Showing posts with label அண்ணல் அம்பேத்கர். Show all posts
Showing posts with label அண்ணல் அம்பேத்கர். Show all posts

Monday, April 14, 2025

அண்ணல் அம்பேத்கரும் அடுத்த தேர்தலும்

 


இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மக்கான் முனையில் இருந்த சிலைக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாலை அணிவிக்க சென்ற போது பார்த்த காட்சிகள் சுவாரஸ்யமானது.

அங்கே சென்ற போது ஒரே காவிமயம். முதல் முறையாக பாஜக  ஆட்கள் அங்கே  கூடியிருந்தார்கள். கொடிகள் மட்டும் இருந்தால் அவர்கள் யார் என்று தெரியாது என்ற நினைப்போ என்னமோ, பிஜேபி என்று அச்சிடப் பட்ட துண்டுகளை அணிந்திருந்தார்கள். காத்திருந்தார்கள், காத்திருந்தார்கள், காத்துக் கொண்டே இருந்தார்கள்.

அதிமுகவின் சார்பில் வேலூர் மேயராக இருந்து, எங்கள் சங்க மாநாட்டிற்கு மொட்டைக்கடிதத்திற்கு பயந்து டிமிக்கி கொடுத்து, 2024 ல் சிதம்பரம் மக்களவைத் தேர்தலில் தோற்றுப் போன கார்த்தியாயணி அம்மையாருக்காக அவர்கள் காத்திருந்தார்கள்.  அந்த அம்மையார் வந்து மாலை அணிவித்த பின்பு போட்டோ ஷூட் நடத்தி விட்டு ஒரு வீர உரை வேறு ஆற்றினார்.

மோடியின் கட்சியல்லவா! மோடியைப் போலவே பொய்யாகவே அள்ளி விட்டார். அண்ணல் அம்பேத்கருக்கு மோடிதான் நாடாளுமன்றத்தில் சிலை வைத்தார் என்று சொன்னாரே ஒரு கதை, அப்படியே ஆடிப் போய் விட்டேன். நாடாளுமன்றத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கர் சிலையை பின் பக்கத்தில் மாற்றி வைத்து சிறுமை செய்து விட்டு என்ன பேச்சு இது!

அடுத்த போட்டோ ஷூட் த.வெ,க தம்பிகளுடையதுதான். அவர்கள் வாயிலிருந்து ஒரு முழக்கம் கூட வரவில்லை. பெரும்பாலும் சின்ன வயது பையன்கள், பெண்கள்.  ட்ரோன் வைத்தெல்லாம் அவர்கள் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்கள்.  அவர்களில் ஒரு மூத்த பையன் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை போட்டதும் ஒரே விசில் சத்தம். திரையில் விஜய் தோன்றியதும் அடிக்கும் விசிலை இங்கேயும் அடித்து விட்டார்கள். நல்ல வேளை பேப்பரெல்லாம் கிழித்துப் போடவில்லை.

டி.டி.வி தினகரன் கோஷ்டியிலிருந்து கூட ஆறேழு பேர் வந்து மாலை போட்டு விட்டு சென்றார்கள்.

அதிமுகவிலிருந்து கூட சிலர் வந்திருந்தார்கள். இவர்கள் இன்று மாலை போட்ட  அதிமுகவின் மூன்றாவது கோஷ்டி என்று மூத்த தோழர் ஸ்ரீதர் சொன்னார்.

தேமுதிக, மக்கள் நீதி மய்யம் கட்சியெல்லாம் வேறு வந்திருந்தார்கள்.

திமுகவில் இந்த வருடம் அமைச்சர் துரை முருகன், எம்.பி கதிர் ஆனந்த், மற்றும் லோக்கல் தலைவர்கள் வந்திருந்தார்கள். போன சட்டசபை தேர்தலுக்கு முன்பாக துரை முருகன் வந்திருந்தார். அப்போது அவர் காரிலேயே அமர்ந்து மாலையை தொட்டுக் கொடுத்தார். இந்த வருடம் சிலை வரைக்கும் நடந்து வந்தார். அவரை அப்படியே தூக்கிக் கொண்டு போவார்களோ என்று பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். நல்ல வேளை அப்படியெல்லாம் அவரை படுத்தவில்லை.

அதென்ன இந்த வருடம் அண்ணல் அம்பேத்கர் மீது அப்படியென்ன இத்தனை கட்சிகளுக்கு திடீர் பாசம்?

எல்லாம் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் வருவதுதான் . . .

அடுத்த வருடம் வாக்குப்பதிவு முடியவில்லையென்றால் வருவார்கள். இல்லையென்றால் . . .

பிகு : மேலே உள்ள அண்ணல் அம்பேத்கரின் ஓவியத்தை வரைந்தது தோழர் ரவி பாலேட். 

Thursday, January 30, 2025

தமிழ் இந்து வெட்டிய "தகப்பன்சாமி"

 



எங்கள் தஞ்சைக் கோட்டத்தோழரும் தமுஎகச துணைப் பொதுச்செயலாளருமான தோழர் களப்பிரன் எழுதிய கட்டுரையை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

நேற்றைய தமிழ் இந்து வெளியிட்ட கட்டுரையில் வெட்டப்பட்ட பகுதிகளை ப்ரௌன் நிறத்தில் கொடுத்துள்ளேன்.

