Sunday, March 29, 2026

காமெடிக்கு அவங்க கியாரண்டி

 


தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது. விறுவிறுப்பான காட்சிகள், திருப்பு முனைக் காட்சிகள், கண்ணீர் ததும்பும் செண்டிமெண்ட் காட்சிகள் மட்டுமல்ல காமெடிக் காட்சிகளும் நிறைந்ததாக மட்டும் தேர்தல் இருக்கப் போவதில்லை. காமெடி காட்சிகளும் நிறையவே இருக்கப் போகிறது. அப்படிப் பட்ட காமெடி காட்சிகளை வழங்குவதில் முக்கிய பாத்திரம் விஜய்க்கும் அவரது தவெக தற்குறிகளுக்கும்தான் இருக்கும். அதற்கான முன்னோட்டம்தான் மேலே உள்ள படம். 

Friday, March 27, 2026

அப்துல் கலாம் ஆலோசகரின் இழிச் செயல்

 


முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்தவர் பொன்ராஜ்.

இவர் விஜய் ரசிகைகளை மிகவும் கீழ்த்தரமான வார்த்தை மூலம் கொச்சையாக திட்டியுள்ளார்.  சில விஜய் ரசிகைகள் பேசுவது எரிச்சலூட்டும் என்பது வேறு விஷயம். அவர்களை தற்குறிகள் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்றால் அவர்கள் முதிர்ச்சியில்லாமல் பேசுவது  கவலையோடு பார்க்க வேண்டிய ஒன்று.

அதற்காக ஒட்டுமொத்தமாக அனைத்து விஜய் ரசிகைகளையும் கேவலமாக சித்தரிப்பதும், சர்ச்சை உருவான பிறகும் வருத்தம் தெரிவிக்காமல் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என பிடிவாதம் பிடிப்பதும் மோசமான அணுகுமுறை.

அப்துல் கலாம் அவர்களோடு நெருக்கமாக இருந்ததாக பொன்ராஜ் சொல்வார். அப்துல் கலாமிடமிருந்து எதுவும் கற்கவில்லை போல .  அப்துல் கலாம் உயிரோடு இருந்திருந்தால் இவரது செய்கையை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார் என்றே நம்புகிறேன்.

இவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Thursday, March 26, 2026

ட்ரம்பின் குரு சீமான் . . .

 


ட்ரம்ப் உதிர்த்த லேட்டஸ்ட் முத்து கீழே உள்ளது.


இப்படியெல்லாம் பேச அவர் சீமானிடம்தான் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். மோடியையும் சீமானையும் தவிர இப்படியெல்லாம் கதை அளக்க உலகில் வேறு யார் இருக்கிறார்கள்!

ட்ரம்ப் சொன்னதை இரான் மறுத்துள்ளதாக அதே செய்தி சொல்கிறது. இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியது நாந்தான் என்று ட்ரம்ப் அன்றாடம் சொன்னாலும் ஒரு வார்த்தை கூட மறுத்து பேச மோடி அரசால் ஏன் முடியவில்லை?

பழத்தட்டு பறி போன கோபத்தில் துர்வாசர்

 


துக்ளக் பத்திரிக்கையில் துர்வாசர் என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்தவரும் கரிசல் இலக்கிய நாயகர் கி.ரா இறந்த போது அரசு மரியாதை கொடுத்ததை பொறாமையுடன் எழுதிய வண்ண நிலவன் என்ற ராமச்சந்திரன் உலகநாதன் என்ற எழுத்தாளர் எழுதிய பதிவு கீழே உள்ளது.



அந்த பழத்தட்டை  வைரமுத்து எடுத்துக் கொண்டு போகாமல் இருந்திருக்கலாம்.

ஆனால் நமக்கு இந்த காமெடி பதிவு கிடைத்திருக்காது.

அவருடைய பதிவில் அதிகமான அழுத்தம் பழத்தட்டிற்குத்தானே இருக்கிறது!

பிகு: எழுதி ஒரு வாரமான பதிவு இது

Wednesday, March 25, 2026

கடுப்பிலிருந்து விடுபட விவால்டி அற்புதம்

 


மாறுதலாக ஒரு இசைப் பதிவு.

முகநூலில் பார்த்த ஒரு அருமையான காணொளியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.




வளர்ந்த வயலின் கலைஞர்களுக்கு நிகராக அந்த சிறுவன் பியானோ வாசிப்பது அற்புதமாக உள்ளது.

