Showing posts with label பொதுத்துறை. Show all posts
Showing posts with label பொதுத்துறை. Show all posts

Wednesday, February 18, 2026

அழிவை அழைக்கும் அழகிய நிக்கோபார் தீவுகள்


 












மேலே உள்ள அழகான படங்களை நன்றாக இன்னொரு முறை கூட பார்த்துக் கொள்ளுங்கள்.

அழகு சொட்டும் இந்த இடங்கள் இனி இதே போல இருக்குமா என்பது ஐயே.

பத்து லட்சம் மரங்களை வெட்டி, 130 ஏக்கர் காட்டை காலி செய்து 166 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு துறைமுகம், ஒரு விமான நிலையம், ஒரு மின் உற்பத்தி நிலையம், ஒரு பிரம்மாண்ட மால் உள்ளிட்ட நகரியம் கொண்ட 82,000 கோடி மதிப்பிலான மெகா திட்டத்தில் தாங்கள் தலையிட எந்த அவசியமும் இல்லை என்று தேசிய பசுமை தீர்ப்பாணையம் திட்டவட்டமாக கூறி விட்டது.

அதன் பொருள் என்ன?

நிக்கோபார் தீவுகளை உங்கள் இஷ்டத்திற்கு எப்படி வேண்டுமானால் அழித்துக் கொள்ளுங்கள் என்று பச்சைக் கொடி காட்டி விட்டார்கள்.

விமான நிலையம், துறைமுகம், மின் உற்பத்தி நிலையம் ஆகிய மூன்றுமே அதானி நடத்தும் முக்கியத் தொழில்கள் என்பதை நினைவில் கொள்க.

சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர்களின் ஆட்சேபத்திற்கு அரசு என்ன விளக்கம் கொடுத்தது என்பதைக் கூட சொல்ல அவசியமில்லை என்று தேசிய பசுமை ஆணையம் சொல்லி விட்டது.

கண்ணை விற்று சித்திரம் வாங்குவது போல இயற்கையை அழித்து விட்டு சுற்றுலாவை மேம்படுத்தப் போகிறார்களாம்! என்ன கேலிக்கூத்து இது!

புவி வெப்பமயமாதல் காரணமாக அந்தமான்-நிக்கோபார் தீவுகள், மாலத்தீவுகள்  ஆகியவை கடலில் முழுகிப் போகும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் விற்பன்னர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். 

பத்து லட்சம் மரங்களை வெட்டி அந்த அழிவை முன் கூட்டியே வரவேற்கிறது மோடி அரசு.

பிகு: ஒரு புறத்தில் பத்து லட்சம் மரங்களை வெட்டும் மத்திய அரசு இன்னொரு புறம் அழிவதற்காகவே பிறந்தது என்று மோடியால் சொல்லப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ ஆகியவற்றை "மரங்களை நடுங்கள்"  என்று அழுத்தம் கொடுப்பார்கள். அரசின் அரசியல் புரியாத இந்நிறுவனங்களும் தங்களது முன்னுரிமைப் பணிகளை கோட்டை விட்டு விட்டு "கிடப்பது கிடக்கட்டும், கிழவனைத் தூக்கி மனையில் வை" என்பது போல எம் கடன் மரம் நடுவதே என்று அலைந்து கொண்டிருக்கின்றன. 

Saturday, April 26, 2025

எல்.ஐ.சி யால் மட்டுமே முடியும்

 



பஹல்காம் தாக்குதலில் உயிர் நீத்தவர்களில் எல்.ஐ.சி பாலிசிதாரர்கள் இருந்தால் அவர்களின் பட்டுவாடா கேட்புரிமங்கள் உடனடியாக செய்யப் படும் என்றும் அதற்காக சில சிறப்பு தளர்வுகள் அளிக்கப்படும் என்றும் எல்.ஐ.சி அறிவித்துள்ளது. அரசின் பட்டியலில் பெயர் இருந்தால் போது இறப்புச் சான்றிதழ் கூட  அவசியமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

24.04.2025 அன்றே நெல்லூர் கோட்டம் ஒரு கேட்புரிமத்தை பட்டுவாடா செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

இது போல துயரில் தவிப்பவருக்கு வேகமாக எந்த ஒரு தனியார் நிறுவனமும் சேவை செய்யாது என்றும் பொதுத்துறை எல்.ஐ.சி யால் மட்டுமே சாத்தியம் என்று எங்களால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும்.

இது புதிதல்ல.

சுனாமி தாக்கிய போது கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் 24 மணி நேர சேவை செய்தோம்.

காட்பாடி தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலை விபத்தில் எண்ணற்ற தொழிலாளர்கள் இறந்த போது வேலூர் மையத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் 24 மணி நேர உதவி மையம் செயல்பட்டது.

இது எல்.ஐ.சி யின் பாரம்பரியம்.

சுனாமி சமயத்தில் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் அவ்வளவாக இந்தியாவில் கால் பதிக்கவில்லை (இப்போதும் கூட அவர்களால் எல்.ஐ.சி யின் நிழலைக் கூட நெருங்க முடியவில்லை). ஆனால் சுனாமி தாக்கிய வேறு சில நாடுகளில் அங்கே இருந்த தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் , "சுனாமி என்பது கடவுளின் செயல். அதனால் பாலிசி பணத்தை தர முடியாது" என்று மறுத்து விட்டன. பாலிசிதாரர்களின் உறவினர்கள் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.

மும்பை தாக்குதலின் போது வீர மரணம் அடைந்திட்ட காவல்துறை உயரதிகாரி ஹேமந்த் கார்கரேவின் இறப்புக் கேட்புரிமத்தை எல்.ஐ.சி மறுநாளே வழங்கியது. அவர் இன்னொரு தனியார் நிறுவனத்திலும் பாலிசி எடுத்திருந்தார். உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் ஹேமந்த் கார்கரே மீட்பு நடவடிக்கைக்குச் சென்றார் என்று சொல்லி பணம் கொடுக்க மறுத்து விட்டது.

இப்படிப்பட்ட தனியார் கம்பெனிகள் கொழிக்க வேண்டும் என்பதற்காக மோடி அரசு எல்.ஐ.சி யின் செயல்பாடுகளை, வணிகத்தை சீர்குலைக்க சில சதிகளை செய்து கொண்டிருக்கிறது.

அதை எந்நாளும் நாங்கள் அனுமதியோம்.


Wednesday, October 23, 2024

காவியடிச்சா பி.எஸ்.என்.எல் ஓடாது

 


காலி செய்து விட்டு காவியா?

உருப்படியாக எதையும் செய்ய துப்பில்லாத மோடி அரசு வெற்று, வெட்டி நடவடிக்கைகள் எடுப்பதில் மட்டும் குறைச்சல் கிடையாது.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் லோகோவிற்கு காவிச்சாயம் பூசி விட்டு “கனெக்டிங் இந்தியா” என்ற வாசகத்தை “கனெக்டிங் பாரத்” என்று மாற்றியுள்ளது.

அப்படி லோகோவைற்கு காவி அடித்துள்ள மோடி அரசு,

பி.எஸ்.என்.எல்  நிறுவனத்தை  இழப்பின் பிடியிலிருந்து விடுவிக்க எந்த நடவடிக்கையும் எடுத்தது கிடையாது.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் அளிக்க வேண்டிய பாக்கித் தொகையை வசூலித்துக் கொடுக்க எந்த  முயற்சியும் எடுத்தது இல்லை.