சங் பரிவாரம் பற்றிய பயமோ, கரிசனமோ, சில முக்கியமான பகுதிகள் வெட்டப்பட்டுள்ளது.

நவம்பர் 14 ம் தேதியன்று ஜவஹர்லால் நேரு பற்றிய கட்டுரையை வெளியிட மறுத்த அனுபவம் தோழர் களப்பிரனுக்கு நேர்ந்துள்ளது. இந்த கட்டுரை பிரசுரமானதற்கு அதிலே மகாத்மா காந்தி குறித்த விமர்சனங்களும் உள்ளது கூட காரணமாக இருக்கலாம்.

ஆனாலும் கூட அண்ணல் அம்பேத்கரை மகாத்மா காந்தியின் தகப்பன்சாமி என்று சொல்லும் வரி நீக்கப்பட்டுள்ளது. தலைப்பிம் கூட மாற்றப்பட்டு விட்டது. ஒருவேளை இதுவும் ஒரு வகை தீண்டாமையோ.

*அம்பேத்கர் எனும் தகப்பன்சாமி*























- களப்பிரன் Kalapiran Kalam
(நன்றி: இந்து தமிழ் திசை 30.01.2025)

இன்று வெளிவந்துள்ள கட்டுரையின் முழு வடிவம்

காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நாளில் அம்பேத்கர் குறித்து ஏன் பேசவேண்டும்? தன் வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை காந்தியடிகளுடன் மாறுபட்ட கருத்துக்கொண்டிருந்த ஒருவர் குறித்து இந்நாளில் பேச என்ன இருக்கிறது? காந்தியடிகளை மகாத்மா என்று ஏற்றுக்கொள்ளாதவர் அம்பேத்கர். காந்தியடிகளும் அம்பேத்கர் கருத்துக்கு எதிராக தனது இதழ்களில் தொடர்ந்து பதில் எழுதிக்கொண்டே இருந்தார். இப்படி இவர்களுக்குள் இருந்த பல முரண்பாடுகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் காந்தியடிகள் வாழ்க்கையில் நடைபெற்ற மிக முக்கியமான மனமாற்றங்களுக்கு அம்பேத்கர் எந்த அளவிற்கு தாக்கம் செழுத்தினார் என்று பார்த்தோமானால், இவர்களுக்குள் இருந்தது பகை முரண் அல்ல என்பது நன்றாகத் தெரியும்.

*தீண்டாமைக்கு எதிரான தலைவர்*
1948 ஜனவரி 30ல் காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முன்பாக அவரைக் படுகொலை செய்ய ஏழு முறை முயற்சிகள் நடைபெற்றுள்ளது. அந்த ஏழு முயற்சிகளும் காந்தியடிகளுக்கும் அம்பேத்கருக்கும் நடைபெற்ற பூனா ஒப்பந்த உரையாடலுக்குப் பின்பே நடைபெற்றது. காந்தியடிகள் ஆப்ரிக்காவில் இருந்த காலத்திலிருந்தே தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்துவந்தவர் தான். தன் மனைவி கஸ்தூரிபாயை கொண்டு ஒரு ஒடுக்கப்பட்டவரின் மலச்சட்டியை சுமக்கச்சொல்லும் அளவிற்கு தீண்டாமைக்கு எதிராக சொந்த வாழ்வில் இருந்தவர் தான். 1915ல் இந்தியா வந்த பிறகு அகமதாபாத்தில் அவர் தொடங்கிய ஆசிரமத்தில் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த ஒரு குடும்பத்தை தங்கவைத்தார். அதற்காக காந்தியடிகளை வைணவப் பிரிவினர் ஊரை விட்டே ஒதுக்கி வைத்தனர். அவர் ஆசிரமத்திற்கு நிதி கொடுத்தவர்கள் தங்கள் நிதியை நிறுத்திக்கொண்டனர். ஆனாலும் காந்தியடிகள் தன் ஆசிரமத்தை தொடர்ந்து நடத்தினார்.

”தீண்டாமை ஒரு பாவகரமான செயல். அதைப் பின்பற்றுகிற நீங்கள் எல்லாம் இந்து மதத்தின் ஜெனரல் டயர்கள்” என்றும், “நாம் ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெறப் போராடுகிறோம். பெரும்பான்மை மக்களைச் சமமானவர்களாக நடத்தாமல் தீண்டாமைக் கொடுமையால் பிரித்து வைத்திருக்கும் வரை நமக்கு சுயராஜ்ஜியம் சாத்தியமே இல்லை” என்றும் 1920களிலேயே அதுவும் காங்கிரஸ் மாநாடுகளில் நின்று கொண்டு கடுமையாக பேசியவர் தான் காந்தியடிகள். ஆனாலும் சாதிய அமைப்பு குறித்தும், இந்துமத புனிதம் குறித்தும் காந்தியடிகளுக்கு இருந்த பார்வை மிகப்பழமையானவை. அப்போதெல்லாம் காந்தியடிகளின் இக்கருத்துக்கு எதிராக யாரும் வீதியில் இறங்கி போராடவில்லை.

