Thursday, March 5, 2026

மாட்டிக் கொண்ட மகாராஜா

 





 

10,11,ஆகஸ்ட், 2024 ஆகிய தேதிகளில் எங்கள் கோட்டச்சங்கத்தின் 37 வது பொது மாநாடு திண்டிவனம் நகரில் நடைபெற்றது. மாநாட்டின் ஒரு பகுதியாக பொது வெளியில் நடைபெற்ற “மக்கள் ஒற்றுமை கலை விழா”வில் நான் எழுதிய “மாட்டிக் கொண்ட மகாராஜா” நாடகத்தை எங்கள் தோழர்கள் அற்புதமாக நடித்து மக்களின் கரவொலியை அள்ளினார்கள்.

ராஜா, மகாராஜா, மீண்டும் மகாராஜா, சந்திரனில் மகாராஜா ஆகிய நாடகங்களின் தொடர்ச்சி இந்த "மாட்டிக் கொண்ட மகாராஜா" 

மாநாடு முடிந்த பின்பு அதனை இங்கே பகிர்ந்து கொள்ள இயலவில்லை. இந்திய அரசில் என்ன நிகழும் என்று நாடகம் வாயிலாக எதிர்பார்த்தோமோ  அது நடக்காத காரணத்தால் இந்த நாடகத்தை இங்கே பகிர்வது பொருத்தமில்லை என்று அதை ஒரு ஓரத்தில் வைத்து விட்டேன்.

பீகார் முதல்வர் பொறுப்பிலிருந்து நிதீஷ்குமார் இப்போது துரத்தப்பட்டு ராஜ்யசபா உறுப்பினராகப் போகிறார். மத்திய மந்திரி பதவி கிடைக்கலாம்.  முதல்வர் பதவியிலிருந்து துரத்தப்பட்டதை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் ஆள் அல்ல நிதீஷ்.

அதனால் நாடகக் காட்சிகள் நிஜமாகும், விரைவிலேயே . . .

 

மாட்டிக் கொண்ட மகாராஜா . . .

 

காட்சி 1


 

இடம் : அரசவை

தலையில் உலகம் சுற்றும் வாலிபன் தொப்பியோடு “ராஜாவுக்கு ராஜா நாந்தான், எனக்கு மந்திரிங்க யாரும் இல்லை” என்ற பாடல் ஒலிக்க, அப்போ நாம எல்லாம் யாரு? என்ற கேள்வியோடு மந்திரிகள் இருவரும் பார்த்துக் கொள்ள, மகாராஜா அரசவைக்கு வருகிறார். அவரது கேமராமேன் அவரை போட்டோ எடுத்துக் கொண்டே இருக்கிறார்.

 மந்திரி 1 : போதும்யா போதும். விட்டா நாள் ஃபுல்லா போட்டோ எடுத்துக்கிட்டே இருப்ப போல!

 மகாராஜா : என்னய்யா இந்த தொப்பில நான் எப்படி இருக்கேன்?

 மந்திரி 2 : அப்படியே எம்.ஜி.ஆர் மாதிரி தகதகன்னு மின்னறீங்க .

 மந்திரி 1 : ஏன்யா நீ எம்.ஜி.ஆர் போட்டோவாவது பாத்திருக்கியா? இப்படி  உசுப்பேத்தி உசுப்பேத்தி நீ நல்ல பேரு வாங்கிக்கறே!

 மகாராஜா :  சரி விடுங்கய்யா!  மக்கள் என்னைப் பத்தி என்ன பேசிக்கறாங்க?

 மந்திரி 1     : நல்லபடியா எதுவும் பேசலை

 மந்திரி 2 : இந்தாளு சொல்றதை நம்பாதீங்க. ஃபேஸ்புக், ட்விட்டர் எல்லாம் உங்க புகழ்தான்.

 மந்திரி 1 : அதுலயே எவ்வளவு பேர் கழுவி கழுவி ஊத்தறாங்க தெரியுமா?

