Tuesday, November 18, 2025

‘ஆயிரம் வெள்ளி வாட்சப் பேய்’

 
சமூக செயற்பாட்டாளர் தோழர் அ.முத்துகிருஷ்ணன் அவர்களின் முகநூல் பதிவை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள பேய்கள் இந்தியாவுக்கு வரும் போது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமல்லவா! 

அடுத்தவன் காசை அடிக்க ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

ரஞ்சித்தின் ‘PayNow’-க்கு ஒரு 100 வெள்ளி பணம் வந்தது. Notification-ஐப் பார்த்ததும் செயலிக்குள் சென்று யார் அனுப்பியிருக்கிறார்கள் என்று பார்க்க முயன்றார். முகம் தெரியாத ஒருவர் அனுப்பியது போல இருந்தது. தவறுதலாக வந்திருக்கலாம்; திருப்பி அனுப்ப வழி இருக்கிறதா? என்று நினைத்தபடி, அடுத்த வேலைகளில் மூழ்கினார்.

மூன்று நாட்களுக்கு பின்னர் ஒரு அழைப்பு வந்தது. “உங்களுக்கு பணம் வந்ததா?” என்று ஒருவர் கேட்டார். ரஞ்சித் “ஆமாம்” என்றதும், “உடனே அதை திருப்பி அனுப்புங்கள்; வட்டியுடன் 150 வெள்ளி அனுப்ப வேண்டும்” என்று மிரட்டல் கலந்த குரலில் கேட்டான். வம்பு எதற்கு என்று ரஞ்சித் 150 வெள்ளி அனுப்பிவிட்டார். அன்றைய அலுவலகப் பணி சுமையில் இதற்கு நேரமிருந்ததே இல்லை.

ஒரு மாதம் கழித்து, மீண்டும் இதேபோல் அவரது அலைபேசி சினுங்கியது. இந்த முறை 1000 வெள்ளி பணம் வந்திருந்தது. ரஞ்சித் வங்கி செயலியில் பார்த்துவிட்டு மீண்டும் அவரது அன்றாட, ஆபீஸ் வேலைகளில் மூழ்கிப் போனார்.

இரண்டு–மூன்று நாட்களுக்கு பிறகு அழைப்பு வந்தது. ஆனால் இந்த முறை பெரிய மீன் வந்து வலையில் அகப்பட்டது. அழைப்பு வந்ததும் ரஞ்சித் அந்த எண்ணை உடனே எல்லா வழிகளிலும் BLOCK செய்து விட்டார். பணம் அனுப்பியவன் பதறிப் போனான்; ஒரு ஆயிரம் அனுப்பிவிட்டு “1500… 2000…” என்று பெரிய திட்டம் போட்டவன், “அடேய், இது என்னடா முதலுக்கே மோசமாகிவிட்டது!” என்று திகைத்து நின்றான்.

ரஞ்சித், 100 வெள்ளி வந்த நாளிலேயே முழுக் கதையையும் எழுதி காவல்துறைக்கு புகார் செய்திருந்தார். இன்றும் அதே ஆயிரம் வந்ததும் உடனடியாக மறுபடியும் புகார் செய்து முடித்தார். “உங்கள் சேவையில் நாங்கள், இதனை முழுமையாக நாங்களே டீல் செய்கிறோம்” என்று காவல்துறை உறுதி அளித்தது.

காவல்துறைக்கு சொன்னால் போதும், இனி நிம்மதி கிடைக்கும் என்று ரஞ்சித் நினைக்கவில்லை. இந்த scammers இதைத் தாண்டியும் வருவார்கள் என்று அவர் நிச்சயமாக அறிந்திருந்தார். தான்ன் வேலை செய்யும் நிறுவனத்திலும் HR department-க்கும் முன்கூட்டியே இரு சம்பவங்களையும், காவல்துறை புகாரையும் முழுமையாக விளக்கிவிட்டார். Expect for a call என்று மனநிலையை தயார் செய்துவிட்டார்.

வேலையிடம் பாதுகாக்கப்பட்டது. ஆனாலும் “அவன் இன்னும் என்ன செய்வான்?” என்று ரஞ்சித் காத்திருந்தார். ஆனால் அந்த கும்பல் ரஞ்சித் எதிர்பார்க்காத கோணத்தில் அடித்தது.

