Thursday, March 12, 2026

அமெரிக்க ஜனாதிபதியாக? இந்திய பிரதமராக?

 


ப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் பக்கத்தில் பார்த்த காமெடி கீழே உள்ளது


அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக விரும்புகிறேன் என்று வெள்ளை மாளிகைக்கு ஒருவர் தொலைபேசியில் சொல்ல, "நீ என்ன பைத்தியமா?" என்று வெள்ளை மாளிகை ஊழியர் பதில் சொல்ல, முதலில் தொலைபேசி செய்தவர் கேட்கிறார் "அது கட்டாயமா?" என்று.

இதையே சில நாட்கள் முன்பாக வேறு மாதிரி படித்தேன்.

அடுத்த இந்தியப் பிரதமராக விரும்புகிறேன் என்று பிரதமர் அலுவலகத்திற்கு ஒருவர் தொலைபேசியில் கூற பிரதமர் அலுவலக அலுவலர் " நீ என்ன முட்டாளா?" என்று கேட்கிறார். பிரதமராக விரும்பியவர் கேட்கிறார் "அதுதான் அத்தியாவசிய தகுதியா" என்று.

டொனால்ட் ட்ரம்பும் மோடியும் அவர்கள் வகிக்கும் பதவிகளுக்கு மரியாதையே இல்லாமல் செய்து விட்டனர்,


Wednesday, March 11, 2026

உன் காலம் இருண்ட காலம்தான் ரெவி

 

தமிழ்நாட்டில் தான் பொற்காலத்தை அனுபவித்ததாக மேற்கு வங்கத்திற்கு ஓடிப் போகும் ஆரெஸெஸ் ரெவி சொல்லியுள்ளார்.

அவருக்கு வேண்டுமானால் அது பொற்காலமாக இருக்கலாம்.

அவர் பதவியில் இருந்த காலம் தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இருண்ட காலம்.

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்க அரசின் முடிவுகளை முடக்கியது, சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களை முடக்கியது, ராஜ்பவனை மத வெறி நடவடிக்கைகளுக்கும் பொய்ப் பிரச்சாரத்திற்குமான களமாக மாற்றியது, தமிழ்நாட்டு மக்களின் பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்தியது, பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டை ஒடுக்கியது, பட்டங்களை மாணவர்கள் பெறுவதை தாமதித்தது, கற்பூரம் பற்றி அறியாத கழுதையாக சுதந்திரப் போராட்ட வீரர், மூத்த பொதுவுடமை இயக்கத் தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்களை இழிவு படுத்தியது, திருவள்ளுவர், வள்ளலார் போன்றவர்களுக்கு காவிச்சாயம் பூசியது

என தமிழ்நாடு கண்ட மிக மோசமான, கேவலமான ஆளுனர் ஆரெஸெஸ்.ரெவி என்றும் அவர் பதவிக்காலம் இருண்ட காலம் என்று மட்டுமே தமிழ்நாட்டு மக்கள் நினைவில் கொள்வர். 

கார்ட்டூனுக்கு அஞ்சும் மோடி

 


56 இஞ்ச் மார்பு கொண்ட வீரனாக தன்னைப் பற்றி பீற்றிக் கொண்ட மோடி கார்ட்டூனுக்கெல்லாம் அஞ்சி நடங்கும் கோழையாக உருவெடுத்துள்ளார். மோடி பயப்படும் கார்ட்டூன்களை முதலில் பாருங்கள்.



என்ன சம்பவம் என்று கேட்கிறீர்களா?

இதோ இந்த கார்ட்டூன்களை வரைந்த திரு சதீஷ் ஆச்சார்யா சொல்வதை பாருங்கள்.


அவர் சொல்வது மிக மிக சரி. 

தமிழிலேயே சமீபத்திய இரண்டு உதாரணங்கள் உண்டு. அதிகாரத்தை ஏவி முடக்க நினைத்தாலும் மக்கள் உற்சாகமாக பகிர்ந்து கொண்ட அந்த இரண்டு கார்ட்டூன்கள் கீழே




Tuesday, March 10, 2026

முட்டாள்தனமாய் அன்புமணி, ஆணவமாய் பத்ரி சேஷாத்ரி

 


அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தும் போரின் காரணமாக இரான் மட்டும் பாதிக்கப்படவில்லை, பாதிப்பு இந்தியர்களையும் எட்டிப் பார்த்து விட்டது. சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடங்கி விட்டது. 

இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது யார் பொறுப்பு?

திமுக அரசுதான் தீர்வு காண வேண்டும் ஒருவர் சொன்னால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

மத்தியரசு தீர்க்க வேண்டிய பிரச்சினையை மாநில அரசை தீர்க்கச் சொல்கிறீர்களே, முட்டாள்தனமா இல்லையா என்றுதானே கேட்பீர்களே!

ஆமாம் என்று சொல்கிறீர்களா ! அப்படியானால் மீண்டும் ராஜ்யசபாவுக்கு மட்டம் போடப்போகும் அன்புமணியிடம் கேளுங்கள், நீர் என்ன முட்டாளா என்று.


பிரெட் கிடைக்காமல் பட்டினிக் கொடுமையில் அவதிப்பட்ட பிரான்ஸ் மக்களிடம் கேக் சாப்பிடச் சொன்னார் ராணி மேரி அண்டோனியா.

நான் வெங்காயம், பூண்டு சாப்பிடாததால் அவற்றின் விலை உயர்வு பற்றி எனக்கு தெரியாது என்றார் நிர்மலா அம்மையார்.

இந்த ஆட்களுக்கு இணையாக கேஸ் இல்லையென்றால் என்ன இன்டக்சன் ஸ்டவில் சமையுங்கள் என்று பிரச்சினையை திசை திருப்புகிறார் கிழக்கு பதிப்பக சங்கி பத்ரி சேஷாத்ரி.

அமெரிக்கா, இஸ்ரேல் மீது பழி வரக்கூடாது, மோடி மீது விமர்சனம் வரக்கூடாது என்றெல்லாம் எப்படி டிசைன் டிசைனாக மடை மாற்றுகிறார்கள் பாருங்கள்.

இவர்களை எல்லாம் எக்காலத்திலும் யாரும் நம்ப முடியாது. 

ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீபூவராகசுவாமி கிள்ளை ஹஸ்ரத் ரஹமத்துல்லா தர்காவில்

 


இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாக ஆங்கில இந்து நாளிதழில் பார்த்து மன நிறைவு அடைந்த செய்தி இது.

சிதம்பரம் பக்கத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள ஸ்ரீபூவராகவசுவாமியின் உற்சவர் விக்கிரகத்தை மாசி மக தீர்த்தவாரி விழாவின் ஒரு பகுதியாக பிச்சாவரம் அருகில் உள்ள கிள்ளையில் உள்ள ஹஸ்ரத் ரஹமதுல்லா தர்காவிற்கு கொண்டு வந்துள்ளனர். 

அங்கே இஸ்லாமியர்கள் அரை மணி நேரம் வழிபாடு செய்து பொன்னாடை, பழங்கள், தேங்காய்கள், மூன்று கிலோ அரிசி, 501 ரூபாய் என்று வழக்கமான காணிக்கையை செய்துள்ளனர்.

கோயில் சார்பாக தர்கா அறங்காவலர்களுக்கு மாலைகள் அணிவித்து வெல்லத்தை பிரசாதமாக கொடுத்துள்ளனர்.

சையத் ஹஸ்ரத் ரஹமதுல்லா என்ற இஸ்லாமிய மார்க்க அறிஞருக்கு ஆற்காடு நவாப் அளித்த 600 ஏக்கர் நிலத்தை அளப்பதற்கு உப்பு வெங்கட் ராவ் என்று வருவாய் அதிகாரி உதவி செய்ய, அவருக்கு ஒரு சிறு பகுதி நிலத்தை (26 ஏக்கர்)  அளித்துள்ளார்.

அந்த நிலம் பின்பு ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி ஆலயத்தின் பராமரிப்பிற்கு வந்துள்ளது.

இதனால்தான் ஒவ்வொரு வருடமும் மாசி மகத்தன்று இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

எத்தனை ஆண்டுகளாக ?

அதிகம் இல்லை.

முன்னூறு ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த செய்தியை படிக்கையில் உண்மையிலேயே மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இது போன்ற சடங்குகள், இந்தியா முழுதும் பல இடங்களில் மத நல்லிணக்கத்தை, மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கும் வண்ணம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு இதுதான் உதாரணம்.

இதனைத்தான் சங் பரிவார அமைப்புக்கள் சதிகள் மூலம் சிதைக்க முயற்சிக்கிறார்கள், திருப்பரங்குன்றம் போல, அவர்களுக்கு சில தீர்ப்பாளர்களும் உடந்தையாக உள்ளனர். 

