Saturday, February 28, 2026

கட்சியின் பெயரை மாத்திடுங்க எடப்பாடி

 


நாளை மதுரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் மோடி பேசுகிறார். அதற்காக அமைக்கப்பட்ட அரங்கின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் படத்தை பாஜகவினரின் கட்டளைப்படி அதிமுக அகற்றியுள்ளது. 


இன்றைய எடப்பாடி திமுகவிற்கு தந்தை பெரியாரெல்லாம் தேவை இல்லை என்பதினால் கட்டளையை நிறைவேற்றி விட்டார். அவர்களுக்கு எம்.ஜி.ஆர், ஜெ கூட முக்கியமில்லை. எம்.ஜி.ஆர் நூற்றாண்டை கொண்டாடிய போது சேலத்தில் எடப்பாடி, ஓ.பி.எஸ் ஆகியோரின் கட்டவுட்கள் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டிருந்த போது எம்.ஜி.ஆர், ஜெ வின் கட்டவுட்டுகள் தம்மாத்தூண்டாக இருந்ததை நானே நேரில் பார்த்துள்ளேன். 

சங்கிகளுக்கு தந்தை பெரியாரை மட்டுமல்ல, அறிஞர் அண்ணாவையும் பிடிக்காது. அறிஞர் அண்ணாவை இழிவு படுத்தியவர்களோடு இனி எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது என்று சொல்லித்தான் கடந்த மக்களவைத் தேர்தலின் போது என்.டி.ஏ விலிருந்து வெளியே வந்தார்கள். மக்கள் அதையெல்லாம் மறந்திருப்பார்கள் என்று நினைத்துத்தான் இப்போது மீண்டும் கூட்டணிக்குள் நுழைந்துள்ளார் எடப்பாடி.

இன்று தந்தை பெரியார் படத்தை நீக்கச் சொன்ன பாஜக உங்கள் கட்சியிலின் பெயரிலிருந்தும் கட்சியின் கொடியிலிருந்தும் அண்ணாவை நீக்கச் சொல்வார்கள். நீங்களும் வெட்கமில்லாமல் அதை செய்வீர்கள். பாஜக சொல்லி செய்வதற்குப் பதிலாக நீங்களே உங்கள் கட்சியின் பெயரை எ.தி.மு.க என மாற்றி விடுங்கள்.

எதிமுக என்றால் எடப்பாடி திமுக என்றும் சொல்லலாம். எட்டப்பன் திமுக என்றும் சொல்லலாம். 

ANTI INDIAN ஆக இருப்பதே பெருமை

 


பாஜகவின் பிஞ்சிலே வெம்பிப் போன, விமானத்தின் எமர்ஜென்சி கேட்டை ஆட்டுக்காரனோட திறக்க முயற்சித்த தேஜஸ்வி சூர்யா உதிர்த்த முத்து கீழே.


மோடியை ஆதரித்து இந்தியனாக இருப்பதற்கு பதிலாக மோடியின் கொள்கைகள், நடவடிக்கைகள், அராஜகங்கள் ஆகியவற்றுக்கு எதிராக நின்று தேசத்துரோகி பட்டம் பெறுவதே மேல் . . .

Friday, February 27, 2026

மோடிஷா அரசியல் செய்ய முடியாதே ஜட்ஜய்யா?

 


ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால்,  துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோரை டெல்லி உயர் நீதிமன்றம் ஊழல் வழக்கிலிருந்து முற்றிலுமாக விடுவித்துள்ளது. 

மோடி, அமித்ஷாவின் ஏவல் நாய்களாக செயல்பட்டு வரும் சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு ஆகியவைகளுக்கு கிடைத்த சவுக்கடி இத்தீர்ப்பு.

தென் பகுதி மக்களை இழிவுபடுத்துவது போன்ற வார்த்தைப் பிரயோகங்களுக்கு வேறு குட்டு வைத்துள்ளது. 


சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு போன்றவை இனியாவது தங்களது சுயேட்சைத் தன்மையை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆட்சியாளர்களின் அடிமைகளாய் இருப்பதை நிறுத்த வேண்டும்.

