Thursday, July 24, 2025

இல்லாத நாட்டுக்கு போலி ......

 



மேற்கு ஆர்டிகா,

சபோர்கா,

பௌல்வியா,

லோடோனியா

ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளீர்களா? குறைந்த பட்சம் கேள்வியாவது பட்டுள்ளீர்களா?

நான் இன்றுதான் கேள்விப்பட்டேன், அந்த பெயர்களில் எந்த நாடும் கிடையாது என்றும் அந்த நாடுகளின் தூதர் என்றபெயரில் ஒருவன் போலி தூதரகம் நடத்தி மோசடி செய்து வந்துள்ளான் என்று இன்றுதான் கேள்விப்பட்டேன்.

உபி மாநிலம் காஸியாபாத்தில் ஒரு ஆடம்பர மாளிகையில் ஹர்ஷவர்த்தன் ஜெயின் என்பவன் தன்னை தூதராக காண்பித்துக் கொண்டு "வெளிநாடுகளில் வேலை, ஹவாலா ஆகிய மோசடிகளை செய்து வந்துள்ளான். நேற்று அவன் கைதாகியுள்ளான்.

பழைய போலிச்சாமியார் சந்திராசாமி, போபோர்ஸ் பீரங்கி தரகர் அட்னான் கஷோகி ஆகியோருக்கு நெருக்கமாக இருந்தவன் என்று சொல்லும் ஊடகங்கள் இப்போது அவனுக்கு பின்புலம் யார் என்றோ எத்தனை வருடங்களாக இந்த மோசடியை செய்து வருகிறான் என்பதை மட்டும் சொல்லவில்லை.

ஒரு வலைத்தளத்தில் நான் பார்த்த சில கமெண்டுகள் சுவாரஸ்யமானவை.

இந்த முறை குஜராத்தை மிஞ்சி விட்டது உ.பி.

உ.பி யில் புத்திசாலிகளும் கூட இருக்கிறார்கள் என்பது இப்போதுதான் தெரிகிறது.

காஸியாபாத் மக்கள் பெருமைப்பட வேண்டிய தருணம் இது. குஜ்ராத்திகள் கூட சிந்திக்காத மோசடி இது!

சரி, இதில் மொட்டைச்சாமியார் பங்கு என்ன?

Wednesday, July 23, 2025

இப்படித்தான் இருக்க வேண்டும் மரணம் . . .

 

மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் அவர்களின் முகநூல் பதிவுகளை பகிர்ந்து கொண்டுள்ளேன். படங்களும் அவரது பக்கத்திலிர்ந்து எடுக்கப்பட்டவையே.

மெய் சிலிர்க்கிறது !!!















நானும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் கே.பாலகிருஷ்ணன்,உ.வாசுகி ஆகியோரும் மறைந்த மகத்தான தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்களுக்கு செவ்வணக்கம் செலுத்த ஆலப்புழா வந்து காத்திருக்கிறோம். நேற்று பிற்பகல் இரண்டு மணிக்கு திருவனந்தபுரம் நகரிலிருந்து அவருடைய உடலை சுமந்த ஊர்தி 24மணிநேரம் கடந்த பிறகும் இங்கு வந்து சேர முடியவில்லை. தூரம் என்னவோ 150 கிலோமீட்டர் தான் ஆனால், கேரள மாநில மக்கள் அனைவருமே தெருவில் குவிந்து விட்டார்கள் என்று சொல்லத் தக்க அளவுக்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் வெள்ளம்.

இறந்த பின்னும் மக்களை திரட்டும் வல்லமை கொண்டவராக தோழர் வி.எஸ் திகழ்கிறார் என்பதை கண்ணாரக் கண்டு வியந்து போய் இருக்கிறோம். நாங்கள் மட்டுமல்ல. நாடே வியந்து தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. எப்போது அவருடைய முகத்தை பார்ப்போம் என காத்திருக்கிறோம். மரணம் என்றால் அது இப்படி இருக்க வேண்டும்.