Monday, March 9, 2026

மகளிர் இட ஒதுக்கீடு - வரும் ஆனா வராது

 


நேற்றே எழுதிய பதிவு, ஆனால் இன்றுதான் பகிர்ந்து கொள்ள முடிந்தது.

ஒவ்வொரு வருடமும் சர்வதேச மகளிர் தினத்தின் போது முன்னெழும் பிரச்சினையாக மகளிர் மசோதாவை நிறைவேற்றுவது என்பது இருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக யாரும் அது பற்றி பேசவில்லை.

ஏன் மகளிர் மசோதா சட்டமாகி விட்டதா?

ஆமாம்.

மறந்து விட்டீர்களா?

2023 ல் மகளிர் மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த சிறப்பான சம்பவத்தைக் காண, மோடிக்கு வாழ்த்து சொல்ல பாலிவுட் பெண் நட்சத்திரங்களை அழைத்திருந்தார்களே, இந்த நிகழ்விற்குக் கூட புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு பழங்குடி இனப்பெண் என்று இன்று மோடியால் பேசப்படும் ஜனாதிபதியை அழைக்கவில்லையே, அதையெல்லாம் மறந்து விட்டீர்களா?

மகளிர் இடஒதுக்கீடு சட்டமாகி விட்டதால் இப்போது நாடாளுமன்ற மக்களவையில் பெண் எம்.பி க்கள் 33 % இருக்கிறார்களா?

அங்கேதான் இருக்கிறது மோடியின் கேடித்தனம்.

மக்கட்தொகை கணக்கெடுப்பு நடந்து அதற்குப் பிறகு தொகுதி மறு சீரமைப்பு  நடந்து அதற்குப் பிறகுதான் அமலாகுமாம்.

2021 ல் நடந்திருக்க வேண்டிய மக்கட்தொகை கணக்கெடுப்பு இன்னும் தொடங்கக் கூட இல்லையே!

அது எப்போது தொடங்கி, எப்போது முடிந்து?

அமலாக்காமல் சும்மா சீனுக்காக மட்டும் நிறைவேற்றப்பட்டது மகளிர் மசோதா.

அதனால்தான் சட்டப்படி 181 பெண் எம்.பி க்கள் இருக்க வேண்டிய தற்போதைய மக்களவையில் 74 பெண் எம்.பி க்கள் மட்டுமே இருக்கின்றனர்.

சரி மகளிர் இட ஒதுக்கீடு அமலாக்கத்திற்கு எப்போது வரும்?

வரும்,  ஆனா (மோடியும் பாஜகவும் ஆட்சியில் இருக்கும் வரை) வராது.

பப்புவாகவே இருந்தால் எப்படி ராகுல்?

 


ராகுல் காந்தியை அவரது எதிரிகள் பல ஆண்டுகளாகவே "பப்பு" என்றுதான் அழைத்து வருகின்றார்கள்.

இத்தனை ஆண்டுகளில் அரசியல் முதிர்ச்சி பெற்றுள்ளார் என்று நினைக்கும் வண்ணம் அவரது சில மக்களவை உரைகள் அமைந்திருந்தன. 

ஆனால் தேர்தல் என்று வருகின்ற போதோ, கூட்டணிகள் அமைக்கும் போதோ அவர் இன்னும் பப்புவாகவே இருக்கிறாரோ என்ற சந்தேகம் அவ்வப்போது உருவாகும்.

டெல்லி சட்டமன்ற தேர்தல், பீகார் சட்டமன்ற தேர்தல், ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல், மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்களில் இந்தியா கூட்டணி பெற்ற தோல்விகளுக்கு நிச்சயம் ராகுல் காந்தியின் முதிர்ச்சியின்மைதான் முக்கியமான காரணம்.

தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணி அமைவதற்கு முன்பாக மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி போன்றவர்களை விட்டு பேச வைத்ததும் விஜயுடன் பின்புறத்தில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்ததும் எரிச்சலை ஊட்டியது.

இதோ நேற்று கேரளாவில் பேசியது அவர் இன்னும் பப்புவாகவேதான் இருக்கிறார் என்பதை உணர்த்தியுள்ளது.

கேரளாவில் இடது முன்னணியை வீழ்த்த காங்கிரஸ் யாருடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளது?

