Tuesday, May 12, 2026

அதிமுக சண்டை புரியலை

 


எடப்பாடி கோஷ்டியும் சரி, வேலுமணி சரி ரெண்டு பேருமே கொள்கைக் குன்றுகள் கிடையாது. மோடியின் கட்டளைகளை நிறைவேற்ற தயங்காதவர்கள். பிறகு ஏன் அவர்களுக்குள் மோதல்?

மோடிக்கு எடப்பாடியையோ அல்லது வேலுமணியை பிடிக்காமல் போயிருக்கிறது. 

அதனால் அவர்கள் சண்டை செய்கிறார்கள்.

மோடியின் செல்லப்பிள்ளை யார் என்பது விரைவிலேயே தெரிந்து விடும்.


Monday, May 11, 2026

மோடியின் உபதேசம் ஊருக்குத்தான், எப்போதும் போல

 


மோடி நேற்று நாட்டு மக்களுக்கு சில உபதேசங்களை அருளியுள்ளார்.

அவை


"வீட்டிலிருந்து வேலை" என்பதற்கு முன்னுரிமை கொடுங்கள்

ஒரு வருட காலத்திற்கு தங்கம் வாங்குவதை தவிருங்கள்,

பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைப்பீர், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவீர்,

சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைத்திடுவீர்,

ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறைத்து இயற்கை உரங்களை நோக்கிச் செல்வீர்,

அன்னிய பிராண்டட் பொருட்களை வாங்குவதை குறைத்து சுதேசிப் பொருட்களுக்கு மாறுங்கள்.

இன்னும் ஒரு வருட காலத்திற்கு வெளிநாட்டுப் பயணத்தை தவிர்ப்பீர்.

இந்த உபதேசங்கள் எல்லாம் ஒரு கடுமையான தாக்குதலுக்கு நம்மை தயார்ப்படுத்தும் உத்தி. கொரோனா காலத்தில் செய்யப்பட்டது போல லாக் டவுன் கொண்டு வரலாம். 

பெட்ரோல், டீசல்,சமையல் எண்ணெய், ரசாயன உரங்கள்  ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்த்தப்படலாம்.

அன்னிய பிராண்டட் பொருட்கள் மீது கை வைக்கும் தைரியம் 56 இஞ்ச் மாவீரனுக்குக் கிடையாது என்பது நமக்கெல்லாம் நன்றாகவே தெரியும்.

இந்திய மக்களை ஒரு வருட காலத்திற்கு வெளி நாட்டுப்பயணம் மேற்கொள்ளக்கூடாது என்று சொல்லியுள்ள மோடி வரும் மே 15 அன்று ஒரு வார கால சுற்றுப் பயணம், அமீரகம், ஸ்வீடன், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு புறப்படுகிறார்.  

தன்னுடைய உபதேசம் மற்றவர்களுக்குத்தான், மக்களுக்குத்தான், தனக்குக் கிடையாது என்பதில் தெளிவாக உள்ளவர் மோடி. தான் சொன்னதை தானே மீறுகிறோமே என்ற கூச்சமும் கொஞ்சமும் இல்லாதவர்.

இந்த ஐந்து மாநிலத் தேர்தல்கள் இருந்ததால் இரண்டு மாதம் கட்டுப்பாடாக இருந்தார். மேலும் அவர் இந்தியாவிலேயே இருந்தால் என்ன ஆகும்?

மேலே உள்ள படத்தை மீண்டும் பார்க்கவும். 

கோஷ்டிச்சண்டை நல்லது ராகுல்

 


என்ன ராகுல் காந்தி, எங்கே இருக்கிறீர்கள்?

நேற்று சென்னையில் உங்கள் புதிய கூட்டாளி ஜோசப் விஜய்யின் பதவியேற்பு விழாவிற்கு வந்தீர்கள். ஒவ்வொரு அமைச்சரும் பதவியேற்ற பின் விஜய்யை பார்க்க வந்த போது நீங்கள் எழுந்து நின்றீர்கள். ஆனால் யாருமே உங்களை கண்டு கொள்ளவில்லை.