 அப்போது வெளியில் ஏதோ சப்தம் கேட்கிறது.

 மகாராஜா : அங்க என்ன சத்தம்?

 புகைப்படக்காரர் : பழைய மகாராஜாவோட பையன் ஒரு கூட்டமா வந்திருக்காரு!

 மகாராஜா : அந்த சின்னப்பையனுக்கு என்ன வேணுமாம்?

 மந்திரிகள் இருவரும் வெளியே போய் சின்ன ராஜாவுடன் பேசி விட்டு உள்ளே வருகிறார்கள்.

 மந்திரி 1 : போன தடவை யானை மாலை போட்டு நீங்க மகாராஜாவானீங்க இல்லை! அப்போ . . .

 மகாராஜா : அதுக்கு இப்போ என்னய்யா?

 மந்திரி 1 : அஞ்சு வருஷம் கழிச்சி மறுபடியும் யானையை வச்சி மகாராஜவை தேர்ந்தெடுக்கலாம்னு சொன்னீங்களாம். அதை ஞாபகப்படுத்த வந்திருக்காரு

 மந்திரி 2 : நாமெல்லாம் என்னிக்குய்யா சொன்ன வார்த்தையை காப்பாத்தியிருக்கோம். அஞ்சு வருஷம் முன்னாடி சொன்னதை எல்லாம் இப்போ செய்யனுமா என்ன?

 மகாராஜா : விடுய்யா பாத்துக்கலாம். நாம பழக்கின யானைதானே!  

மந்திரி 1 : போன தடவை உங்க கழுத்தில மாலை போட்டதும் சுத்தி சுத்தி போட்டோ எடுத்தீங்க இல்ல!

 மந்திரி 2 : அதனால என்னய்யா?

 மந்திரி 1 : ஓவர் ஃப்ளாஷ் ஒத்துக்காம அதோட பார்வையே போயிடுச்சு.

 மந்திரி 2 : அப்போ அது ரிஸ்க்! அந்த யானை சின்னப்பையன் கழுத்தில மாலையை போட்டா நம்ம கதை அம்பேல்.

 மகாராஜா : வேற என்னய்யா செய்யறது?

 மந்திரிகள் இருவரும் யோசித்த படியே அங்கும் இங்கும் நடக்கிறார்கள்.

 மந்திரி 2 : மகாராஜா, ஒரு சூப்பர் ஐடியா!

 மகாராஜா : என்னய்யா அது?

 மந்திரி 2 : நீங்க ரெண்டு பேரும் பலப்பரிட்சை செய்யுங்க. அதில நீங்க ஜெயிச்சிடலாம்.

 மந்திரி 1 : யோவ, அவரு சின்னப்பையன், நம்ம மகாராஜாவுக்கோ வயசாயிடுச்சு.

 மந்திரி 2 : நாமெல்லாம் சுத்தி நின்னு அவனை கலாய்ச்சுக்கிட்டே இருப்போம். அதுல அவன் கவனம் மாறும். அப்போ மகாராஜாவை ஜெயிக்க வச்சிடுவோம். நமக்கு ஏத்த ஒரு ஆளை அம்பயர் ஆக்கிடலாம்.

 மந்திரி 1 : யானைக்கு பதிலா பலப்பரிட்சைன்னா அவன் ஒத்துக்குவானா?

 மந்திரி 2 : நான் என்ன பேசறேன்னு பாரு! அவனை கூட்டிட்டு வா

 சின்ன ராஜா வருகிறார்.

 மந்திரி 2 : இங்கே பாரு தம்பி! இந்த ப்ளூ கிராஸ், பீட்டா எல்லாம் ரொம்ப தகறாரு செய்யறாங்க! யானையை சித்திரவதை செய்யறோமாம். நீயும் மகாராஜாவும் யாருக்கு வலிமை அதிகம்னு பலப்பரிட்சை செய்யுங்க. ஜெயிக்கறவங்க மகாராஜாவாயிடுங்க!