ரஞ்சித் குடியிருந்த வீடு ஒரு சீனரின் வீடு. அந்த scammer நேரடியாக வீட்டின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு, “உன் வீட்டில் இருக்கும் ரஞ்சித் எனக்கு பணம் தர வேண்டும்; அவனிடம் இருந்து எனக்கு பணம் பெற்று கொடு. இல்லையெனில் அவனை வீட்டிலிருந்து துரத்திவிடு!” என்று கத்தியிருக்கிறான்.

ரஞ்சித் வழக்கம் போல் தனது முழுக் கதையையும், தெளிந்த தொணியில் உரிமையாளரிடம் விளக்கினார். “இது அவனுக்கும் எனக்கும் நடக்கும் விஷயம். நீ தேவையில்லாமல் இதில் தலையிட வேண்டாம். நான் மாதம் வாடகையை சரியாகத் தருகிறேனா? அதுவே நமக்குள்ள டீல்.” என்று சொன்னார்.

சில நாட்கள் அமைதி நிலவியது, ஆனால் அமைதிக்குப் பின்னர் புயல் வரும் தானே. இந்த முறை அந்த சீன வீட்டு உரிமையாளரை வேறு வழியில் மிரட்டினான். “இங்கே பாரு சொல்றதைக் கேட்கலைனா, உடனடியாக ரஞ்சித்தின் WhatsApp-க்கு பேயை அனுப்பி, அந்த வீட்டில் நிரந்தரமாக பேயை குடி வைப்பேன்!” என்று மிரட்டல் விடுத்தான்.

சீன நாட்டுப்புறக் கதைகளில் பல வகையான பேய்கள், அரக்கர்கள் இடம் பெறுகின்றனர். நாட்டுப்புறக்கதைகளில் மட்டும் அல்லாமல் நவீன இலக்கியம், திரைப்படங்கள் வரை அவற்றின் செல்வாக்கு இன்றும் உள்ளது.

பேய்கள் இறந்தவர்களின் ஆவி வடிவம். அதிகம் தீங்கு விளைவிப்பவை என்றும் தூண்டினால் உயிரோடு உள்ளவர்களுக்கு கேடு செய்யும் என்றும் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை சீனத்தில் மட்டும் அல்ல; முழு கிழக்கு ஆசிய புராணங்களிலும் பாய்ந்து நிற்கிறது.

சிங்கப்பூரில் சீனர்கள் கடைப்பிடிக்கும் பேய் நம்பிக்கைகள் பெரும்பாலும் Hungry Ghost Festival-ஐ அடிப்படையாகக் கொண்டவை. ஏழாவது சந்திர மாதத்தில் ஆவிகள் பூமியில் சுற்றும் என நம்பப்படுகின்றது. அந்த மாதத்தில் இரவு வெளியே செல்வது, நீச்சல் அடிப்பது, விசில் அடிப்பது போன்றவை தவிர்க்கப்படுகின்றன. திருமணம், வீடு மாறுதல், புதிய வியாபாரம் தொடங்குதல் போன்ற முக்கிய நிகழ்வுகளும் தவிர்க்கப்படுகின்றன. கண்ணாடி முன் யாரும் உறங்குவதில்லை. துவைத்த ஆடைகளை இரவு வெளியே உலர விட்டால், மேன்மை தாங்கிய ஆவிகள் அந்த ஆடைகளை “அணிந்து கொள்வார்கள்” என்றும் நம்பப்படுகிறது.

பேய்களுக்கு தெருக்களில், பூங்காக்களில் வைக்கப்படும் படையல்களைத் தொந்தரவு செய்யக் கூடாது. எங்கள் கவிஞர்கள் வண்ணத்துப்பூச்சியைப் பார்த்தாலே கவிதை எழுத துவங்கிவிடுவார்கள்; ஆனால் இங்கே வண்ணத்துப்பூச்சிகளையும் ஆவி வடிவமாகவே நினைக்கிறார்கள். வண்ணத்துப் பூச்சிகளின் உடலை ஆவிகள் தற்காலிகமாகப் பயன்படுத்துவர் என நம்புகிறார்கள்.

சீனர்கள் இறந்தவர்களை மதித்து வழிபட்டால் குடும்பத்துக்கு பாதுகாப்பும் அதிர்ஷ்டமும் வரும் என்று நம்புகிறார்கள். இறந்தவர்களை தொடர்பு கொள்ள முடியும் என்று திடமாக நம்புகிறார்கள். அதற்கு பல ஊடகங்கள் வைத்துள்ளார்கள். சீனா, தைவான், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நடைபெறும் வருடாந்திர பேய் திருவிழாவில் தூபம், காகிதப் பணம், உணவு போன்றவை அர்ப்பணிக்கப்படுகின்றன.

