Showing posts with label எழுச்சி. Show all posts
Showing posts with label எழுச்சி. Show all posts

Thursday, January 26, 2017

குடியரசு தின வாழ்த்து சொல்ல மனமில்லை




அகில இந்திய மாநாடு முடிந்து இன்று காலை ஒன்பது மணி அளவில் வீடு வந்து சேர்ந்தேன்.  அலுவலகத்தில் நடைபெறும் சுதந்திர தின, குடியரசு தின கொண்டாட்டங்களில் தவறாது கலந்து கொள்வேன். ஏழு மணிக்கு வர வேண்டிய புகை வண்டி காட்பாடி ரயில் நிலையத்திற்கு எட்டு நாற்பதுக்குத்தான் வந்து சேர்ந்தது. சரியான நேரத்துக்கு வந்திருந்தாலும் இந்த ஆண்டு கொடியேற்று விழாவிற்கு சென்றிருக்க மாட்டேன். 

ஆம் மனது அந்த அளவிற்கு வலிக்கிறது.


ஐந்து நாட்கள் கேரளாவில் இருந்தாலும் மனம் என்னமோ தமிழகத்தில்தான் இருந்தது.

தமிழகம் இதுநாள் வரை காணாத எழுச்சி மிக்க போராட்டம் கடைசியில் அதிகார வர்க்கத்தின் அராஜகத்தால் முடிவுக்கு வந்த சோகத்தை இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை.

"பாசிஸ்ட் நீதிமன்றத்தில் டிமிட்ரோவ்"  என்ற நூலை சில தினங்கள் முன்பாகத்தான் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படித்தேன். தனது கைக்கூலிகள் மூலமாக ஜெர்மன் நாடாளுமன்றத்தை கொளுத்திய ஹிட்லர்  அப்பழியை கம்யூனிஸ்டுகள் மீது அபாண்டமாக சுமத்துவான். அதற்கு சிலர் பொய் சாட்சியும் சொல்வார்கள். ஆனால் இறுதியில் அந்த நாடகம் அம்பலமாகி விடும். 

ஹிட்லரின் வாரிசுகள் இந்திய அரியணையில் அமர்ந்திருப்பதால் என்றைக்கு இந்திய நாடாளுமன்றத்தை எரிப்பார்களோ என்று ஒரு அச்சம் இருந்து கொண்டே இருக்கிறது.

ஆனால் ஹிட்லரின் வழிமுறைகளை தமிழக காவல்துறை கொஞ்சம் கூட பிசகாமல் சிறப்பாகவே கடைபிடித்தது. அமைதியான முறையில் மாநிலமெங்கும் போராட்ட களத்தில் இருந்தவர்களை அராஜகமாக அப்புறப்படுத்தியது மட்டுமல்லாமல் சமூக விரோதிகளும் தேசத் துரோகிகளும் ஊடுறுவிவிட்டனர் என்றும் கதை விட்டது. அந்த கதையை நியாயப்படுத்த அவர்களே வாகனங்களையும் காவல் நிலையத்தையும் எரித்துக் கொண்டார்கள். சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் காவலர்கள் என்பதை பல்வேறு காணொளிக்காட்சிகள் அம்பலப் படுத்தி விட்டன.

சமூக விரோதிகளின் ஊடுறுவல் என்பதை நிலை நாட்ட பொய்சாட்சி சொல்லவும் சிலரை பயன்படுத்திக் கொண்டார்கள். ஹிப் ஹாப் ஆதி, ஆர்.ஜே.பாலாஜி, ராகவா லாரன்ஸ் ஆகியோர் ஆளும் வர்க்க கைபொம்மையாக மாறி தங்களின் மதிப்பை நாசமாக்கிக் கொண்டார்கள்.

காவல்துறையின் வன்முறை ஒரே நாளில் முடிந்து போகவில்லை. போராடிய மாணவர்களுக்கு துணை நின்ற காரணத்துக்காக மீனவக் குப்பங்கள் மோசமாக தாக்கப்பட்டது. அடி, உதை, தீவைப்பு, கைது என்று அனைத்து அராஜகங்களும் அரங்கேறியது. அவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கி நடுத்தெருவில் நிறுத்தி விட்டார்கள்.

காவல்துறையின் வன்முறை வெறியாட்டம் என்பது புதிதல்ல. சமீபத்தில் சென்னையிலும் மதுரையிலும் வாலிபர் சங்கத்தோழர்கள் மீது நடந்த தாக்குதலை யாரும் மறந்திருக்க முடியாது.

காவல்துறை எனும் அம்பை ஏவிய முக்கியக் குற்றவாளி யார் என்பதே இப்போதைய முக்கியமான கேள்வி.

நாற்காலி பிழைக்குமா, கவிழுமா என்ற பதட்டத்திலேயே நாட்களைக் கடத்தும் பன்னீர் செல்வமா?

பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றிய வேகத்தோடு முதல்வர் நாற்காலியில் அமரத் துடிக்கும் சசிகலாவா?