 சின்ன ராஜா யோசிக்கிறார்.

 மந்திரி 2 : நீ சின்னப்பையன்தானே!  உனக்கே உன் பலத்து மேல நம்பிக்கை இல்லையா?

 சின்ன ராஜா :  எனக்கா பயமா? உங்காளு எவ்வளவு நேரம் தாங்குவார்னு யோசிச்சேன். சரி மோதிப் பார்க்கலாம். எப்போ?

 மகாராஜா : நாளைக்கே


 காட்சி  2



ஒரு டேபிள் போடப்பட்டு இரண்டு நாற்காலிகளில் மகாராஜாவும் சின்ன ராஜாவும் உட்கார்ந்து இருக்கிறார்கள். நடுவில் ஒரு  சேர் போடப்பட்டு அதில் அம்பயர் உட்கார்ந்து மிக்ஸர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

 சின்ன ராஜா : ஆரம்பிக்கலாமா?

 அம்பயர் பதில் சொல்லாமல் மிக்ஸர் சாப்பிடுகிறார்.

 மந்திரி 2 : சார்! ஸ்டார்ட் சொல்லுங்க

 அம்பயர் வாயில் மிக்ஸரை மென்று கொண்டிருக்க கையால் ஜாடை காட்டுகிறார்.

 மகாராஜாவும் சின்ன ராஜாவும் கைகளை கோர்த்து மோதுகிறார்கள்.

 மந்திரி 2 : தம்மாத்தூண்டு பையன் நீ, மகாராஜாவோட மோத வந்துட்டியா?

 மந்திரி 2 : உங்க தாத்தாவாலத்தான்     நாடே நாசமா போச்சு!

 மந்திரி 1 : உங்க அப்பாவும் சரியில்லை.

 மந்திரி 2 : நீயெல்லாம் மகாராஜாவானா எல்லா பொண்ணுங்களோட தாலியையும் பறிச்சி பக்கத்து நாட்டுக்கு கொடுத்துடுவே

 சின்ன ராஜா  அம்பயரைப் பார்த்து : இதையெல்லாம் அடக்க மாட்டீங்களா?

 அம்பயர் அப்போதும் மிக்ஸர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

 மகாராஜாவின் நண்பர்கள் நிதீஷும் சந்திரபாபுவும் வருகிறார்கள்.

 நிதீஷ் : என்ன மந்திரி? மகாராஜா தோத்துடுவார் போல இருக்கே!

 மந்திரி 2 : நீங்க ரெண்டு பேரும் மகாராஜாவை ஜெயிக்க வைக்க மாட்டீங்களா?

 நீதீஷும் சந்திரபாபுவும் சேர்ந்து மகாராஜா கையோடு தங்கள் கைகளை சேர்த்துக் கொண்டு அழுத்தம் தர மகாராஜா ஜெயித்து விடுகிறார்கள்.

 வெற்றி! வெற்றி ! என எல்லோரும் குதிக்கிறார்கள்.

 சின்ன ராஜா : இது அநியாயம்! அராஜகம்! ஒத்தனோட மூணு பேர் மோதுவாங்களா? என்ன அம்பயர் இதை கேட்க மாட்டீங்களா?

 அம்பயர் காதில் வாங்காதது போல மீண்டும் மிக்ஸர் சாப்பிடுகிறார்.

 மந்திரி 2 : நாளைக்கு மகாராஜா மீண்டும் பதவியேற்கப் போகிறார். எல்லாரும் வந்துடுங்க.

 

காட்சி 3



மகாராஜா அவரே கிரீடத்தை தன் தலையில் வைத்துக் கொள்கிறார். மந்திரிகளும் நண்பர்களும் கை தட்டுகிறார்கள்.

 சின்ன ராஜா : பிராடு செஞ்சு பதவிக்கு வந்தீங்களே! மக்களுக்கு என்ன செய்யப் போறீங்க?