இந்த நாடுகள் முழுவதும் நான் பயணிக்கும் நேரம் ஒவ்வொரு வீட்டின் முன்பும் குடியிருப்பு பகுதிகளிலும் ஒரு அண்டா மாதிரியான பாத்திரத்தில் காகிதம் எரிக்கப்படுவதை பார்த்தேன். ஒரு நாள் நண்பர் சுரேஷிடம் இது என்னடா தம்பி என்று கேட்டேன், அவன் போகிற போக்கில் “அண்ணே செத்த முன்னோருக்கு செலவுக்கு துட்டு அனுப்புறாயிங்கண்ணே” என்றான். இதை இவன் ஜாலியா சொல்றானா, உண்மையத்தான் சொல்றானா என்று அன்றைக்கு குழம்பினேன், ஆனால் ரஞ்சித்தின் பேய் அதை நமக்கு உறுதிப்படுத்திக் கொடுத்தது.

இவ்வளவு பேய் விசயங்கள் இருந்தால் வீட்டு ஓனர் பயப்படாமல் என்ன செய்வார்! அவர் பேய் கதைகளின் பயத்துடனேயே ரஞ்சித்திடம் வந்தார். ரஞ்சித், “பேசி முடிச்சிட்டீங்களா, ஓகே வாட்சப்பில் பேய் வரட்டும். வந்தால் அதோடே நான் வாழ்கிறேன். நான் வீட்டை காலி செய்யும் நாளில் ஒரு பேய் ஓட்டுகிறவனை வைத்து அதை ஓட்டிவிட்டு தான் போவேன்!” என்று தன் திரைக்கதையை முடித்தார்.

ரஞ்சித்தின் WhatsApp-க்கு பேய் வந்துவிட்டதா? அல்லது இனி மேல் தான் வரப்போகிறதா? தெரியவில்லை. அவர் அடிக்கடி பயணம் செய்யும் தாய்லாந்து, வியட்னாம், லாவோஸ் என அந்த பேய்கள் தவறாக சிங்கப்பூரை விட்டு வேறு எங்கும் டவுன்லோடு ஆகிவிட்டதா என்றும் தெரியவில்லை. பாஸ்போர்ட் இல்லாமல் பேய்கள் வேறு நாட்டில் சுற்றினால் அதுவும் தண்டனைக்குரிய குற்றம்.

ஆனால் இன்னும் ரஞ்சித் அவரது WhatsApp-ல் அந்த ‘ஆயிரம் வெள்ளி பேயின்’ வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறாராம்.

“இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல, இங்க பல கம்பெனிகளில் பேய் ஓட்டுகிற ஒருவரை நிரந்தர் ஊழியராக வைத்துள்ளார்கள்” என்றான் “அடேய் என்னடா சொல்ற” என்றேன்….

காலிஃப்ளவரும் கொலைகார சங்கிகளும்

 


"காலிஃப்ளவர் சாகுபடிக்கு பீகார் ஒப்புதல் அளித்து விட்டது" 


இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் எம்.ஏ.பேபி அவர்களின்  கண்டன அறிக்கைதான் அந்த காலிஃப்ளவர் சாகுபடியின் விபரீத அர்த்தத்தை உணர்த்தியது.


பீகார் மாநிலம் பகல்பூரில் 1989 ல் நடைபெற்ற கலவரம் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் உயிரை குடித்தது. அதில் 90 % மேற்பட்டவர்கள் இஸ்லாமியர்கள். அங்கே லோகைன் என்ற கிராமத்தில் 116 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுடைய சடலங்களை புதைத்து அந்த இடத்திற்கு மேல் சங்கி வெறியர்கள் காலிஃப்ளவரையும் முட்டைக் கோஸையும் பயிரிட்டு கொலைகளுக்கான தடயத்தை மறைத்துள்ளனர். 

இஸ்லாமியர்களை கொன்றதற்கும் அவர்கள் சடலங்கள் புதைக்கப்பட்ட இடத்தை காலிஃப்ளவர் பயிரிட்டு மறைத்தமைக்கும் பீகார் மக்கள் ஒப்புதல் அளித்து விட்டார்கள் என்று தேர்தல் முடிவுகளுக்கு விபரீத அர்த்தம் சொல்லும் அந்த சங்கி ஒரு சாதாரண முரட்டு, முட்டாள் சங்கி மட்டுமல்ல, அஸ்ஸாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்.