பி.எஸ்.என்.எல் தனது கட்டமைப்பை மேம்படுத்த தேவைப்படும் இயந்திரங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படுவதில்லை.

பி.எஸ்.என்.எல் மீட்பிற்காக அறிவிக்கப்பட்ட தொகையை கொடுக்கவும் இல்லை.

4 ஜி  சேவை வருகிறது, வருகிறது என்ற சொல்லப் படுகிறதே தவிர, இன்னும் வந்த பாடில்லை.

ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஊதியம் ஒழுங்காக கொடுக்கப்படுவதில்லை.

“கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடாது” என்பது எந்த அளவு உண்மையோ அது போல லோகாவுக்கு காவிச்சாயம் பூசுவதன் மூலம் பி.எஸ்.என்.எல் நிலைக்காது, முன்னேறாது.

தான் வளர்த்த நாய் இறந்து விட்டது என்பதை நாகேஷிடம் வருத்தமாக சொல்லும் நண்பர் தான் அதற்கு பெயரெல்லாம் வைத்ததாக சொல்வார். அதற்கு நாகேஷ், “நாய்க்கு பேர் வச்சியே நாயே, சோறு வச்சியா?” என்று கேட்பார்.

“லோகோவுக்கு காவிச்சாயம் பூசினியே, பி.எஸ்.என்.எல் பிரச்சினைகளை தீர்க்க என்ன செய்தாய்” என்று நாம் கேட்க வேண்டும்.

Saturday, January 20, 2024

கார்ப்பரேட்டிடம் சொன்னால் டிமோவுக்கு???

 


வரும் 22 ம் தேதி டிமோ நடத்தும் அயோத்தி கோயில் திறப்பு எனும் அரசியல் கேலிக்கூத்து நாடகத்திற்காக அன்று மதியம் 2.30 மணி வரை அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்துள்ளார்கள்.

இவரு பெருமையை டி.வி ல பார்க்க லீவு விடறாரு. மதியம் மூன்று மணி நேரம் மட்டும் எதற்கு அலுவலகம் போகனும்,  அரை நாள் லீவ் எடுக்கலாம் என்றால் எழவு ஒரு நாள் லீவ் பிடிக்கப்படுமாம். அயோக்கியத்தனமான அதிகார துஷ்பிரயோகம் இது. உன் பவுசை பார்க்க எனக்கு எதுக்கய்யா லீவு?

பொதுத்துறையெல்லாம் இறப்பதற்காக பிறந்தவை என்று அவற்றை அழித்துக் கொண்டிருக்கும் டிமோவே, யாரிடம் தரகுக்கூலி வாங்கிக் கொண்டு, இந்தியாவின் செல்வங்களை எல்லாம் தாரை வார்க்கிறேயே, அந்த கார்ப்பரேட் கம்பெனிகளை லீவ் விடச்சொல்லும் தைரியம் இருக்கிறதா உனக்கு?

சொன்னால் என்ன ஆகும்? யாருக்கு கோயில் திறப்பதாக அரசியல் செய்கிறாரோ, அந்த ராமர் காட்டுக்கு போன போது ராமரின் பிரதிநிதியாக எதை அரியணையில் வைத்து பரதன் ஆட்சி செய்தானோ, அதைக் கொண்டே அடி கிடைக்கும்.

எதைக் கொண்டு?

மேலே உள்ள படத்தை பார்க்கவும் . . .. 

Wednesday, August 16, 2023

இதற்கு மட்டும் நாங்களா டிமோ ?

 


“பொதுத்துறை நிறுவனங்கள் இறப்பதற்காக பிறந்தவை”.

யாருக்கோ செல்லப்பிள்ளை என்பதற்காக நாங்கள் பொதுத்துறை நிறுவனங்களை நடத்திட வேண்டுமா?”

இந்த இரண்டு முத்துக்களையும் உதிர்த்தவர் அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகளுக்கு தரகு வேலை பார்க்கும் டிமோ.

அதிகமான பசுமை வாயு வெளியிட நாங்கள் முயற்சி செய்வோம் என்று அமெரிக்காவில் டிமோ கொடுத்த உறுதி மொழிக்காக லட்சகக்கணக்கில் மரங்களை நட வேண்டும் என்று பொதுத்துறை நிறுவனங்கள் மீது அநியாயமான அழுத்தம் தரப்படுகிறது.

இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டபிரிவினை கோர நாள்என்ற பெயரில் கண்காட்சிகள் நடத்தும்படி பொதுத்துறை நிறுவனங்களுக்கு உத்தரவிடப்படுகின்றன.

பொதுத்துறை நிறுவனங்கள் லாபகரமாக செயல்பட்டால் அதனை தனியாருக்கு விற்றிடுவீர், பங்குகளை விற்பீர், சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க மாட்டீர்கள்.

ஆனால் உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக உங்களின் அஜெண்டாவை நிறைவேற்ற மட்டும் உங்களுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் வேண்டுமா?

இப்படியெல்லாம் உங்கள் அதிகாரத்தை மோசமாக பயன்படுத்தி பொதுத்துறை நிறுவனங்களை உங்கள் கருவியாக மாற்ற உங்களுக்கு வெட்கமே இல்லையா?

 பொதுத்துறை நிறுவனங்களுக்கு போடும் உத்தரவுகளை தனியார் நிறுவனங்களிடம் போட முடியுமா?

 அப்படி வாய் திறந்தால் என்ன ஆகும் என்று அவருக்கே தெரியும்.

 அவர்கள் சொல்ல மட்டும் செய்தும் காண்பித்து விடுவார்கள்.

 என்ன?

 GO BACK DIMO தான்.

 

Thursday, February 16, 2023

மோடிதான் கெடுத்தார்

 


ஹிந்துஸ்தான் ஏரோனெடிக்கல் லிமிட்டெட் நிறுவனம்  தயாரிக்கும் “தேஜஸ்” போர் விமானத்தை அர்ஜெண்டினாவும் எகிப்தும் வாங்க உள்ளார்கள்.

 

வெளி நாடுகள் நம்பிக்கையோடு அணுகிய ஒரு நிறுவனத்திற்கான வாய்ப்பை மோடி கெடுத்ததை இத்தருணத்தில் மறக்கக் கூடாது.

 

ரபேல் விமானங்களை பிரான்ஸ் நிறுவனத்திடம் வாங்க முதலில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் முதல் தவணை விமானங்களை டஸ்ஸால்ட் நிறுவனம் நேரடியாக தயாரித்து அனுப்பும். அதன் பின்பு அவற்றை ஹிந்துஸ்தான் ஏரொனெடிக்கல் நிறுவனம் தயாரிக்கும்.

 

இந்த ஒப்பந்தத்தை மோடி மாற்றினார். ஹெச்.ஏ.எல் க்கு பதிலாக பொம்மை ப்ளேன் கூட தயாரிக்காத தம்பி அம்பானி கம்பெனிக்கு மாற்றி விட்டார்.

 

பெற்ற குழந்தையை பட்டினி போட்டு ஊரார் குழந்தைக்கு விருந்து வைத்த கேவலமான ஜென்மம்தான் மோடி.