 மகாராஜா : போன பத்து வருஷமா என்ன செஞ்சேன்?

சின்ன ராஜா : ஒன்னும் செய்யல

 மகாராஜா : இப்பவும் அப்படித்தான்.

 மகாராஜா அரசவையை விட்டு புறப்படுகிறார்.

 நிதீஷும் சந்திரபாபுவும் : எங்கே கிளம்பிட்டீங்க?

 மகாராஜா : என்னோட ரூமுக்குத்தான்.

 நீதீஷ் : இங்க இருக்க வேண்டாமா?

 மகாராஜா : இந்த உலகத்திலேயே எனக்கு பிடிக்காத ஒரே இடம் அரசவைதான்.

 சந்திரபாபு : அப்படில்லாம் எஸ்கேப் ஆயிட முடியாது. அஞ்சரை மணி வரைக்கும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.

 நிதீஷ் : அந்த கிரீடத்தை கொடு. எனக்கு எப்படி இருக்குன்னு பார்க்கறேன்.

 மகாராஜா : அது மகாராஜா கிரீடம்தான்.

 சந்திரபாபு : நாங்க இல்லைன்னா நீ எப்படி மகாராஜாவாயிருப்ப?

 நிதீஷ் : இப்போ கொடுக்கலைன்னா அது சின்ன ராஜா தலைக்கு நிரந்தரமா போயிடும்.

 இரண்டு பேரும் கிரீடத்தை மாற்றி மாற்றி அணிந்து கொள்கிறார்கள். போட்டோ எடுக்கச் சொல்கிறார்கள்.

 மந்திரி 2 : மகாராஜா, இந்தாங்க, உங்க முதலாளிகளுக்கு தர நீங்க கேட்ட லாலிபாப்

 சந்திரபாபு : அந்த லாலிபாப்பை எங்களுக்கு கொடுங்க.

 மகாராஜா : அது என் முதலாளிகளுக்கு

 நிதீஷ் : கண்ணா, இன்னும் அஞ்சு வருஷத்துக்கு நாங்கதான் உன் முதலாளி.

 அவர்கள் இருவரும் லாலிபாப்பை சுவைக்க

 மகாராஜா : என்னய்யா இது.

 மந்திரிகள் இருவரும் : இனிமே இப்படித்தான் . . .

 மகாராஜா அதிர்ச்சியில் நாற்காலியில் சாய்ந்து கொள்ள …

 “உள்ள அழுகிறேன், வெளிய சிரிக்கிறேன். நல்ல வேஷம்தான், வெளுத்து வாங்கறேன்” என்ற பாடல் ஒலிக்கிறது.

 குரல் : இது கதையல்ல, கற்பனையல்ல. இன்னும் ஐந்து ஆண்டுகள், இந்த தேசம் பார்க்கப் போகும் கொடுமைகள்.

 


 

 

மகாராஜா : தோழர் சி.சோமசுந்தரம், கோட்ட அலுவலகம்

மந்திரி  1  : தோழர் ஜி.ரவி, ஆரணி

மந்திரி   2 : தோழர் கே.அத்தாவூர் ரஹ்மான், கோட்ட அலுவலகம்

சின்ன ராஜா : தோழர் பி.எஸ்.பாலாஜி, வேலூர் கிளை

புகைப்படக் காரர் : தோழர் சி.கணேசன், கோட்ட அலுவலகம்

அம்பயர்  : தோழர் கே.வி.பாலகுமார், கோட்ட அலுவலகம்

நிதீஷ்        :  தோழர் கே.ரபீக் அகமது, வேலூர் கிளை

சந்திரபாபு : தோழர் ஆர்.குமரேசன், கோட்ட அலுவலகம்.

 பிகு : மேலே உள்ள கார்ட்டூன்கள்  திண்டிவனம் மாநாட்டு கண்காட்சிக்காக தயாரிக்கப்பட்டவை. 

