Wednesday, May 6, 2026

இந்த ஆடம்பரத்துக்கெல்லாம் ஜெ பாணி நடவடிக்கைதான் சரி


 என்னைப் போன்ற வயதானவர்களுக்கு ஒரு விஷயம் நினைவிருக்கலாம். ஏதோ ஒரு பல்கலைக்கழகத்தில் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்தமைக்காக திரையுலகம் ஒரு பாராட்டு விழா நடந்தது. அதிலே கமலஹாசன், ரஜினிகாந்த், பாரதிராஜா, பாக்யராஜ் ஆகிய நான்கு  பேர் சேர்ந்து எம்.ஜி.ஆருக்கு ஒரு பெரிய ரோஜா மாலையை அணிவிப்பார்கள். ஆளுயுர மாலை எப்படி இருக்கும் என்பதை தமிழ்நாடு அப்போதுதான் முதல் முறையாக பார்த்தது.

நேற்று வேலூரில் ஒரு காட்சியை பார்த்தேன். வேலூர் க்ரீன் சர்க்கிள் அருகிள் தவெகவினர் நின்று விசில் ஊதிக் கொண்டிருந்தனர். தாரை தப்பட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். புல்டோசரில் ஒரு பிரம்மாண்ட மாலையை தூக்கி வைத்திருந்தார்கள்.

யாருக்கு போடுவதற்காக அந்த மாலையோ?

வேலூரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ விற்காகக் கூட இருக்கலாம். 

வழக்கமாக ஆளுயுர மாலை எப்படி இருக்குமோ, அது போல நான்கைந்து மடங்கு பெரிதாக இருக்கும். அந்த மாலையை  யானைக்கு போட்டால்  அதன் கழுத்து எலும்பே உடைந்து விடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். 

யானையே தாங்காது எனும் போது மனிதனால் ஒரு நொடி கூட அந்த மாலையை போட்டுக் கொள்ள முடியாது. எம்.எல்.ஏ ஆக இருந்தால் அந்த தொகுதியில் இடைத் தேர்தல்தானா?

யாருக்கும் பயனில்லாத அந்த பிரம்மாண்டமான மாலை எல்லாம் அவசியமா?

வெட்டி ஆடம்பரம் மட்டுமே!

இது போன்ற ஆடம்பரங்கள் செய்பவர்களை டீல் செய்ய ஜெயலலிதா பாணிதான் சரியாக இருக்கும்.

அது என்ன என்று கேட்கிறீர்களா?

அய்யாறு வாண்டையார் என்ற தஞ்சாவூர் நிலப்பிரபுத்துவ குடும்ப வாரிசு. பாரம்பரிய காங்கிரஸ்காரர் அதிமுகவிற்கு தாவுகிறார். திருவையாறு தொகுதியில் போட்டியிட்டு ஜெயிக்கிறார்.  ஜெயலலிதா அவரை இந்து அறநிலையத்துறை அமைச்சராக்குகிறார். அந்த பதவி ஒரு வாரம் கூட தாங்கவில்லை. 

தூக்கப்பட்டார்.

ஏன்?

அமைச்சராக பதவியேற்ற பின் அவர் சொந்த ஊருக்குச் செல்கிறார். தஞ்சை ரயிலடியிலிருந்து அவரது கிராமத்துக்கு செல்லும் வழியில் பண்ணையார்த்தனமான வரவேற்பு. குதிரைகள் பூட்டிய தேரில் அவர் உட்கார, அனைத்து வகை ஆட்டக் கலைகளோடு ஊர்வலம் நிதானமாக ஊர்ந்து செல்கிறது. தகவல் ஏ1 காதிற்கு செல்ல, அய்யாறு வாண்டையார் வீட்டிற்குச் செல்லும் முன்னே அவரது பதவி பறிக்கப்பட்டு விட்டது.

அப்படியென்றால் ஜெ ஆடம்பரத்தை விரும்பாதவர் என்று சொல்கிறீர்களா என்று கேட்கிறீர்களா?

நோ, நெவர்.

வளர்ப்பு மகன் திருமணத்தை மறக்க முடியுமா?

ஜெயலலிதா பயங்கர ஈகோ பிடித்தவர். தன் கட்சியில் தன்னைத் தவிர வேறு யாரும் ஆடம்பர சீன் போடுவதை அவர் விரும்ப மாட்டார்.

அவ்வளவுதான் . . .

Tuesday, May 5, 2026

என்னய்யா செய்யப்போறே ஆரென்.ரெவி?

 


மேற்கு வங்கத்தில் நடந்தது தேர்தல் அல்ல. பேய்க்கும் பேய்க்கும் சண்டை. 