சபரிமலை பிரச்சினையில் பாஜகவுடன் கரம் கோர்த்துக் கொண்டு இடதுசாரிகளுக்கு எதிராக மக்களின் உணர்வுகளை உசுப்பேற்றியது காங்கிரஸ் கட்சி.

திருச்சூர் மக்களவை தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி எம்.பி ஆக யார் காரணம்?

 இடது முன்னணி 2019 ல் பெற்ற வாக்குகளை விட 2024 ல் அதிகம் பெற்றது. ஆனால் காங்கிரஸின் வாக்குகள் அப்படியே பாஜகவிற்கு மாறி சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். இப்போது திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலிலும் இடது முன்னணி வாக்குகள் அதிகரித்து காங்கிரஸின் வாக்குகள் கள்ளத்தனமாக மாற்றப்பட்டு பாஜக வென்றது.

உங்களுக்கும் உங்கள் கட்சித்தலைவருக்கும் அழைப்பில்லாத போதே புதினுக்கு வைத்த விருந்தில் கலந்து கொண்டது உங்கள் கட்சியின் திருவனந்தபுரம் எம்.பி சசிதரூர்தானே!

நாடாளுமன்ற மக்களவையில் மோடியை தண்ணீர் குடிக்க வைப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி தோழர் சு.வெங்கடேசன் என்றால் மாநிலங்களவையில் பாஜகவை அலர வைப்பது கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி தோழர் ஜான் பிரிட்டாஸ்தானே!

மிகப்பெரிய வெள்ளம், வயநாடு நிலச்சரிவு போன்ற பேரழிவுகளில் மாநிலத்திற்கு நிதி ஒதுக்காமல் மோடி அரசு கழுத்தறுப்பது கேரளாவில் முதல்வராக இருப்பது தோழர் பினராயி விஜயன் என்பதால்தானே! பெரு வெள்ளம் சமயத்தில் வெளி நாடுகளிலிருந்து வர இருந்த நிதியை மோடி தடுத்தாரே, அது எதனாலே?

அந்த சமயங்களில் எல்லாம் கேரளாவிலிருந்து அதிகமான எம்.பி க்களை பெற்றிருந்த உங்கள் காங்கிரஸ் கட்சி என்ன கிழித்தது? யாராவது ஒருவராவது வாய் திறந்தீர்களா? இடது முன்னணிக்கு பிரச்சினை வர வேண்டும் என்பதுதானே உங்கள் கள்ள மவுனத்திற்கான காரணம்!

கேரளாவில் உங்கள் காங்கிரஸ் கட்சிதான் பாஜகவுடன் கள்ளத்தனமாக கூட்டணி வைத்துக் கொண்டு செயல்படுகிறது. சசி தரூர், சதீசன் ஆகியோர் யார் கட்டளைப்படி செயல்படுகிறார்கள் என்பது கேரளா அறிந்த அதிசயம்.

இன்னொன்றையும் சொல்ல வேண்டும்.

கூட்டணிகளுக்கு உங்கள் கட்சி உண்மையாக இருக்கிறதா? மேற்கு வங்கத்தில் இடது முன்னணியோடு காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்தது. கம்யூனிஸ்டுகளின் வாக்கு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு சென்றது. காங்கிரஸ் கட்சியினர் கம்யூனிஸ்டுகளுக்கு வாக்களித்தார்களா? பாரதீய ஜனதாவிற்கு வாக்களித்தார்களா?

இப்படிப்பட்ட சூழலில் மோடியின் கட்டளைப்படி தோழர் பினராயி விஜயன் செயல்படுகிறார் என்பதும் சிஜேபி என்பதும் அபத்தமானது, சிறுபிள்ளைத்தனமானது, பைத்தியக்காரத்தனமானது, முட்டாள்தனமானது, ஏன் அயோக்கியத்தனமானதும் கூட.

உங்களை "பப்பு" என்று சொல்லக்கூடாது என்று இத்தனை காலம் பொறுமையாக இருந்த என்னையே உங்களை பப்பு என்று சொல்ல வைத்து விட்டீர்கள்.


இந்தியாவை வழி நடத்தும் தகுதியை இழந்த நீங்கள், உங்கள் கட்சியின் தலைமையிலிருந்து விலகுங்கள். இல்லையென்றால் மகாத்மா காந்தி சொன்னது உங்கள் காலத்தில் நிகழும்.