அப்படி செயல்பட்டால் மட்டுமே மோடி-அமித்ஷா வகையறாக்களின் வாஷிங் மிஷின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.


நெகிழ்ச்சியாய் இருந்தது முதல்வரே . . .


 

மறைந்த பொதுவுடமை இயக்கத் தலைவர் தோழர் ஆர்.நல்லக்கண்ணு அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் முழக்கங்களை எழுப்பிய காட்சி  மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.


இது தேர்தல் கால செய்கை என்றெல்லாம் சிலர் நக்கலடிக்கலாம். அவருக்கு முதல்வராகும் யோகமே கிடையாது என்றெல்லாம் ஜாதகம் பார்த்து சொன்னவர்களால் அவர் முதல்வராக இருப்பதை இன்னமும் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் அப்படிப்பட்ட சின்ன புத்திக்காரர்களை ஒதுக்கித் தள்ளுவோம்.

அவர் இன்று முழக்கம் எழுப்பியது இயல்பாக, மனதிலிருந்து வந்ததாகத்தான் நான் உணர்கிறேன். 

Thursday, February 26, 2026

நடுஜாமத்துல சுடுகாட்டுக்கு நீங்க போங்க மோடி

 

\இன்று காலை ஆங்கில இந்து நாளிதழை கையிலெடுத்ததுமே கடுப்பானது. 


இஸ்ரேல் நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய மோடி, இஸ்ரேலோடு இந்தியா உறுதியாக நிற்கிறது என்று பேசியுள்ளார். இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தை ஒழித்துக் கட்டுவதில் அவர் உறுதியாக இருக்கிறாராம். இஸ்ரேல் மீது 07, அக்டோபர், 2023 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என்று வேறு சொல்லியுள்ளார்.

இஸ்ரேல் பற்றிய எந்த வித புரிதலும் இல்லாத ஆள் என்று மோடியை சொல்ல முடியாது. இந்தியாவில் ஊடகங்களையும் எதிர்க்கட்சியினரையும் உளவு பார்க்க பெகாஸஸ் மென் பொருளை இஸ்ரேலிடமிருந்துதானே அவர் வாங்கியிருந்தார்.

ஹமாஸிடம் அடி வாங்குமளவிற்கு இஸ்ரேல் என்ன அப்பாவி நாடா? மகாத்மா காந்தியின் அஹிம்சைக் கொள்கையை பின்பற்றும் நாடா அது?

இஸ்ரேலின் தோற்றமே அராஜகமானது. பாலஸ்தீனியர்களை அவர்களின் சொந்த மண்ணிலிருந்து துரத்தி விட்டு அடாவடியாக ஆக்கிரமிப்பு செய்து உருவானதுதான் இஸ்ரேல்.

காஸா திட்டு, மேற்குக் கரை என்று இரு பகுதிகளோடு சுருங்கிப் போன பாலஸ்தீனத்தை அங்கேயாவது நிம்மதியாக வாழ விட்டார்களா?

மோடி சொல்கிற & அக்டோபர் 2023 தாக்குதலுக்குப் பிறகு எழுதிய பல பதிவுகளின் இணைப்பை கீழே அளித்துள்ளேன். தயவு செய்து பொறுமையாய் படியுங்கள்.










ஏற்கனவே பாலஸ்தீனியர்களில் பாதிப் பேரை கொன்று விட்ட இஸ்ரேல், ஹமாஸின் தாக்குதலுக்குப் பின்பு இன்னும் பல்லாயிரம் பேரை கொன்றுள்ளது. குழந்தைகளையும் பெண்களையும் கூச்சமின்றி கொன்றுள்ளது. மருத்துவமனைகளை குறி வைத்து தாக்கியுள்ளது. 

உலகின் மிகப் பெரிய தீவிரவாத நாடு, பேரழிவு சக்தி இஸ்ரேல்.

நீங்கள் அதனுடன்தான் நிற்பீர்கள்.
 
அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

இஸ்ரேலோடு போராடுபவர்களின் மதம் உங்களுக்கு பிடிக்காது.

