இப்போதைக்கு சொல்ல வேறெதுவுமில்லை, எதிர்பார்க்காத ஏமாற்றம் என்பதைத் தவிர.
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
2009 மக்களவைத் தேர்தலின் போது வாக்கு எண்ணிக்கையில் மைக்ரோ அப்சர்வராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அனுபவத்தைப் பற்றி, வாக்கு எண்ணிக்கையில் மோசடி செய்ய வாய்ப்பு இருப்பது பற்றி மார்ச் 2011 ல் பதிவு எழுதினேன். கூடுதல் விபரங்களோடு அந்த பதிவை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
வாக்கு எண்ணிக்கைக்கு மைக்ரோ அப்சர்வர்களாக எல்.ஐ.சி ஊழியர்கள் வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரகம் கேட்டுக் கொண்ட அடிப்படையில் நிர்வாகம் சங்கத்தோடு பேசியது. விருப்பமுள்ளவர்கள் செல்லட்டும். மற்றவர்களை நிர்ப்பந்திக்கக் கூடாது என்று நாங்கள் சொன்னதை நிர்வாகமும் ஒப்புக் கொண்டது. கணிசமான ஊழியர்கள் மைக்ரோ அப்சர்வர் பணியாற்ற ஒப்புக் கொண்டனர். ஒரு ஐ.டி கார்ட் கொடுத்தார்கள். அதில் போட்டோ இருந்ததா என்று நினைவில்லை. வேலூர் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரிதான் வாக்கு எண்ணும் மையம்.
காலை ஆறு முப்பதிற்கெல்லாம் அங்கே சென்றாகி விட்டது. அலைபேசிக்கு அனுமதி கிடையாது என்பதால் வாகனத்தின் பெட்டியில் வைத்து விட்டு வந்தோம். நல்ல வேளை தொலைந்து போகவில்லை. சுமாரான பொங்கலும் அதை விட சுமாரான சட்னியும் கொடுத்தார்கள். இரும்புக் கோட்டைக்குள்ளே நுழைந்தோம்.
இனி பழைய பதிவு.
வாக்கு எண்ணிக்கையில் மோசடி சாத்தியமே
மின் அணு இயந்திரத்தில் வாக்கு பதிவு கூடாது என்ற பல்லவியை தமிழக அரசியல் கட்சிகள் இன்னும் பாடத்தொடங்கவில்லை. வாக்குப்பதிவில் மோசடி செய்வது சாத்தியமா என்று தெரியாது. ஆனால் வாக்கு எண்ணிக்கையில் மோசடி செய்வது என்பதற்கான சாத்தியங்கள் நிச்சயமாகவே உள்ளது. எப்படி என்று பார்ப்போம்.
கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் நுண் பார்வையாளராக (Micro Observer) பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டும்அனுமதிக்கப்பட்ட இரும்புக்கோட்டையின் கதவுகள் திறக்கப்பட்ட சந்தர்ப்பத்தை ஒரு அனுபவத்திற்காக பயன்படுத்திக்கொண்டேன். அந்த அனுபவத்தின் அடிப்படையில் எழுதுகின்ற பதிவு இது.
வாக்கு எண்ணும் இடத்தில் பதினைந்து மேஜைகள், ஒவ்வொரு மேஜையிலும் மூன்று இருக்கைகள். வாக்கு எண்ணும் அலுவலர், ஒரு உதவியாளர், ஒரு நுண் பார்வையாளர் என மூவர். அந்த மேஜைகள் ஒரு ப வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும். மேஜைகளுக்கு வெளியே சவுக்குக் கம்புகள், கம்பிகளால் ஆனா தடுப்புக்கள். தடுப்புக்களுக்கு வெளியே வேட்பாளர்களின் முகவர்கள் நின்று கொண்டிருப்பார்கள்.
ஒவ்வொரு வாக்கு எண்ணும் இயந்திரமாக ஒவ்வொரு மேசைக்கும் கொண்டு வரப்படும். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் வாக்குப் பதிவு மட்டுமே இயந்திரமயமாக்கபபட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அல்ல. ஒவ்வொரு மேசைக்கும் வேட்பாளர்கள் பெயர் அடங்கிய பட்டியல் தரப்பட்டிருக்கும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் என்ன வரிசையில் பெயர்கள் இருந்தனவோ, அதே வரிசையில்தான் பட்டியலும் அமைந்திருக்கும்.
