Friday, March 20, 2026

பிரதமர்-ஜனாதிபதி. தூரத்திற்கான காரணம் என்ன?

 


இறையாண்மை கொண்ட சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசான இந்தியாவின் ஜனாதிபதி நேற்று அயோத்தி சென்று அங்கே ராமர் கோயிலில் வழிபட்டு, அதற்கான வாய்ப்பு கிடைத்தது தன் வாழ்நாள் பாக்கியம் என்று சொன்னதாக இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் படித்தேன்.

ஜனாதிபதி கோயிலில் வழிபடும் புகைப்படம் ஏதாவது இருக்கிறதா என்று இணையத்தில் பார்த்தேன். குடியரசுத்தலைவரின் ட்விட்டர் பக்கத்திலேயே பகிர்ந்து கொண்டிருந்தார். அந்த புகைப்படம் கீழே


மனதுக்குள் ஏதோ மணி அடித்தது.

கோயில் திறப்பு விழா புகைப்படங்களை தேடினேன்.




மோடியும் ஆர்.எஸ்.எஸ் சர்சங்சாலக் மோகன் பகவத்தும் எங்கே நிற்கிறார்கள் பாருங்கள்.

ஜனாதிபதி எங்கே நிறுத்தப்பட்டுள்ளார் என்று பாருங்கள். 

மோடி பிரதமர், மோகன் பகவத் எந்த அரச பதவியிலும் இல்லாதவர். அவர்கள் ராம் லல்லா விக்கிரகத்தின் அருகாமையில் நிற்க இந்தியாவின் முதல் குடிமகளான ஜனாதிபதி சற்று தூரத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.

அவர் ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு மட்டுமல்ல, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழாவிற்குக் கூட அழைக்கப் படவில்லை.

காரணம் அவர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்.

அதனால்தான் சனாதனம் அவரை தூரத்தில் நிறுத்தி வைத்தது. 

Thursday, March 19, 2026

தவெக தொண்டர்களும் செந்தில் காமெடியும்

 


தற்போது தவெகவில் வாயை விற்றுக் கொண்டிருக்கிற நாஞ்சில் சம்பத் (ஆமாம், இங்கே இன்னோவா கார் கொடுத்தாங்களா?) தவெக தொண்டர்களின் செயல்திறன் (!) பற்றி வர்ணித்ததை படித்ததும் "நட்புக்காக" படத்தில் மலையை தூக்குவேன் என்று சொல்லி வசூல் செய்து பின்பு என் கையில் தூக்கி வையுங்கள், தூக்குவேன் என்று சொல்லி அடி வாங்குவார். அப்படி அடி வாங்குபவரை காப்பாற்றுகிற சாமியர் கே.எஸ்.ரவிகுமாரிடம் சொல்லும் வசனம்தான் நினைவுக்க்கு வந்தது. 


இதைக் கேட்டு உசுப்பேறி தவெக தற்குறிகள் மின்னலை பிடிக்க உலகம் சுற்றும் வாலிபன் முருகன் போல முயற்சித்தோ, மின்சார வயரைப் பிடித்தோ கருகிப் போகக்கூடாது என்பதுதான் என் விருப்பம். 

Wednesday, March 18, 2026

நிஜத்தில் அப்படியில்லையே நிர்மலா அம்மையாரே!

 


இன்சூரன்ஸ் துறை சம்பந்தமாக நேற்று நிர்மலா அம்மையார் மாநிலங்களவையில் பேசியிருக்கிறார். அதை அவரது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

இன்சூரன்ஸ் ஒழுங்காற்று வளர்ச்சி ஆணையம் (IRDA) மிகவும் கறாராக பொதுத்துறை, தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளை கண்காணித்து பாலிசிதாரர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாகவும்  தவறிழைக்கும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் மீது அபராதம் விதித்துள்ளதாகவும் சொல்லியுள்ளார்.


ரிலையன்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்.டி,ஃஎப்சி இன்சூரன்ஸ் ஆகியவைக்கு தலா இரண்டு கோடி ரூபாயும்  ராயல் சுந்தரம், எஸ்.பி.ஐ லைப் ஆகிய கம்பெனிகளுக்கு தலா ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறது அமைச்சரின் அறிக்கை.