முழுமையான பெரும்பான்மை பெறாத விஜய் கூட முதலமைச்சராக பதவி ஏற்று விட்டார். ஆனால் பெரும்பான்மையை விட அதிகமான இடங்கள் பெற்றும் உங்களால் இன்னும் கேரள முதல்வர் யார் என்பதை முடிவு செய்ய முடியவில்லை.

மூன்று கொள்ளிகளில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று உங்களால் இன்னும் முடிவு செய்ய முடியவில்லை.

எந்த கொள்ளி கேரளா சி.எம்?

நான்காவதாக புரியாத ஆங்கிலம் பேசும் சசி தாரூரையும் கணக்கில் எடுங்களேன். இரண்டாவது மனைவி சுனந்தா மர்மமாக இறந்த வழக்கில் இருந்து விடுபட, சசி தாரூர்தான் தன் அம்மாவை கொலை செய்ததாக சுனந்தாவின் முதல் கணவர் மூலம் பிறந்த மகனின் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க மோடி புகழ் பாடிய, உங்களுக்கும் உங்கள் கட்சித்தலைவர் என்ற பதவியில் மட்டும் இருக்கும் மல்லிகார்ஜுன் கார்கேவிற்கும் அழைப்பு இல்லாத போதும் மோடி வைத்த விருந்தில் கலந்து கொண்ட சசி தாரூரும் முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர்தானே!

எப்படியானாலும் உங்கள் கட்சியில் நடைபெறும் கோஷ்டி மோதல், குடுமி பிடி சண்டை மிகவும் நல்லது. பத்தாண்டுகள் நல்லாட்சி புரிந்த தோழர் பினராயி விஜயன் அவர்களின் தலைமையிலான இடது முன்னணி ஆட்சியை தோற்கடித்த கேரள மக்களுக்கும் நல்லது.

அமரேந்திர பாகுபலியை கொலை செய்தது மிகப் பெரிய தவறு என்று கட்டப்பா, சிவகாமி தேவியிடம் சொன்னது போல  கேரள மக்களும் இடது முன்னணியை தோற்கடித்தது தவறு என்று தங்கள் மனசாட்சியிடம் சொல்வார்கள்.

மகேந்திர பாகுபலி மகிழ்மதி அரியணையில் அமர்ந்தது போல, இந்த பின்னடைவிற்குப் பிறகு மீண்டும் இடது முன்னணி கேரளத்தை வெல்லும். அதற்கு உங்கள் கட்சியின் இன்றைய, நாளைய, எதிர்கால கோஷ்டி மோதலும் ஒரு காரணமாக இருக்கும்.

அதனால் உங்கள் கட்சியின் கோஷ்டி மோதல் நல்லது, கேரளத்திற்கு, கேரள மக்களுக்கு . . .

Sunday, May 10, 2026

ரெவியின் சிரிப்புச்சத்தம் கேட்கிறதா?

 

ஆரெஸெஸ் ரெவி ஆட்டுத்தாடியாக இருந்த போது சட்டப்பேரவையில் முதலில் தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும், பிறகுதான் தமிழ்த்தாய் வாழ்த்து என்று அடம் பிடிக்க, நிகழ்வின் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, நிறைவில்தான் தேசிய கீதம் என்ற தமிழ்நாட்டின் மரபைத்தான் பின்பற்றுவோம் என திமுக அரசு உறுதியாக நிற்க, அது கடுமையான சர்ச்சையாக மாறியது.

இன்று புதிய முதல்வர் பதவியேற்பில் 

முதலில் வந்தே மாதரம்,
இரண்டாவதாக தேசிய கீதம்
கடைசியாக தமிழ்த்தாய் வாழ்த்து.

மேற்கு வங்க தேர்தலுக்காக வங்க மக்களை உசுப்பேற்ற மோடி கையில் எடுத்ததுதான் வந்தே மாதரம்.