"பரிபர்த்தன் (மாற்றம்) என்ற சொல்லுக்கு மயங்கி திரிணாமுல் காங்கிரஸ் என்றொரு பேயை நாற்காலியில் உட்கார வைத்த மேற்கு வங்க மக்கள் மீண்டும் இன்னொரு முறை "பரிபர்த்தன் (மாற்றம்) என்ற பெயரில் இன்னொரு பேயான பாஜகவை  ஆட்சியில் அமர வைத்துள்ளார்கள்.

நான் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்று மம்தா அம்மையார் அறிவித்துள்ளார்.


மேற்கு வங்கத்துக்கு ஆட்டுத்தாடியாகப் போன ஆரென்.ரெவிக்குத்தான் இப்போது சிக்கல்.

அவர் என்ன செய்யப் போகிறார்?

மம்தாவை டிஸ்மிஸ் செய்யலாம். அது மட்டும்தான் முடியும்.

அதற்குப் பிறகு?

மேற்கு வங்கத்தின் வீதிகளில் இரண்டு கட்சிகளின் குண்டர்களும் மோதுவார்கள். ரத்த ஆறு ஓடும்.

அதற்குப் பின்?

சட்ட சபை????

தேசிய கீதத்தை முதலில் ஒலிக்கவில்லை என்று தமிழ்நாட்டில் சீன் போட்டது போல அங்கே சீன் போட மாட்டார். பாஜக அரசும் அவருக்கு சிக்கலை உண்டாக்காது.

சட்ட சபை வந்த ரெவியை தமிழ்நாட்டில் கண்ணியமாக திருப்பி அனுப்பினார்கள். 

மம்தா கட்சியினர் அப்படிப்பட்ட கண்ணியமான ஆட்கள் கிடையாது. ஏற்கனவே மேற்கு வங்க சட்ட சபையில் ரௌடித்தனம் செய்து எல்லாவற்றையும் உடைத்துத் தகர்த்தவர்கள்.

மேற்கு வங்கம் மட்டுமல்ல இந்தியாவே விந்தையான காட்சிகளை பார்க்கப் போகிறது. 

கீட்ஸிற்கு நிகரானவர் கண்ணதாசன்

கொஞ்சம் மாறுதலான ஒரு பதிவு. கல்வியாளர் தோழர் இரா.எட்வின் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து சுட்டது.  


Ode on a grecian urn” கொண்டாடப்பட்ட அளவு ஏன் ”சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு” கொண்டாடப்படவில்லை