*கிளம்பிய எதிர்ப்பு*
1932 பூனா ஒப்பந்தத்தை ஒட்டியும் அதற்கு பின்பும் அம்பேத்கருடன் நடைபெற்ற உரையாடல்கள் காந்தியடிகளிடம் பெரும் மனமாற்றத்தை ஏற்படுத்தியது. அதுவரை தீண்டாமைக்கு எதிரான கருத்துக்கள் இவரின் தனிப்பட்ட கருத்துக்களாகவே பார்க்கப்பட்டது. அம்பேத்கருடனான உரையாடலுக்குப் பின் அது ”ஹரிஜன இயக்கம்” என்று தேசிய இயக்கத்தின் வேலைத் திட்டமாக மாறியது. தீண்டாமைக்கு எதிராக காந்தியடிகள் தொடர் சுற்றுப்பயணம் செய்யத் தொடங்கி அது சூராவளியாக வீசத் தொடங்கியவுடன், அவருக்கு எதிராக இந்துமகா சபையினரின் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம், மலத்தை எடுத்து அவர் மீது வீசுதல் என்று எதிர் இயக்கத்தை தொடங்கினார்கள். முதல் முறையாக இந்தியாவில் காந்தியடிகளுக்கு எதிரான இயக்கம் தீவிரமடைந்தது அப்போது தான். அதன் உச்சமாக 1934 ஜுன் 25ல் புனாவில் அவர் சென்று கொண்டிருந்த கார் மீது குண்டு வீசி, அவரை கொலை செய்யும் முதல் முயற்சியை தொடங்கி வைத்தார்கள். அம்பேத்கரை காந்தியடிகள் சந்தித்து உரையாடாமல் இருந்திருந்தால் இந்த முதல் கொலை முயற்சியே நடந்திருக்காது.

ஆனாலும் காந்தியடிகளின் தீண்டாமைக்கு எதிரான இயக்கம் சுனக்கமில்லாமல் தீவிரமடைந்தது. கோவில் நுழைவுப் போராட்டம், தலித் அல்லாதோர் தலித்துகளை சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே அவர்களை ஆசிர்வதிப்பது என்று அவர் பணி இன்னும் வேகமெடுத்தது. ”இந்து மதத்தின் புனிதத்தை நீங்கள் கெடுக்கலாமா?” என்று காந்தியடிகளை நோக்கி வீசப்பட்ட கேள்விகளுக்கு “என்னுடைய செயலால் இந்து மதம் அழிந்தால் அழியட்டும். நான் கவலைப்படவில்லை. நான் இந்து மதத்தை காப்பாற்ற வரவில்லை. இந்து மதத்தின் முகத்தை மாற்றவே விரும்புகிறேன்” என்று கடுமையான பதிலைளித்தார். அவர் பேச்சின் சுடு தாங்காமல், “காந்தியையும் அவரைப் பின்பற்றுகிறவர்களையும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்து இல்லை என்று குறிக்க வேண்டும்” என்று ஆங்கில அரசுக்கு கடிதம் எழுதினார்கள் அப்போதைய மடாதிபதிகள். இதன் தொடர்ச்சியாக காந்தியை கொலை செய்த அதே நாதுராம் கோட்சே 1944 மே மாதத்தில் புனே அருகே உள்ள பஞ்சாக்னி என்ற இடத்தில் காந்தியடிகள் மீது கத்தியால் குத்தி இரண்டாம் கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

*இவ்வாறு நடைபெற்ற தொடர் கொலை முயற்சிகளுக்கு, காந்தியடிகள் இந்துமத சனாதனிகளின் கருத்துக்களுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டதே காரணமாகும். ஒரு முறை காந்தியடிகள், “கொலை முயற்சியிலிருந்து எனது உயிர் ஏழு முறை காப்பாற்றப்பட்டிருக்கிறது. நான் அவ்வளவு சீக்கிரம் இறந்து விட மாட்டேன். 125 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வேன்” என்று கூறினார். அதற்கு பதிலாக நாதுராம் கோட்சே தான் நடத்தி வந்த ”அக்ரனி” இதழில் “அதுவரை யார் உங்களை உயிருடன் விட்டுவைக்கப் போகிறார்கள் பார்ப்போம்” என்று வன்மத்தோடு பதில் எழுதினார். அதன் பிறகே 1948 ஜனவரி 30ல் அதே கோட்சேவால் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த அளவிற்கு காந்தியடிகளுக்கும் சனாதானிகளுக்கும் இடையே தீராப்பகையை தொடங்கிவைத்தது அம்பேத்கருடனான காந்தியடிகளின் உரையாடல்களே.*

ஆனாலும் காந்தியடிகளின் தீண்டாமை ஒழிப்புப் பணிகளை அம்பேத்கர் முழுவதும் அங்கீகரிக்கவில்லை. பல நேரங்களில் கடிந்தே சொல்லியுள்ளார். ”காந்தி ஒரு ஆச்சாரமான இந்து தான். இவரால் தீண்டாமை ஒழிக்கப்படாது. அமெரிக்காவில் கருப்பினத்தவர்களுக்காகப் போராடிய கேரிசன் போலல்ல காந்தி” என்றே விமர்சித்தார். ஆனால் மறுமுனையில் காந்தியடிகளோ, “டாக்டர் அம்பேத்கரின் விமர்சனத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. என் மீது துப்புவதற்கு கூட அவருக்கு உரிமை உண்டு. அனைத்து உயர் சாதி இந்துக்களும் தீண்டத்தகாதவர்களை நடத்துவது பாவம். நம் மீது காறி உமிழ்வதற்கு அவர்களுக்கு முழு உரிமை உண்டு. அதை செய்தால் நான் ஏற்றுக்கொள்வேன்” என்று பதிலளிக்கிறார். ஆனால் இவ்வளவு கணிவான பதிலை தன்னை எதிர்க்கும் சனாதனிகளுக்கு எதிராக காந்தியடிகள் ஒருபோதும் சொன்னதில்லை.