வாக்குப்பதிவு இயந்திரம் மேஜைக்கு வந்ததும், சீல் நீக்கி, ஒவ்வொரு வேட்பாளருக்கும் எவ்வளவு வாக்கு பதிவானது என்பதை அதற்குரிய பட்டனை அழுத்தி தெரிந்து கொள்ள வேண்டும். அதனை கொடுக்கப்பட்ட பட்டியலில் குறித்துக் கொள்ள வேண்டும். வாக்கு எவ்வளவு என்ற தகவலை இயந்திரத்தை பார்ப்பதன் மூலம் முகவர்களும் அறிந்து கொள்ள முடியும். ஆனால் அதற்கான அவகாசம் என்பது மிக மிக குறைவு. திருப்பதி ஜருகண்டி போல, மேஜிக் நிபுணர் சாகசம் போல வேகம் வேகமாகத்தான் காரியங்கள் நடக்கும். நுண் பார்வையாளரும்
தனியாக ஒரு பட்டியலில் வாக்கு
எண்ணிக்கை பற்றி தனியாக பதிவு
செய்து பார்வையாளரிடம் அளிக்க வேண்டும். ஜருகண்டி வேகத்தில் சில
சமயங்களில் இது சாத்தியமில்லாமல்
போய் தேர்தல் அலுவலரின்
விபரத்தை அப்படியே நகலெடுத்து அளிப்பது என்பதும் நடந்தது.
பட்டியலில் குறித்துக்கொள்வது என்பதில்தான் மோசடிக்கான சாத்தியம் அடங்கியுள்ளது. கட்சிகளின் முகவர்களோ அல்லது நுண் பார்வையாளர்களோ விழிப்பாக இல்லையென்றால் ஒரு வேட்பாளர் வாங்கிய வாக்குகளை வேறு வேட்பாளரின் பெயரில் எழுதி விடுவது மிகவும் சுலபம். மின்னல் வேகத்தில் நடைபெறும் விஷயம் இது. முகவரோ அல்லது நுண் பார்வையாளரோ விழிப்பாக இருந்தால் இதை தவிர்க்க முடியும். மேற்பார்வையிடும் அதிகாரிகளுக்கு இது பற்றி தெரிய வராது. அவர்களைப் பொறுத்தவரை அந்த இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் அனைத்து வேட்பாளர்களும் பெற்ற வாக்குகளின் கூட்டுத்தொகையும் ஒன்றாக இருக்க வேண்டும். அவ்வளவுதான்.
வாக்கு எண்ணிக்கைக்கு இடையிடையே வேட்பாளர்களும் வருவார்கள். அவர்களைப் பார்த்ததும் அந்தந்த கட்சி முகவர்கள் விழிப்போடு இருப்பது போல நடிப்பார்கள். ஒரு வேட்பாளர், கூட்டணிக்கட்சித் தலைவரோடு கைகளை பிணைத்துக் கொண்டு வந்த போது பக்கத்து மேஜை அலுவலர்கள் என்ன இவனுங்க லவ்வர்ஸ் மாதிரி வராங்க என்று கமெண்ட் அடித்த அசிங்கமும் நடந்தது. ஆனால் பாவம் அவர் தோற்று விட்டார். எத்தனை பணத்தை இழந்தாரோ?
ஒருவர் பெறும் வாக்கை மாற்றி எழுதுவது என்பது நான் அமர்ந்திருந்த மேஜையிலேயே நடந்தது. முதல் சுற்று எல்லாம் சரியாகவே நடந்தது. அடுத்த சுற்றில் பதிவான வாக்குகள் எவ்வளவு என்ற எண்ணிக்கையை அதற்குரிய இடத்தில் எழுதாமல் அதற்கடுத்த இடத்தில் இருந்த A கட்சி வேட்பாளர் இடத்தில் எழுதினர். நான் சுட்டிக்காட்டியதும், சாரி என்று சொல்லி திருத்திக்கொண்டார். நான்காவது சுற்றில் B கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகளை அவரிடத்தில் எழுதாமல் வேறு வேட்பாளரிடம் எழுதினர். இம்முறை சற்று கடுமையாகவே சொன்னதும் திருத்திக்கொண்டார். இதில் என்ன கொடுமை என்றால் அந்த சுற்றில் A கட்சி 300 வாக்கு, B 700 வாக்கு வேறு கட்சி 100 வாக்கு பெற்றிருந்தார்கள் என்று வைத்துக்கொள்வோம். 400 வாக்குகள் அந்தப் பெட்டி மூலமாக பெற்றிருக்க வேண்டியவருக்கு 100 வாக்கு மட்டுமே கிடைக்கும். தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் ஏழாவது சுற்றில் மீண்டும் தன் வேலையைக் காண்பிக்க வேதாளம் கடுமையாகவே மிரட்ட வேண்டியிருந்தது. அப்சர்வரிடம் சொல்வேன் என்றதுதான் அந்த மிரட்டல். அதன் பின்பு சுமுகமாகவே நடந்து முடிந்தது. இந்த வேலைகளையெல்லாம் எந்த கட்சியின் முகவரும் உன்னிப்பாக கவனிக்கவேயில்லை. எங்கள் மேஜைக்கு வாய்ந்த அடிமைகள் அப்படி!
இப்படி எல்லா மேசைகளிலும் செய்வதற்கான வாய்ப்பு உண்டா என்றால் நிச்சயம் கிடையாது. ஆனால் மொத்தமுள்ள 15 மேசைகளில் ஏதேனும் மூன்று மேசைகளில் மட்டும் செய்கின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம். மொத்தமுள்ள 15 சுற்றுக்களில் மூன்றே மூன்று சுற்றுக்களில் செய்கின்றனர் என்று கூட வைத்துக்கொள்ளலாம். மோசடியே கிடைக்கிற வாக்குகள் வெறும் இருநூறு என்று மட்டுமே வைத்துக்கொண்டால் என்ன ஆகும் என்று பார்ப்போம்.