*************************************************************
1980 இல் எனக்கு கல்லூரிப் பாடத்தின் வழியாக கீட்ஸின் ”Ode on a grecian urn" அறிமுகமாகிறது
அப்போது எனக்கு 17 வயது
நாம் இப்படியாகக் கொள்வதில் யாருக்கும் வழக்கெதுவும் இருக்கப் போவதில்லை
அப்படி யாருக்கேனும் பிராது இருக்கும் பட்சத்தில்
முடிந்த இடத்தில் அந்தப் பிராதை அவர்கள் கொடுப்பதில் நமக்கும் வழக்கெதுவும் இல்லை
எந்த இடம் என்று தெரியவில்லை
ஏதோ ஒரு பாரிலோ தேநீர்க்கடையிலோ அல்லது வேறு எங்கோவோ இருக்கலாம்
எங்கோவோ இருந்துவிட்டும் போகட்டும்
ஒரு ஜாடியை கீட்ஸ் பார்க்கிறான்
அல்லது பார்த்த யாரோ அது குறித்து அவனிடம் சொல்லியும் இருக்கலாம்
மிக மிகப் பழங்காலத்து ஜாடி
அதன் கலைநயம் ஈர்க்கிறது
Thou still unravish'd bride of quietness,
Thou foster-child of silence and slow time,
என்று கவிதையை ஆரம்பிக்கிறான்
அந்த ஜாடியில் உள்ள ஓவியத்தில் மரங்கள் இருக்கின்றன
கீட்ஸ் அந்த மரத்தைப் பார்க்கிறான்
அந்த ஜாடிக்கு 200 வயது இருக்கலாம்
என்றால் அந்த மரத்தின் வயது 200
இதுவரைக்கும் அவன் அடைந்த ஆச்சரியம் அவனுக்கானது
200 வயது மரம் சாத்தியம்
ஆனால் 200 வயது இலை, அவன் வியப்பின் உச்சிக்கே போகிறான்
மரத்தின் ஜனனத்தோடு பிறந்த இலைகள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக பழுக்காமல் சருகாகாமல் உதிராமல்
அப்பப்பா
கலை நிலையானது
சொக்கிப்போகிறான் கீட்ஸ்
எழுதுகிறான்,
Ah, happy, happy boughs! that cannot shed
Your leaves, nor ever bid the Spring adieu;
அந்த ஜாடியில் உள்ள படத்தில் ஒரு காதலன் தனது காதலிக்கு முத்தம் கொடுக்க முயல்கிறான்
அவள் தப்பித்து ஓட முயற்சி செய்கிறாள்
கீட்ஸ் எழுதுகிறான்,
பயப்படாதே அவளால் அந்த இடத்தைவிட்டு நகர முடியாது. அவளது வனப்பும் எத்தனை ஆண்டு காலமானாலும் சிதையாது
நமக்கும் புரிகிறது
ஒருபோதும் அவளை அவன் முத்தமிட முடியாது
Bold Lover, never, never canst thou kiss,
Though winning near the goal yet, do not grieve;
She cannot fade, though thou hast not thy bliss,
For ever wilt thou love, and she be fair!
சர்வர் சுந்தரம் படத்தில் ஒரு பாடலுக்கான சூழலை கண்ணதாசனிடம் விளக்குகிறார்கள்
மகாபலிபுரம்
அங்குள்ள சிலைகளைப் பார்த்து அதிலும் அங்குள்ள ஒரு யுவதியின் சிலையைக் கண்டு வியந்து பாடுவதாக பாடல் வேண்டும்
வேட்டியை சன்னமாக தூக்கிப் பிடித்தபடி கண்ணதாசன் சொல்லச் சொல்ல எழுதுகிறார்கள்
“சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ணக் கண்ணுக்கு
ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே
ஆட விட்டான் இந்தக் கடலினிலே”
ஆகா ஆகா
“கட்டழகு வாலிபர் தொட்டுப் பார்க்க
கவிஞர்கள் தமிழால் தொட்டுப் பார்க்க
பொட்டு வைத்தப் பூங்கொடி போட்டி போட
பொல்லாத பருவத்தை கல்லாக்கினேன்”
என்று நகருவார்
அந்த சிலையை பார்த்த வாலிபர்களுக்கு அதைத் தொட்டுப் பார்க்கத் தோன்றுமாம்
கவிஞர்களிடம் கவிதை துள்ளுமாம்
பெண்களுக்கு போட்டியான அழகாம்
இதெல்லாம் விடுங்கள்
இதுவரை ஒரு பெண்ணை கல்லில் சிலையாக வடித்ததாகத்தான் வரும்
அது பெண் மட்டும் இல்லையாம்
பொல்லாத பருவத்தை கல்லாக்கி நிலைக்கச் செய்தானாம் சிற்பி
பருவத்தை சிலையாக்கி
அய்யோ அய்யோ
கண்ணதாசா
அடுத்த சரணத்தில் ஒரு வரி வரும்
“பருவத்தின் சாரத்தை தேக்கி வைத்தான்”
பருவத்தின் சாறை கல்லில் கலையாக்கும் வித்தையை பாடலில் பந்தி வைப்பார் கண்ணாதாசன்
அநேகமாக இறுதி சரணம் என்று பார்க்கிறேன்
“அன்னமிவள் வயதோ பதினாறு
ஆண்டுகள் போயின ஆறு நூறு
இன்னும் இவள் முதுமை எய்தவில்லை
என்னதான் ரகசியம் தெரியவில்லை”
கீட்ஸ் ஜாடியில் உள்ள ஓவியத்தைப் பார்த்து கவிதை எழுதுகிறான்
கண்ணதாசன் மகாபலிபுரத்து சிலைகளைப் பார்த்து ஒரு திரைப்படத்திற்கு பாடல் எழுதுகிறார்
இசை சூப்பர்
நடனம் சிறப்பு
எல்லாம் கடந்து பிரச்சினை என்னவெனில்
Ode on a grecian urn கொண்டாடப்பட்ட அளவு ஏன் ”சிலை எடுத்தான்” கொண்டாடப்படவில்லை
ஒரு திரைப்படப் பாடல் உலகம் கொண்டாடிய ஒரு கவிதைக்கு கொஞ்சமும் சளைத்ததாக இல்லாமல்
நிமிர்ந்து நிற்கிறது
ஆனாலும் அது கொண்டாடப்பட வேண்டிய அளவிற்கு கொண்டாடப் படவில்லை
நம்மிடம் ஏதோ தவறு இருக்கிறது
மொழிபெயர்க்காத தவறாகவும் அது இருக்கக் கூடும்

கொண்டாட வேண்டிய சிலவற்றை காலத்தே கொண்டாட தவறினால் பின்னாளில் நொந்து கொள்ள வேண்டிய நிலைமை வரும். அரசியல் பதிவில்லை என்று முதலில் சொன்னீர்களே என்று கேட்கிறீர்களா? என்ன செய்ய? அரசியல் இல்லாமல் வாழ்க்கை இருக்கிறதா என்ன?

