நேற்று
முன் தினம் 21.07.2025 அன்று ஒரு மோசமான நாள். உழைக்கும் வர்க்கம் இரு முக்கியமான தலைவர்களை
இழந்த நாள்.
ஒருவர்,
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத்தலைவரும் சத்திஸ்கர் மாநிலத்தின் முக்கியமான
மார்க்சிஸ்ட் கட்சித்தலைவருமான தோழர் பி.சன்யால்.
மற்றவர்
கேரளாவின் முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு
உறுப்பினராகவும் இருந்த தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன்.
தோழர்
சன்யால் பற்றி முதல் முறையாக அறிந்தது எங்கள்
சங்கத்தின் “இன்சூரன்ஸ் வொர்க்கர்” இதழின் மூலமாக.
1988
ல் பாரத் பந்த் நடைபெற்ற போது அவர் பணியாற்றிய ராய்ப்பூர் கோட்ட அலுவலகத்தில் போஃபோர்ஸ்
ஊழல் வழக்கு தொடர்பாக வைக்கப்பட்டிருந்த ஒரு
கார்ட்டூனை அடித்து நொறுக்கிய இளைஞர் காங்கிரஸ் குண்டர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக
போலீஸ் ராய்ப்பூர் கோட்டப் பொதுச்செயலாளராக இருந்த தோழர் சன்யாலை கைது செய்தது. ராய்ப்பூர்
நகர தொழிற்சங்கத் தோழர்கள் கொதித்து போராடியதில் போலீஸ் பின்வாங்கி அவரை விடுவித்தது.
1994
ல் அகமதாபாத் நகரில் நடைபெற்ற 15 வது அகில இந்திய மாநாட்டில்தான் அவரை முதன் முதலில்
பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த மத்திய
மண்டலக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர். அனல் கக்கிய உரை. இடதுசாரி கருத்தியலை தெளிவாகவும்
ஆணித்தரமாகவும் எடுத்துரைக்கும் உரை. சமரசமில்லாத, கொள்கைப் பற்று கொண்ட தலைவர்.
அதன்
பிறகு ஒவ்வொரு மாநாட்டிலும் அவர் எப்போது பேசுவார் என்று ஆவலோடு எதிர்பார்க்க வைத்தது
அந்த உரை.
அவருடன்
பரிச்சயமானது நான் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ஆன பிறகுதான். தோழமையின் கதகதப்பை அவரிடம் உணர முடியும்.
அந்த
செயற்குழுவில் அடுத்த சில மாதங்களில் ராய்ப்பூரில் நடைபெற உள்ள அகில இந்திய மாநாட்டின்
வரவேற்புக் குழுத் தலைவராக தோழர் ஹபீப் தன்வர் செயல்படவுள்ளார் என்று அவர் அறிவிக்கையில்
பெரும் ஆரவாரம். அவர் மிகப் பெரிய கலை ஆளுமை, நாடக விற்பன்னர், திரை இயக்குனர் என்பதெல்லாம் பிறகுதான் தெரிந்து கொண்டேன்.
ராய்ப்பூர்
மாநாடு ஒரு அற்புத அனுபவம். 1500 அமரக்கூடிய
அரங்கம் ராய்ப்பூரில் கிடையாது. அதனால் ஒரு தற்காலிக அரங்கை பிரம்மாண்டமாக உருவாக்கினார்.
உணவுக்கூடம், தற்காலிக கழிவறைகள் என எல்லாமே உருவானது. அந்த மாநாட்டுப் பேரணியை வாழ்த்த
ரெய்ப்பூர் நகர உழைக்கும் மக்கள் முழுதுமே திரண்டிருந்தனர். மலைவாழ் மக்கள் பங்கேற்பு
அதிகமான அளவில் இருந்தது.
தோழர்
ஹபீப் தன்வர் இரண்டு நாடகங்களை நடத்தினார். திருப்பத்தூர் தூய இருதயக் கல்லூரி குழுவினர் தோழர் ஹபீப் தன்வரின் “சரண்தாஸ் சோர்”
என்ற நாடகத்தை வேலூரில் நடத்தினர். தமுஎகச பொறுப்பேற்று நடத்திய அந்த நாடகத்திற்கான அழைப்பிதழை கொடுக்க வந்த தமுஎகச பொறுப்பாளரான ஆறுமுகம்
பிள்ளை என்ற தோழரிடம் நான் ஒரிஜினல் வடிவத்தையே பார்த்துள்ளேன் என்று சொல்ல
நாடகத்திற்கான அறிமுகத்தை அளிக்கும் பொறுப்பை
அளித்து விட்டார். நாடக இயக்குனரான தோழர் பார்த்திப ராஜாவோ, நீங்கள் ஹபீப் தன்வர் நடித்ததை
பார்த்தீர்களா! அதிர்ஷ்டசாலி என்று வியந்து சொன்ன போதுதான் அவரின் அருமை புரிந்தது.
அவரை மாநாட்டில் இணைத்த தோழர் சன்யாலின் அருமையும்.