எல்.ஐ.சி யின் மீதோ, மற்ற நான்கு பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் கம்பெனிகள் மீதோ அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை என்பதை மட்டும் அமைச்சர் ஏனோ சொல்லவில்லை. அதெப்படி பொதுத்துறையை அவரால் பாராட்ட முடியும்!

இதை படிக்கையில் ஐ.ஆர்.டி.ஏ ஏதோ சுத்த சுயம்பிரகாச நியாயவான் போல தோன்றும். ஆனால் உண்மை நிலவரம் வேறு.

இந்த அபராதம் எல்லாம் வேறு வழியில்லாமல், ஏராளமான புகார்கள் வந்து,  ஆம்புட்ஸ்மேன்,  நீதிமன்றம் குட்டி விதிக்கப்பட்டவை.

உன்மையின் ஐ.ஆர்.டி.ஏ எல்.ஐ.சி, பொதுத்துறை  பொது இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு ஒழுங்காற்று வாரியமாக, தனியார் கம்பெனிகளுக்கு வளர்ச்சி ஆணையமாக செயல்பட்டு வருகிறது.

எல்.ஐ.சி முகவர்களை தனியார் கம்பெனிகளுக்கு மடை மாற்றி விடக்கூடிய விதத்தில் இன்சூரன்ஸ் சட்டங்களில்  மாற்றம்,

எல்.ஐ.சி புதிய பாலிசிகளுக்கு அனுமதி கேட்கையில் இழுத்தடிப்பது, தனியார் கம்பெனிகளுக்கு சிவப்பு கம்பள மரியாதை கொடுப்பது,

முகவர்களின் கமிஷன் விகிதத்தை குறைத்து வணிகத்தை முடக்க முயல்வது (எல்.ஐ.சி யின் வணிகத்தில் 90 % முகவர்கள் மூலம் வருகிறது. தனியார் கம்பெனிகளில் 10 % வணிகம்தான் முகவர் மூலம் வருகிறது) 

ஐ.ஆர்.டி.ஏ அடிப்படையில் பொதுத்துறைக்கு வில்லன். அதற்கு மாறான ஒரு சித்திரத்தை நிர்மலா அம்மையார் கொடுத்துள்ளார்.

இந்த டுபாக்கூர் வேலைகள்தான் மோடி அரசின் அடையாளம். 

அசிங்கமா போயிடுச்சே ஜெயமோகன்

 


இன்றைக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்பு அகிலனுக்கு ஞானபீடம் அறிவிக்கப்பட்டபோது சுந்தர ராமசாமி மிகக் கடுமையாக எழுதினார். அகிலன் இன்று எவர் என்று தெரியாத நிலை. சு.ராவின் அக்கட்டுரை இன்றும் வாசிக்கப்படும் ஒரு ‘கிளாஸிக்’. சு.ரா சொன்னார் “ஜிப்பா தேசிய உடை ஆக்கப்படுவதை பிக்பாக்கெட்டுகள் ஆதரிப்பது போன்றது அகிலனுக்கு ஞானபீடம் கிடைத்தபோது சோட்டா எழுத்தாளர்கள் கொண்டாடியது”. அந்த பிக்பாக்கெட்டுகளின் பெயர்களை இன்று தமிழ் விக்கியில்தான் தேடவேண்டும்.

இது ஓர் எழுத்தாளர் விருது பெறுவதற்கு எதிரான கண்டனம் அல்ல. இது அந்த ஓர் எழுத்தாளர் சார்ந்த விஷயமும் அல்ல. இந்த விருதோ, அந்த எழுத்தாளரோ எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.

அகிலனுக்கு கிடைத்த ஞானபீடம் தமிழை சிறுமை செய்தது. ஐம்பதாண்டுகளாக தமிழ் இலக்கியத்தை எந்த இலக்கிய மேடையிலும் உரிய இடம் இல்லாததாக ஆக்கியது. அகிலன் தமிழின் தலைசிறந்த எழுத்தாளர் என்றால் மற்றவர்களின் எழுத்தை பொருட்படுத்தவேண்டியதில்லை என்று இந்தியா முடிவு செய்தது.