Monday, May 4, 2026

தேர்தல் முடிவுகள் - என்ன சொல்ல?

 


இப்போதைக்கு சொல்ல வேறெதுவுமில்லை, எதிர்பார்க்காத ஏமாற்றம் என்பதைத் தவிர.  

கவுண்டிங் செண்டரில் ஒரு நாள்.

 


2009 மக்களவைத் தேர்தலின் போது வாக்கு எண்ணிக்கையில் மைக்ரோ அப்சர்வராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அனுபவத்தைப் பற்றி, வாக்கு எண்ணிக்கையில் மோசடி செய்ய வாய்ப்பு இருப்பது பற்றி மார்ச் 2011 ல் பதிவு எழுதினேன். கூடுதல் விபரங்களோடு அந்த பதிவை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

வாக்கு எண்ணிக்கைக்கு மைக்ரோ அப்சர்வர்களாக எல்.ஐ.சி ஊழியர்கள் வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரகம் கேட்டுக் கொண்ட அடிப்படையில் நிர்வாகம் சங்கத்தோடு பேசியது. விருப்பமுள்ளவர்கள் செல்லட்டும். மற்றவர்களை நிர்ப்பந்திக்கக் கூடாது என்று நாங்கள் சொன்னதை நிர்வாகமும் ஒப்புக் கொண்டது. கணிசமான ஊழியர்கள் மைக்ரோ அப்சர்வர் பணியாற்ற ஒப்புக் கொண்டனர்.  ஒரு ஐ.டி கார்ட் கொடுத்தார்கள். அதில் போட்டோ இருந்ததா  என்று நினைவில்லை. வேலூர் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரிதான் வாக்கு எண்ணும் மையம்.

காலை ஆறு முப்பதிற்கெல்லாம் அங்கே சென்றாகி விட்டது. அலைபேசிக்கு அனுமதி கிடையாது என்பதால் வாகனத்தின் பெட்டியில் வைத்து விட்டு வந்தோம். நல்ல வேளை தொலைந்து போகவில்லை. சுமாரான பொங்கலும் அதை விட சுமாரான சட்னியும் கொடுத்தார்கள்.  இரும்புக் கோட்டைக்குள்ளே நுழைந்தோம்.

இனி பழைய பதிவு.

வாக்கு எண்ணிக்கையில் மோசடி சாத்தியமே

மின் அணு இயந்திரத்தில்  வாக்கு பதிவு  கூடாது  என்ற  பல்லவியை  தமிழக அரசியல் கட்சிகள் இன்னும்  பாடத்தொடங்கவில்லை. வாக்குப்பதிவில் மோசடி  செய்வது சாத்தியமா  என்று  தெரியாது.  ஆனால்  வாக்கு எண்ணிக்கையில்  மோசடி  செய்வது  என்பதற்கான சாத்தியங்கள்  நிச்சயமாகவே  உள்ளது. எப்படி  என்று பார்ப்போம்.

கடந்த நாடாளுமன்றத்தேர்தலில்  நுண் பார்வையாளராக (Micro Observer)    பணியாற்றும்  வாய்ப்பு  கிடைத்தது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டும்அனுமதிக்கப்பட்ட  இரும்புக்கோட்டையின் கதவுகள் திறக்கப்பட்ட சந்தர்ப்பத்தை   ஒரு அனுபவத்திற்காக பயன்படுத்திக்கொண்டேன். அந்த   அனுபவத்தின்  அடிப்படையில்  எழுதுகின்ற பதிவு இது. 

வாக்கு  எண்ணும்  இடத்தில்  பதினைந்து  மேஜைகள்ஒவ்வொரு  மேஜையிலும்  மூன்று  இருக்கைகள்.  வாக்கு எண்ணும் அலுவலர், ஒரு   உதவியாளர்ஒரு நுண் பார்வையாளர்  என மூவர்.  அந்த மேஜைகள்   ஒரு ப வரிசையில்  அமைக்கப்பட்டிருக்கும்.  மேஜைகளுக்கு  வெளியே  சவுக்குக் கம்புகள், கம்பிகளால் ஆனா தடுப்புக்கள். தடுப்புக்களுக்கு  வெளியே  வேட்பாளர்களின்  முகவர்கள்  நின்று கொண்டிருப்பார்கள். 