தாங்கள் செய்யும் கொலைகளுக்கு காலிஃப்ளவரை சங்கிகள் இழுப்பது இது முதல் தடவை அல்ல.

மாவோயிஸ்டு முத்திரை குத்தி போலி மோதல்கள் மூலம்  சத்திஸ்கர் மாநிலத்தில் மனித வேட்டை நடந்த போது கர்னாடக பாஜக ட்விட்டரில் ஒரு பதிவு போடுகிறது. அதிலே கொலைகார அமித்ஷா கையில் காலிஃப்ளவர். 


அராஜகக் கொலைகளை நியாயப்படுத்த காலிஃப்ளவரை பயன்படுத்துவது ஒரு புறம் இருக்கட்டும், 

தங்களின் அரசியல் எதிரிகளை கொலை செய்து அதை பெருமையாக சொல்லிக் கொள்ளும் போக்கு இருக்கிறதே, அது மிகவும் மோசமானது, அபாயகரமானது, அனைவரையும் அச்சுறுத்துவது.

சங்கிகள் கொலை பாதகப்பாவிகள் என்பதற்கு அவர்களே தொடர்ந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களை வெறுத்து ஓதுக்கித் தள்ள வேண்டிய மக்கள் ஓட்டு போட்டு ஆட்சியில் உட்கார வைக்கிறார்கள் என்பதுதான் இந்தியாவின் பெரும் துயரம். 

Monday, November 17, 2025

சபாஷ், சரியான தீர்ப்பு

 தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முன்னாள் பொதுச்செயலாளரும் தற்போதைய துணைத்தலைவருமான தோழர் கே.சாமுவேல்ராஜ் அவர்களின் முகநூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

நீதித்துறை மீது அவ்வப்போது நம்பிக்கை இது போன்ற தீர்ப்புக்கள் அளிக்கிறது. 






சாதி வெறியன் தண்டபாணிக்கு

மற்றும் 10 ஆண்டுகள் தண்டனை!
அனுசுயா என்கிற தலித் பெண்ணை
வாழ்க்கை துணையாக தெரிவு செய்து கொண்டதற்காக 14.04.2023 அன்று
தான் பெற்ற மகன் சுபாசையும்,
தன்னை பெற்ற தாய் கண்ணம்மாவையும்
படுகொலை செய்து
அனுசுயாவையும் கொடுங்காயப்படுத்திய
சாதி வெறியன் தண்டபாணிக்கு
இரட்டை ஆயுள் மற்றும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

அனுசுயாவிற்கு மாவட்ட நிர்வாகம் இரண்டரை லட்சம் ரூயாய் வழங்கிட
கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை
அமர்வு நீதிமன்றம் 10 நிமிடங்களுக்கு முன்பு உத்தரவு!

கொலை பாதகன் வெறி கொண்டு வீசிய ஒவ்வொரு அரிவாள் வீச்சையும்
தனது கைகளால் தாங்கி
விரல்கள் அனைத்தும் சேதாரமாகி
முகத்திலும் தலையிலும்
கொடுங்காயங்களைத் தாங்கி
உடலில்,மனதில் தீராத வடுக்களுடன்
மகள் அனுசுயா மன உறுதியால் நம்முன் கம்பீரமாக நிர்கிறார்.

உடலில் 10 அறுவை சிகிச்சைகள்
சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் அனுசுயாவிற்கு மருத்துவத்தோடு அன்பையும் கலந்து கொடுத்தனர்.அவர்கள்
போற்றதலுக்குறியவர்கள்.

நிறைய அமைப்புகள் ஆதரவு தெரிவித்தார்கள்.உளப்பூர்வமாக ஆறுதலை பகிர்ந்தார்கள்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆறுதலுடன் நிதியும் அனுசுயாவிற்கு வழங்கியது நினைவு கொள்ளத்தக்கது.

இந்த படுபாதகம் நிகழ்ந்தப்பட்ட நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளது.வழக்கின் ஒவ்வொரு திருப்பத்திலும் உடன் பயணம் செய்தோம்.

போராட்டங்கள்,பயணங்கள்,வழக்கறிஞர் சந்திப்புகள்,விவாதங்கள் நம் கண் முன்னால் வானமாக விரிகிறது.