 


Monday, November 14, 2022

நேரு எனும் சிற்பி




 *நாளொரு கேள்வி: 14.11.2022*


தொடர் எண்: *898*

*பொதுத் துறைகளின் சிற்பி நேரு பிறந்த நாள்*

இன்று நம்மோடு இன்சூரன்ஸ் ஒர்க்கர் ஆசிரியர் *அமானுல்லா கான்* (தமிழில் கோவை *சுதா*)
#########################

*தன்னாட்சி செயல்பாடா? - அரசாங்க கட்டுப்பாடா?*

கேள்வி: பொதுத் துறை நிறுவனங்களை கட்டுப்பாடு என்ற பெயரில் கழுத்தை நெரிக்கும் மத்திய அரசின் அணுகுமுறை, இன்சூரன்ஸ் துறை மீதான தாக்கம் பற்றி என்ன கருதுகிறீர்கள்?

*அமானுல்லாகான்*

மத்திய அரசு எல்.ஐ.சி மற்றும் பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை தன்னாட்சிபெற்ற பொதுத்துறை நிறுவனங்களாக கருதாமல், அரசின் துறைகளைப் போன்றே கருதுகிறது என்பதை சமீப காலத்திய வளர்ச்சிப்போக்குகள் தெளிவாக காட்டுகின்றன.

தங்கள்வணிகங்களை நடத்த இந்நிறுவனங்கள் தன்னாட்சி அதிகாரம் பெற்றவை என்பதுஏட்டளவிலேயே உள்ளது. இந்த நிறுவனங்களின் நிர்வாகங்கள் (Board) அரசின் அதிகாரமுடிவுகளை சிரமேற்கொண்டு செயல்படுத்தும் அமைப்புகளாக மட்டுமே செயல்படும் நிலைக்கு தாழ்ந்துள்ளன.  இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகமட்டங்களின் முடிவெடுக்கும் செயல்திறனைக் கட்டுப்படுத்தும் இத்தகைய *அதிகாரமட்டத் தலையீடு அந்நிறுவனங்களுக்கு பெரும் தடையாக* உள்ளது. 

எல்.ஐ.சி மற்றும் பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களின் செயல்பாட்டில் அதிகாரத்துவ தலையீடு காணப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களிலும் இதுபோன்று நடந்துள்ளது. மற்ற பொதுத்துறை நிறுவனங்களைப் போலவே எல்.ஐ.சி மற்றும் அரசு பொது இன்சூரன்ஸ்  நிறுவனங்களும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அரசால் தனது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் தலையீடும், கட்டுப்பாடும் தற்போது இருப்பது போல் அப்பட்டமாக கடந்த காலத்தில் இருந்ததில்லை. இத்தகைய தேவையற்ற தலையீடுகள் வணிகத்தேவைகளுக்காகவும், கடுமையான போட்டிச் சூழலை எதிர்கொள்ளவும் இயக்குனரவை திறம்பட முடிவெடுப்பதில் சிக்கலை உருவாக்கும் எனவும், தொழில்துறை உறவகளை மோசமாக பாதிக்குமெனவும் கூறக் தேவையில்லை.

பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களில் ஊதிய உயர்வு, நிலுவைக் தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் கடந்த பிறகு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. *முதல் முறையாக PSGI நிறுவனங்களின் ஆட்சிக் குழுவான GIPSA ஐ ஓரங்கட்டி, நிதிஅமைச்சக அதிகாரிகள், ஊழியர் சங்கங்களோடு நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதை இந்தத் துறை கண்ணுற்றது.* ஏப்ரல் 2019ல் நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தையின் போதே GIPSA ஊதிய உயர்வுக்கான கோரிக்கையை விரைவில் தீர்க்க ஆர்வமுடன் இருந்தது. நீண்டகால நடைமுறையினைப் போன்று எல்.ஐ.சிக்கு இணையான ஊதிய ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் திறன் கொண்டவைகளாக அந்நிறுவனங்கள் உள்ளதென GIPSA தொழிற்சங்கங்களுக்கு உறுதியளித்தது. துரதிர்ஷ்டவசமாக இந்த நேர்மறையான உத்திரவாதத்திற்குப் பிறகு, ஜிப்சாவிடம் கனத்த மெளனம் நிலவியது. ஓவ்வொரு முறை பிரச்சனை எழுப்பப்படும் பொழுதும் கோரிக்கைகளை நிதிஅமைச்சகம் பரிசீலித்து வருகிறது என்ற பதிலைக் தந்தது...தீவிரமான பிரச்சாரங்களும், தொடர்ந்த போராட்டங்களும் GIPSA வை பேச்சுவார்த்தை மேசைக்கு வர வேண்டிய நிர்பந்தத்தினை ஏற்படுத்தியது. மேலும் இத்தகைய இரண்டு சந்தர்ப்பங்களில், நிதி அமைச்சகத்தின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டது முன்னெப்போதும் இல்லாதது.

இந்த விவாதங்களில் 1.8.2022 முதல் தரப்பட வேண்டிய ஊதிய உயர்வின் முற்றிலும் புதிய வடிவத்தினை தொழிற்சங்கங்களை ஏற்கச் செய்வதில் நிதி அமைச்சக பிரதிநிதி மிகுந்த ஆர்வம் காட்டினார். தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட ஊழியர்களின் செயல்திறன் அடிப்படையில் எதிர்கால ஊதிய உயர்வு வழங்கப்படும் என்ற திருத்தத்தினை உள்ளடக்கி ஊதிய ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுளள்து.. செயல்திறனை தீர்மானிக்கும் அளவுகோல்கள் குறித்து எந்த அறிவிப்பும் குறிப்பிடப்படவில்லை. சமூக பொறுப்புக்கள் மற்றும் அரசின் கொள்கைகளை செயல்படுத்துவதற்கு என்ன மதிப்பீடு வழங்கப்படும் என்பதை குறித்து அரசு எதுவும் கூறவில்லை. 

*பிரதம மந்திரியின் சுரக்ஷா பீமா யோஜனா* போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் கணிசமான இழப்பை சந்தித்துள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. அத்தகைய பாலிசிகளுக்கான பிரிமிய விகிதங்களை நிர்ணயிக்க PSGI  நிறுவனங்களுக்கு சுதந்திரம் இல்லை, மேலும் இந்நிறுவனங்கள் இதனால் அடைந்த இழப்புகளுக்கான இழப்பீட்டையும் அரசு வழங்குவதில்லை. இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் ஊதியம் மற்றும் ஊழியர் நலன்கள் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நிர்வாகங்கள் மற்றும் தொழிற்சங்கங்களை  
அனுமதிப்பது தான் சிறந்தது என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். இந்த பிரச்சனைகளில் அரசின் தலையீடு தொழிலக உறவுகளை சீர்குலைப்பது மட்டுமன்றி தொழிலக ஜனநாயகத்தை மீறும் நடவடிக்கையுமாகும்..