3 *3 *200 = 1800 .
வாக்கு எண்ணிக்கை முடிந்த கையோடு ஐநூறு ரூபாய் பணமும் கொடுத்தார்கள். முடிவை அறிவித்ததும் வீட்டிற்கு போகச் சொல்லி விட்டார்கள். ஆறு முப்பதிற்கு உள்ளே நுழைந்தவர்கள் 12.30 க்கு வெளியே வந்து விட்டோம். வெற்றி பெற்ற கட்சியினர் வெடித்த பட்டாசுகள் மத்தியில் சாலையில் செல்வதுதான் சிரமமாக இருந்தது.
நேற்றைய ஆங்கில இந்து செய்தியின் அடிப்படையில் . . .
காங்கிரஸ் கட்சி தலைவர் பவன் கேராவிற்கு உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் கொடுத்துள்ளது.
ஏன்?
அஸ்ஸாம் பாஜக முதல்வர் ஹிமண்ட பிஸ்வாஸ் சர்மாவின் மனைவி ரிங்கு சர்மா அவர் மீது புகார் கொடுத்துள்ளார். அதன் படி அஸ்ஸாம் போலீஸ் அவரை கைது செய்ய தேடுகிறது.
முதல்வரின் மனைவி ஏன் புகார் கொடுத்தார்?
அஸ்ஸாம் முதல்வரின் மனைவிக்கு எகிப்து, அமீரகம், இந்தியா என்று மூன்று நாடுகளின் பாஸ்போர்ட் உள்ளது என்று பவன் கேரா, ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். அதற்கான ஆவணங்களையும் காண்பித்துள்ளார். அந்த பெண்மணிக்கு 50,000 கோடி மதிப்பில் அமெரிக்காவில் ஒரு கம்பெனி இருப்பதாகவும் துபாயில் சொத்துக்கள் இருப்பதாகவும் சொல்லியுள்ளார்.
அது மட்டுமா சொன்னார்?
அஸ்ஸாம் முதல்வர் இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல் செய்கிறார். ஆனால் அவரது மனைவியோ இரண்டு இஸ்லாமிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை வைத்துள்ளார்.
இது போதாதா?
புகார் கொடுத்து விட்டார். முதல்வரின் மனைவியின் புகாரை அந்த மாநில காவல்துறை அலட்சியப்படுத்துமா? அதனால் அவர்கள் கைது செய்ய துடிக்கிறார்கள்.
முதல்வரின் மனைவி கொடுத்த புகாரும் பவான் கேராவின் குற்றச்சாட்டுக்களும் அரசியல் பகைமையின் வெளிப்பாடு. அதனை வழக்கு விசாரணையில் முடிவு செய்து கொள்ளட்டும் என்று சொல்லி முன் ஜாமீன் கொடுத்த உச்ச நீதிமன்றம் இன்னொன்றையும் சொல்லியுள்ளது.
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, பவன் கேராவை தரக்குறைவான (UN PARLIAMENTARAY) வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதுவும் சரியல்ல என்று சொல்லியுள்ளது உச்ச நீதிமன்றம்.
பாஜக வாஷிங் மெஷினால் உத்தமராக்கப்பட்ட முன்னாள் காங்கிரஸ்காரர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மாவை அவ்வளவு சீக்கிரமாக விட்டுக் கொடுக்குமா பாஜக?
அஸ்ஸாமில் வெற்றி பெற்றால் அவரைத்தான் மீண்டும் முதல்வராக்கும்.
எல்லாம் காலக் கொடுமை!
முக நூலில் பார்த்த படம் கீழே உள்ளது.
மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை தயாரிக்கும் குழு என்று நக்கலாக பேனரில் சொல்லப்பட்டுள்ளது.
அது தவறு.
"பெண்களின் காவலர்கள்" என்று பேனரில் எழுதியிருக்க வேண்டும்.
ஆமாம்.
அவர்கள் எல்லாம் யார் தெரியுமல்லவா?
நாற்காலியில் அமர்ந்திருப்பவர்கள் இருவர் பெயரும் எப்ஸ்டீன் கோப்புகளில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் இஸ்ரேல் என்ன சொன்னாலும் அதை தட்டாமல் செய்து முடிக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
நின்று கொண்டிருப்பவர்கள்.
ராம் ரஹீம் சிங் - இரண்டு பாலியல் வன் கொடுமை வழக்குகளுக்காக சிறையில் இருக்கும் சாமியார். மோடியின் அரசியல் தேவைகளுக்காக அவ்வப்போது பரோலில் வெளி வருபவர்.
ஆச்சாராம் பாபு - பாலியல் வன் கொடுமை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்றவர். அவர் காலில் விழுந்து மோடி ஆசீர்வாதம் வாங்கியுள்ளார்.