********************************************************************************

என்னுடைய வாழ்நாளில் நான் பார்த்த மிக நீண்ட தூர இறுதி ஊர்வலம் தோழர் வி.எஸ் அவர்களுடையதுதான். பல லட்சக்கணக்கான மக்கள் 150 கிலோமீட்டர் தூரமும் நின்று தாங்கள் நேசித்த தலைவருக்கு இறுதி மரியாதை செய்ய கொட்டுகிற மழையில் காத்திருந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். நான் பார்த்த மிகப்பெரும் மக்கள் திரள் பங்கெடுத்த இறுதி ஊர்வலமும் இதுதான். மக்களின் மனங்களை வென்ற மகத்தான தலைவராக தோழர் வி.எஸ் அவர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார். இல்லை, இல்லை மக்கள் மனங்களில் தொடர்ந்து வாழ்வார். அனைத்து தொலைக்காட்சிகளிலும் கடந்த மூன்று நாட்களாக தோழர் வி.எஸ் அவர்களின் இறுதி நிகழ்ச்சியை தவிர வேறு எந்த நிகழ்வுகளும் ஒளிபரப்பப்படவில்லை என்பது மற்றொரு சிறப்பு. அவரைப்போல் வாழ முயற்சிப்போம்

இடியாய் தாக்கிய இரட்டைத் துயரம்

 






 

நேற்று முன் தினம் 21.07.2025 அன்று ஒரு மோசமான நாள். உழைக்கும் வர்க்கம் இரு முக்கியமான தலைவர்களை இழந்த நாள்.

 

ஒருவர், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத்தலைவரும் சத்திஸ்கர் மாநிலத்தின் முக்கியமான மார்க்சிஸ்ட் கட்சித்தலைவருமான தோழர் பி.சன்யால்.

 

மற்றவர் கேரளாவின் முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் இருந்த தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன்.

 

தோழர் சன்யால் பற்றி முதல் முறையாக அறிந்தது  எங்கள் சங்கத்தின் “இன்சூரன்ஸ் வொர்க்கர்” இதழின் மூலமாக.

 

1988 ல் பாரத் பந்த் நடைபெற்ற போது அவர் பணியாற்றிய ராய்ப்பூர் கோட்ட அலுவலகத்தில் போஃபோர்ஸ் ஊழல் வழக்கு தொடர்பாக வைக்கப்பட்டிருந்த  ஒரு கார்ட்டூனை அடித்து நொறுக்கிய இளைஞர் காங்கிரஸ் குண்டர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக போலீஸ் ராய்ப்பூர் கோட்டப் பொதுச்செயலாளராக இருந்த தோழர் சன்யாலை கைது செய்தது. ராய்ப்பூர் நகர தொழிற்சங்கத் தோழர்கள் கொதித்து போராடியதில் போலீஸ் பின்வாங்கி அவரை விடுவித்தது.

 

1994 ல் அகமதாபாத் நகரில் நடைபெற்ற 15 வது அகில இந்திய மாநாட்டில்தான் அவரை முதன் முதலில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த மத்திய மண்டலக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர். அனல் கக்கிய உரை. இடதுசாரி கருத்தியலை தெளிவாகவும் ஆணித்தரமாகவும் எடுத்துரைக்கும் உரை. சமரசமில்லாத, கொள்கைப் பற்று கொண்ட தலைவர்.

 

அதன் பிறகு ஒவ்வொரு மாநாட்டிலும் அவர் எப்போது பேசுவார் என்று ஆவலோடு எதிர்பார்க்க வைத்தது அந்த உரை.

 

அவருடன் பரிச்சயமானது நான் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ஆன பிறகுதான்.  தோழமையின் கதகதப்பை அவரிடம் உணர முடியும்.