எல்.ஐ.சி நிர்வாகக்குழு *குடும்ப ஓய்வூதியத்தை ஒரே சீராக 30% ஆக உயர்த்துவதற்கான தனது பரிந்துரைகளை 2019ம் ஆண்டில் அரசிற்கு அனுப்பியது. இப்பிரச்சனை இன்று வரை நிதிஅமைச்சகத்திடம் நிலுவையில் உள்ளது.* எல்.ஐ.சி திறமையான, செயல்பாட்டு சுதந்திரமிக்க நிர்வாகக்குழுவால் நிர்வகிக்கப்படுகிறது என்னும் கூற்றை கேலிக்குரியதாக்கவில்லையா? அல்லது நிதி அமைச்சக அதிகாரிகள் எல்.ஐ.சி நிர்வாகக்குழு தனது முடிவுகளின் விளைவுகளை புரிந்து கொள்ளும் தகுதியற்றது என எண்ணுவதின் வெளிப்பாடா? எல்.ஐ.சியின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதில் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் மெத்தனத்தினால் ஓய்வூதியதாரர்கள் பெரியதுன்பத்தை சந்தித்து வருகின்றனர். இந்த இடைப்பட்டகாலத்தில் கணிசமான ஓய்வூதியதியர்கள் இறந்துள்ளனர். அவர்களின் துன்பங்களை அரசு கண்டுகொள்ளவில்லை என்பது உண்மையே. ஆனால் எல்.ஐ.சி நிர்வாகம் தனது பொறுப்பிலிருந்து தப்ப முடியுமா? பரிந்துரை செய்த பிறகு அரசின் ஒப்புதலை பெறுவதும், அதனை செயல்படுத்துவதை உறுதி செய்வதும் எல்.ஐ.சியின் பொறுப்பல்லவா? நாட்டின் மிகப்பெரிய நிதி நிறுவனத்தின் நிர்வாகக்குழு தனது நிலைபாட்டில் நின்று அரசிடமிருந்து ஒப்புதல் பெறுவதை உறுதி செய்து, அதன் பலன்கள் உத்தேசிக்கப்பட்ட தேதிகளிலிருந்து ஊழியர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமற்றதா? இச்சூழல் தொழிலுறவுகள் உட்பட நிறுவனத்தை நிர்வகிக்க எவ்வளவு தன்னாட்சி அதிகாரத்தை எல்.ஐ.சி தன்னகத்தே கொண்டுள்ளது என்ற அடிப்படை கேள்வியை எழுப்புகிறது.

பாலிசிதாரர்களின் நலனைப் பாதுகாப்பதனை முதன்மையாகவும், நாட்டின் வளர்ச்சிக்கும் அதன்மூலம் ஒட்டுமொத்த குடிமக்களுக்கும் பயனளிக்கும் வகையில் சேமிப்புகளை திரட்டுவதை அடுத்தபடியாகவும் கொண்டு எல்.ஐ.சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் பலமுறை, பாலிசிதாரர்களுக்கு நலன்களுக்கு எதிராக கடினமான பொருளாதார சூழலில் அரசை மீட்டெடுக்க  எல்.ஐ.சியை எதிர்பார்க்கும் பொழுது இந்த உத்திரவாதம் நீர்த்து போகிறது. *ஐடிபிஐ* அதற்கு சரியான உதாரணமாகும். ஐடிபிஐ பாரம்பரியமாக நீண்ட காலத்திற்கு முதலீடு செய்து வந்தது, ஆனால் துரதிர்ஷடவசமாக அரசின் குறுகிய நோக்கத்தினால் வளர்ச்சி வங்கி வணிக வங்கியாக மாற்ற பட்டது. அதன் காரணமாக இயல்பாகவே குறுகிய காலக்கடனை வாங்கவும், நீண்டகாலத்திற்கு முதலீடு செய்யவும் நிர்பந்தித்ததன் காரணமாக வங்கி நொடிந்து போனது. வங்கியை மீட்டெடுக்க அரசு எல்.ஐ.சியை நாடியது. *பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளையும் மீறி எல்.ஐ.சி வங்கியின் பெரும்பகுதி பங்குகளை வாங்கி கடுமையாக முயன்று வங்கியை ஆரோக்கியமானதாக மாற்றியது. இந் நடவடிக்கையின் காரணமாக ஐடிபிஐ எல்.ஐ.சியின் மிகப்பெரிய வங்கி காப்பீட்டுக் கூட்டாளியாக மாறியது. நிலைமைகள் மாறி வரும் தருணத்தில் அரசு ஐடிபிஐ வங்கியை தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பதற்கு முடிவெடுத்து, தனது பங்குகளை விற்பதோடு எல்.ஐ.சி வைத்துள்ள பெரும்பகுதி பங்குகளையும் விற்குமாறு பணித்தது.* தற்போது ஐடிபிஐயில் 49.24% பங்குகளை வவைத்கிருக்கும் எல்.ஐ.சி 20.24% பங்குகளை விற்கும்படி கேட்டுக்கொள்ளப் படுவதால் நிர்வாகக் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும்.  எல்.ஐ.சி நீண்ட கால ஆதாயங்களுக்காக ஐடி.பிஜயில் முதலீடு செய்திருந்தால், பங்குகளை விற்க ஏன் தற்போது இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது? 

ஒவ்வொரு பெரிய தனியார் நிறுவனமும் ஒரு வங்கியால் ஆதரிக்கப்படும் நிலையில் போட்டிச் சூழல் சவாலை எதிர்கொள்ளும் எல்.ஐ.சிக்கு நிர்வாகக் கட்டுப்பாடு இல்லையென்றால் பின்னடைவாகிவிடாதா? உத்தேசித்துள்ள ஒப்பந்தத்திலிருந்து எல்.ஐ.சி லாபம் பெறுமா அல்லது பாலிசிதாரர்களின் நிதிகளுக்கு இழப்பை ஏற்படுத்துமா? பாலிசிதாரரின் நலன்களைப் பாதுகாப்பதே அதன் அடிப்படைப் பொறுப்பு என்பதை எல்.ஐ.சி நினைவில் கொள்ளவேண்டும், எந்த ஒப்பந்தமும் இந்தக் கொள்கையை சமரசம் செய்வதாக இருக்கக்கூடாது. 
எல்.ஐ.சி பங்கு விற்பனை என்னவாயிற்று? அது அரசின் நிதிப்பற்றாக்குறை இலக்குகளை சரி செய்வதற்காக மிகவும் புகழ் பெற்ற பொதுத்துறை நிதி நிறுவனத்தை விற்றதாகும்... வணிகத்தில்  ஈடுபடுவது அரசின் பணி அல்ல என்ற கருத்தியல் மட்டுமல்லாமல் நிதிப்பற்றாக்குறையினால் அரசு தவிக்கிறது. எனவே எல்.ஐ.சி நிர்வாகத்தை அவசரகதியில் பங்கு விற்பனைக்கு ஓப்புதல் அளிக்குமாறு வற்புறுத்திய்து. பொருளாதார தேக்கநிலை, போர் ஆகியவற்றின் காரணமாக வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் எந்த முதலீடும் செய்யாமல் எச்சரிக்கையாக உள்ளனர் என்பதை அறிந்திருந்தும், அரசு எல்.ஐ.சியின் 3.5% பங்குகளை விற்க முன்வந்தது. எல்.ஐ.சியின் பிராண்ட் மதிப்பும், மக்களிடையே அது ஏற்படுத்தியிருந்த நம்பிக்கையும் பங்கு விற்பனையின் வெற்றியை உறுதி செய்தன. ஆனால் பட்டியலிடுவதன் காரணமாக அதீத லாபத்தை எதிர்பார்த்த முதலீட்டாளர்கள், பட்டியலிடப்பட்ட விலை, பங்குகளின் விலையில் சரிவு ஆகியவற்றால் ஏமாற்றமடைந்தனர். இது மிகுந்த அதிருப்தியையும் புதுவணிகத்தில் நேரடி தாக்கத்தையும் ஏற்படுத்தியது. *நிறுவனத்திற்கு நிதித்தேவை இல்லாத நிலையிலும், நிதி வரவிற்கான தேவை ஏற்படாத நிலையில் எல்.ஐ.சி நிச்சயமாக பங்கு விற்பனை முடிவை எடுத்திருக்கக் கூடாது.* இது அரசு சிக்கலான பொருளாதார சூழலில் தனது நிதிப்பற்றாக்குறையை ஈடுகட்ட எடுக்கப்பட்ட முடிவு என்பதற்கு சரியான உதாரணமாகும்...

வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் நலன்களுக்கு ஏற்ப ஒரு நிறுவனம் தனது செயல்பாடுகளை நிர்வகிப்பதற்கு மிகவம் அவசியமான செயல்பாட்டு தன்னாட்சியை அரசின் அதிகாரத்துவம் எவ்வாறு தர மிறக்கியுள்ளது என்பதற்கு இவை சில எடுத்துக்காட்டுகள் ஆகும். அதீதமான அதிகாரத்துவ தலையீடு பாலிசிதாரர்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வணிக முடிவுகளையே தோற்றுவிக்கும். எத்தகைய, சமூக நோக்கங்களுக்காக “தோற்றுவிக்கப்பட்டதோ அந்த நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் தங்களது செயல்பாடுகளை நிர்வகிக்க எல்ஐசி மற்றும் பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள்  தேவையான தன்னாட்சி அதிகாரத்தைக் கோரிப் பெற வேண்டிய தருணம் இது.

*செவ்வானம்*

Saturday, October 22, 2022

மானங்கெட்ட பிழைப்பு ஏன் மோடி?

 


பொதுத்துறை நிறுவனங்கள் இறப்பதற்காக பிறந்தவை என்று சொன்னவர் மோடி. பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம்தான் மோடியின் ஊதாரிச் செலவுகள் செய்யப்படுகின்றன. இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பான எல்.ஐ.சி யின் மூன்றரை சதவிகித பங்குகள் விற்கப்பட்டன. இரண்டு பொதுத்துறை வங்கிகளும் ஒரு பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனமும் விற்பனைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. ஏர் இந்தியா அடிமாட்டு விலைக்கு டாடாவிற்கு சமர்ப்பிக்கப் பட்டது.

விமான நிலையங்களின் பராமரிப்பு அதானிக்கு கொடுக்கப்பட்டது. எச்.ஏ.எல். நிறுவனத்திற்குப் பதிலாக பொம்மை ப்ளேன் கூட தயாரித்த அனுபவம் இல்லாத அனில் அம்பானியின் கம்பெனிக்கு ரபேல் விமான ஒப்பந்தம் தரப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளில் அதானிகளும் அம்பானிகளும் அவர்தம் கூட்டத்தாரும் வாங்கிய கடனெல்லாம் கோடிக்கணக்கில் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இப்படி பொதுத்துறை நிறுவனங்களை சீரழித்த படுபாவி மோடி.

ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று வாக்குறுதி கொடுத்து நாற்காலியைப் பிடித்த மனிதனின் ஆட்சியில்தான் நாற்பது ஆண்டுகளில் காணாத அளவிற்கு வேலையின்மை விகிதம் உயர்ந்தது. இப்பிரச்சினைக்கு இந்த அற்ப மனிதன் கொடுத்த அற்புதமான தீர்வுதான் “பக்கோடா கடை வைப்பது”

இதெல்லாம் பழசுதானே, இப்போ எதுக்கு மறுபடியும் என்று கேட்கிறீர்களா?

இல்லை. புதிதாக ஒரு அராஜகம் நடக்கிறது.

பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களில் புதிதாக பணி நியமனம் பெற்ற ஊழியர்களிடம் இன்று மோடி உரையாற்ற உள்ளார்,

நிர்வாகங்களும் “யெஸ் பாஸ்” என்று தங்கள் விசுவாசத்தைக் காண்பித்து ஊழியர்கள் மோடி பேசுவதை கேட்கும் தண்டனையை கட்டாயமாக்கி உள்ளன, துரதிர்ஷ்டவசமாக எங்கள் நிறுவனம், எங்கள் கோட்டம் உட்பட. எங்கள் எதிர்ப்பை பதிவு செய்தோம் என்பது வேறு விஷயம்.

பொதுத்துறையை அழிக்க வேண்டும் என்று நினைக்கிற ஒரு மனிதன் பொதுத்துறை நிறுவன ஊழியர்களோடு என்ன பேச முடியும்? பேசுவதற்கு என்ன அருகதை உள்ளது?

புதிதாக பணியில் சேர்ந்துள்ளவர்கள் எல்லாம் பட்டதாரிகள். மோடி போல இல்லாத “எம்.ஏ என்டயர் பொலிட்டிக்கல் சைன்ஸ்” படித்ததாக கதை விடும் தற்குறிகள் அல்ல,

அவர்கள் அனைவரும் இரண்டு தேர்வுகள் எழுதி பணிக்கு தேர்ச்சி பெற்றவர்கள். குஜராத்தில் ரத்த ஆற்றை ஓட வைத்து மக்களை பிளவு படுத்தி 15 லட்சம், 2 கோடி வேலை என்றெல்லாம் ஜூம்லா வாக்குறுதி கொடுத்து அதானியின் ஓசி ப்ளேனில் பறந்து பிரச்சாரம் செய்து வேலையில் சேர்ந்தவர்கள் அல்ல..

மோடியால் அவர்களுக்கு என்ன அறிவுரை சொல்ல முடியும்?

உங்கள் நிறுவனத்துக்கு கடுமையாக உழைத்து லாபத்தை பெருக்குங்கள். அப்போதுதான் நான் அவற்றை அடிமாட்டு விலைக்கு என் எஜமானர்களான முதலாளிகளுக்கு விற்பேன் என்று உண்மையை பேச முடியுமா? அவரின் குரங்குக் குளியல் (மன்கி பாத்) தான் நமக்கு தெரியுமே!

பொதுத்துறை நிறுவனங்களை கட்டாயுப்படுத்துவது போல இவரால் எந்த தனியார் நிறுவன ஊழியர்களிடமாவது பேச முடியுமா? இவரின் யோக்கியதை அறிந்த அவர்கள் இவரை கிட்டவே சேர்க்க மாட்டார்கள்.

பின் ஏன் இந்த மானங்கெட்ட  பிழைப்பு மோடி?

உங்களால் சீரழிக்கப்படுகிற பொதுத்துறை நிறுவனங்களை உங்களது விளம்பர மோகத்திற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வது அயோக்கியத்தனம் இல்லையா? அதிகார துஷ்பிரயோகம் இல்லையா?

யாரோ தயாரித்த உரையை இவர் டெலிப்ராம்ப்டரில் படிப்பதை காணும் அந்த ஊழியர்கள் உண்மையிலேயே பரிதாபத்துக்குரியவர்கள். பிரதமரே எங்களோடு பேசினார் என்ற மாயையில் பலர் மயங்குவார்கள் என்பதும் யதார்த்தம்.

என்ன செய்ய வேண்டும்?

பாஜக சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளதே என்று உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் “அந்த இடங்களில் பள்ளிக் கூடங்களை அதிகரிப்பேன்”  என்று கூறினார்.