மேலே உள்ளது ஜெயமோகன் எழுதிய பதிவு. ஞானபீட விருது அகிலனுக்கு கொடுக்கப்பட்டதை ஜெயமோகனும் அவர் ஆசான் சுந்தர ராமசாமியும் கடுமையாக எதிர்த்தார்கள் என்பதையும் அகிலனை ஒரு எழுத்தாளராகவே ஜெமோ மதிக்கவில்லை என்பதையும் அந்த பதிவு சொல்கிறது.

ஜெயமோகன் எப்பேற்பட்ட பொய்யன், சந்தர்ப்பவாதி என்பதை எழுத்தாளரும் திரைக் கலைஞருமான தோழர் கவிதா பாரதி எழுதிய பதிவு லட்சமாவது முறையாக அம்பலப்படுத்துகிறது.

இதோ அந்த பதிவு

அகிலனுக்கு வழங்கப்பட்ட ஞானபீட விருது அரை நூற்றாண்டு காலம் தமிழ் நவீன இலக்கியத்தை இந்திய இலக்கிய சூழலில் மறைத்தது.
-இவ்வாறு ஒரு கோடி ரூபாய்
பம்பர் இலக்கியப் பரிசு அறிவிப்பில் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்
சுவாரசியமானதொரு பிளாஷ்பேக் இதோ..
1990-ல் அகிலன் நினைவு நாவல்போட்டியினை அகிலன் அறக்கட்டளை நடத்தியது..

பல எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை அனுப்பினர்.. ரப்பர் என்னும் தனது நாவலின் கையெழுத்துப்பிரதியை ஜெயமோகனும் அனுப்பினார்

அதில் முதல் பரிசு பெற்றது ரப்பர்.. ரூபாய் பத்தாயிரம் வழங்கப்பட்டு, அகிலன் நினைவு நாவல் போட்டியில் பரிசு பெற்றது என்னும் குறிப்போடு அகிலனின் மகன் அகிலன் கண்ணன் தனது தாகம் பதிப்பகத்தின் சார்பில் அந்த நாவலை வெளியிட்டார்.. அதுதான் ஜெயமோகனின் முதல் நாவல்..





தரமான இலக்கியத்துக்கு
ஒரு கோடி ரூபாய் பரிசறிவிக்கும்
ஜெயமோகனின் இலக்கிய அடையாளம், அவரது அளவுகோல்படி
'தரமற்ற எழுத்தாளர்' அகிலன் நினைவாக வழங்கப்பட்ட பத்தாயிரம் ரூபாய் மூலமாகத்தான் வெளிப்பட்டது..

இதற்கெல்லாம் ஜெமோ அசந்து விடுவாரா என்ன? அவருடைய முழக்கமே "துப்பினால் துடைச்சுப்பேன்" என்பதுதானே!


Tuesday, March 17, 2026

முன்னாள் மந்திரி சண்முகத்தை விரட்டி அடியுங்கள்

 


இருபத்தி நான்கு  மணி நேரமும் போதையில் இருக்கிறாரா என்ற சந்தேகம் அதிமுகவின் முன்னாள் மந்திரி திண்டிவனம் சி.வி.சண்முகம் பேசுவதை கேட்கும் போதெல்லாம் வரும்.

சந்தேகமே தேவையில்லை. அவர் எப்போதும் அப்படித்தான் என்பதை அந்த ஜந்துவின் இன்றைய பேச்சு நிரூபித்துள்ளது.


இப்படிப்பட்ட கேவலமான ஜென்மங்கள் அமைச்சராக இருந்தது, எம்.எல்.ஏ ஆக இருப்பதெல்லாம் தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய அசிங்கம்.

தமிழ்நாட்டை விட்டு துரத்த வேண்டும். வேண்டுமானால் பாலியல் குற்றங்களின் சொர்க்கமான உத்திரப்பிரதேசத்திற்கு செல்லட்டும்.

இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால் அந்த ஆள் பேசியது :பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" என்பதை கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டத்தில்.

இது போன்ற ஜந்துக்கள் இருக்கும் வரை எப்படி பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் !

பாலியல் ஜல்சா கட்சியின் கூட்டாளி வேறெப்படி பேசுவார்!

வேடிக்கைக்காக தாக்குவாராம் மெண்டல் ட்ரம்ப்

 


நேற்றைய ஆங்கில இந்து இதழின் முதல் பக்க செய்தி கீழே . . .