அந்த
மாநாட்டில் முதல் நாளில் உணவு பரிமாறுவதில் கொஞ்சம் குளறுபடி இருந்தது. அன்று இரவு
அதைப் பற்றி தோழர் சன்யால் “உணவில் கொஞ்சம் சிக்கல் இருந்தமைக்கு வருத்தங்கள். இவர்கள்தான்
சத்திஸ்கர் மாநிலத்திலேயே மிகப் பெரிய கேட்டரிங் நிறுவனம். அவர்களோடு விவாதித்தோம்”
என்று சொல்லிக் கொண்டு இருக்கையில் “முடிவு என்ன?” என்று அப்போதைய பொதுச் செயலாளர்
தோழர் என்.எம்.சுந்தரம் கேட்க “வெற்றிதான் நமது பாரம்பரியம் (Success is our
tradition” என்று அவர் சட்டென்று பதிலளிக்க அரங்கம் கரவொலிகளால் அதிர்ந்தது.
2010
ல் குடியாத்தத்தில் நடைபெற்ற எங்கள் கோட்ட
மாநாட்டில் அவர் உரையாற்ற வேண்டும் என்று விரும்பி அழைத்த போது உடனடியாக ஒப்புக் கொண்டு
பொது மாநாட்டிலும் பின்பு பிரதிநிதிகள் மாநாட்டிலும் மிகச் சிறப்பாக பேசினார்.
அவரை
நான் செல்லமாக கடிந்து கொண்ட அனுபவமும் உண்டு. கான்பூரில் அகில இந்திய மாநாடு. ஊழியர்கள்
பிரச்சினைகளை பேசும் வாய்ப்பு எங்கள் தென் மண்டலத்தால் கொடுக்கப்பட்டிருந்தது. நேரம்
போதாமையால் இரவு உணவுக்குப் பின்பும் மாநாடு தொடர்ந்தது. இரவு 11 மணிக்கு குளிரில்
நடுங்கிக் கொண்டிருந்த போது பேச அழைக்கப்பட்டேன். விடுமுறைப் பயணச் சலுகை விதிகளை எளிமையாக்க
வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசுகையில் அந்த வருட ஆடிட் முடிந்த பின்புதான் எல்.டி.சி
போன மகிழ்ச்சியையே ஒரு ஊழியரால் அனுபவிக்க முடியும் என்று நான் குறிப்பிட தோழர் சன்யாலும் அப்போதைய வடக்கு மண்டல தலைவருமான
தோழர் பகவான் ஸ்வரூப் சர்மாவும் மேஜையைத் தட்டி வெடிச் சிரிப்போடு ஆரவாரம் செய்ய என்
பேச்சின் ஓட்டம் தடைபட மீண்டும் இயல்புக்கு வர ஒரு நிமிடம் ஆனது. அடுத்த நிமிடம் மணியும்
அடிக்கப்பட்டு விட்டது. உங்களால்தான் என்னால் ஒழுங்காக பேச முடியவில்லை என்று அவரிடம்
செல்லமாக கோபித்துக் கொண்டேன்.
அவர்
என்னிடம் கடிந்து கொண்ட அனுபவமும் உண்டு. பாமக அராஜகக் கும்பலிடமிருந்து தப்பிய அனுபவத்தை
ஏற்கனவே பகிர்ந்துள்ளேன். இந்த ஏப்ரலில் கூட மீள் பதிவு செய்துள்ளேன். தைலாபுரம் தோட்டத்திலிருந்து
தப்பித்தவுடன் அந்த நிகழ்வை ஓரிரு வார்த்தைகளில் முகநூலில் பதிவு செய்திருந்தேன்.
“Take Care” என அங்கே பின்னூட்டம் இட்டு விட்டு உடனடியாக அழைக்கவும் செய்தார். பிறகு
இன்னொரு இடத்தில் மரம் வெட்டப்பட்டதால் பயணம் தடைபட்டு விட்டது என்றும் ஒரு பதிவு எழுதியிருந்தேன்.அதிகாலை
3 மணிக்கு வீடடைந்து உறங்கியும் விட்டேன்.
காலை
7 மணிக்கு தொலைபேசியில் அழைத்த தோழர் சன்யால்,
எத்தனை மணிக்கு வீட்டிற்கு வந்தேன் என்பதை கேட்டு விட்டு, “பிரச்சினையில் சிக்கிக்
கொண்டதை பதிவு போட்ட நீங்கள், ஜாக்கிரதையாக வீடு திரும்பியதை ஏன் எழுதவில்லை, எவ்வளவு
கவலையாக இருந்தது தெரியுமா? இனி இது போல செய்யாதீர்கள்” என்று உரிமையோடு கண்டிக்க என்
தவறு புரிந்தது.
தோழர்
சன்யாலின் மறைவு இடதுசாரி முற்போக்கு இயக்கங்களுக்கு பெரும் இழப்பு.
வாழும்
வரலாறாகத் திகழ்ந்த தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்களின் மறைவின் மூலம் மார்க்சிஸ்ட்
கட்சி தன் முதல் தலைமுறையின் கடைசி தல்லைவரையும் இழந்துள்ளது. போராட்டத்தில் புடம்
போற்ற தலைவரின் மறைவின் மூலம் இந்தியா தனது விடுதலைக்காக போராடிய ஒரு வீரரை இழந்துள்ளது.
செவ்வணக்கம்
தோழர் சன்யால்
செவ்வணக்கம்
தோழர் அச்சுதானந்தன்.
பிகு:
முகப்பில் உள்ளது எங்கள் குடியாத்தம் மாநாட்டு புகைப்படங்கள்.
கீழே
உள்ளது ராய்ப்பூர் அகில இந்திய மாநாட்டு புகைப்படங்கள்.