*காந்தி – அம்பேத்கர் உறவு*

இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு அம்பேத்கரை ஜின்னா தன் நாட்டிற்கு அழைத்தார். காரணம் அம்பேத்கர் 1946ல் அன்றைய வங்காள மாகனத்திலிருந்தே தேர்வு செய்யப்பட்டார். அது பாகிஸ்தான் வசமானது. ஆனால் காந்தியடிகள் இதில் தலையிட்டு அம்பேத்கரை மும்பை மாகாணத்திலிருந்து மீண்டும் தேர்வு செய்ய வலியுறுத்தினார். அதோடு அவரை இந்தியாவின் முதல் அமைச்சரவையில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதையும் தனது விருப்பமாக முன்வைத்தார். சனாதானிகளிடம் இருந்த பகை முரண் போல் ஒரு நாளும் காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையே இருந்த முரண்கள் பகை கொண்டதாக இருந்ததில்லை.

காந்தியடிகளைப் பொறுத்த வரையில் இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் அன்றைக்கு இருந்த நேரு, நேதாஜி, அம்பேத்கர், பிசி ஜோசி என்ற எல்லோருமே அவரின் பிள்ளை வயது உடையவர்களே. அதனால் ஒரு தந்தையின் முறுக்கோடே அவர் எல்லோரிடமும் நடந்துகொண்டார். தான் எடுத்த முடிவில் ஒருநாளும் அவர் பின்வாங்கியது கிடையாது. சில பிள்ளைகள் அவர் பேச்சை கேட்கும். சில பிள்ளைகள் அவரோடு முரண்பட்டு நிற்கும். ஆனாலும் அவர் தனது முடிவை முரண்படும் பிள்ளைக்காக மாற்றிக் கொண்டதேயில்லை. அதற்காக வருத்தப்பட்டதுமில்லை. ஆனால் ஒரே ஒரு பிள்ளை அவரின் மனசாட்சியை தூங்கவிடமால் செய்தது. அந்தப் பிள்ளை அண்ணல் அம்பேத்கர். அந்தப் பிள்ளைக்காகவே அவர் பல நேரங்களில் மனம் மாறினார். நம்மூரில் தந்தைக்கு அறிவுரை சொல்லும் பிள்ளைக்கு தகப்பன் சாமி என்ற பெயர் உண்டு. காந்தியடிகள் வாழ்வில் அவருக்கான தகப்பன் சாமி அண்ணல் அம்பேத்கர் தான்.

Sunday, December 22, 2024

நல்லா மதிக்கிறீங்கடா அண்ணல் அம்பேத்கரை!

 


பில்லா ரங்கா இரிமினல் கூட்டாளிகளில் இளைய கூட்டாளி அமித்ஷா, அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்தி பேசியதற்கு முட்டுக் கொடுக்கும் பெரிய கூட்டாளி மோடி, தாங்கள் அண்ணல் அம்பேத்கரை மிகவும் மதிப்பதாக கூவிக் கொண்டே இருக்கிறார்.

அவர்கள் மதிக்கிற லட்சணம் என்ன என்பதை மக்களவை சபாநாயகருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் எழுதிய கடிதம் அம்பலப் படுத்துகிறது.

இந்திய அரசியல் சாசனத்தின் 75 வது ஆண்டுக்காக வெளியிட்ட காலண்டரிலேயே அவர் படத்தை வெளியிடப் பிடிக்காத நீங்களா அவரை மதிக்கிறீர்கள்.

கடுப்படிக்கும் காமெடியை நிறுத்தவும் மோடி





இந்திய அரசமைப்பு சட்டத்தின் 75 ஆவது ஆண்டை கொண்டாடும் விதமாக மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள சிறப்பு காலண்டரில் காந்தி மற்றும் அம்பேத்கரின் படமோ பெயரோ இல்லை.
இது வரலாற்றைத் திரிக்கும் திட்டமிட்ட செயலாகும்.
இந்த காலண்டர்கள் திரும்பப்பெற வேண்டும்.
இந்த செயலுக்காக மக்களவை செயலகம் மன்னிப்பு கோர வேண்டும். இது குறித்து மக்களவை தலைவருக்கு நான் எழுதியுள்ள கடிதம்…