இஸ்ரேல் புதிய தாக்குதல்களை தொடுத்துள்ளதால் இரான் மீதான போரை முடிவுக்கு கொண்டு வரும் எண்ணம் தனக்கில்லை என்று சொல்லியுள்ள டொனால்ட் ட்ரம்ப், இரானிற்கு பேச்சு வார்த்தை மேஜைக்கு வரும்  எண்ணம் இருந்தால் கூட நாங்கள் வேடிக்கைக்காக இரானின் "கார்க்" தீவின் மீது குண்டுகள் போடுவோம் என்று சொல்கிறார்.

சும்மா வேடிக்கைக்காக குண்டு போடுவோம் என்று சொல்கிற ஆளை "முற்றிப் போன பைத்தியக்காரன்" என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது!

பைத்தியக்காரனின் சினேகிதன்/அடிமை/எஜமான் மட்டும் நல்ல மன நிலை கொண்டவராகவா இருக்க முடியும்?

நான் இஸ்ரேலின் நெதன்யாஹூ வை சொல்கிறேன். 

நீங்கள் யாரை நினைத்தீர்கள்? 

Monday, March 16, 2026

பெருமையும் நிறைவும் அளித்த விருது

 


மோடி அரசின் கலாச்சாரத்துறையின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 2025 ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது ஒருவழியாக இன்று அறிவிக்கப்பட்டு விட்டது.

கால தாமதமானாலும் மிகச் சரியான ஒருவருக்கே இந்த ஆண்டு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழின் முன்னணி எழுத்தாளரான தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு "தமிழ்ச்சிறுகதையின் தடங்கள்" நூலுக்காக அளிக்கப்படவுள்ளது. இந்த ஆண்டு சென்னை புத்தக விழாவில் வாங்கியுள்ளேன். விரைவில் படிப்பேன்.

தோழர் ச.தமிழ்ச்செல்வன் எழுத்தாளர் மட்டுமல்ல, அரசியல், கலை, பண்பாடு என பல தளங்களில் தீவிரமாக செயல்பட்டு வரும் அமைப்பாளர். முன்னாள் ராணுவ வீரரான அவர் அஞ்சல் தொழிற்சங்கத்தில் பொறுப்பாளராக செயல்பட்டுள்ளார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் ஆணி வேராக திகழும் தோழர்.

தஞ்சை மாவட்டத்தில் நிலப்பிரப்புத்துவக் கொடுமைக்கு எதிராக நடைபெற்ற எழுச்சியை அவரது புதிய நூலான "திருப்பி அடித்த வரலாறு" சொல்லும். 

மிகச் சிறந்த சிறுகதைகளையும் பல்வேறு அர்த்தமிக்க நூல்களையும் எழுதியவர். அவரது தொழிற்சங்க அனுபவங்களை சொல்லும் "ஜிந்தாபாத், ஜிந்தாபாத்" நூல் எப்போதும் எனக்கு உணர்வூட்டும். எங்கள் வேலூர் கோட்டச்சங்க அனுபவங்களை அதன் வெள்ளி விழாவின் போது தொகுக்க எனக்கு வழிகாட்டியது அந்த நூல்தான்.

சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இல்லாத மிகச் சிறந்த மனிதர். எங்கள் சங்கத்தோடு நெருக்கமான உறவு கொண்டவர். எங்கள் கோட்டத்தின் மகளிர் மாநாடு, தொழிற்சங்க வகுப்பு ஆகியவற்றில் கலந்து கொண்டவர்.

தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.


எங்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அளவில் நடைபெறும் வெண்மணி சங்கம நிகழ்வில் தோழர் தமிழ்ச்செல்வன். 



ஏலகிரியில் நடைபெற்ற எங்கள் கோட்டத்தின் தொழிற்சங்க பயிலரங்கில்  தோழர் தமிழ்ச்செல்வன்.  


பாலக்காட்டில் நடைபெற்ற தென் மண்டல பயிலரங்கில் வகுப்பெடுத்த தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்குகையில்.


மதுரையில் நடைபெற்ற தமிழ் மாநில மகளிர் கலை விழாவில் தோழர் தமிழ்ச்செல்வன்.