அந்த செயற்குழுவில் அடுத்த சில மாதங்களில் ராய்ப்பூரில் நடைபெற உள்ள அகில இந்திய மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக தோழர் ஹபீப் தன்வர் செயல்படவுள்ளார் என்று அவர் அறிவிக்கையில் பெரும் ஆரவாரம். அவர் மிகப் பெரிய கலை ஆளுமை, நாடக விற்பன்னர், திரை இயக்குனர்  என்பதெல்லாம் பிறகுதான் தெரிந்து கொண்டேன்.  

 

ராய்ப்பூர் மாநாடு ஒரு அற்புத அனுபவம்.  1500 அமரக்கூடிய அரங்கம் ராய்ப்பூரில் கிடையாது. அதனால் ஒரு தற்காலிக அரங்கை பிரம்மாண்டமாக உருவாக்கினார். உணவுக்கூடம், தற்காலிக கழிவறைகள் என எல்லாமே உருவானது. அந்த மாநாட்டுப் பேரணியை வாழ்த்த ரெய்ப்பூர் நகர உழைக்கும் மக்கள் முழுதுமே திரண்டிருந்தனர். மலைவாழ் மக்கள் பங்கேற்பு அதிகமான அளவில் இருந்தது.

 

தோழர் ஹபீப் தன்வர் இரண்டு நாடகங்களை நடத்தினார். திருப்பத்தூர் தூய இருதயக் கல்லூரி  குழுவினர் தோழர் ஹபீப் தன்வரின் “சரண்தாஸ் சோர்” என்ற நாடகத்தை வேலூரில் நடத்தினர். தமுஎகச பொறுப்பேற்று நடத்திய அந்த நாடகத்திற்கான  அழைப்பிதழை கொடுக்க வந்த தமுஎகச பொறுப்பாளரான ஆறுமுகம் பிள்ளை என்ற தோழரிடம்  நான்  ஒரிஜினல் வடிவத்தையே பார்த்துள்ளேன் என்று சொல்ல நாடகத்திற்கான அறிமுகத்தை  அளிக்கும் பொறுப்பை அளித்து விட்டார். நாடக இயக்குனரான தோழர் பார்த்திப ராஜாவோ, நீங்கள் ஹபீப் தன்வர் நடித்ததை பார்த்தீர்களா! அதிர்ஷ்டசாலி என்று வியந்து சொன்ன போதுதான் அவரின் அருமை புரிந்தது. அவரை மாநாட்டில் இணைத்த தோழர் சன்யாலின் அருமையும்.

 

அந்த மாநாட்டில் முதல் நாளில் உணவு பரிமாறுவதில் கொஞ்சம் குளறுபடி இருந்தது. அன்று இரவு அதைப் பற்றி தோழர் சன்யால் “உணவில் கொஞ்சம் சிக்கல் இருந்தமைக்கு வருத்தங்கள். இவர்கள்தான் சத்திஸ்கர் மாநிலத்திலேயே மிகப் பெரிய கேட்டரிங் நிறுவனம். அவர்களோடு விவாதித்தோம்” என்று சொல்லிக் கொண்டு இருக்கையில் “முடிவு என்ன?” என்று அப்போதைய பொதுச் செயலாளர் தோழர் என்.எம்.சுந்தரம் கேட்க “வெற்றிதான் நமது பாரம்பரியம் (Success is our tradition” என்று அவர் சட்டென்று பதிலளிக்க அரங்கம் கரவொலிகளால் அதிர்ந்தது.

 

2010 ல் குடியாத்தத்தில் நடைபெற்ற எங்கள்  கோட்ட மாநாட்டில் அவர் உரையாற்ற வேண்டும் என்று விரும்பி அழைத்த போது உடனடியாக ஒப்புக் கொண்டு பொது மாநாட்டிலும் பின்பு பிரதிநிதிகள் மாநாட்டிலும் மிகச் சிறப்பாக பேசினார்.