மாண்புமிகு ஓம் பிர்லா
மக்களவை சபாநாயகர் அவர்கள்.
வணக்கம்.
நேற்றைய தினம் மக்களவை செயலகத்திலிருந்து 2025 ஆம் ஆண்டுக்கான மாதாந்திர நாட்காட்டி உங்களின் கடிதத்துடன் எங்களுக்கு அனுப்பிவைக்கப் பட்டது.
இந்திய அரசமைப்பு சட்டத்தின் 75 ஆவது ஆண்டை கொண்டாடுவதன் வெளிப்பாடாகவும், அரசியல் சட்டத்தின் வரலாற்றுப் பயணத்தை நினைவு கூறும் விதமாகவும் இந்த மாதாந்திர நாட்காட்டி உருவாக்கப்பட்டுள்ளதாக நீங்கள் எழுதியுள்ளீர்கள்.
ஆனால் நீங்கள் அனுப்பிவைத்துள்ள மாதாந்திர நாட்காட்டி பெரும் அதிர்ச்சியை தருவதாக உள்ளது.
இந்திய அரசியல் சட்ட வரலாற்றுப் பயணத்தை நினைவு கூறும் இந்த நாட்காட்டியில் தேசத்தந்தை அண்ணல் காந்தியாரின் படமோ, அரசியல் சட்ட வரைவுக்குழுவின் தலைவர் அண்ணல் அம்பேத்கரின் படமோ இல்லை.
இந்த இருபெரும் ஆளுமைகளின் பங்களிப்பை மறைக்க ஒவ்வொரு நாளும் ஒன்றிய அரசு முயற்சி செய்து வருகிறது.
நாடாளுமன்ற கட்டிடத்தின் முன்புறமிருந்த அண்ணல் காந்தியார், அண்ணல் அம்பேத்கர் இருவரின் சிலையையும் அகற்றி நாடாளுமன்ற கட்டிடத்தின் பின் புறம் கொண்டுபோய் வைத்துள்ளீர்கள்.
இப்பொழுது இந்திய அரசியல் சட்டத்தின் 75 ஆவது ஆண்டை கொண்டாடுவதன் அடையாளமாக சிறப்பு மாதாந்திர நாட்காட்டியை வெளியிட்டு அதில் இரு பெரும்
தலைவர்களின் படங்களோ, பெயர்களோ இல்லாமல் அச்சிட்டுள்ளீர்கள்.
இந்த காலெண்டரில் அரசியல் சாசனத்தை வரைந்த ஓவியர்கள், கையெழுத்து பிரதியாளர்கள் படங்களும் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. அவர்களின் பங்களிப்பு போற்றத்தக்கது, அங்கீகரிக்கப்பட வேண்டியது. ஆனால் அரசியல் சாசனத்தின் வரைவு குழு தலைவராக இருந்து பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே அதற்கு வடிவம் தந்த அண்ணல் அம்பேத்கரின் பெயர், படம் எப்படி விடுபட முடியும்?
இந்திய விடுதலைப் போராட்டத்தை ஓர் வெகுமக்கள் இயக்கமாக மாற்றிய தேசத்தந்தை காந்தியாரின் பெயரும் படமும் எப்படி விடுபட முடியும்? இது வரலாற்றை திரிக்கும் திட்டமிட்ட செயலாகும்; நவீன இந்தியாவை உருவாக்குவதில் இவ்விரு பேராளுமைகள் நல்கிய அரும் பங்களிப்பை அவமதிக்கும் செயலாகும்.
ஏற்கனவே அண்ணல் அம்பேத்கர் பற்றி மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் கோடானு கோடி மக்களின் மனதை புண்படுத்தி உள்ளது. தற்போது இந்த காலண்டர் மேலும் மக்கள் உணர்வுகளை ரணமாக்க கூடியதாகும் என அஞ்சுகிறேன். பெரும் காயத்தை மக்கள் மனதில் இது உருவாக்கும்.
உங்களின் இந்த செயல் இந்திய அரசியல் சாசன வரலாற்றின் உருவாக்கத்தை மேன்மைப் படுத்துவதாக இல்லை. மாறாக உங்களின் எண்ணம் அதற்கு நேர் எதிராக செயல் பட்டிருக்கிறது.
ஆகவே இந்த காலண்டரை திரும்பப்பெற்று தேசத்தந்தை காந்தியார், அண்ணல் அம்பேத்கர் ஆகிய இரு ஆளுமைகளுக்கும் உரிய இடம் தருகிற புதிய காலண்டரை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
சு. வெங்கடேசன் எம் பி.

Wednesday, December 18, 2024

மோடி, மோடி என்றால் எங்கே போவார்கள் அமித்து?



அசுத்தத்தை நீண்ட நாட்கள் ஒளித்து வைக்க முடியாது. நாற்றம் ஒரு நாள் வெளியே வந்து காட்டிக் கொடுத்து விடும். அண்ணல் அம்பேத்கரையும் தங்களவராக கைப்பற்றிக் கொள்ள சங்கிகள் நாடகமாடினாலும் அவர் மீது அவர்களுக்கு மரியாதை கிடையாது என்பது உலகறிந்த உண்மை.

பாபர் மசூதியை இடிக்க அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான டிசம்பர் ஆறை தேர்ந்தெடுத்தது,

அண்ணல் அம்பேத்கர் புத்த மத்திற்கு தழுவுகையில் அறிவித்த 22 பிரகடனங்களை அவர்கள் ஆட்சி செய்த மாநிலங்களின் பாடப்புத்தகங்ககளில் இருந்து நீக்கியது.

“பொய்யான கடவுள்களை வழிபடுவது” (Worshipping of false gods) என்று அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்தி அருண் ஷோரி எழுதிய நூலை வெளியிட்டது, பின் அவரையே மத்திய மந்திரியாக்கியது.

ஆகியவை அவர் மீதான வெறுப்பிற்கு உதாரணம்.

உள்ளுக்குள் ஒளித்து வைத்திருந்த வெறுப்பை அமித்ஷா  இப்போது வெளிப்படுத்தி விட்டார்.  அண்ணல் அம்பேத்கர் மீதான வெறுப்பும் எரிச்சலும்தான் அவரை அப்படி பேச வைத்துள்ளது.