அந்த அரசியலை அப்போதே மக்களவையில் தோழர் சு.வெங்கடேசன் பேசினார். அந்த அற்புதமான உரையை 


எந்த மேற்கு வங்க மக்களை ஏமாற்ற வந்தே மாதரப் பாடலை தூசி தட்டி எடுத்தார்களோ, அதே மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடப்படவில்லை. இத்தனைக்கும் அங்கே ரெவிதான் ஆளுனர்.

ஆனால் தமிழ்நாட்டிலோ நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே வந்தே மாதரமும் தேசிய கீதமும் பாடப்படுகிறது.

ஆரெஸெஸ் ரெவி தமிழ்நாட்டைப் பார்த்து நக்கலாக சிரிக்கும் சத்தம் உங்களுக்கும் கேட்கிறதா? 

பாஜகவின் அஜெண்டா, பாஜக ஆதரவு தெரிவிக்காத அரசால் அமலாக்கப் படுகிறது. இது தொடக்கம்தான். இன்னும் தொடரும் மோசமாக. 

Friday, May 8, 2026

கூவாத்தூர் புராணத்தின் துவக்கப்புள்ளி

 


தங்கள் கட்சி மக்கள் பிரதிநிதிகள் எங்கே தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு மாற்றுக் கட்சிக்கு தாவி விடுவார்களோ என்ற அச்சம் நம்பிக்கை தீர்மானம் அல்லது நம்பிக்கையில்லா  தீர்மானம் சமயத்தில் வந்தால் அந்த எம்.எல்.ஏ, எம்.பி க்களை பாதுகாப்பாக வைத்திருக்க இப்போதெல்லாம் ஏதாவது சொகுசு ரிசார்ட்டுக்கு மாற்றி விடுவார்கள். இதிலே மிகவும் பிரசித்தி பெற்றது ஏ2 அதிமுக எம்.எல்.ஏ க்களை கூவாத்தூரில் வைத்திருந்ததுதான்.

இந்த நடைமுறை எப்போது துவங்கியது?

ஆந்திராவின் முதலமைச்சர்களை காங்கிரஸ் தலைமை தொடர்ந்து அவமதித்த நிலையில் என்.டி.ராமாராவ், தெலுங்கு தேசம் கட்சியை 1982 ல் துவக்குகிறார். அவருக்கு உதவியாக இருந்தவர் காங்கிரஸ் கட்சியில் அமைச்சர் பதவியிலிருந்து கழட்டி விடப்பட்ட பாஸ்கர் ராவ்.

ஜனவரி 1983 ல் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. பிரம்மாண்டமான வெற்றி பெற்று முதலமைச்சராகிறார். அப்படி ஒன்றும் பெரிய சூப்பர் ஆட்சியெல்லாம் கொடுக்கவில்லை.

இதய அறுவை சிகிச்சைக்கு 1984 ல் அவர் அமெரிக்கா போகிறார். என்.டி.ஆர் ஆட்சியில் பெரிதாக எந்த பலனும் கிடைக்கவில்லை என்று பாஸ்கர் ராவிற்கும் சில எம்.எல்.ஏ க்களுக்கும் வருத்தம். அந்த வருத்தம் ஆட்சியை கலைக்கும் அளவிற்கு சென்றது. அவர்கள் ஆளுனரிடம் கடிதம் கொடுக்க ஆளுனர் என்.டி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டு பாஸ்கர் ராவை முதல்வர் பதவி ஏற்க அழைத்து பதவி பிரமாணமும் செய்து வைக்கிறார்.

என்.டி.ஆருக்கு ஆதரவாக நாடெங்கிலும் குரல் எழுகிறது. ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற முழக்கத்தோடு ஒரு நாள் பாரத் பந்த் வேறு நடக்கிறது.