அது போலத்தான் மோடியின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தொழிற்சங்க வகுப்புக்களை விரைவில் எடுக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த நிறுவனங்களில் உள்ள தொழிற்சங்கங்களுக்கு உள்ளது. போராடாமல் எதுவும் கிடைக்காது என்ற உண்மையை சமீபத்திய யமஹா தொழிலாளர்களின் இரண்டாவது போராட்டத்தின் (முதல் போராட்டம் குறித்த 

 "மறக்க முடியாத மாலை அது" என்ற எனது அனுபவப் பதிவை இணைப்பின் மூலம் படியுங்கள் 

வெற்றியோடு சேர்த்து சொல்லித்தர வேண்டும்.                                                                                                                                                                

 

Friday, October 7, 2022

மோடி கொடியசைச்சா

 


எந்த ஒரு அமைப்பையும் நாசமாக்கும் வல்லமை சிலருக்கே உண்டு. அப்படிப்பட்ட நாசகர பேர்வழிகளில் முதலிடம் மோடிக்கே.

மோடி கொடியசைத்து துவக்கி வைத்த வந்தே பாரத் ட்ரெய்ன் எருமை மாடு மோதி பாதிக்கப்பட்டது.

இந்திய ரயில்வே மோடியின் கையில் சிக்கி சின்னாபின்னமாவதன் அடையாளம் இந்த விபத்து.

இன்னும் என்னென்ன கொடுமைகளை நாம் சந்திக்க வேண்டியிருக்குமோ!

பிகு: தமுஎகச பொதுச்செயலாளர் தோழர் ஆதவன் தீட்சண்யாவின் பதிவு ஒன்றை பகிராமல் இருக்க முடியவில்லை. 


என்னா ரயிலு...  வூட்ல சொல்ட்டு வந்திட்டியா? போனாப்போவுதுன்னு இத்தோட வுடறேன், ஓடிப்போய் தப்பிச்சுக்கோ...

Saturday, March 26, 2022

அவசியம் பாருங்க. அனுபவத்தை கேளுங்க

 


எல்.ஐ.சி பங்கு விற்பனை தொடர்பாக "காம்ரேட் டாக்கீஸ்" தயாரித்துள்ள ஆவணப்படம்.

பங்கு விற்பனை தொடர்பான ஒன்றிய அரசின் வாதங்களை எங்கள் தலைவர்கள் சுக்கு நூறாக தகர்ப்பது மட்டுமல்ல, பொதுத்துறை நிறுவனமாக இருப்பதால் பலன் பெற்ற பாலிசிதாரர்களின் அனுபவப் பகிர்வும் உண்டு.

அவசியம் பாருங்கள்

யூட்யூப் இணைப்பு இங்கே

Saturday, March 5, 2022

இன்று ஏன் போராட்டம்?

 

எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. அதற்கு எதிராக இன்று தேசத்தின் தலைநகரில் ஜந்தர் மந்தர் பகுதியில் தர்ணா போராட்டம் நடைபெறவுள்ளது.

தலைநகர் போராட்டத்தை ஒட்டி தென் மண்டலம் முழுதும் தர்ணா இயக்கங்கள் நடைபெறவுள்ளது.

எங்கள் கோட்டத்தில் வேலூரிலும் புதுவையிலும் . . .

பங்கு விற்பனையின் மூலம் பாலிசிதாரர்களுக்கு வரக்கூடிய பாதிப்புக்கள் குறித்து பொருளாதார நிபுணரும் கேரள முன்னாள் நிதியமைச்சருமான தோழர் தாமஸ் ஐசக் எழுதியுள்ளதை படியுங்கள்.

உண்மையான தேச பக்தர் என்றால் எங்களோடு நில்லுங்கள். எல்.ஐ.சி பங்கு விற்பனையை ஆதரிப்பவர் எவராயினும் அவர்கள்தான் நிஜமான தேச விரோதிகள், மக்கள் விரோதிகள்,



*நாளொரு கேள்வி: 04.03.2022*

தொடர் எண் : *641*

இன்று நம்மோடு கேரள முன்னாள் நிதியமைச்சர் *டி.எம். தாமஸ் ஐசக்*
#########################

*உண்மையான உடமையாளர்களை கருத்தில் கொள்ளாத முடிவு*

கேள்வி: எல்.ஐ.சி பங்கு விற்பனை பாலிசிதாரர்களின் நலன் மீது என்ன தாக்கம் செலுத்தும்? 

*தாமஸ் ஐசக்*

பாலிசிதாரர்கள்தான் எல்.ஐ.சி யின் *உண்மையான உடமையாளர்கள்.* பொருளாதார பிரம்மாண்டமான எல்.ஐ.சி யின் பங்கு விற்பனை குறித்து பாலிசிதாரர்களுடன் கலந்தாலோசனை எதையும் செய்யவில்லை. நிறைய பாலிசிதாரர்களுக்கு *எல்.ஐ.சி யின் அடிப்படை குணமே மாற்றத்திற்கு உள்ளாவது* பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 

ஏற்கெனவே இரு முக்கியமான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒன்று பகிரத்தக்க பாலிசிகள் (Participating Policies) மீதான நிகர உபரி மட்டுமே பாலிசிதாரர்களுக்கு பிரித்து தரப்படும் என்பது. அதிலும் 95 சதவீத உபரி பங்கீடு என்பது 90 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

*ஐ.ஆர்.டி.ஏ* என்கிற கட்டுப்பாட்டு ஆணையம் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவது பொதுவாக நடந்தேறுகிறது. அது எந்த அளவிற்கு சென்றது என்றால், எல்.ஐ.சி யின் முக்கிய பாலிசி திட்டங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்து வணிகத்தில் குழப்பம் ஏற்படுத்துகிற அளவிற்கு கூட நடந்தது. 

பாலிசிதாரர் நலன் காக்கிற பாதுகாவலர் ஆக ஐ.ஆர்.டி.ஏ இருக்க வேண்டும். ஆனால் எல்.ஐ.சி பற்றிய மதிப்பீடுகளை ஐ.ஆர்.டி.ஏ பாலிசிதாரர் கோணத்தில் செய்யாமல் பங்குதாரர் கோணத்தில் செய்துள்ளது. 

எல்.ஐ.சி பங்கு விற்பனை நிச்சயம் எதிர்காலத்தில் *அரசு உத்தரவாதத்தை* பாதிக்கும். இடர் விரும்பாத மக்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஆகவே அரசு உத்தரவாதம் முக்கியத்துவம் பெறுகிறது. 

பங்கு விற்பனை அதிகமாக அதிகமாக *லாப நோக்கமே எல்.ஐ.சி யின் முதலீட்டு முடிவுகளை துரத்தும்.* ஆகவே முதலீடுகள் அதிக லாபம் தருகிற இடர் மிக்க பங்குகள், கடன் பத்திரங்களை நாடிச் செல்லும். இது தொழிலையும் சிக்கலுக்குள் ஆழ்த்தும். *1990 - 2020 காலத்தில் மட்டும் 82 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அமெரிக்காவில் கதவை மூடியுள்ளன.*

எல்.ஐ.சி யின் வணிக உத்திகளும் சாமானிய மக்களிடம் இருந்தும், கிராமப் புறங்களில் இருந்தும் விலக ஆரம்பிக்கும். 2021 இல் எல்.ஐ.சி யின் *சராசரி ஆண்டு பிரீமியம்* ரூ 16156. தனியார் நிறுவனங்களின் சராசரி ஆண்டு பிரீமியம் ரூ 89004 ஆகும். *எல்.ஐ.சி யின் அலுவகங்களில் 60 சதவீதம் அலுவலகங்கள்* ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு கீழே உள்ள ஊர்களில்தான் உள்ளது. இது தனியார் துறை அலுவலக அமைவிடங்களுக்கு நேர் எதிரானது. 