மூன்றாவதாக நிற்பவர் உனாவ் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப் செங்கார். பாலியல் வன் கொடுமை செய்து நியாயம் கேட்ட தந்தையை கொன்று சாட்சி சொல்ல சென்றவர்களை விபத்து என்ற பெயரில் கொன்று இப்போது ஆயுள் தண்டனை பெற்றவர். மோடியும் மொட்டைச் சாமியாரும் அவரை பாதுகாக்க முயன்றார்கள் என்பதை மறந்து விடக் கூடாது.
அடுத்து நிற்பவர் ஹர்தீப்சிங் பூரி, மத்திய அமைச்சர், எப்ஸ்டீனுடன் பழக்க வழக்கம் வைத்திருந்தவர்.
பூரிக்குப் பக்கத்தில் ப்ரஜ்வால் ரேவண்ணா, பாஜகவின் கூட்டாளியான மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர், முன்னாள் பிரதமர் தேவே கௌடாவின் பேரன், அவர் மீது பாலியல் வன் கொடுமை குற்றச்சாட்டுக்கள் கொடுத்தவர்கள் இது வரை வெறும் ஐம்பது பேர்தான். அவர் கைது செய்யப்படுவதற்கு முதல் நாள் மோடியோடு ஒரு போட்டோ ஷூட் செய்திருந்தார்.
ரேவண்ணாவின் பக்கத்தில் நிற்பது மோடியால் பாதுகாக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனைகளால் பாலியல் சீண்டல் புகார் கொடுக்கப்பட்ட பிரஜ்பூஷண் சரண்சிங். இவருக்குப் பதிலாக இவர் மகனை எம்.பியாக்கி அழகு பார்த்தார் மோடி.
கடைசியாக நிற்பவர்தான் ஜெஃப்ரி எப்ஸ்டீன். உலகெங்கும் உள்ள சபலப் பேர்வழிகளுக்கு பிள்ளைக் கறி (விபரம் தெரியாதவர்கள் கமலஹாசன் நடித்த மகாநதி பார்க்கவும்) பரிமாறிய உத்தமன்.
இத்தனை அவதார புருஷர்களை வெறுமனே "மகளிர் மசோதா தயாரிக்கும் குழு" என்று சுருக்கி விடலாமா?
"பெண் இனக் காவலர்கள்" என்று சொல்வதுதானே சரியாக இருக்கும் மோடி?
மன்னிக்கவும். இந்த பதிவும் சொந்த அனுபவம், வசந்த அனுபவம் மற்றும் நொந்த அனுபவம்.
16.04.1986 அன்று பயிற்சி உதவியாளராக எல்.ஐ.சி யில் இணைந்தேன். 15 நாள் பயிற்சி வகுப்பு சென்னையில் நடந்து 30.04.1986 அன்று நெய்வேலி கிளையில் போய் வேலை பார் என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.
02.05.1986 அன்று பதற்றத்தோடு நெய்வேலி கிளை அலுவலகத்திற்குள் காலடி எடுத்து வைத்தேன்.
அன்று நாங்கள் ஒன்பது பேர் நெய்வேலியில் பணியில் இணைந்தோம். ஆனந்தன், பாஸ்கரன், ஜவஹர்,நரசிம்மன், ராமன், செல்வராஜ் என்று ஆறு ஆண் ஊழியர்களும் சித்ரா, நீலாயதாட்சி,உஷாராணி என்று மூன்று பெண் ஊழியர்களும் சேர்ந்தோம்.
ஒன்பது பேர் என்பதால் எங்களை நவ ரத்தினங்கள் என்று சொன்னவர்களும் உண்டு. நவக் கிரகங்கள் என்று கலாய்த்தோரும் உண்டு.
அனைத்து ஊழியர்களோடும் அறிமுகம், கிளை பற்றிய விபரங்கள் பகிர்தல், தற்காலிகமாக என்ன பணி செய்வது என்று காலைப் பொழுது முடிந்தது. மதியத்திலிருந்தே வேலை தொடங்கி விட்டது. லெட்ஜர் போஸ்டிங் என்ற வேலைதான் முதலில் கொடுக்கப்பட்டது. பாலிசிதாரர் பிரிமியம் செலுத்திய ரசீதை அவருடைய லெட்ஜர் ஷீட்டில் குறிப்பது. கொஞ்சம் அலுப்பூட்டும் வேலைதான். பெரிய பெரிய லெட்ஜர்களை எடுப்பதில் கொஞ்சம் கை வலி கூட வரும். பிறகு நிரந்தரமாக அக்கவுண்ட்ஸ் பிரிவு தரப்பட்டது. ஐந்தாண்டுகள் அங்கேயேதான் இருந்தேன்.
மதிய வேளையில் புதிதாக சேர்ந்த ஆண் தோழர்களை அன்றைய முன்னணி சங்கப் பொறுப்பாளரும் பின்னாளில் எங்கள் கோட்டத்தின் முதுநிலை கோட்ட மேலாளருமான தோழர் சுப்பராயன் அருகில் உள்ள டீக்கடைக்கு அழைத்துச் சென்று டீ வாங்கிக் கொடுத்து அனைவரையும் இயல்பாக பழக வைத்தார்.