 

 

எச்சரிக்கையாக இருப்பீர் அதிகாரிகளே! பலியாடாகாதீர்

 



திருச்சி கோட்ட ரயில்வே அலுவலகத்தில் ஒரு அலங்கார வளைவு வைத்து அதற்கு "கர்த்தவ்ய த்வார்" என்று இந்தியில் பெயர் வைக்கிறார்கள்.

தோழர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவிக்கிறார். முதல்வரும் இணைகிறார். கண்டனம் வலுக்கிறது.  எடப்பாடி கூட மெல்லமாக செல்லமாக சிணுங்கி வைத்தார். இறுதியில் அந்த "கர்த்தவ்ய த்வார்" எழுத்துக்கள் நீக்கப்பட்டது.

இது  அப்பட்டமான இந்தி திணிப்பு. மோடி அரசின் இந்தி வெறிக்கு ஒரு உதாரணம். 

இந்த வெறிக்கு அதிகாரிகள் பலியாடுகள் ஆகக்கூடாது.

நான் இதைச் சொல்வதற்கு காரணமுண்டு. 

ரயில்வேயில் நிகழ்ந்த இந்தி திணிப்பிற்கு முட்டு கொடுக்க முடியாமல் இந்தியிசை, அதிகாரிகள் மீது  பழி போடுகிறார்.


"சில அதிகாரிகள் செய்யும் தவறுக்கு தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயல்வதாக மத்தியரசு மேல் தேவையின்றி பழி போடப்படுகிறது" என்று அவர் பிரச்சினைக்கான காரணியை திசை திருப்புகிறார்.

அனைத்து அதிகாரிகளும் இதிலிருந்து பாடம் கற்க வேண்டும்.

மத்தியரசு சொல்கிறது, அமைச்சர் சொல்கிறது என்று நீங்கள் அரசியல் சாசன, ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராக செயல்பட்டால் பிரச்சினைகள் வரும் போது கடைசியில் நீங்கள்தான் மாட்டிக் கொள்வீர்கள். 

ஆட்சியாளர்களின் கைப்பாவைகள் அல்ல நீங்கள்!

ஒரு காலத்தில் அதிகாரிகளுக்கு தவறினை சுட்டி காட்டும் தைரியம் இருந்தது. 

ஆனால்

மோடி காலத்தில் எல்லாமே மாறி விட்டது.

பதவிக்காக சலாம் போடும் அதிகாரிகள் எதிர்காலத்தில் வருந்துவார்கள். 


Wednesday, March 4, 2026

சஞ்சு சாம்சனும் சங்கி கம்பீரும்

 


இந்தியாவும் மேற்கிந்தியத்தீவுகள் அணியும் விளையாடிய டி-20 போட்டியை என் மக்னோடு நானும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கேரளாவின் சஞ்சு சாம்சன் போட்டியில் வென்ற பின் மண்டியிட்டு சிலுவை போட்டு கடவுளை வணங்கினார்.   மத வெறி கிரிக்கெட்டிலும் ஊடுறுவிய காலத்தில் இப்படி செய்கிறாரே என்று எனக்கு தோன்றியது. போச்சு அவரை ட்ரால் பண்ணி நோகடிச்சுடுவாங்க என்று மகனும் சொன்னான்.

அன்றை போட்டியின் வெற்றிக்கு காரணமான சஞ்சு சாம்சனின் சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் எப்படி சிறுமைப்படுத்துகிறார் பாருங்கள்.


பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தசங்கி கம்பீரால் எப்படி அவருக்கு பிடிக்காத செயலை செய்த சாம்சனை எப்படி பிடிக்கும்!

நல்ல வேளை இந்த போட்டி அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் நடக்கவில்லை. மத வெறியர்கள் இந்த ஸ்டேடியத்தில் ஏற்கனவே இந்தியாவிற்கு இழிவை தேடிக்கொடுத்துள்ளார்.

விளையாட்டும் சங்கிகளுக்கு அரசியல் . . .

