Sunday, February 22, 2026

ராமர் கோயில் திறந்து இரண்டாண்டுகள் ஆன பின்பும்

 


கடவுள் இட்ட கட்டளைப் படி நீதிபதி சந்திரசூட் எழுதிய தீர்ப்பில் இரண்டு அம்சங்கள். ஒன்று எவர் பாபர் மசூதியை இடித்தார்களோ அவர்களிடமே கோயில் கட்ட அந்த இடத்தை கொடுப்பது. அயோத்தியிலிருந்து சற்று தள்ளி ஒரு ஐந்து ஏக்கர் நிலத்தை மசூதி கட்ட கொடுப்பது.

அதில் முதல் அம்சம் முடிந்து விட்டது.

2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக ராமர் கோயிலை மோடி திறந்து வைத்து விட்டார். இரண்டாண்டுகள் முடிந்து விட்டது.

மசூதி என்னாயிற்று?


இதுதான் மசூதி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடம். அயோத்தியிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தன்னிப்பூர் என்ற  கிராமத்தில் உள்ளது. 

இங்கே மசூதி கட்ட  முதலில் உருவாக்கப்பட்ட வரைபடங்களில் மசூதி என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் இருந்ததால் பெரும்பான்மை முஸ்லீம் மக்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

அதற்கு பிறகு வேறு ஒரு மாதிரி தயாரித்தாலும் அதற்கு அனுமதி தர ஆயிரத்தெட்டு தடைகள். பாபரின் பெயரால் ஒரு மசூதி உருவாவதை நான் அனுமதிக்க மாட்டேன் என்று மொட்டைச்சாமியார் கூறிய காரணத்தால் புதிய மசூதியின் பெயரே முகமது-பின்-அப்துல்லா என்றுதான் அமையவுள்ளது.

எப்போது கட்டிடப் பணி தொடங்கும்? எப்போது முடியும்? எப்போது திறக்கப்படும்? 

மொட்டைச்சாமியாருக்கே வெளிச்சம் . . .

88 வயதில் தனிக்கட்சி தொடங்கிய தைரியத்தை . . .

 


கலைஞர் காலத்திலும் பின்பு எம்.ஜி.ஆர் காலத்திலும் அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் சில நாட்களுக்கு முன்பாக "எம்.ஜி.ஆர் அதிமுக" என்ற புதிய கட்சியை துவக்கியுள்ளார்.



எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.

நெய்வேலியில் நான் பணியாற்றி வந்த போது ஒரு வளர்ச்சி அதிகாரியின் திருமணம் அவரது தலைமையில் நடந்தது. பெரும்பாலும் அது பண்ருட்டி ராமச்சந்திரன் புகழ் பாடும் கூட்டமாகவே அமைந்திருந்தது. 

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்பு ஜெ-ஜா அணிகள் பிரிந்த பின்னர் நடந்ததால் அந்த அரசியல் தொடர்பான பேச்சுக்கள் திருமணத்திலும் ஒலித்தது. "நம்மவரின் பெருமை, அருமை பற்றி இந்தம்மாவிற்கும்  தெரியலை, அந்தம்மாவிற்கும் தெரியலை. அந்த அம்மாவிற்கு மட்டும்தான் புரியும்" என்று ஒருவர் பேசினார். அந்த அம்மா யார் தெரியுமா? இந்திரா காந்தி. . . 

அப்படியெல்லாம் இருந்த பண்ருட்டியார் பின்பு பா.ம.க, தனிக் கட்சி, பின்பு திமுக,  மீண்டும் அதிமுக,  என்றெல்லாம் கட்சி மாறி  கடைசியில் ஓ.பி.எஸ் அணி என்று வலம் வந்து 88 வயதில் தனிக்கட்சி துவங்கியுள்ளார்.

உலக வரலாற்றிலேயே 88 வயதில் தனிக்கட்சி தொடங்கியவர் இவர்தான்.

இந்த மன தைரியத்தைப் பாராட்டி குறைந்த பட்சம் அவருக்கு பண்ருட்டி தொகுதியில் டெபாசிட்டாவது மக்கள் கொடுக்க வேண்டும்.

பிகு: எம்.ஜி.ஆர் காலத்து மந்திரி ஹெச்.வி.ஹண்டே போல பாகஜகவில் சங்கமிக்காமல் பாஜக மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்த அவரை பாராட்ட வேண்டும். 