 

அவரை நான் செல்லமாக கடிந்து கொண்ட அனுபவமும் உண்டு. கான்பூரில் அகில இந்திய மாநாடு. ஊழியர்கள் பிரச்சினைகளை பேசும் வாய்ப்பு எங்கள் தென் மண்டலத்தால் கொடுக்கப்பட்டிருந்தது. நேரம் போதாமையால் இரவு உணவுக்குப் பின்பும் மாநாடு தொடர்ந்தது. இரவு 11 மணிக்கு குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த போது பேச அழைக்கப்பட்டேன். விடுமுறைப் பயணச் சலுகை விதிகளை எளிமையாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசுகையில் அந்த வருட ஆடிட் முடிந்த பின்புதான் எல்.டி.சி போன மகிழ்ச்சியையே ஒரு ஊழியரால் அனுபவிக்க முடியும் என்று நான் குறிப்பிட  தோழர் சன்யாலும் அப்போதைய வடக்கு மண்டல தலைவருமான தோழர் பகவான் ஸ்வரூப் சர்மாவும் மேஜையைத் தட்டி வெடிச் சிரிப்போடு ஆரவாரம் செய்ய என் பேச்சின் ஓட்டம் தடைபட மீண்டும் இயல்புக்கு வர ஒரு நிமிடம் ஆனது. அடுத்த நிமிடம் மணியும் அடிக்கப்பட்டு விட்டது. உங்களால்தான் என்னால் ஒழுங்காக பேச முடியவில்லை என்று அவரிடம் செல்லமாக கோபித்துக் கொண்டேன்.

 

அவர் என்னிடம் கடிந்து கொண்ட அனுபவமும் உண்டு. பாமக அராஜகக் கும்பலிடமிருந்து தப்பிய அனுபவத்தை ஏற்கனவே பகிர்ந்துள்ளேன். இந்த ஏப்ரலில் கூட மீள் பதிவு செய்துள்ளேன். தைலாபுரம் தோட்டத்திலிருந்து தப்பித்தவுடன் அந்த நிகழ்வை ஓரிரு வார்த்தைகளில் முகநூலில் பதிவு செய்திருந்தேன். “Take Care” என அங்கே பின்னூட்டம் இட்டு விட்டு உடனடியாக அழைக்கவும் செய்தார். பிறகு இன்னொரு இடத்தில் மரம் வெட்டப்பட்டதால் பயணம் தடைபட்டு விட்டது என்றும் ஒரு பதிவு எழுதியிருந்தேன்.அதிகாலை 3 மணிக்கு வீடடைந்து உறங்கியும் விட்டேன்.

 

காலை 7 மணிக்கு  தொலைபேசியில் அழைத்த தோழர் சன்யால், எத்தனை மணிக்கு வீட்டிற்கு வந்தேன் என்பதை கேட்டு விட்டு, “பிரச்சினையில் சிக்கிக் கொண்டதை பதிவு போட்ட நீங்கள், ஜாக்கிரதையாக வீடு திரும்பியதை ஏன் எழுதவில்லை, எவ்வளவு கவலையாக இருந்தது தெரியுமா? இனி இது போல செய்யாதீர்கள்” என்று உரிமையோடு கண்டிக்க என் தவறு புரிந்தது.

 

தோழர் சன்யாலின் மறைவு இடதுசாரி முற்போக்கு இயக்கங்களுக்கு பெரும் இழப்பு.

 

வாழும் வரலாறாகத் திகழ்ந்த தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்களின் மறைவின் மூலம் மார்க்சிஸ்ட் கட்சி தன் முதல் தலைமுறையின் கடைசி தல்லைவரையும் இழந்துள்ளது. போராட்டத்தில் புடம் போற்ற தலைவரின் மறைவின் மூலம் இந்தியா தனது விடுதலைக்காக போராடிய ஒரு வீரரை இழந்துள்ளது.

 

செவ்வணக்கம் தோழர் சன்யால்

செவ்வணக்கம் தோழர் அச்சுதானந்தன்.

 








பிகு: முகப்பில் உள்ளது எங்கள் குடியாத்தம் மாநாட்டு புகைப்படங்கள்.

கீழே உள்ளது ராய்ப்பூர் அகில இந்திய மாநாட்டு புகைப்படங்கள்.