சங்கிகள் அண்ணல் அம்பேகரை மதிக்கிறார்கள் என்று சொல்லி வந்த கட்டுக்கதை அம்பலமானது நல்லதுதான்.

அது சரி அமித்து, அம்பேத்கர், அம்பேத்கர் என்று  சொல்வதற்கு பதிலாக கடவுள் பெயரை உச்சரித்தால் ஏழு ஜன்மத்துக்கு சொர்க்கத்திற்கு போகலாம் என்று சொன்னீர்களே, கடவுளுக்கு பதிலாக மோடி, மோடி என்று உச்சரித்தால் இந்த ஜென்மத்தில் எங்கே போகலாம்?

அதற்கான பதிலை நானே சொல்கிறேன்.

மோடி, மோடி என ஜால்ரா அடித்தால் நீங்கள் ஆட்சியில் இருக்கும் வரை நாடாளுமன்றம், சட்டமன்றம், ராஜ்பவன் என இப்படி இங்கே வேண்டுமானாலும் செல்லலாம்.

ஆனால் ஆட்சி போன பின் அத்தனை பேருக்குமான இடம் சிறைச்சாலைதான்.

ஆமாம். நீங்கள் அத்தனை பேரும் அவ்வளவு பெரிய கிரிமினல்கள்.

பிகு: நாங்கள் அம்பேத்கரை மதிக்கிறோம் என்று சொன்ன மோடி, அண்ணல் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவும் போது அறிவித்த 22 பிரகடனங்களில் எத்தனை பிரகடனங்களை ஏற்றுக் கொள்கிறார் என்பதை வெளிப்படையாக அறிவிப்பாரா?



மேலே உள்ளவைதான் அந்த பிரகடனங்கள்.


Friday, December 6, 2024

வாரணாசி, சம்பல், அடுத்து ஆஜ்மீர் தர்கா


 


வாரணாசி ஞானவாபி மசூதிக்குள் கோயில் ஒளிந்து  உள்ளது, ஆய்வு நடத்த வேண்டும் என்று விஷ்ணு சர்மா என்ற ஒருவர் வழக்கு தொடுக்க, பணி ஓய்வுக்குப் பிந்தைய பணிக்காக காத்திருந்த மாவட்ட நீதிபதி ஒருவர் “அப்படியே ஆகட்டும்” என்று  தீர்ப்பு எழுதி ஓய்வு பெற்ற மறுநாளே புதிய பதவியில் போய் ஒட்டிக் கொண்டா.

 

அதே உ.பி யில் சம்பல் என்ற நகரத்தில் அதே நபர் அங்கேயுள்ள 700 ஆண்டு பழமையான மசூதிக்குக் கீழே கோயில் உள்ளது என்று வழக்கு தொடுக்க அங்கேயும் ஒரு நீதிபதி  “ஆஹா, அவர் சொன்னபடியே செய்து விடுங்கள்” என்று ஆணையிட அதன் பின் நடந்த நிகழ்வுகள், எதிர்ப்புக்கள், போலீஸ் துப்பாக்கிச் சூடு என நான்கு இஸ்லாமிய வாலிபர்கள் உயிரிழந்தனர்.

 

இப்போது அதே விஷ்ணு சர்மா  இன்னொரு வழக்கை தொடுத்துள்ளார். மன நிலை பாதிக்கப்பட்டவரிடம் சிக்கிக் கொள்கிற வடிவேலு, “இதே வேலையாதான் அலையறானா?” என்பதைப் போல  இதே வேலையாகத்தான் அந்த மனிதன் செயல்படுகிறான் அல்லது செயல்பட வைக்கிறார்கள்.

 

இந்தியாவில் இஸ்லாமியர்களின் மிக முக்கியமான புனிதத்தலம் ஆஜ்மீர் தர்கா. க்வாஜா மொய்னுதீன் ஹசன் சிஸ்டி என்ற இஸ்லாமிய குருவை கடக்கம் செய்த இடம் இது.  கிட்டத்தட்ட எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தர்கா அது.

 

அன்றைய அரசர்கள் தொடங்கி இன்றைய அமைச்சர்கள் வரை இந்த தர்காவிற்கு வந்து காணிக்கை செய்யாத தலைவர்கள் கிடையாது. இதனை விரிவு படுத்த நிதியளித்தது பரோடாவின் மன்னர், இவர் ஒரு இந்து.

 

ரா.கி.ரங்கராஜன் எழுதிய வாளின் முத்தம் (என்றுதான் நினைக்கிறேன்) நாவலில் க்வாஜா மொய்னுதீன் ஹசன் சிஸ்டியின் பெருமைகளை நன்றாக விவரித்திருப்பார்.

 

பெனாசிர் பூட்டோ, நவாஸ் ஷெரீப், ஜெனரல் முஷரப் போன்ற பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல பாரக் ஒபாமா கூட வந்துள்ளார். ஏன் இஸ்லாமிய வெறுப்பின் அடையாளமான மோடி கூட இங்கே வந்து காணிக்கை செலுத்தி விட்டு சென்றுள்ளார்.

 

ஆஜ்மீர் தர்காவை வைத்து அரசியல் செய்வது, ஆய்வு, கீய்வு என்றெல்லாம் செல்வது போண்ற வேலைகளால் இந்தியாவின் மானம் உலக அரங்கில் கப்பலேறும்.