அவர்கள் வாசிக்கும் இசைக் கோர்வை, பதினேழாம் நூற்றாண்டில் இத்தாலியில் வாழ்ந்த அண்டோனியா விவால்டி எனும் இசைக் கலைஞர் அமைத்த "விவால்டி" என்பதாகும். 

எரிச்சலான ஒரு தருணத்தில் ( பத்து கொடுத்த கடுப்புதான்) மனதை மாற்ற இந்த காணொளி  உதவிகரமாக இருந்தது.

பிகு: மேலே எதற்கு ஒரு சட்டையின் புகைப்படம்? 

விவால்டி என்றதும் அந்த காலத்தில் பாம்பே டையிங் கம்பெனி வெளியிட்ட பிராண்டட் ஷர்ட்டுகள்தான் நினைவுக்கு வந்தது. இன்னமும் அது இருக்கிறது என்பதும் இப்போது தெரிந்தது. 

விவால்டி என்றொரு ப்ரௌசர் இருப்பதும் இப்போதுதான் தெரிந்தது.

Tuesday, March 24, 2026

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் க்யானேஷ்

 


தேர்தல் ஆணையம் அனுப்பிய ஒரு கடிதத்தில் கேரள பாஜகவின் முத்திரை இருப்பதும் அது அலுவலக ரீதியிலான தவறு என்று தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததும்தான் இன்றைய பரபரப்புச் செய்தி.



எனக்கு சில உண்மைகள் தெரிஞ்சாகனும், மோடியால் பொறுக்கி எடுக்கப்பட்டு தலைமை தேர்தல் ஆணையரான மிஸ்டர் க்யானேஷ் குமார்.

பாஜக சீல் உங்கள் அலுவலகத்தில் உள்ளதா?

அல்லது

உங்கள் கடிதங்கள் பாஜக அலுவலகத்தில்தான் தயாரிக்கப்படுகிறதா?

ஆமாம்.

ஏழு வருடத்துக்கு முந்தைய கடிதம் இப்போது ஏன் சுற்றுக்கு வந்து கவனம் பெற்றது? 

உங்கள் அலுவலகத்தில் கூட நேர்மையான ஊழியர்கள், அதிகாரிகள் யாராவது இருக்கிறார்களா,  என்ன?

புதுவையில் அடி வாங்கும் காங்கிரஸார்.

 


புதுவை முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமிக்கு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படாததால் அவரது ஆதரவாளர்கள், புதுவையின் தற்போதைய மக்களவை உறுப்பினரும், முன்னாள் முதல்வரும் தற்போதைய புதுவை காங்கிரஸ் தலைவருமான வி.வைத்தியலிங்கம் வீட்டின் முன்பாக போராட்டம் நடத்தி காவல்துறையால் கலைக்கப்பட்டுள்ளனர்.

பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.  அப்போது எழுதிய பதிவு கீழே நீல நிறத்தில் . . .

அடி வாங்கிய ஆளும் கட்சியினர்



ஒரு வழியாக புதுச்சேரி முதல்வர் யாரென்பது முடிவாகி விட்டது. மற்ற கட்சிகளின் உட்கட்சி விவகாரம் பற்றி கருத்து தெரிவிப்பது கிடையாது என்ற கொள்கை எனக்கு உள்ளதால் அது பற்றி ஒன்றும் சொல்லப் போவதில்லை.

இந்த முடிவை ஏற்றுக் கொள்ளாத கட்சிக்காரர்கள் கல் வீசி  பேருந்துகளின் கண்ணாடிகளை உடைக்க, காவல்துறை அவர்களை துரத்தி துரத்தி தடியால் அடித்திருக்கிறது.

இந்தியாவிலேயே ஆளும்கட்சியினர் அடி வாங்கியது முதன் முதலாக புதுச்சேரியில் என்றுதான் நினைக்கிறேன். 

ஆரம்பம் அமோகமாக இருக்கிறது. 

பின் குறிப்பு : ஒரு பிளாஷ்பேக். புதுவையில் திரு சண்முகம் என்பவர் சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத போதும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினராவதற்கு வசதியாக தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய யாரும் தயாராக இல்லாததால் ஆறு மாதத்தில் ராஜினாமா செய்து விட்டார். 

இதில் என்ன வேடிக்கை என்றால் நாராயணசாமியை முதல்வராக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அன்று காங்கிரஸார் போலீஸிடம் அடி வாங்கினார்கள் (அப்போது அடி வாங்கிய நமச்சிவாயம் வகையறாக்கள் பின்னாளில் பாஜகவிற்கு தாவி விட்டார்கள் என்பது வேறு விஷயம்.) இப்போது நாராயணசாமிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அடி வாங்கினார்கள்.