 

Tuesday, July 22, 2025

நீ எப்போ ரெவி?

 


நீ எப்படி தமிழ்நாட்டின் அவமானமோ அது போல மேற்கு வங்கத்தில் ரௌடி கவர்னராக செயல்பட்டு அதனால் துணை ஜனாதிபதியாக பதவி உயர்வு பெற்ற ஜகதீப் தாங்கர் நேற்று ராஜினாமா செய்து விட்டார்.

நேற்று காலை முழுதும் ராஜ்யசபாவில் பங்கேற்று விட்டு மாலை கொடுத்த ராஜினாமா கடிதத்திற்கு உடல் நிலையை காரணம் சொல்வதெல்லாம் உடான்ஸ்,

மோடியா?

மோகன் பகவந்தா?

ராஜினாமா செய்ய உத்தரவிட்டவர் யாரோ?

மதவெறி நீதிபதி, ஊழல் நீதிபதி ஆகியோர் மீதான பதவி பறிப்பு நடவடிக்கையை தள்ளிப் போடவா?

75 வயதாகப் போகும் மோடிக்கு ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்கவா?

எது எப்படியோ தாங்கர் சசெல்வது மகிழ்ச்சியாக உள்ளது. நீ சென்றால் இன்னும் சந்தோஷமாக் இருக்கும்.

பதவியில் இருந்து எந்த நன்மையும் செய்யாத நீ, பதவி வில்குவதுதான் நன்மையாக இருக்கும். 

Friday, July 18, 2025

நீங்களாவது மாற்றுங்கள் நீதியரசர் கவாய் அவர்களே

 


மேலே உள்ளது உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தாவே கூறியது. 

"மோடி பிரதமரான் பின்பு தொடர்ந்து வந்த ஒவ்வொரு தலைமை நீதிபதிகளும் மோடியின் செல்வாக்கினால் நூற்றுக்  கணக்கான வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு நீதித்துறையை வீழ்த்தி விட்டனர். இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்தமைக்கு நீதித்துறை ஒரு முக்கியக் காரணம்."

அவர் சொன்னது துயரமான உண்மை.

தற்போதைய தலைமை நீதிபதியான திரு பி.ஆர்.கவாய் அவர்களாவது விதி விலக்காக அமைந்து சிதைந்து கிடக்கும் நீதித்துறைக்கு உயிர் கொடுக்க வேண்டும்.

சீமான் வகையறாவின் சிரிக்க வைக்கும் புளுகு

 


சீமானைப் போலவே சீமானின் அல்லக்கைகளும் சிரிப்பு மூட்டும் வண்ணம் கதை அளக்கிறார்கள்.



பொய் சொல்வதற்கு கொஞ்சமும் கூச்சப்படுவதில்லை. அப்படி கொஞ்சமாவது  கூச்சமிருந்தால் "1956 ல் துவக்கப்பட்ட மதிய உணவுத் திட்டத்தையும்  1966 ல் பிறந்த  சீமானையும் தொடர்பு படுத்தி பேசுவார்கள்! 

சங்கிகளை விட பெரிய முட்டாள்கள் நாதக தம்பிகள்!

Wednesday, July 16, 2025

என்றைக்கும் இதுதான் டாப்

 


முகநூலில்  ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் அவர்களின் பக்கத்தில் பார்த்த காணொளி இது. 


1986 லிருந்து நடைபெற்ற ஒவ்வொரு உலகக் கோப்பையிலும் சிறந்த ஒரு கோலை தேர்வு செய்து வழங்கியுள்ளார்கள்.

எத்தனை வருடம் ஆனால் என்ன, எத்தனை வீரர்கள் புதிதாய் தோன்றினால் என்ன, 1986 உலகக் கோப்பையில் இங்கிலாந்திற்கு  எதிரான போட்டியில் மாரடோனா அடித்த கோலுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. அதுதான் என்றும் டாப்.

பிகு: ஒரு மாறுதலுக்காக அரசியல் இல்லாத பதிவு இது.