ஒவ்வொரு வாக்கு  எண்ணும் இயந்திரமாக  ஒவ்வொரு மேசைக்கும்  கொண்டு வரப்படும்.  கவனிக்க வேண்டிய  விஷயம்  என்னவென்றால்  வாக்குப் பதிவு மட்டுமே  இயந்திரமயமாக்கபபட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை  அல்ல.  ஒவ்வொரு மேசைக்கும்  வேட்பாளர்கள்  பெயர்  அடங்கிய பட்டியல்  தரப்பட்டிருக்கும்.  வாக்குப்பதிவு  இயந்திரத்தில்  என்ன  வரிசையில்  பெயர்கள்  இருந்தனவோ, அதே வரிசையில்தான்  பட்டியலும்  அமைந்திருக்கும்.

வாக்குப்பதிவு  இயந்திரம்  மேஜைக்கு வந்ததும், சீல் நீக்கி, ஒவ்வொரு   வேட்பாளருக்கும்  எவ்வளவு  வாக்கு பதிவானது  என்பதை  அதற்குரிய  பட்டனை அழுத்தி  தெரிந்து கொள்ள வேண்டும்.  அதனை  கொடுக்கப்பட்ட  பட்டியலில்  குறித்துக் கொள்ள வேண்டும். வாக்கு எவ்வளவு  என்ற  தகவலை  இயந்திரத்தை  பார்ப்பதன் மூலம்  முகவர்களும்  அறிந்து  கொள்ள முடியும். ஆனால்  அதற்கான  அவகாசம்  என்பது  மிக மிக குறைவு. திருப்பதி ஜருகண்டி போல, மேஜிக் நிபுணர் சாகசம்  போல  வேகம் வேகமாகத்தான்  காரியங்கள்  நடக்கும். நுண் பார்வையாளரும்

தனியாக  ஒரு பட்டியலில் வாக்கு எண்ணிக்கை  பற்றி தனியாக  பதிவு
செய்து  பார்வையாளரிடம்  அளிக்க வேண்டும். ஜருகண்டி வேகத்தில் சில 
சமயங்களில்  இது சாத்தியமில்லாமல்  போய் தேர்தல்  அலுவலரின் 
விபரத்தை  அப்படியே  நகலெடுத்து  அளிப்பது  என்பதும்  நடந்தது. 

பட்டியலில்  குறித்துக்கொள்வது  என்பதில்தான்  மோசடிக்கான  சாத்தியம்  அடங்கியுள்ளது.  கட்சிகளின் முகவர்களோ  அல்லது நுண்  பார்வையாளர்களோ  விழிப்பாக  இல்லையென்றால்  ஒரு வேட்பாளர்  வாங்கிய வாக்குகளை  வேறு  வேட்பாளரின்  பெயரில்  எழுதி விடுவது  மிகவும் சுலபம். மின்னல் வேகத்தில்  நடைபெறும்  விஷயம்  இது. முகவரோ  அல்லது  நுண் பார்வையாளரோ  விழிப்பாக  இருந்தால் இதை தவிர்க்க முடியும்.  மேற்பார்வையிடும்  அதிகாரிகளுக்கு  இது பற்றி  தெரிய வராது.  அவர்களைப் பொறுத்தவரை  அந்த  இயந்திரத்தில்  பதிவான வாக்குகளும்  அனைத்து  வேட்பாளர்களும்  பெற்ற  வாக்குகளின் கூட்டுத்தொகையும்  ஒன்றாக  இருக்க வேண்டும். அவ்வளவுதான். 

வாக்கு எண்ணிக்கைக்கு இடையிடையே வேட்பாளர்களும் வருவார்கள். அவர்களைப் பார்த்ததும்  அந்தந்த கட்சி முகவர்கள் விழிப்போடு இருப்பது போல நடிப்பார்கள். ஒரு வேட்பாளர், கூட்டணிக்கட்சித் தலைவரோடு கைகளை பிணைத்துக் கொண்டு வந்த போது பக்கத்து மேஜை அலுவலர்கள் என்ன இவனுங்க லவ்வர்ஸ் மாதிரி வராங்க என்று கமெண்ட் அடித்த அசிங்கமும் நடந்தது.  ஆனால் பாவம் அவர் தோற்று விட்டார். எத்தனை பணத்தை இழந்தாரோ?