Tuesday, March 3, 2026

மீண்டும் மீண்டும் அசிங்கப்படும் அதிமுக

 

மோடி கலந்து கொண்ட மதுரை கூட்டம் தொடர்பாக நயினார் நாகேந்திரன், கூட்டத்திற்கு முதல் நாள் பகிர்ந்து கொண்ட படம் கீழே உள்ளது.


மேலே உள்ள படத்தில் உள்ள மோடியின் படத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது கீழே உள்ள படத்தையும் அதில் உள்ள மோடியின் படத்தையும் நன்றாக பார்த்துக் கொள்ளவும். இதுவும் நயினார் நாகேந்திரன் பகிர்ந்து கொண்டதுதான்.


என்ன நன்றாக கவனித்தீர்களா/?

முதல் நாள் பொதுவாக வெற்றியின் சின்னம் என்று கருதப்படுகிற இரண்டு விரல்களை காண்பித்துக் கொண்டிருந்த மோடியின் படம், கும்பிட்டுக் கொண்டிருக்கும் மோடியின் படமாக மாறி விட்டது.

இரண்டு விரல்களை காண்பிப்பது இரட்டை இலை சின்னத்தை குறிக்கிறது என்று பாஜக கருதியதால் அந்த படம் தூக்கப்பட்டு விட்டது.

முதலில் தந்தை பெரியார் படத்தை தூக்கச் சொன்னார்கள்.

பிறகு அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை குறிப்பது போல இருக்கக் கூடாது என்று மோடியின் படத்தையே மாற்றி விட்டார்கள்.

அதிமுக ஆட்சி என்று எடப்பாடி சொன்னால், என்.டி.ஏ ஆட்சி என்று மோடி சொல்கிறார்.




பேச்சு வார்த்தையில் எடப்பாடிக்கு கொடுக்கப்பட இடம் கூட, ஒரு கூட்டணியின் தலைவருக்கான இடம் இல்லை.

அதிமுக,வை பாஜக மீண்டும், மீண்டும், மீண்டும் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறது. கிரி "வீரபாகு" போல ரொம்ப நல்லவனாக அதிமுக அந்த அசிங்கங்களை மனமுவந்து சகித்துக் கொண்டிருக்கிறது. 



அவர்கள் காந்தியின் குரங்குகள் அல்ல தோழர்

 


இரானின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி யை அமெரிக்க, இஸ்ரேல் கொலைகாரப்படைகள் கொன்றது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் எம்.ஏ.பேபி அவர்களுடைய பதிவு கீழே உள்ளது.



இரானிய அரசின் சில ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் சில கருத்து வேறுபாடு இருப்பினும் அந்நாட்டின் உச்சபட்ச தலைவரையும் மற்ற உயரதிகாரிகளை அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஜியோனிஸ்ட் இஸ்ரேலும் இரானின் இரையாண்மைக்கு எதிராகவும் சர்வதேச விதிகளுக்கு முரணாகவும் கொன்றதை ஏற்றுக் கொள்ள முடியாது. கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய செயல் இது.

லத்தீன் அமெரிக்காவிலும் மற்ற பல நாடுகளிலும் கடைபிடித்த அதே உத்திகளைத்தான் அமெரிக்கா கையாள்கிறது. இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா அளந்து விட்ட பொய்கள் அம்பலமானதை நாம் பார்த்திருக்கிறோம். ஆப்கானிஸ்தான், லிபியா மர்றும் சிரியா அனுபவங்கள் நம் கண் முன்னே உள்ளது.

அமெரிக்க ராணுவத்துறை உலகிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது. இரானில் அமெரிக்க, இஸ்ரேல் கூட்டணி இரானில் செய்து வரும் குற்றங்களுக்கு எதிராக உலகளாவிய அளவில் குரல் எழுப்ப இந்தியா முன்னெடுக்க வேண்டும். 