 

டிசம்பர் 21 அன்று வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. அந்த நீதிபதி என்ன செய்வார் என்று பார்ப்போம்.

 

முக்கியமான பின் குறிப்பு : இந்த பதிவை இன்றுதான் எழுத வேண்டும் என்று காத்திருந்தேன். இன்றைய நாள் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள். ஆனால் டிசம்பர் ஆறு என்றால் மக்கள் மனதில் முதலில் நினைவுக்கு வருவது பாபர் மசூதி இடிக்கப்பட்ட கருப்பு நாள் என்பதுதான். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை பின்னுக்குத் தள்ளவே சங்கிகள் மசூதியை இடிக்க இந்நாளை தீர்மானித்தார்கள். ஒரு மசூதியை இடிக்கத் துணிந்தவர்கள் மற்ற மசூதிகளையும் இடிக்கத்தான் விரும்புவார்கள். அதுதான் அவர்களின் அரசியல். இந்தியாவின் மானம் கப்பலேறுவதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. 

Tuesday, November 26, 2024

இந்தியா “மதச்சார்பற்ற, சோஷலிச” க்குடியரசுதான்.

 


நேற்று உச்ச நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை அளித்துள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பிலிருந்து “மதச்சார்பற்ற, சோஷலிச” என்பதை அகற்ற வேண்டும் என்று சுனா சாமி தொடுத்த  வழக்கில் “அதெல்லாம் முடியாது போடா” என்று உச்ச நீதிமன்றம் சொல்லி விட்டது.

அனைத்து மதங்களையும் சமமாக கருத வேண்டும் என்பதால் மதச்சார்பு என்பது பொருத்தமானதே என்று விளக்கமளித்து விட்டார்கள்.

சோஷலிசம் என்றால் அது இடதுசாரி பொருளாதரமோ இல்லை வலதுசாரி பொருளாதாரமோ  கிடையாது. மக்கள் நல அரசு என்று பொருள்.

அதனால் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பில் “மதச்சார்பற்ற, சோஷலிஸ”  என்ற வார்த்தைகள் தொடரும்     என்று சொன்ன நீதிபதிகள் நாற்பத்தி ஐந்துவ் வருடங்களுக்கு பிறகு வழக்கு தொடுப்பதே உள் நோக்கம் கொண்டது என சுனாசாமியையும் கண்டித்துள்ளனர்.

அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என்ற வெறியை மனதுக்குள் வைத்துக் கொண்டு, அரசியலமைப்பு தினம் எனும் நாடகம் நடத்தும் மோடி வகையறாக்களுக்கு சரியான சவுக்கடிதான் இந்த தீர்ப்பு.

Friday, June 23, 2023

இதை செய்து விட்டு உள்ளே போ

 



லண்டனில் அண்ணல் அம்பேத்கர் வாழ்ந்த வீட்டை மகாராஷ்டிர அரசு வாங்கி அதனை அருங்காட்சியகமாக நடத்தி வருகிறது.

அதன் கட்டுப்பாட்டை இப்போது ஒன்றிய அரசு கேட்கிறது. ED அரசும் கொடுக்கப்போகிறது,


அதற்கு என்னென்னமோ கம்பி கட்டும் கதைகள் சொல்லியுள்ளார்கள். அவற்றின் மீது நம்பிக்கையே வரவில்லை. 

வள்ளலாரை சனாதனத்தின் உச்ச நட்சத்திரம் என்று ரெவி கட்டுக்கதை கட்டியது போல,

அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு சங்கி அடியாள் அர்ஜுன் சம்பத் விபூதி குங்குமம் பூச முயற்சித்தது போல 

லண்டனில் அண்ணல் அம்பேத்கர் அருங்காட்சியகத்தில் திரிபு வேலைகள் செய்வார்களோ என்று அச்சம் வருகிறது.

அதனால் ஒன்றிய அரசுக்கு ஒன்று சொல்கிறேன்.

அண்ணல் அம்பேத்கர் புத்த மதத்தினை தழுவும் போது இருபத்தி இரண்டு பிரகடனங்களை அறிவித்தார். 

அவை ஒரு ஸ்தூபியாக அண்ணல் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவிய தீட்சாபூமியில் ஒரு ஸ்தூபியில் இருக்கிறது. அவற்றின் தமிழாக்கம் கீழே. கடைசி இரண்டு பிரகடனங்கள் சரியாக தெரியவில்லை.
அவற்றின் தமிழாக்கம் கீழே. கடைசி இரண்டு பிரகடனங்கள் சரியாக தெரியவில்லை.

1)        பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகியோரை கடவுளாக கருதவோ, வழிபடவோ மாட்டேன்

2)        ராமனையோ கிருஷ்ணனையோ கடவுளாகக் கருதி வழிபட மாட்டேன்.

3)        கௌரி, கணபதி போன்ற ஹிந்து தர்மம் சொல்கிற எவரையும் கடவுளெனக் கருதி தொழ மாட்டேன்.

4)        கடவுள் அவதாரமெடுத்தார் என்பதை ஒருபோதும் நம்ப மாட்டேன்.

5)        புத்தர் விஷ்ணுவின் அவதாரம் எனச் சொல்வது தவறு மட்டுமல்ல, விஷமத்தனமான பிரச்சாரமும் கூட.