மருத்துவர்கள்,மருத்துவ மனையில் உதவிய சேலம் தோழர்கள்,கல்விக்கு உதவிய இன்சூரன்ஸ் சங்கத்தின் தோழர்கள்,ஒவ்வொரு வாய்தாவிலும் அணிவகுத்து வருகை தந்து வழி செலவுகளையும்,வயிற்றுக்கு உணவும் வழங்கிய கிருஷ்ணகிரி மாவட்டத் தோழர்கள்,மாநில மையத் தோழர்கள் எல்லோருக்கும் இயதபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

சி.பி.எம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மேற்கொண்டு வரும் ஆற்றல் மிகுந்த எங்களது பயணம் தொடரும்...

பிகு: இந்தப் பெண்ணின் கல்விக்கு உதவ ஒரு வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அது பற்றி தனியாக எழுதுகிறேன்.

Sunday, November 16, 2025

விளம்பரம்னாலும் நியாயம் வேணாமாடா?


 இன்று காலையில் நாளிதழ் தாமதமாகத்தான் வந்தது. புதிதாக வெளியான திரைப்படத்தின் முதல் நாள், முதல் காட்சி பார்க்க கல்லூரி முதல்வர் கட் அடித்து விட்டு போனார் என்பது தலைப்புச்செய்தி.

இதெல்லாம் ஒரு தலைப்புச் செய்தியா என்று எரிச்சலுடன் பார்த்தால் முதல் பக்கத்தில் வந்தது ஒரு நூடுல்ஸின் விளம்பரம்  என்றும் எல்லா செய்திகளுமே கிறுக்குத்தனமான செய்திகளாகத்தான் இருந்தன.


மத்த செய்தியை எல்லாம் கூட ஏத்துக்கலாம். இந்தியாவோட ஒட்டு மொத்த உற்பத்தி (ஜி.டி.பி) வரலாறு காணாத அளவு உயர்ந்தது என்ற செய்தியை மட்டும் என்னால் மன்னிக்கவே முடியவில்லை.

மோடியோட ஆட்சியில பொருளாதாரத்தின் எல்லா அளவுகோள்களிலும் வீழ்ச்சிதான் ஏற்பட்டுள்ளதே தவிர எந்நாளும் உயர்ந்ததில்லை. உயரப் போவதும் இல்லை.

விளம்பரம்னாலும் ஒரு நியாயம் வேண்டாமாடா?

Saturday, November 15, 2025

கவலைக்கிடமாய் . . .

 


தேர்தல் ஆணையத்தின் தில்லுமுல்லு,

வாக்குத் திருட்டு,

மத வெறி பிரச்சாரம்,

தேர்தலுக்கு முதல் நாள் வெடித்த வெடிகுண்டு,

தமிழ்நாட்டில் 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுவதை பிச்சை கொடுப்பது என்று இழிந்து பேசிக் கொண்டே பத்தாயிரம் ரூபாய் அளித்தது,

என்று ஏராளமான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதெல்லாம் நமக்கு   நாமே ஆறுதல் சொல்லிக் கொள்வதாகத்தான் இருக்கும். 

அயோக்கியத்தனம் செய்வதையே வாழ்வியலாகக் கொண்டவர்களால் மீண்டும் மீண்டும் வாக்குகளைக் குவிக்க முடிகிறது என்றால்

நம் மக்களிடமும் ஏதோ கோளாறு இருக்கிறது. தங்கள் வாழ்வைப் பறிக்கிறவர்களையே விரும்புகிற அளவிற்கு மோசமாகி விட்டார்கள்.

அவர்களின் நம்பிக்கையை "இந்தியா" எப்படி வெல்லப் போகிறது?

இப்போது இந்திய ஜனநாயகத்தின் நிலைமை தீவிர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமாக உள்ளது. அது மீளுமா அல்லது மீளாத்துயரை நமக்கு அளிக்குமா?

சிகிச்சை தர வேண்டிய பொறுப்பில் உள்ள "இந்தியா" அணி தங்களுக்குள் உண்மையான பரிசீலனை செய்ய வேண்டும். 

அநேகமாக "இந்தியா" அணியின் அனைத்து கட்சிகளுக்குள்ளும் சங்கிகள் ஸ்லீப்பர் செல்களாக ஊடுறுவியுள்ளனர். அவர்கள் கண்டறியப்பட்டு தூக்கி வீசப்பட வேண்டும். 

