்டப்படும் மரணங்கள்

சர்வதேச அளவில் பார்த்தால் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட சம்பவம்.

இந்த மரணங்கள் எல்லாம் நேருக்கு நேராக மோதியதால் நிகழ்ந்தனவா? இங்கேயெல்லாம் நிஜமாகவே என்கவுன்டர் நடந்துதான் மரணங்கள் சம்பவித்ததா? அதனை சம்பந்தப்பட்டவர்களின் மனசாட்சி ஒப்புக்கொள்ளுமா? இவை எல்லாமே போலி என்கவுன்டர்கள். என்கவுன்டர் என்று கணக்கு காண்பித்து காவல்துறை நிகழ்த்திய கொலைகள். அரசு பயங்கரவாதத்தின் வெளிப்பாடு.

சரி எது நிஜமான என்கவுன்டர்?

மகாபாரதக் கதையில் குருஷேத்திரப் போரில் “துவந்த யுத்தம்” என்ற வார்த்தை அடிக்கடி வரும். சமமான இருவர் நேருக்கு நேர் மோதுவதைத்தான் “துவந்த யுத்தம்” என்பார்கள். என்கவுன்டர் என்பதும் அதுதான்.

இங்கே என்கவுன்டர் என்று சொல்லப்படுவதெல்லாம் வெறும் போலி என்கவுன்டர் மட்டுமே. பின்னாளில் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக அவன் தப்பிக்கப் பார்த்தான், கத்தியால் குத்த வந்தான், அரிவாளால் வெட்ட வந்தான். துப்பாக்கியைத் தூக்கினான் என்று சொல்லி சும்மானாச்சுக்கும் பிளேடில் ஒரு கீறல் போட்டுக் கொண்டு சீன் போடுவார்கள்.

ஏன் போலி என்கவுன்டர்?

காவல் துறையின் வேலை என்ன? ஒரு குற்றம் நடந்தால் அதைச் செய்தது யார் என்று கண்டுபிடித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து பின்பு விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து தக்க சாட்சியங்களை கோர்ட் முன் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும். தண்டனை வழங்குவதற்கான உரிமையை நீதி மன்றத்துக்குத்தான் அரசியல் சாசனம் அளித்துள்ளதே தவிர காவல் துறைக்கு அல்ல. குற்றத்தை செய்தது யார் என்பதை சட்டத்தின்படி நிரூபிக்க வேண்டிய பொறுப்பு போலீசுக்கு உண்டு.

அப்படி நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கித் தருவதற்குப் பதிலாக காவல்துறை கடைபிடிக்கும் குறுக்கு வழிதான் போலி என்கவுன்டர். தகுந்த சாட்சியங்கள் கிடைக்கவில்லை என்றாலோ, சட்ட ரீதியாக தண்டனை கிடைக்க வாய்ப்பில்லை என்று இவர்கள் நினைத்தாலோ,  எங்கோ ஒட்டை  இருக்கிறது என்றுதான் அர்த்தம். அந்த ஓட்டையை அடைப்பதற்குப் பதிலாக, சிரத்தையெடுத்து வழக்கு நடத்துவதற்குப் பதிலாக குறுக்கு வழியில் போய் விடுகிறார்கள். சில சமயங்களீல் மக்களின் கோபத்தை திசை திருப்பவும் கூட போலி என்கவுன்டர்கள் கை கொடுக்கின்றன.

குற்றவாளிகளை கொலை செய்ய முடிகிற போலீசிற்கு அவர்களை கைது செய்ய முடியாதா? வழக்கு நடந்த முடியாதா? அப்படி இயலவில்லை என்றால் நம்முடைய சட்டம் அவ்வளவு பலவீனமாக உள்ளதா? இல்லை காவல்துறைக்கு அதற்கான திறன் கிடையாதா? அதிகாரத்தை கையில் வைத்துள்ள காவல்துறை, அரசாங்கத்தை விட குற்றவாளிகள் சக்தி மிக்கவர்களா? புத்திசாலிகளா?

சட்டத்தின் வாயிலாக ஒரு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர காவல்துறையால் முடியும், அது நேர்மையோடும் பொறுமையோடும் செயல்பட்டால். ஆனால் பைலை மூடினால் போதும் என்று வேகமாகவும் அலட்சியமாகவும் வழக்கை தயார் செய்கிற போது இயல்பாகவே தோற்றுப் போய்விடுகிறார்கள்.

தன்னுடைய பணியை ஒழுங்காக செய்ய முடியாத, அதற்கு தயாராக இல்லாத, திராணி இல்லாத ஆட்கள்தான் போலி என்கவுன்டர்  என்ற நடைமுறையை பிரயோகம் செய்கின்றனர். இதில் கொஞ்சமும் வீரம் கிடையாது. மாறாக முழுக்க முழுக்க கோழைத்தனம்தான்

அப்படிப்பட்ட போலி என்கவுன்டர்களை போற்றுவதென்பது போலி என்கவுன்டரை விட அபாயகரமானது.

மனித உரிமை ஆர்வலர்கள் என் மீது பாயப் போகிறார்கள் என்ற பெருமிதத்தோடுத்தான் அந்த கட்டுரை தொடங்குகிறது. தவறான ஒரு விஷயத்தை ஆதரிப்பதில் ஆணவத்தையும் பெருமிதத்தையும் வெளிப்படுத்தும் போக்கு இருக்கிறதே, அந்த ஜெயலலிதா பாணி மேலும் அபாயம் மட்டுமல்ல, அசிங்கமும் கூட.