ஜெயலலிதாவின் மர்ம மரணத்தின் மூலமாவது தமிழகத்தில் கால் பதிக்க முடியுமா என்று நாவில் எச்சில் ஒழுக கண்ணில் வெறியோடு காத்திருக்கும் காவிக் கூட்டமா?

இல்லை மூவருமா?

அனைவருக்கும் இதிலே பங்கிருக்கிறது.

காவிக்கூட்டத்திற்கு அதிகமாகவே இருக்கிறது.

நம்ப வைத்து கழுத்தறுத்த பொன்னார், நேரில் போன பன்னீரை மூக்குடைத்து துரத்திய மோடி ஆகியோர் போராட்ட களத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். பீடாவும் காவியும் வேறல்ல என்பதும் அங்கே அம்பலப்படுத்தப்பட்டது. தமிழகத்தின் உரிமை என்பதைத்தாண்டி பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு எதிரான உணர்வும் மேலோங்கியது. விவசாயிகள் தற்கொலை, மணல் கொள்ளை ஆகிய பிரச்சினைகளும் முன்னுக்கு வந்தன.

அது மட்டுமா?

மத நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் போராட்ட களம் திகழ்ந்தது. போராடும் இடத்தில் தொழுகை ஏன் என்ற பொன்னாரின் வயிற்றெரிச்சல் கேள்வி இதனை உணர்த்துகிறது. அவர்களின் செயல் திட்டத்திற்கு எதிரான ஒற்றுமையோடு தமிழகம் இருப்பதை எப்படி அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியும்?

இது தொடர்ந்தால்?

உரிமைகளுக்காக மகத்தான எழுச்சிக்கு வாய்ப்பு உள்ளது என்ற உதாரணம் உருவானால் மோடிக்கு எதிராக நாடெங்கும் கிளர்ச்சி வெடித்தால் என்ன செய்வது என்ற அச்சமும் அவர்களுக்கு உண்டு.

இறுதியில் தமிழகத்தை தலை நிமிர வைத்த போராட்டத்தை ரத்தக்கறை கொண்டு அடக்கியுள்ளது காக்கி-காவிக் கூட்டணி. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தேசத்துரோகிகள், சமூக விரோதிகள் என்று கொச்சைப் படுத்தும் வேலையை காவல்துறை உயரதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

காங்கியனூர் திரௌபதி அம்மன் கோயிலில் தலித் மக்கள் அனுமதி மறுக்கப்பட்ட இழிவை அகற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்தியபோது  அன்றைய சி.பி.எம் சட்டமன்ற உறுப்பினர் தோழர் ஜி.லதா, மார்க்சிஸ்ட் தலைவர்கள் தோழர் கே.பாலகிருஷ்ணன், தோழர் ஜி.ஆனந்தன் ஆகியோர் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய அமல்ராஜ், இப்போது மாணவர் சங்கம், வாலிபர் சங்கம் போன்ற அமைப்புக்கள் தேச விரோத அமைப்புக்கள் என்று சொல்கிறார். தோழர் என்று அழைத்தால் துண்டியுங்கள் என்று உபதேசிக்கிறார்.

உரிமைக்கான போராட்டம் ஒடுக்கப்பட்ட நிலையில்
கொடூரமாக தாக்கப்பட்டவர்கள் சிறையில் வாடுகையில்

குடியரசு தினத்தை கொண்டாடும் மன நிலை எனக்கில்லை.

அனைத்து மக்களும் அனைத்து அடிப்படை உரிமைகளையும் வழ்ங்குவோம் என்று உறுதி அளிக்கிற  இந்திய அரசியல் சாசனம் அமலாகத் தொடங்கிய நாள்தான் குடியரசு தினம்.

அரசியல் சாசன உறுதிமொழிகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ள இன்றைய நிலையில் வெற்று சடங்காக குடியரசு தினத்தை கொண்டாடவோ, வாழ்த்துக்களை பறிமாறிக் கொள்ளவோ, வந்த வாழ்த்துக்களுக்கு பதில் அனுப்பவோ மனம் வரவில்லை. 

ஆனால் அரசியல் சாசனம் பாதுகாக்கப்பட வேண்டும். அனைவருக்குமான அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்ற உணர்வையும் அதற்கான போராட்டத்தில் உறுதியோடு தொடர வேண்டும் என்பதுதான் இன்றைக்கு நம் முன் நிற்கிற முக்கியக் கடமை. 

அரசியல் வேண்டாம் என்ற சிலரின் அரசியலை மாணவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்றும் எது மக்களுக்கான அரசியல் என்பதையும் மக்களுக்காக நிற்பவர்கள் யார் என்பதையும் அவர்கள் அனுபவத்தின் மூலம் உண்ர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். 

அந்த அனுபவம் இந்தியாவை உண்மையான குடியரசாக ஒரு நாள் உருவாக்கும்.