2019 - 20 இல் *முறையற்ற வணிக நடவடிக்கைகள்* மொத்தம் இன்சூரன்ஸ் துறையில் 43444 நடந்துள்ளன. அதில் 90 சதவீதம் தனியார் துறைகளில்தான் அரங்கேறி உள்ளன. அவர்களின் *சந்தைப் பங்கு*  வணிகத்தில் 34 சதவீதம்தான் என்பதை இணைத்துப் பாருங்கள். 

2021 இல் எல்.ஐ.சி யின் *நிர்வாக செலவுகள்* 8.68 சதவீதம். ஆனால் தனியார் துறையின் நிர்வாக செலவுகள் 11.72 சதவீதம். 

(இந்த தகவல்கள் பாலிசிதாரர் நலன் குறித்த சித்திரங்களை நமக்கு தருகின்றன)

*செவ்வானம்*

Friday, January 28, 2022

டாடாவுக்கு மட்டும் சொந்தமா?

 


தொலைக்காட்சிகளும் நாளிதழ்களும் நேற்று முதல் ஒரே தலைப்பை முழங்கிக் கொண்டிருக்கின்றன.

அந்த தலைப்புச் செய்தி 

"ஏர் இந்தியா மீண்டும் டாடாவிடமே சென்றது"

அப்படியா? நிஜமா? அரசுடமையாக்கப்படுவதற்கு முன்பாக ஏர் இந்தியா நிறுவனம் டாடாவிடம் மட்டும்தான் இருந்ததா?

அப்படித்தான் நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆம். நானும்தான்.

ஆனால் ஒரு பிரசுரம் எழுதுவதற்காக தகவல்களை தேடும் போதுதான் உண்மை புரிந்தது. (வேறு வேலைகள் வந்த காரணத்தால் அந்த பிரசுரம் எழுதும் பணியை அம்போவென்று நிறுத்தி விட்டது வேறு விஷயம்) ஆனாலும் பாதியில் நிறுத்திய அந்த பணியில் எழுதிய விஷயங்கள் இன்றைய பதிவுக்கு போதுமானது. 

டாடா நிறுவனம்தான் இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் விமான நிறுவனமா? அதைத்தான் அப்படியே ஏர் இந்தியாவாக பொதுத்துறை நிறுவனமாக மாற்றி விட்டார்களா? டாடாவிடம் பெற்றதுதான் அப்படியே டாடாவிற்கு  சென்றுள்ளதா?  என்ற வினாக்களுக்கு விடை சொல்வதும் முக்கியம்.

 ஆரம்பமானது அஞ்சல் சுமக்கவே

 இந்தியாவில் வணிக ரீதியான விமான சேவை என்பது 1912 ஆம் ஆண்டே துவங்கி விட்டது. அந்த வருடம்தான் இந்தியன் ஸ்டேட் ஏர்வேஸ் என்ற நிறுவனம் இம்பீரியல் ஏர்வேஸ் என்ற நிறுவனத்தோடு இணைந்து கராச்சியிலிருந்து டெல்லிக்கு அஞ்சல் மூட்டைகளை அனுப்பத் தொடங்கியது. அதன் பின்பு 1915 ல் டாடா சன்ஸ் லிமிட்டெட்  நிறுவனத்தின் ஒரு அங்கமாக கராச்சிக்கும் சென்னைக்கும் இடையே விமான அஞ்சல் சேவையைத் துவக்கியது.

 1932 ல் டாடா நிறுவனம் டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம் என்ற பெயரில் விமான நிறுவனத்தை தனியாக துவக்கி  கராச்சி, சென்னை, மும்பை, அகமதாபாத் ஆகிய பல நகரங்களுக்கும் சேவையை விரிவு படுத்தியது.  இந்த நிறுவனம் கூட அஞ்சல் சேவை மட்டுமே முதலில் செய்ததே தவிர பயணிகள் சேவையில் ஈடுபடவில்லை. அது பின்னரே வந்தது.

 வர்க்க ஒற்றுமையும் வணிக நலமும்.

 இந்திய விடுதலைக்கான பேச்சு வார்த்தைகள் துவங்கிய நேரமது.  வீரம் செறிந்த போராட்டத்தை விவசாயிகள் தெலுங்கானாவை நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களது போராட்டத்தை கொடூரமாக ஒடுக்க முயன்று கொண்டிருந்த ஹைதராபாத் நிஜாமிற்கு இந்தியாவுடன் இணையும் எண்ணமும் கிடையாது. இந்த சூழலில்தான்  ஐதராபாத் நிஜாமும் டாடாவும் இணைந்து டெக்கான் ஏர்லைன்ஸ் எனும் நிறுவனத்தை துவக்குகின்றனர். விவசாயிகளைக் கொல்வதோ அல்லது இந்தியாவுடன்  இணைய மறுப்பதோ நிஜாமுடன் கரம் கோர்க்க டாடாவிற்கு மனத் தடையாகக் கூட இல்லை. முதலாளித்துவ வர்க்க ஒற்றுமையும் லாபமும் தேச ஒற்றுமையை விட முக்கியமல்லவா!

 பெயர் மாறியது.

 1946 ம் வருடம் டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது பெயரை “ஏர் இந்தியா”  என்று மாற்றிக் கொண்டது. இந்த பெயர் மாற்றம்தான் இன்று ஒரு தவறான சித்திரத்தை உருவாக்கியுள்ளது. அதை அடுத்த பத்திகளில் பார்ப்போம்.

 இந்திய விடுதலையின் போது

 இந்தியா சுதந்திரம் பெற்ற போது ஒன்பது விமான நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தன. அதிலே ஓரியண்ட் ஏர்வேஸ் என்ற நிறுவனம் பாகிஸ்தானாக பிரிந்து போன பகுதிகளை அடிப்படையாக செயல்பட்டதால் அந்த நிறுவனம் பாகிஸ்தானிலிருந்து தொடர்ந்து செயல்பட மீதமுருந்த எட்டு நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து செயல்பட்டன. அவை பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து என இரண்டு பிரிவுகளிலும் இயங்கின. சில நிறுவனங்களின் செயல்பாடு இந்திய எல்லைக்கு அப்பாலும் விரிந்திருந்தது.

 தேச உடமையானது விமானத் துறை.

 இந்திய விடுதலைக்குப் பிறகு முதலாவது ஐந்தாண்டு திட்டம் அறிமுகமான பின்னணியில் “ஏர் கார்ப்பரேஷன் சட்டம்” என்ற ஒன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனைத்து விமான நிறுவனங்களும் தேசியமயமாக்கப்பட்டன. டெக்கான் ஏர்வேஸ், ஏர்வேஸ் இந்தியா, பாரத் ஏர்வேஸ், கலிங்கா ஏர்வேஸ், இந்தியன் நேஷனல் ஏர்வேஸ், இமாலயன் ஏவியேஷன், ஏர் சர்வீஸஸ் ஆஃப் இந்தியா, ஏர் இந்தியா ஆகிய எட்டு நிறுவனங்களும் தேசியமயமாக்கப்பட்டது. இதிலே கலிங்கா ஏர்வேஸ் நிறுவனம் மொரார்ஜி தேசாய் காலத்தில் ஒன்றிய அமைச்சராகவும் பின்னாளில் ஒடிஷாவின் முதலமைச்சராகவும் இருந்த பிஜு பட்னாயக் (தற்போதைய ஒடிஷா முதல்வர் நவீன் பட்னாயக்கின் தந்தை)கிற்கு சொந்தமானது.