02.05.1986 அன்று நெய்வேலி அலுவலகத்திற்கு சென்ற போது விரைவில் சிவில் சர்வீஸஸ் தேர்வில் வெற்றி பெற்றோ அல்லது எல்.ஐ.சி முதல் நிலை அதிகாரிக்கான நேரடித் தேர்வில் வெற்றி பெற்றோ இந்த அலுவலகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைத்துக் கொண்டுதான் உள்ளே நுழைந்தேன்.
சங்கம் எனக்கு மாற்றுப் பாதையை காண்பித்தது. மனதிற்கு மிகவும் பிடித்த பாதையாகவும் அமைந்திருந்தது. நெய்வேலி கிளையில் கிடைத்த அனுபவங்கள் பின்னாளில் கோட்டச்சங்கப் பணிகளை செய்வதற்கான அடித்தளமாக அமைந்திருந்தது. வாழ்வின் வசந்த காலத்திற்கான துவக்கப் பள்ளி 02.05.1986.
ஆனால்
02.05.2025????
முதல் நாள் மே தினம். அன்றைக்கு மே தினப் பொதுக்கூட்டத்தில் குறைவான எண்ணிக்கையில்தான் தோழர்கள் பேசினார்கள். நானும் அவர்களில் ஒருவன். எனக்கே என் உரை நிறைவாக இருந்தது. பல தோழர்கள் பாராட்டினார்கள். இரு சக்கர வாகனத்தை கிளப்பும் போது ஒரு போலீஸ்காரர் "நல்லா பேசினீங்க சார்" என்று கை கொடுத்தார். மறுநாள் காத்திருக்கும் அபாயம் தெரியாமல் வீடு வந்து சேர்ந்தேன்.
மறு நாள் அலுவலகம் செல்லும் வழியில் எப்போதும் போல நிதானமாக சாலையின் ஓரத்தில்தான் இரு சக்கரஃ வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். அலுவலகத்திற்கு ஒரு கிலோ மீட்டர் முன்பாக பின்னே வந்து கொண்டிருந்த ஒரு வேன் மோதியது. சற்று சுதாரிப்பதற்கு முன்பாக இரண்டாவது முறையாகவும் மோத ஸ்கூட்டர் ஒரு புறம் கீழே விழ, நான் உருண்டு கொண்டும், சருக்கிக் கொண்டும் செல்கிறேன். நம் கதை இத்தோடு முடிந்தது என்று அந்த நொடியில் நினைத்தேன்.
இடது பக்கத்தில் உருண்டதற்கு பதிலாக வலது பக்கம் உருண்டிருந்தால் நிஜமாகவே கதை முடிந்திருக்கும். வாழ்க்கைக்கும் சரி, சாலைக்கும் சரி இடதே பாதுகாப்பு.
என் பின்னாடியே வந்து கொண்டிருந்த கோட்ட அலுவலகக் கிளைச்சங்கத் தலைவர் தோழர் ஜெயகாந்தம் மற்ற தோழர்களுக்கு தகவல் சொல்ல அப்படியே ஒரு காரில் தூக்கி வைத்து நறுவி மருத்துவமனையில் சேர்த்தார்கள். பேண்டும் சட்டையும் கிழிந்து போயிருந்தது. முழங்காலில் ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. இடுப்பிலும் தோளிலும் தாங்க முடியாத வலி.
மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சரில் மாற்றியது, பின்பு ஸ்கேன் செய்ய, எக்ஸ்ரே எடுக்க என ஸ்ட்ரெச்சரிலிருந்து மேஜைக்கு மாற்றி பின்பு ஸ்டெரெச்சருக்கு மாற்றியது எல்லாம் மரண அவஸ்தையாக இருந்தது. இடுப்பு எலும்பு முறிவு, காலர் எலும்பு நொறுங்கி விட்டது என்பது சோதனைகளின் முடிவு. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் முடிவு செய்தார்கள். அறுவை சிகிச்சை காரணமாக கதீட்டர் வைத்து சிறுநீர் பை வைக்க முடிவு செய்தார்கள். கதீட்டர் நுழைப்பதில் பிரச்சினை இருந்ததால் ஒரு மைனர் அறுவை சிகிச்சையும் நடந்தது.
ஒரு வழியாக மறுநாள் 03.05.2025 அன்று அறுவை சிகிச்சை நடந்தது. காலர் எலும்பிற்கு பதிலாக ப்ளேட் வைக்கப்பட்டது. இடுப்பு எலும்புகளில் மூன்று ஸ்க்ரூ போட்டு முடக்கப்பட்டது. ஆறு நாட்களிலேயே டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள். இந்த காலகட்டத்தில் மருத்துவமனைக்கு வந்து பார்த்த ஏராளமான தோழர்கள் நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்று நம்பிக்கை அளித்தார்கள்.
டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வருவதற்கு முன்பே மருத்துவமனைக்கான அமைப்பை என் மனைவி வீட்டிலேயே செய்து வைத்திருந்தார். ஒரு செவிலியரையும் ஏற்பாடு செய்திருந்தார். என் மனைவியும் மகனும் அளித்த பராமரிப்பின் காரணமாகவே நாற்பத்தைந்து நாட்களில் வாக்கர் துணையுடன் அலுவலகம் செல்ல முடிந்தது. பணி ஓய்வு நாளன்று ஸ்ட்ரெச்சரிலோ அல்லது வீல் சேரிலோ அலுவலகம் செல்ல வேண்டியிருக்குமோ என்று அச்சப்பட்டதற்கு மாறாக வாக்கர் துணையுடன் நடந்து செல்ல முடிந்தது.
ஆனால் பாதிப்புக்கள் இன்னும் தொடர்கிறது. காலர் போன் வைத்ததால் தசை இறுகிப் போய் அவ்வப்போது வலி எட்டிப்பார்க்கிறது. அதன் காரணமாக இரு சக்கர வாகனம் ஓட்டக்கூடாது என்றும் இடுப்பில் ஸ்க்ரூக்கள் இருப்பதால் பின்னேயும் உட்காரக்கூடாது என்றி மருத்துவர் சொல்லி விட்டார். அதனால் 02.05.2025 க்குப் பிறகு வேன் ஓட்டுனர் முனீஷ்காந்த் புண்ணியத்தில் இரு சக்கர வாகனத்தைப் பற்றி நினைக்கவே முடியவில்லை.
ஆனாலும் அவசியமான பணிகளுக்கு ஆட்டோவில் செல்கிறேன். நேற்று கூட மே தினக் கொடியேற்று விழாவிற்கும் எங்கள் அலுவலகத்திலிருந்து பொதுக்கூட்டத்திற்கும் ஆட்டோவில்தான் சென்றேன். கூட்டத்தில் பேசி முடித்து விட்டு பின் அமர்ந்திருந்த போது வந்த நினைவலைகள் இங்கே பதிவாக.
விபத்து இரு சக்கர வாகனம் ஓட்டுவதை மட்டும்தான் முடக்கியது. மற்ற பணிகளையோ சிந்தனைகளோ அல்ல. எப்போதும் போல் இயங்குவேன் என்ற நம்பிக்கையோடு பயணிக்கிறேன்.
பிகு 1 : மேலே உள்ள படம் 01.11.2025 அன்று நெய்வேலியில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற போது நெய்வேலி அலுவலக வாயிலில் வரையப்பட்டிருந்த கோலம்.
பிகு 2 : நேற்று இரவு தட்டச்சு செய்யப்பட்ட பதிவு. எங்கள் கோட்ட மகளிர் ஒருங்கிணைப்புக்குழுவின் இணைப்பாளராக இருக்கிற கோட்டச்சங்க இணைச்செயலாளராக, துணைத்தலைவராக செயல்பட்ட தோழர் எஸ்.ஜெயஸ்ரீ அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவில் பங்கேற்க கடலூர் செல்லும் வழியில் பயணத்தின் நடுவே பகிர்ந்து கொள்கிறேன்.
பயணம் தொடரும்.
சில மோசமான சம்பவங்களை நாம் மறக்க நினைத்தாலும் முகநூல் நினைவு படுத்திவிடுகிறது. அப்படி ஒரு சம்பவம்தான் 30.04.2013 அன்று நடைபெற்றது. 01.05.2013 அன்று எழுதிய பதிவை கீழே அளித்துள்ளேன். பாமக கட்சியில் அப்பா-மகன் மோதல் என்பது உட்கட்சிப் பிரச்சினை என்றாலும் ஜாதிவெறியை தூண்டி மக்களுக்கிடையே மோதலை உண்டாக்கியவர்கள் அவர்களுக்குள்ளேயே மோதிக் கொள்கிறார்களே என்பது அற்ப சந்தோஷத்தை அளித்தது.
இந்த சம்பவம் வேறொரு நெகிழ்ச்சியான பாடத்தையும் கொடுத்தது. அதனை வேறொரு பதிவில் முன்பே குறிப்பிட்டுள்ளேன்.
இதோ அந்த பாடம்.
அவர்
என்னிடம் கடிந்து கொண்ட அனுபவமும் உண்டு. பாமக அராஜகக் கும்பலிடமிருந்து தப்பிய
அனுபவத்தை ஏற்கனவே பகிர்ந்துள்ளேன். இந்த ஏப்ரலில் கூட மீள் பதிவு செய்துள்ளேன்.
தைலாபுரம் தோட்டத்திலிருந்து தப்பித்தவுடன் அந்த நிகழ்வை ஓரிரு வார்த்தைகளில்
முகநூலில் பதிவு செய்திருந்தேன். “Take Care” என அங்கே
பின்னூட்டம் இட்டு விட்டு உடனடியாக அழைக்கவும் செய்தார். பிறகு இன்னொரு இடத்தில்
மரம் வெட்டப்பட்டதால் பயணம் தடைபட்டு விட்டது என்றும் ஒரு பதிவு
எழுதியிருந்தேன்.அதிகாலை 3 மணிக்கு வீடடைந்து உறங்கியும்
விட்டேன்.