உங்கள் எஜமானன் அமெரிக்காவின் நண்பன் இஸ்ரேல்.

அதனால் நீங்கள் இஸ்ரேலோடு நில்லுங்கள். 

ஏன் இந்தியா நிற்கிறது என்று சொல்லி எங்களையும் நடு ஜாமத்தில் சுடுகாட்டுக்கு அழைக்கிறீர்கள்? 

முந்தித்தருவதில் என்ன அவசரம்? ஆர்வம்?


 சமூக வலைத்தளக் காலம் வந்ததிலீருந்தே ஒரு மோசமான போக்கு உருவாகி விட்டது.

"உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக" என்று தொலைக்காட்சிகள் அறிவிப்பது போல 

பல செய்திகளை தாங்கள்தான் முதலில் தெரிவித்தோம் என்று பெருமை பெற பலரும் ஆசைப்படுகிறார்கள்.

மொக்கை செய்தி தொடங்கி மரணச் செய்தி வரை முதலில் தெரிவித்து R.I.P போடுவதில் பயங்கர ஆர்வம்.

அதிலும் ஆளுமைகள் யாராவது மோசமான நிலைமையில் இருந்தால் அந்த ஆர்வம் கட்டுக்கடங்காமல் போய் விடுகிறது.

ஜெ விஷயத்தில் அந்த வேலையை ரங்கராஜ் பாண்டே செய்தார்.

தோழர் நல்லக்கண்ணு அவர்களுக்கு நேற்று முன் தினமே ஆர்.ஐ.பி போட ஆரம்பித்து விட்டார்கள்.

இப்படித்தான் டிசம்பர் இறுதியில்  இயக்குனர் பாரதிராஜா பற்றி வதந்தி பரப்பினார்கள். அவர் இன்னும்  மருத்துவமனையில் சிகிச்சையில்தான் உள்ளார்.

சமூக வலைத்தளத்தில் செயல்படுவோருக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.

நீங்கள் பதிவிடும் எந்த ஒரு செய்தியையும் அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்து கொண்டு பதியுங்கள்.

நீங்கள் ரங்கராஜ் பாண்டே கிடையாதல்லவா,  வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை இல்லாமல் முதலைத் தோலுடன் செயல்பட . . .

Wednesday, February 25, 2026

செவ்வணக்கம் தோழர் நல்லக்கண்ணு

 


மூத்த பொதுவுடமை இயக்கத்தலைவர்,

சுதந்திரப் போராட்ட வீரர்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராய் செயல்பட்டவர்,

சிறை வாழ்வையும் தலைமறைவு வாழ்வையும் மகிழ்வாய் அனுபவித்தவர்.

இறுதி மூச்சு வரை போராளியாய் திகழ்ந்தவர், எளிமையாய் வாழ்ந்தவர், 

நூற்றாண்டு கண்ட தகைசால் தமிழர் 

தோழர் ஆர்.நல்லக்கண்ணு அவர்களுக்கு

நெஞ்சார்ந்த அஞ்சலி, செவ்வணக்கம் தோழர்.

அவரை ஒரே ஒரு முறைதான் பார்த்துள்ளேன். கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய செயற்குழுக் கூட்டத்திற்கு செல்ல புகைவண்டியை பிடிக்க சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த போது அங்கே வந்த அப்போதைய திருநெல்வேலி கோட்டப் பொதுச்செயலாளர் தோழர் டி.தேவபிரகாஷ், எனக்கு முன் இருந்த நாற்காலியைக் காண்பித்து யார் உட்கார்ந்திருக்கிறார் என்று பார்த்தாயா என்று கேட்டார்.

அங்கே அமர்ந்திருந்தது தோழர் ஆர்.நல்லக்கண்ணு.

தோழர் தேவபிரகாஷ் அவரோடு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார். என்னையும் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் மாநிலச் செயலாளர். ஆனால் தனியாகத்தான் இருந்தார். எந்த ஆரவாரமும் இல்லை. 

அவர்தான் தோழர் நல்லக்கண்ணு.