ஒருவர் பெறும் வாக்கை மாற்றி  எழுதுவது  என்பது  நான் அமர்ந்திருந்த  மேஜையிலேயே   நடந்தது. முதல் சுற்று  எல்லாம்  சரியாகவே  நடந்தது.  அடுத்த சுற்றில்  பதிவான  வாக்குகள்  எவ்வளவு  என்ற எண்ணிக்கையை   அதற்குரிய இடத்தில்  எழுதாமல்   அதற்கடுத்த  இடத்தில்  இருந்த A கட்சி  வேட்பாளர்  இடத்தில்  எழுதினர். நான் சுட்டிக்காட்டியதும், சாரி என்று  சொல்லி  திருத்திக்கொண்டார்.  நான்காவது  சுற்றில்  B கட்சி    வேட்பாளர்  பெற்ற வாக்குகளை  அவரிடத்தில்  எழுதாமல்  வேறு  வேட்பாளரிடம்  எழுதினர். இம்முறை  சற்று  கடுமையாகவே  சொன்னதும் திருத்திக்கொண்டார்.  இதில்  என்ன கொடுமை என்றால்  அந்த சுற்றில்  A கட்சி  300 வாக்கு, B 700 வாக்கு  வேறு கட்சி 100  வாக்கு  பெற்றிருந்தார்கள்  என்று  வைத்துக்கொள்வோம்.  400 வாக்குகள்  அந்தப் பெட்டி மூலமாக  பெற்றிருக்க வேண்டியவருக்கு  100  வாக்கு மட்டுமே கிடைக்கும். தன் முயற்சியில்  சற்றும் தளராத விக்கிரமாதித்தன்  ஏழாவது சுற்றில் மீண்டும்  தன்  வேலையைக் காண்பிக்க  வேதாளம்  கடுமையாகவே  மிரட்ட வேண்டியிருந்தது.  அப்சர்வரிடம் சொல்வேன் என்றதுதான் அந்த மிரட்டல்.  அதன் பின்பு  சுமுகமாகவே நடந்து முடிந்தது.  இந்த வேலைகளையெல்லாம்  எந்த கட்சியின் முகவரும்  உன்னிப்பாக கவனிக்கவேயில்லை. எங்கள் மேஜைக்கு  வாய்ந்த அடிமைகள்  அப்படி!  

இப்படி  எல்லா மேசைகளிலும்  செய்வதற்கான  வாய்ப்பு  உண்டா  என்றால் நிச்சயம்  கிடையாது.  ஆனால்  மொத்தமுள்ள  15 மேசைகளில்  ஏதேனும் மூன்று  மேசைகளில் மட்டும்  செய்கின்றார்கள்  என்று  வைத்துக்கொள்வோம். மொத்தமுள்ள  15 சுற்றுக்களில்  மூன்றே  மூன்று  சுற்றுக்களில்  செய்கின்றனர்  என்று கூட வைத்துக்கொள்ளலாம். மோசடியே கிடைக்கிற வாக்குகள்  வெறும்  இருநூறு என்று மட்டுமே வைத்துக்கொண்டால்  என்ன  ஆகும் என்று பார்ப்போம்.

  3 *3 *200  =  1800 .  

 1800  வாக்குகள்  அதிகமாக  கிடைக்கும்படி செய்துவிட்டால்  போதுமா  என்று கேட்காதீர்கள்.  

 கடந்த  சட்டப்பேரவைத் தேர்தலில்  சிங்காநல்லூர் தொகுதியில் தோழர்  அ.சவுந்தரராஜன்  வெற்றி வாய்ப்பை இழந்தது  வெறும் 14  வாக்குகளில்தான்.  பண்ருட்டியில்  பாமகவின் வேல்முருகன்  வெற்றி  பெற்றது  நூற்றைம்பது  வாக்கு வித்தியாசத்திற்குள்தான். பேராசியர்  வெற்றி பெற்றது 400  வாக்கு வித்தியாசத்தில். மு.க.ஸ்டாலின் கரை சேர்ந்தது  2400  வாக்குகளில்தான். 

 ஆகவே  ஒரே ஒரு மேஜையில்  ஒரு சுற்றில் மோசடி நடந்தாலும்  அது வெற்றி வாய்ப்பை  பாதிக்கும். சிவகங்கை  தொகுதியில் நடைபெற்ற குழப்பங்கள்  நினைவிற்கு  வருகின்றதாநூற்றுக்கு நூறு சரியானது  என்று  இந்த முறையை  சொல்ல முடியாது.  பிரிண்ட்  ஆப்ஷன் இணைக்க  முடியுமாவாக்கு என்னிக்கையன்று  அந்த பிரிண்டை  வெளியே  எடுக்க முடியுமா  என்றெல்லாம் தேர்தல் ஆணையம்  யோசித்தால்  நல்லது. 

 அதுவரை கட்சிகளின் முகவர்கள்  மற்றும் நுண் பார்வையாளர்கள்  கடைசிவரை   விழிப்பாக   இருப்பதுதான்  ஒரே வழி! 