உலக அமைதிக்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ள சூழலில் அனைத்து ஜனநாயகக்குரல்களையும் ஒன்றிணைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுக்க வேண்டும். அப்போதுதான் வன்முறைத் தாக்குதல்களும் அதற்கான எதிர்வினைகளும் நிறுத்தப்படும்.

தோழர் எம்.ஏ.பேபி சொன்னது மிகவும் அருமையான ஆலோசனை. முன்னொரு காலத்தில் அணி சேரா நாடுகள் அமைப்பின் தலைவராக இது போல செயல்பட்ட நாடுதான் இந்தியா. 

ஆனால் இந்த ஆட்சியாளர்கள் கேட்பார்களா?

அயத்துல்லா அலி காமேனி கொலையை கண்டிக்காத ஆள் மோடி. இஸ்ரேலோடு நிற்பேன் என்று வெளிப்படையாக கூவியவர் அவர்.

மகாத்மா காந்தியின் குரங்குகளுக்கு முற்றிலும் முரணானவர்கள் இவர்கள்.

இவர்கள் நல்லதை பார்க்க மாட்டார்கள்,
இவர்கள் நல்லதை கேட்க மாட்டார்கள்,
இவர்கள் நல்லதை பேசவும் மாட்டார்கள். 

Monday, March 2, 2026

எடப்பாடி எங்கே நயினார்?

 


மதுரை என்.டி.ஏ கூட்ட அரங்கின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் படத்தை பாஜக கட்டளையின் பேரில் நீக்கியது பற்றி நேற்று எழுதியிருந்தேன்.

அந்த பதிவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து போது பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பக்கத்தைப் பார்த்தேன்.

இன்று  நடைபெறவுள்ள கூட்டத்திற்கான பின்னணித்திரையின் படத்தை அவர் பகிர்ந்தார். 

அதையெல்லாம் பாருங்கள்.









ஒரு பக்கத்தில் மோடி படம் இருப்பது போல இன்னொரு பக்கத்தில் எடப்பாடியின் படமும் உள்ளது. ஆனால் நயினார் நாகேந்திரன் பகிர்ந்த எந்த ஒரு படத்திலும் எடப்பாடியை காணவில்லை.

முதல் கூட்டத்திலேயே ஒரு சாதாரண ட்விட்டர் பதிவில் கூட எடப்பாடியை மதிக்காத பாஜக மாநிலத்தலைவர் தயாராக இல்லை. போகப் போக இன்னும் என்னென்ன அவமானங்கள் எடப்பாடிக்கும் அதிமுகவிற்கும் காத்திருக்கிறதோ?

பாவம் அந்த கட்சியின் தொண்டர்கள் !!!!

பிகு: நேற்று பகிர்ந்து கொள்வதற்காக நேற்று முன் தினம் எழுதியது. தோழர் தயாநிதி அவர்களின் மறைவினால் இன்று பகிர்ந்து கொள்கிறேன். 

இம்சை அரசன் நடிப்பு மோடி

 


வல்லவராயனிடமிருந்து தன் உயிரை காத்துக் கொல்ல காலில் விழுந்த இம்சை அரசன் புலிகேசி வடிவேலுவின் நடிப்பை விட தமிழ்நாட்டு மக்களின் வோட்டுக்களை ஏய்த்துப் பறிக்க மோடி திருப்பரங்குன்றம் கோயில் விழுந்து கும்பிட்ட மோடியின் நடிப்பு சிறப்பு. . .

ஆமாம். கோயில் பிரகாரத்தில் இப்படி சிவப்புக் கம்பளம் விரிப்பதற்கு ஆகம விதிகள் இடம் தருகிறதா? கோயில் நடைமுறைகள் அனுமதிக்கிறதா? 

இதைப் பற்றியெல்லாம் சங்கிகள் கவலைப்பட மாட்டார்கள். அவர்களுக்கு கடவுள் வெறும் அரசியல் மட்டும்தான். ராசாவின் ஐகோர்ட் அளவிற்குக் கூட அவர்கள் கடவுளை மதிக்க மாட்டார்கள்.