Saturday, February 21, 2026

தர்மசங்கடமான நிலை! என்ன செய்வது?

 


சில நாட்களாகவே ஒரு குழப்பம்.

பல தோழர்கள் ஒரு நூலை சிலாகித்து எழுதியதை படிக்க நேர்ந்தது.


மேலே உள்ள புத்தகம்தான் அது. நீதியரசர் சந்துரு கூட நூலைப் பற்றி எழுதியுள்ளது அட்டையில் உள்ளது.

வழக்கமாக இது போன்ற அறிமுகங்களை படித்தால் உடனடியாக அந்த நூலை வரவழைத்து விடுவேன்.

ஆனால் இந்த நூலை வரவழைப்பதில் மட்டும் ஏனோ ஒரு மனத்தடை.

ஏன்?

அதனை வெளியிடுவது பத்ரி சேஷாத்ரியின் கிழக்கு பதிப்பகம். கடைந்தெடுத்த மக்கள் விரோதி, மத அடிப்படைவாதி, பிற்போக்கு சக்தி. 

சென்னை புத்தக விழாவிற்கு வருடம் தோறும் செல்வேன். ஆனால் கிழக்கு பதிப்பகத்திற்குள் மட்டும் நுழைய மாட்டேன். அதே போல  கிழக்கிலிருந்து பிரிந்து  தனியாக கடை திறந்த ஹரன் பிரசன்னாவின் சுவாசம் பதிப்பகத்திற்கும் செல்லக்கூடாது இன்று இந்த வருடம் கறாராக இருந்தேன். 

அதனால்தான் நம்முடைய பணம் பத்ரி சேஷாத்ரிக்கு செல்ல வேண்டுமா என்ற ஒரு கேள்வி, அது புத்தகம் வாங்குவதற்காக இருந்தாலும், மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. நல்ல நூலை தவற விடுகிறோமோ என்ற கேள்வியும் எழுகிறது.

என்ன செய்வது? ஒரே டெலிகேட் பொசிஷன் . . .

வேள்பாரி பாண்டியன் அரண்மனையும் நாடாளுமன்றக் கட்டிடமும் . . .

 


மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அளித்த ஒரு புதிய தகவல் கீழேயுள்ள காணொளியில் உள்ளது. அரசியல்வாதியை மீறி எழுத்தாளர் கம்பீரமாய் நிற்கும் தருணம் இது. 






Friday, February 20, 2026

புதிய பாபர் மசூதியைக் கூட . . .


 சங்கிகளால் அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியைப் போல ஒரு மசூதியை மேற்கு வங்கத்தில் உருவாக்கப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹுமாயுன் கபீர் அறிவித்து அந்த பணிகள் துவங்கியுள்ளன. அவரை மம்தா கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்துள்ளார். மம்தாவிற்கு விழும் முஸ்லீம் வாக்குகளை திசை திருப்ப சங்கிகளால்  ஏவி விடப்பட்டுள்ளவர் ஹுமாயுன் கபீர் என்பது அவரது சந்தேகம்.  ஒவைஸி உதாரணம் வேறு இருக்கிறதல்லவா! ரகசியம் விரைவில் தெரிய வரும்.

நிற்க

மேற்கு வங்கத்தில் கட்டப்படும் மசூதிக்கு பாபரின் பெயரை வைக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தேவகி நந்தன் பாண்டே என்றொருவர் பொது நல வழக்கு தொடுக்க இன்று அது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக பாபர் மசூதியை இடித்த கூட்டத்திற்கு பாபரின் பெயரில் இந்தியாவின் வேறு மூலையில் இன்னொரு மசூதி ஏற்படுவதை ஏற்க முடியவில்லை போல . . .

பிகு: புதிய மசூதி கட்ட அயோத்தியில் இடம் ஒதுக்கப்பட்டதே, அங்கே புதிய மசூதி கட்டியுள்ளார்களா? நாளை பார்ப்போம்.