வாக்கு எண்ணிக்கை முடிந்த கையோடு ஐநூறு ரூபாய் பணமும் கொடுத்தார்கள். முடிவை அறிவித்ததும் வீட்டிற்கு போகச் சொல்லி விட்டார்கள். ஆறு முப்பதிற்கு உள்ளே  நுழைந்தவர்கள் 12.30 க்கு வெளியே வந்து விட்டோம். வெற்றி பெற்ற கட்சியினர் வெடித்த பட்டாசுகள் மத்தியில் சாலையில் செல்வதுதான் சிரமமாக இருந்தது.

 இப்போது எழுதப் போவது புதிது.

 வாக்கு எண்ணிக்கையில் கூடுதல் அம்சமாக  Voter verifiable paper audit trail (VVPAT என்பது சேர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவர் பெறும் வாக்குகளை இயந்திரத்திலிருந்தே பிரிண்ட் அவுட் ஆக எடுப்பது. அனைத்து இயந்திரங்களிலும் இது உண்டு.

 ஆனால்

 எல்லா இயந்திரங்களிலும் உள்ள பிரிண்ட் அவுட் வெளியே எடுக்கப்படுவதில்லை. தொகுதிக்கு ஒரு மேஜை மட்டும் VVPAT முறையிலான வாக்கு எண்ணிக்கைக்கு ஒதுக்கப்படுகிறது.

 ஏதேனும் குழப்பங்கள் வந்தால் மட்டும் மற்ற பெட்டிகளில் இந்த முறை பயன்படுத்தப்படும் என்ற நிலைதான் உள்ளது.

 மோடி-ஞானேஷ் குமார் கூட்டணி வந்த பின்பு பல குற்றச்சாட்டுக்கள் வருகிறது. வாக்கு எண்ணிக்கை சதவிகிதம் முதல் அறிவிப்புக்கும் இறுதி அறிவிப்புக்கும் இடையிலும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கு இடையிலும் மாறுகிறது. இப்படிப்பட்ட ஃப்ராடு வேலையைத்தான் பீகாரிலும் மராட்டியத்திலும் தேர்தல் ஆணையம் செய்தது. 

 எனவே VVPAT முறையை அனைத்து இயந்திரங்களுக்கும் அமலாக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் முடிவுகள் துல்லியமாக இருக்கும். மோசடிக்கான வாய்ப்புகள் குறையும், மோடிக்கான வாய்ப்பும் கூட.

 

 

Sunday, May 3, 2026

முதல்வரின் மனைவிக்கு மூன்று பாஸ்போர்ட்

 


நேற்றைய ஆங்கில இந்து செய்தியின் அடிப்படையில் . . .

காங்கிரஸ் கட்சி தலைவர் பவன் கேராவிற்கு உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் கொடுத்துள்ளது.

ஏன்?

அஸ்ஸாம் பாஜக முதல்வர் ஹிமண்ட பிஸ்வாஸ் சர்மாவின் மனைவி ரிங்கு சர்மா அவர் மீது புகார் கொடுத்துள்ளார். அதன் படி அஸ்ஸாம் போலீஸ் அவரை கைது செய்ய தேடுகிறது.

முதல்வரின் மனைவி ஏன் புகார் கொடுத்தார்?

அஸ்ஸாம் முதல்வரின் மனைவிக்கு எகிப்து, அமீரகம், இந்தியா என்று மூன்று நாடுகளின் பாஸ்போர்ட் உள்ளது என்று பவன் கேரா, ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். அதற்கான ஆவணங்களையும் காண்பித்துள்ளார்.  அந்த பெண்மணிக்கு 50,000 கோடி மதிப்பில் அமெரிக்காவில் ஒரு கம்பெனி இருப்பதாகவும் துபாயில் சொத்துக்கள் இருப்பதாகவும் சொல்லியுள்ளார்.

அது மட்டுமா சொன்னார்?

அஸ்ஸாம் முதல்வர் இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல் செய்கிறார். ஆனால் அவரது மனைவியோ இரண்டு இஸ்லாமிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை வைத்துள்ளார்.

இது போதாதா?

புகார் கொடுத்து விட்டார். முதல்வரின் மனைவியின் புகாரை அந்த மாநில காவல்துறை அலட்சியப்படுத்துமா? அதனால் அவர்கள் கைது செய்ய துடிக்கிறார்கள்.

முதல்வரின் மனைவி கொடுத்த புகாரும் பவான் கேராவின் குற்றச்சாட்டுக்களும் அரசியல் பகைமையின் வெளிப்பாடு. அதனை வழக்கு விசாரணையில் முடிவு செய்து கொள்ளட்டும் என்று சொல்லி முன் ஜாமீன் கொடுத்த உச்ச நீதிமன்றம் இன்னொன்றையும் சொல்லியுள்ளது.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, பவன் கேராவை தரக்குறைவான (UN PARLIAMENTARAY) வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதுவும் சரியல்ல என்று சொல்லியுள்ளது உச்ச நீதிமன்றம்.