6)        திதி போன்றவற்றை நான் செய்ய மாட்டேன்.

7)        புத்த தர்மங்களுக்கு முரணான, எதிரான எதையும் நான் செய்ய மாட்டேன்.

8)        பிராம்மணர்கள் மூலம் எந்த சடங்கையும் செய்ய மாட்டேன்.

9)        அனைத்து மனிதர்களும் சமம் என்பதை நான் நம்புகிறேன்.

10)     சமத்துவத்தை உருவாக்க நான் பாடுபடுவேன்.

11)     புத்தரின் உயரிய கொள்கைகளை பின்பற்றுவேன்

12)     புத்தரின் பத்து கோட்பாடுகள் படி நடந்து கொள்வேன்.

13)     அனைத்து ஜீவராசிகளையும் நேசிப்பேன்.

14)     நான் திருட மாட்டேன்.

15)     நான் தகாத உறவில் ஈடுபட மாட்டேன்

16)     நான் பொய் சொல்ல மாட்டேன்.

17)     எந்த போதைப்பொருளையும் நான் உட்கொள்ள மாட்டேன்

18)     புத்த தர்மத்தின் மூன்று அடிப்படைகளான ஞானம், கருணை, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் வாழ்வேன்.

19)     மனிதகுல வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கிற, மனிதர்களை சமமற்றவர்களாகவும் இழிவாகவும் நடத்துகிற ஹிந்து தர்மத்தை துறந்து புத்த தர்மத்தை தழுவிகிறேன்.

20)     இனி புத்த தர்மப்படியே நடந்து கொள்வேன் என சபதமேற்கிறேன்.


அந்த பிரகடனங்களை ஒன்றிய அரசு பளிச்சென்று லண்டன் அருங்காட்சியகத்தில் பல இந்திய மற்றும் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து வைக்க வேண்டும். 

செய்து விட்டு உள்ளே போகட்டும் . . .


Tuesday, December 13, 2022

அண்ணல் பிரகடனங்களை சங்கிகள் ஏற்பார்களா?

 


நாக்பூரில் எங்கள் சங்கத்தின் அகில இந்திய மாநாடு சில வருடங்கள் முன்பாக நடைபெற்ற போது அண்ணல் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவிய இடமான தீட்சா பூமிக்கு சென்றிருந்தேன்.

அப்போது அண்ணல் அம்பேத்கர் வெளியிட்ட பிரகடனங்களை ஒரு தூணில் பொறித்துள்ளார்கள்.

 



அவை இங்கே  . . .

 

1)        பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகியோரை கடவுளாக கருதவோ, வழிபடவோ மாட்டேன்

2)        ராமனையோ கிருஷ்ணனையோ கடவுளாகக் கருதி வழிபட மாட்டேன்.

3)        கௌரி, கணபதி போன்ற ஹிந்து தர்மம் சொல்கிற எவரையும் கடவுளெனக் கருதி தொழ மாட்டேன்.

4)        கடவுள் அவதாரமெடுத்தார் என்பதை ஒருபோதும் நம்ப மாட்டேன்.

5)        புத்தர் விஷ்ணுவின் அவதாரம் எனச் சொல்வது தவறு மட்டுமல்ல, விஷமத்தனமான பிரச்சாரமும் கூட.

6)        திதி போன்றவற்றை நான் செய்ய மாட்டேன்.

7)        புத்த தர்மங்களுக்கு முரணான, எதிரான எதையும் நான் செய்ய மாட்டேன்.

8)        பிராம்மணர்கள் மூலம் எந்த சடங்கையும் செய்ய மாட்டேன்.

9)        அனைத்து மனிதர்களும் சமம் என்பதை நான் நம்புகிறேன்.

10)     சமத்துவத்தை உருவாக்க நான் பாடுபடுவேன்.

11)     புத்தரின் உயரிய கொள்கைகளை பின்பற்றுவேன்

12)     புத்தரின் பத்து கோட்பாடுகள் படி நடந்து கொள்வேன்.

13)     அனைத்து ஜீவராசிகளையும் நேசிப்பேன்.

14)     நான் திருட மாட்டேன்.

15)     நான் தகாத உறவில் ஈடுபட மாட்டேன்

16)     நான் பொய் சொல்ல மாட்டேன்.

17)     எந்த போதைப்பொருளையும் நான் உட்கொள்ள மாட்டேன்

18)     புத்த தர்மத்தின் மூன்று அடிப்படைகளான ஞானம், கருணை, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் வாழ்வேன்.

19)     மனிதகுல வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கிற, மனிதர்களை சமமற்றவர்களாகவும் இழிவாகவும் நடத்துகிற ஹிந்து தர்மத்தை துறந்து புத்த தர்மத்தை தழுவிகிறேன்.

20)     இனி புத்த தர்மப்படியே நடந்து கொள்வேன் என சபதமேற்கிறேன்.

 இப்போது அண்ணலுக்கு காவிச்சட்டை போட்ட அர்ஜுன் சம்பத் வகையறாக்களும் அம்பேத்கர் இந்து மதத்திற்கு எதிராக எதுவும் சொல்லவில்லை என்று சொல்லும் சங்கிகளும் அண்ணல் அம்பேத்கரின் பிரகடனங்களில் ஒன்றையாவது ஏற்பார்களா?

பிகு: அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். சும்மா ஒரு விளம்பரம்தான் . . .