இந்த காலகட்டத்தில்தான் என்.டி.ஆர் ஆதரவு எம்.எல்.ஏ க்களை  காங்கிரஸ் கட்சிக்கோ அல்லது பாஸ்கர் ராவிடமோ செல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்ற அவசியம் வருகிறது. அவர்கள் அத்தனை பேரையும் வேறு மாநிலத்தில் ஒரே இடத்தில் தங்க வைக்க வேண்டும் என்று துக்ளக் சோ ஆலோசனை சொல்ல, எங்கள் மாநிலத்துக்கு வாருங்கள் என்று அப்போதைய கர்னாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே உத்தரவாதம் கொடுக்க மைசூர் நந்தி ஹில்ஸில் இருந்த ஒரு விடுதியில் தெலுங்கு தேச எம்.எல்.ஏ க்கள் பாதுகாப்பாக அடைக்கப்பட்டார்கள்.

கவர்னர் மாற்றப்படுகிறார். புதிய கவர்னர் பாஸ்கர் ராவை பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லி அது முடியாத காரணத்தால் அவரை டிஸ்மிஸ் செய்து விட்டு என்.டி,ராமராவை மீண்டும் ஆட்சி அமைக்க அழைத்து அவரும் மீண்டும் முதல்வராகிறார்.

ஆக ரிசார்ட் கலாச்சாரத்தை இந்திய ஜனநாயகத்திற்கு அளித்த கொடையாளர்கள் சோ, ஹெக்டே மற்றும் என்.டி.ஆர்



இந்த பதிவை இத்தோடு முடித்து விட முடியாது.

தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக என்.டி.ராமராவ் வீதிக்கு வந்தார். அவரே பல மாநிலங்களுக்குச் சென்று ஆதரவைத் திரட்டினார். மக்கள் மத்தியில் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். நான் வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பேன். எனக்காக மற்ற கட்சிகள், அதிலும் என்னோடு கூட்டணியில் இல்லாத, நான் தீய சக்தி என்று வர்ணித்த கட்சியோடு கூட்டணியில் இருந்த கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் இல்லை. 

பெரும்பான்மை என்.டி.ஆரிடமிம் இருந்தது. அதனால் அவர் போராடினார்.  அவர் தன்னுடைய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கோரவில்லை. ஒரு வேளை அப்படி அவர் கேட்டிருந்தால் "இவர் என்ன பைத்தியக்காரரா?" என்று மக்கள் கேட்டிருப்பார்கள். இன்றைக்கு சில அதி மேதாவிகள் விஜய்க்கு ஆதரவு தர வேண்டும் என்று சி.பி.ஐ(எம்), சி.பி.ஐ, விசிக ஆகியோரை மிரட்டி, அந்த இயக்கங்களுக்குள்ளேயே இரண்டு கருத்துக்கள் வருவது போல செய்திருக்க மாட்டார்கள்.

காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பெற்ற பாஸ்கர்ராவ் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முறியடிக்க முடிந்த என்.டி.ராமராவ், இறுதியில் வீழ்ந்தது அவரது மருமகனான, அவர் மகளை மணந்த சந்திரபாபு நாயுடு செய்த கலகத்தினால்தான். 



Thursday, May 7, 2026

புதுவைக்கு மாறிய கூவாத்தூர்

 







மேலே உள்ள படங்களைப் பார்த்தீர்களா?

அழகாக இருக்கிறதா?

இவை புதுச்சேரியில் உள்ள ஹோட்டல் ஷோர் ட்ரிவிஷ்யம், ரிசார்ட்.

எதற்கு இப்போது இந்த ரிசார்ட் பற்றி?

அதிமுக கட்சியின் 25 எம்.எல்.ஏ க்களை இந்த ரிசார்ட்டில்தான் பத்திரமாக வைத்துள்ளார்களாம்.

விஜய் கட்சிக்கு அவர்கள் போய் விடக்கூடாது என்று எடப்பாடியார் எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கை இது.

பார்ப்போம் என்ன ஆகிறதென்று . . .

பிகு: இந்தியாவில் இந்த ரிசார்ட் கலாச்சாரம் எப்போது வந்தது? யார் கொண்டு வந்தது என்று தெரியுமா?

நாளை எழுதுகிறேன்.