பாஜக வாஷிங் மெஷினால் உத்தமராக்கப்பட்ட முன்னாள் காங்கிரஸ்காரர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மாவை அவ்வளவு சீக்கிரமாக விட்டுக் கொடுக்குமா பாஜக?

அஸ்ஸாமில் வெற்றி பெற்றால் அவரைத்தான் மீண்டும் முதல்வராக்கும்.

எல்லாம் காலக் கொடுமை! 


அடுத்து என்ன, அதானே மோடி????


 ஐந்து மாநிலத் தேர்தல் முடிந்த பின்னர் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு பரிசாகவும் வாக்களிக்காதவர்களுக்கு தண்டனையாகவும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை 993 ரூபாய் அளவிற்கு உயர்த்தி உள்ளது.

அதன் விளைவாக ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை உயரும். டீக்கடைகளும் வேறு வழியின்றி விலையை உயர்த்துவார்கள். அதனால் சில டீக்கடைகள் செயல்பட முடியாமல் மூடி விடுவார்கள். அந்த தொழிலை நம்பி பிழைப்பை நடத்துபவர்கள் நடுத்தெருவில் நிற்பார்கள்.

ஒரேயடியாக எல்லா பொருட்களின் விலையை உயர்த்தி விட்டால் மக்களுக்கு தாக்குதலின் தீவிரம் புரியாது என்பதற்காக முதலில் கமர்ஷியல் சிலிண்டரின் விலையை மட்டும் உயர்த்தி விட்டார்கள். தெளிய வைத்து தெளிய வைத்து அடிப்பது போல அடுத்து பெட்ரோல், டீசல், வீட்டு உபயோக சிலிண்டர் ஆகியவற்றின் விலையும் கடுமையாக உயரும்.

அவற்றின் பாதிப்பு இன்னும் மோசமாக இருக்கும். பேருந்துக் கட்டணம் தொடங்கி லாரிக் கட்டண உயர்வால் சங்கிலி விளைவாக எண்ணற்ற பொருட்களின் விலைகளின் உயரும்.

விலையை உயர்த்துவதற்கு முன்பாக, என்ன விலை வேண்டுமானால் விற்கட்டும், கிடைத்தால் சரி என்ற நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

மோடியின் முரட்டு பக்தர்கள் வாழும் மாநிலங்கள் போல தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல், தட்டுப்பாடு இல்லை. ஆனால் சிலிண்டர் வருவதற்கு கண்டிப்பாக தாமதம் ஆனது. வழக்கமாக பதிவு செய்த நாளிலேயோ அல்லது மறு நாளே வேலூரில் சிலிண்டர் வந்து விடும். இக்காலகட்டத்தில் பதினைந்து நாட்களுக்குப் பிறகுதான் வந்தது.

கமர்ஷியல் சிலிண்டர் தட்டுப்பாடு பல உணவகங்களை மூட வைத்தது. என் சொந்த அனுபவம் ஒன்றை சொல்ல வேண்டும். சமீபத்தில் வெளியூர் சென்ற போது இரவு உணவுக்காக ஒரு பிரபல உணவகத்திற்கு சென்ற போது இடம் கிடைக்கவே ஒரு மணி நேரம் ஆகும் என்றார்கள்.  வேறு சில உணவகங்கள், உள்ளே நுழையும் முன்னே நாங்கள் மூடி விட்டோம், இனி சேவை கிடையாது என்றார்கள். ஒரே ஒரு பெரிய ஹோட்டலுக்கு சென்றால் சப்பாத்தி மட்டுமே இருப்பதாக சொன்னார்கள். வேறு வழியில்லாமல் அதையே கொண்டு வரச்சொன்னால் அது வரவும் 45 நிமிடங்கள் ஆனது. 
கமர்ஷியல் சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஒரே ஒரு சிலிண்டரை வைத்து சமாளிப்பதால் தாமதமாகிறது என்றார்கள்.

இதனால் மக்கள் மத்தியில் விலை உயர்ந்தாலும் பரவாயில்லை. கிடைத்தாலே போதும் என்ற மன நிலை நிலவுகிறது. இல்லையில்லை. அப்படிப்பட்ட மன நிலைக்கு மக்களை தள்ளி விட்டார்கள்  மோடி வகையறாக்கள்.

இந்த விலை உயர்விற்கும் சங்கிகள் முட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மூடர்களால்தான் மோடி பிரதமராக தொடர்ந்து கொண்டிருக்கிறார்.