பழம் நழுவி பாலில் விழ பத்தாண்டுகள்

 


தேமுதிக இப்போது திமுக கூட்டணியில் இணைந்து விட்டது. என்ன பேரம் என்பது தெரியவில்லை. சிவராத்திரி அன்று பாஜகவின் ராஜ்நாத்சிங், அதிமுகவின் தங்கமணி ஆகியோரோடு ஜக்கியின் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த், இரண்டு தினங்களுக்குள் அறிவாலயம் வந்து விட்டார்.

அந்த புகைப்படத்தை பார்க்கும் போது பத்தாண்டுகளுக்கு முன்பாக கலைஞர் கூறியதுதான் நினைவுக்கு வந்தது.

"பழம் நழுவி பாலில் விழுந்து விடும்" என்று எதிர்பார்ப்பதாக அவர் பல முறை கூறிக்கொண்டிருந்தார். ஆனால் திமுக கூட்டணிக்கு வராத விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணியோடு கரம் கோர்த்துக் கொண்டார். அதுதான் மக்கள் நலக்கூட்டணிக்கு மிகப் பெரிய பிரச்சினையாக போனது.

சி.பி.ஐ(எம்), சி.பி.ஐ, மதிமுக, விசிக ஆகிய நான்கு  கட்சிகள் இணைந்து பல கூட்டியக்கங்கள் நடத்தி பின்பு அந்த போராட்ட ஒற்றுமை மக்கள் நலக் கூட்டணியாக மலர்ந்த போது மக்கள் ஆதரவு இருந்தது. ஊடகங்களும் பெரிய அளவில் ஆதரவு கொடுத்தது.

எப்போது விஜயகாந்தும் ஜி,கே.வாசனும் வந்தார்களோ, அதற்கு பிறகு எல்லாமே தலை கீழாக மாறியது. சமூல வலைத்தளங்களின் துவக்க காலமாக இருந்தாலும் அவையும் ஊடகங்களும் அக்கூட்டணியை ஒரு கேலிப் பொருளாக மாற்றி ஒரு மாற்று அரசியல் சக்தி உதயமாவதை கருக்கி விட்டார்கள்.

கலைஞர் காலத்தில் பால் கிண்ணத்தில் விழாத பழம் பத்தாண்டுகளுக்குப் பின்பு மு.க.ஸ்டாலின் காலத்தில் விழுந்து விட்டது.

Thursday, February 19, 2026

இந்தியாவை இழிவு படித்திய சங்கிப் பல்கலைக்கழகம்

 


சீனாவிலிருந்து காசு கொடுத்து வாங்கி வந்த ரோபோ நாயை, தங்கள் பல்கலைக்கழகத்தின் திறன் மையத்தில் கண்டுபிடித்தோம் என்று உத்திரப்பிரதேசத்தில் உள்ள கல்கோட்டியாஸ் பல்கலைகழகம், புதுடெல்லியில் நடைபெற்ற AI மாநாட்டில் பீற்றிக் கொள்ள அந்த பொய் மறு நாளே அம்பலமானது.

அந்த கல்கோட்டியாஸ் பல்கலைக்கழகம் மட்டும் அசிங்கப் படவில்லை. ஒட்டு மொத்த  இந்தியாவும் அசிங்கப்பட்டது. இந்திய அறிவியல் திறன் அசிங்கப்பட்டது. இந்தியாவின் சுயசார்பு உற்பத்தித் துறை அசிங்கப்பட்டது.

இந்த அசிங்கத்தைத்தான் ஓவியர் தோழர் ரவி பாலேட் அட்டகாசமான கார்ட்டூனாக மாற்றி விட்டார்.

இப்படி ஒரு வேலையைச் செய்ய அந்த கல்கோட்டியாஸ் பல்கலைக் கழகத்திற்கு எப்படி தைரியம் வந்தது?

கீழே உள்ள படங்கள் உண்மையைச் சொல்லும்.




இந்த புகைப்படங்களை வைத்து மட்டும் அது ஒரு சங்கிப் பல்கலைக்கழகன் என்று சொல்லி விட முடியுமா?

2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அந்த பல்கலைக்கழகம், தன் மாணவர்களை வைத்து பாஜகவிற்கு ஆதரவாகவும் இந்தியா கூட்டணிக்கு எதிராகவும் பிரச்சாரப் பேரணி நடத்தியுள்ளார்கள்.



அறிவியலோ, அறவியலோ, இந்தியாவிற்கு எப்போதும் இழிவு சங்கிகளால்தான்.