காலை 7 மணிக்கு தொலைபேசியில் அழைத்த தோழர் சன்யால், எத்தனை மணிக்கு வீட்டிற்கு வந்தேன் என்பதை கேட்டு விட்டு, “பிரச்சினையில் சிக்கிக் கொண்டதை பதிவு போட்ட நீங்கள், ஜாக்கிரதையாக வீடு திரும்பியதை ஏன் எழுதவில்லை, எவ்வளவு கவலையாக இருந்தது தெரியுமா? இனி இது போல செய்யாதீர்கள்” என்று உரிமையோடு கண்டிக்க என் தவறு புரிந்தது.
இதிலே குறிப்பிட்டுள்ள அவர் மறைந்த தோழர் பி.சன்யால், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத்தலைவராக, இணைச்செயலாளராக, மத்திய மண்டலக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த வேகமும் உற்சாகமும் நிறைந்த தலைவர்.
அதன் பின்பான பயணங்களின் போது தைலாபுரம் தோட்டத்தை கடக்கும் போதெல்லாம் தூங்க முயற்சிப்பேன். பெரும்பாலும் முடிவதில்லை. அங்கே நடந்த சம்பவத்தையும் தாண்டி எனக்கு எரிச்சலூட்டும் விஷயம் கீழே உள்ளது.
பாமகவின் கொள்கைகளுக்கும் செயல்பாட்டிற்கும் கொஞ்சமும் பொருந்தாத அந்த மூவரின் சிலைகள் எதற்கு அங்கே?
இப்போது பழைய பதிவை பாருங்கள்.
நேற்று காலை நன்றாகவே
தொடங்கியது. மாலையில் கடலூரில் இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதன வரம்பை
உயர்த்தும் முடிவிற்கு எதிராக பொதுக் கூட்டம். திருவண்ணாமலையிலும் திருக்கோயிலூரிலும் இரண்டு முன்னணி தோழர்களின் பணி நிறைவு. வேறு ஒரு கிளையில் தோழர்களோடு பேச வேண்டிய அவசியம் இருந்தது.
திருவண்ணாமலையிலும்
திருக்கோயிலூரிலும் ஓய்வு பெற்ற தோழர்களை வாழ்த்தி சங்கத்தின் சார்பில் கௌரவித்து
விட்டு இன்னொரு கிளையிலும் பணி முடித்து விட்டு கடலூர் உழவர் சந்தை அருகே பொதுக்கூட்டத்திற்கு நேரடியாக ஐந்தரை
மணிக்கு வந்தேன். காவலர்கள்
கூட்டம் அதிகமாகவே இருந்தது. என்னவென்று விசாரித்தால் மருத்துவரை கைது செய்ததால் போடப்பட்டுள்ள பாதுகாப்பு என்றார்கள்.
கூட்டம் சிறப்பாகவே நடந்து
முடிந்தது. வேலூர் திரும்ப வேண்டும்.
எனது சொந்த
வாகனத்தில் ஒரு டிரைவரோடு வந்திருந்தேன். புதுவை, திண்டிவனம்,
வந்தவாசி, செய்யாறு, ஆற்காடு சாலை நன்றாக உள்ளதால் அந்த வழியில் திரும்ப முடிவு
செய்தோம்.
புதுச்சேரியிலிருந்து ஒரு இருபது
கிலோ மீட்டர் தூரத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை. மருத்துவரின் தைலாபுரம் தோட்டம் நெருங்கும் போது பார்த்தால் சாலையில் ஏதோ எரிந்து
கொண்டிருந்தது. கொஞ்சம் வேகத்தை குறைத்து அருகில் நெருங்கினால் ஒரு இருபது வாலிபர்கள்
இருப்பார்கள்.
அவர்கள் எனது காரின் மீது
கல்லெறியத் தொடங்கினார்கள். தூரம் ஒரு முப்பது நாற்பது அடிதான் இருக்கும். ஒருவன் ஒரு பெரிய பாறையை தூக்கிக் கொண்டு ஓடி
வந்தான். இருள் நேரத்திலும் அவன் முகத்தில் பார்த்த வெறியை
வாழ்வில்
என்னால் என்றும் மறக்க முடியாது.
மற்றவர்களும் காரை நோக்கி
ஓடி வந்தார்கள். அங்கே எரிந்து
கொண்டிருந்தது ஒரு இரு சக்கர வாகனம்.
டிரைவர் திரு வெங்கடேஷ்
சமயோசிதமாக ரிவர்ஸ் கியர் போட்டு பின்னாலே ஓட்டி வந்தார். நாற்பது கிலோ
மீட்டர் வேகத்தில் ரிவர்ஸ் கியர். நல்ல வேளையாக பின்னால்
வேறு எந்த வாகனமும் வரவில்லை. ஒரு அரை கிலோ மீட்டர் சென்ற பின்பு மயிலம் செல்வதற்கான மாற்றுப் பாதை
வந்தது.