 தேச உடமையாக்கப்பட்ட விமான நிறுவனங்கள் இரண்டு நிறுவனங்களாக உருவாக்கப்பட்டன. உள்நாட்டு விமானப் போக்குவரத்திற்காக இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் பன்னாட்டுப் போக்குவரத்துக்காக ஏர் இந்தியா நிறுவனமும் துவக்கப்பட்டன. எட்டு நிறுவனங்கள் இணைந்துதான் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் ஏர் இந்தியா நிறுவனமும்  துவக்கப்பட்டதே தவிர, டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் அப்படியே பொதுத்துறை நிறுவனமாக மாறவில்லை.

 “வெல்கம் பேக் ஏர் இந்தியா” என்று சொன்னால் அதிலே மற்ற ஏழு நிறுவனங்களும் அடக்கம். அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் யாரையாவது டாடா பங்குதாரராக சேர்த்துக் கொள்வாரா? அதற்கு வாய்ப்பில்லை என்பதுதானே யதார்த்தம்!

இன்னும் ஒரு சுவாரஸ்யமான தகவல் இருக்கிறது.

"மாப்பிள்ளை இவர்தான். ஆனால் சட்டை என்னுடையது" என்பது போல அரசு நிறுவனமாக இருந்தாலும் ஏர் இந்தியா நிஜத்தில் யார் கைகளில் இருந்தது?

அதைப் பற்றியும் எழுதியிருந்தேன்.

அரசு நிறுவனமானது. ஆனால் ஆதிக்கம்?

 1953 ல் துவக்கப்பட்ட பொதுத்துறை  ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் யார் தெரியுமா? டாடா ஏர்லைன்ஸாக துவங்கி ஏர் இந்தியாவாக பெயர் மாற்றம் அடைந்த நிறுவனத்தின் தலைவராக இருந்த ஜே.ஆர்.டி.டாடாதான். நிறுவனம் தேசியமயமான பின்பும் தலைவராக நியமிக்கப்பட்டார். 1978 ல் ஜனதா ஆட்சி வருகிற வரையில்  கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து ஆண்டுகள் அவர் அந்த பதவியில் நீடித்தார். ஜனதா ஆட்சியில் ஜே.ஆர்.டி டாடா ஏர் இந்தியா சேர்மன் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும் பத்தாண்டுகளுக்குப் பிறகு டாடா நிறுவன வாரிசு ரத்தன் டாடா ராஜீவ் காந்தி காலத்தில் 1986 லிருந்து 1989 வரை சேர்மனாக செயல்பட்டார். நிறுவனம் என்னமோ அரசுடையதுதான். ஆனால் அதில் ஆதிக்கம் செலுத்தியது டாடாக்கள்.

மீண்டும் டாடாவிடம் சென்றது ஏர் இந்தியா என்று தலைப்புச் செய்திகள் போடுபவர்களுக்கு இந்த உண்மை வரலாறு தெரியுமா என்று எனக்கு தெரியாது.

நாமாவது தெரிந்து கொள்வோம்.

Tuesday, September 7, 2021

நாசரின் கேள்வி மீண்டும் . . .

 உளுத்துப் போன உதவாத வாதம்

 

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒன்றிய அரசின் சதிச்செயலை, தேசத்தின் செல்வாதாரம் நாட்டின் கைகளிலிருந்து சில பெரிய மனிதர்களின் கைகளுக்கு மாறுவதை கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி வெட்கம் கெட்டு முட்டு கொடுக்கிற பல மூடர்கள் மீண்டும் மீண்டும் முன் வைக்கிற ஒரே வாதம்

 “வணிகத்தில் ஈடுபடுவது அரசின் தொழில் அல்ல, ஆள்வதுதான் அரசின் வேலை”

 இது ஒன்றும் புதிய வாதமல்ல, கேட்டு கேட்டு புளித்துப் போன வாதம், சத்தில்லாத உளுத்துப் போன வாதம். மார்க்கரீட் தாட்சர் இங்கிலாந்திலும் ரொனால்ட் ரீகன்  அமெரிக்காவிலும் சொன்னதைத்தான் மோடி-நிர்மலா கூட்டாளிகளின் கண்டுபிடிப்புகள் போல பல மூடச் சங்கிகள் பீற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

ரயில் விபத்துக்கள் அதிகரித்துக் கொண்டே இருந்த போது, கட்டுப்படுத்தும் வழி தெரியாத போது

 “Too much of Privatization, Too much of Privatization”

 என்று புலம்பினார் டோனி ப்ளேய்ர்.  தனியார்மயத்தை ஊக்குவித்த மார்க்கரெட் தாட்சருக்கு பின்னாளில் இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர். 

 அரசு வணிகத்திலிருந்து  விலகி இருக்க வேண்டும் என்று சொன்ன அமெரிக்காவில்தான்

 “அரசே, கை கொடுத்து எங்களைக் காப்பாற்று”

 என்று கஜேந்திர யானையைப் போல அபயக்குரல் எழுப்பியது அந்நாட்டு பெரு முதலாளிகள், பகாசுர பன்னாட்டுக் கம்பெனிகள். இது நடந்து ரொம்ப நாட்கள் ஆகி விடவில்லை. பத்தாண்டுகள் முன்பு உலகப் பொருளாதார நெருக்கடியின் போது நிகழ்ந்தது.  இந்தியாவில் டாடாவோடு கூட்டாளியாக இருந்த ஏ.ஐ.ஜி நிறுவனம் திவாலின் விளிம்புக்கு போன போது 180 பில்லியன் டாலர்  கொடுத்து அமெரிக்க அரசாங்கம்தான் அதை காப்பாற்றி விட்டது. அந்த சமயத்தில்தான் அந்த நிறுவனம் இந்தியாவை விட்டு ஓடிப் போனது.

 வணிகத்தில் தலையிடக்கூடாத அரசு, முதலாளிகள் தடுமாறும் போது மட்டும் அரசு கஜானாவை திறந்து விடலாமா?

 வலிமையானதுதான் நீடிக்கும் என்று தத்துவம் பேசியவர்கள், மற்றவர்கள் மடிந்து போவதை வேடிக்கை பார்த்திருக்கலாமே! அரசுக்கு இங்கே வேலை இல்லை என்று ஒதுங்கிப் போகச் சொல்லி இருக்கலாமே! பின் என்ன எழவிற்கு ‘பெய்ல் அவுட்” கேட்டார்கள்?

 தேவர் மகனில் நாசர் கேட்ட கேள்வியைத்தான் மீண்டும் கேட்க வேண்டி உள்ளது.

 “அரசாங்கம் என்ன உம்ம மீசை ரோமம்னு நெனச்சீரா? நீ வேணாம்னா ஒதுங்கவும், வேணும்னா ஓடி வரவும்?”

 பிகு : சரி, ஆள்வதுதான் அரசின் வேலை என்று சொல்கிறார்கள்.

 சரி, ஓகே. ஏற்றுக் கொள்கிறோம்.

 அரசு என்ன வேலை எல்லாம் செய்ய வேண்டும்?

 அரசின் பொறுப்பு என்ன?

 இன்னொரு பதிவில் விரிவாக விவாதிப்போம்.