பல கட்சிகளிலும் (இடதுசாரிகள் உட்பட) களைகள் மண்டிக் கிடக்கின்றன. கொஞ்சம் கூட தயவு தாட்சண்யமின்றி அந்த களைகள் அகற்றப்பட வேண்டும்.

மக்களின் உண்மையான பிரச்சினைகளை உணர்ந்து கொண்டு அவற்றின் தீர்வுக்கான போராட்டங்களை நடத்த வேண்டும். 

இவற்றையெல்லாம் செய்தால் ஜனநாயகம் பிழைக்கும். இல்லையென்றால் புலம்பலே வாழ்வாகும். 

Thursday, November 13, 2025

அந்த ஆட்டுக்குட்டி கதை பொய்யா?

 


நேற்று ஆங்கில இந்து நாளிதழில் படித்த செய்தி ஒன்று.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை "தேசியத் தலைவர்" என்ற பெயரில் திரைப்படமாக வந்துள்ளதாம்.

காமராஜர் பற்றி தவறாக சித்தரித்துள்ளதால் அத்திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று ஒரு நாடார் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை செய்யக் கோரியுள்ளது என்பதுதான் அந்த செய்தி. 

அப்படி என்ன தவறான செய்தி அத்திரைப்படத்தில் சொல்லப்பட்டுள்ளதாம்?

அந்த காலத்தில் தேர்தலில் நிற்க சொத்து வேண்டுமாம். காமராஜரிடம் எதுவும் சொத்து கிடையாது. காமராஜரின் அன்னை பெயரில் இருந்த நிலத்தை காமராஜர் பெயருக்கு மாற்றித் தர தேவர் சொன்ன போது அவர் தன் மகள் திருமணத்துக்கு அந்த நிலம் தேவை என்பதால் மறுத்து விட்டாராம். ஏனவே முத்துராமலிங்க தேவர் காமராஜருக்காக ஒரு ஆட்டுக்குட்டி வாங்கி  அதற்கு காமராஜர் பெயரில் ரசீது வாங்கினார். அந்த அடிப்படையில்தான் காமராஜர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

இந்த தகவலை இதற்கு முன்பு வாட்ஸப்பில் உலா வந்திருக்கிறது. 

இந்த தகவல் பொய்யானது, ஆதாரமற்றது, காமராஜர் மீது அவதூறு பரப்புகிறது என்பது வழக்கின் மையக்கருத்து. 

நான் கூட 

தலித் தலைவர் இமானுவேல் சேகரன் கொலை தொடர்பாக முதல்வராக இருந்த காமராஜர் முத்து ராமலிங்கத் தேவரை கைது செய்ய உத்தரவிட்டது,

முதுகளத்தூர் கலவரங்களை அடக்காமல் வேடிக்கை பார்த்தது.

கீழ்த்தூவல் என்ற இடத்தில் தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களின் கண்களைக் கட்டி போலீஸ் சுட்டது என்ற குற்றச்சாட்டு ஆகியவை பற்றிதான் திரைப்படம் காமராஜரை உண்மயாகவோ, தவறாகவோ சித்தரித்துள்ளதோ என்று நினைத்தேன்.

கடைசியில் பார்த்தால் "ஆட்டுக்குட்டி" பிரச்சினை!

பிகு: மேலே உள்ள படத்தில் ஆட்டுக்குட்டியை கையில் வைத்துள்ள ஆள்தான் டுபாக்கூர் என்பது இன்றைய நிலவரம் என்றால் அந்த காலத்திலும் ஆட்டுக்குட்டி கதை டுபாக்கூர்தான் போல . . .


Wednesday, November 12, 2025

அரசியல் அடிமையின் ஒப்புதல் வாக்குமூலம்

 


அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சொன்னதை "ஒப்புதல் வாக்குமூலம்" என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்.


இதிலே "சசிகலா ஜெயிலுக்கு போன பிறகு" என்று ஏன் சேர்க்கவில்லை என்று தெரியவில்லை. அவரிடம் அடிமையாக இன்னும் வாய்ப்பு இருப்பதால் சாய்ஸில் விட்டு விட்டாரோ!

பிகு: "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" நூலின் தலைப்பையும் அட்டைப்படத்தையும் உல்டா செய்தமைக்கு வழக்கறிஞரும் எழுத்தாளருமான தோழர் இரா.முருகவேள் மன்னிப்பாராக . . .