பாதையின் துவக்கத்தில் இருந்த
கிராமத்திலோ திருவிழா நடந்து
கொண்டிருந்தது. வாண வேடிக்கை பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். அருகில் நடந்து கொண்டிருந்த அராஜகத்தின் நிழல் அந்த கிராமத்தின் மீது
படியவில்லை.
மயிலம் வழியாக திண்டிவனம் வந்தால்
மேம்பாலம் அருகே ஒரு போர் நடந்ததன் அடையாளங்களாக கற்களும் கண்ணாடி துகள்களும் சாலையெங்கும் கிடந்தன. காவலர்கள் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப் பட்டிருந்தனர். ஆனால்
திண்டிவனம் பஜாரில் எந்த பாதிப்பும் இருந்ததாக தெரியவில்லை.
பதினோரு மணிக்குக் கூட காய்கறி கடைகள் இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தன.
சரி இனி எந்த பிரச்சினையும் இல்லை
என்று நினைத்தால் செய்யாறு தாண்டியவுடன் சாலையில் ஒரு இடத்தில்
போக்குவரத்து தடைபட்டிருந்தது. பாமக காரர்கள் வழக்கம் போல்
மரத்தை வெட்டி சாலையை அடைத்திருந்தார்கள். காவல்துறைக்கு தகவல் வந்திருந்ததால்
ஜே.சி.பி இயந்திரம் கொண்டு வழி உருவாக்கிக் கொடுத்தார்கள்.
ஆனால் இந்த நிம்மதி நிலைக்கவில்லை.
ஒரு பத்து கிலோமீட்டர் கடந்திருப்போம். ஆற்காடிற்கு இருபத்தி ஐந்து கிலோ
மீட்டர்கள் முன்பாக மரம் வெட்டிகள் மீண்டும் கைவரிசையை காண்பித்து விட்டார்கள். ஒரே ஒரு கான்ஸ்டபிள் இருந்தார்.
இப்போதான் சார் வெட்டிட்டு
ஓடிட்டாங்க, நான் யதேச்சையா வீடு திரும்பும்
போது பார்த்தேன்.
ஸ்டேசனுக்கு சொல்லியிருக்கேன். ஜேசிபி வர நேரமாகும். வேறு வழியில் போயிடுங்க என்று வழிகாட்ட ஒரு பத்து கிலோ மீட்டர் சுற்றி ஆற்காடு சாலையையே மீண்டும்
பிடித்தோம்
சென்னை- பெங்களூர் நாற்கர சாலையை அடைந்ததும்தான் இனி சிக்கல் கிடையாது என்று நம்பிக்கை வந்தது. மரம்
வெட்டிகளுக்கு வாய்ப்பு தராமல் சாலை அமைக்கும்போதே எல்லா
மரங்களையும் அரசே வெட்டி விட்டது.
பாமக காரர்களுக்கு சில கேள்விகள்.
கைது செய்யப்பட்டது உங்கள் தலைவர். அவரை விடுவிக்க வேண்டுமென்றால் ஜாமீன் போடுங்கள், சாலை மறியல் போராட்டம் நடத்தி கைதாகுங்கள். சம்பந்தமே இல்லாதவர்களை தாக்குவது என்ன போராட்ட வடிவம்?
மரக்காணம் கலவரங்கள், தர்மபுரி கலவரங்களுக்கும்
உங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லிக்
கொண்டிருக்கலாம். தைலாபுரம்
தோட்டத்தின் வாசலில் கலவரம் நடத்த மற்ற கட்சிக்காரர்களுக்கோ, ஜாதிக்காரர்களுக்கோ தைரியம் உள்ளதா என்ன?
மரம் வெட்டி என்றால் கோபம்
வருகிறது. இப்படி மரத்தை வெட்டி போக்குவரத்தை தடை செய்பவர்களை வேறு எப்படி அழைப்பது?
உங்கள் குடும்பத்தவர்களே உயிர்
போகும் நிலையில் ஆம்புலன்ஸில்
சென்றாலும் இப்படித்தான் வழியை அடைப்பீர்களா? உங்கள் ஐயாவும் சின்னய்யாவும் உயிர் காக்கும்
மருத்துவத்தை படித்தார்களா? அல்லது உயிரெடுக்கும் படிப்பா?
குடிக்கக் கற்றுக் கொடுத்து இளைய
சமுதாயத்தை கழகங்கள்
சீரழித்துள்ளதாக குற்றம் சுமத்த
என்ன யோக்கியதை உங்களுக்கு உள்ளது? ஜாதிய
வெறியையும் வன்முறைக் கலாச்சாரத்தையும் கற்றுக் கொடுத்து சீரழிப்பது நீங்கள் அல்லவா?
அசம்பாவிதம் எதுவும் நிகழாததால் என்னால் இப்படி பதிவு எழுதி
கேள்வி கேட்க முடிகிறது. திகிலான அனுபவம் என்று சொல்ல முடிகிறது.
ஏதேனும் நிகழ்ந்திருந்தால்?????????