Saturday, November 30, 2013

என்னால் கண்டிப்பாக முடியாது. உங்களால்

கீழே உள்ள படத்தை பாருங்கள். உங்களில் பலரும் கூட
முகநூலில் பார்த்திருக்கக் கூடும். 

இதில் உள்ள அத்தனை உணவுப் பண்டங்களையும் 
கண்டிப்பாக என்னால் சாப்பிட முடியாது. பார்ப்பதே 
மலைப்பாக இருக்கிறது.

உங்களால் முடியுமா?

அப்படி சாப்பிட்டால் நீங்கள் கண்டிப்பாக பரோட்டா சூரி யின்
போட்டியாளராக 50 பரோட்டா சாப்பிடக் கூடியவர்தான்.

 

 

Friday, November 29, 2013

எம்.ஜி.ஆர் "பாரத ரத்னா" வை திருப்பி அனுப்பினாரா? சொர்க்கத்திலிருந்தா?

சச்சினுக்கு பாரத ரத்னா அவசியமில்லை என்று நான் எழுதியிருந்தது
கடந்த வெள்ளியன்று வெளியான குமுதம் ரிப்போர்ட்டர் இதழில்
பிரசுரமாகி இருந்தது. அக்கட்டுரைக்கான வாசகர் கடிதங்கள் இன்று
வெளியான குமுதம் இதழில் பிரசுரமாகியுள்ளது.

மொத்தம் ஏழு கடிதங்கள். அதிலே நான்கு கடிதங்கள் எனது கருத்திற்கு
ஆதரவாகவும் மூன்று கடிதங்கள் மாற்றுக் கருத்துக்களோடும் 
வெளியாகியுள்ளது. 

பொது வெளியில் எழுதும் போது விமர்சனங்கள் கண்டிப்பாக வரும்
என்ற புரிதலோடுதான் எழுதுகிறோம். அது வாசகர்களுக்கான 
கருத்துச் சுதந்திரம். இது வலைப்பக்கத்திற்கும் பொருந்தும். என்ன
வரும் பின்னூட்டங்கள் கொஞ்சம் வன்மத்தோடோ, வக்கிரத்தோடோ
இல்லை அபத்தமாகவோ, இல்லை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே
நோக்கத்தோடு இடப்பட்டால் கொஞ்சம் கடுமையாக எதிர் வினை
ஆற்ற வேண்டியுள்ளது.

சரி இப்போது விஷயத்திற்கு வருகிறேன்.

மாற்றுக் கருத்தோடு வந்த மூன்று கடிதங்களும் எம்.ஜி.ஆர் பற்றி
நான் எழுதியிருந்ததை சரியாக புரிந்து கொள்ளாமல் எழுதப்
பட்டவை. அதற்கும் விளக்கமளிக்க முடியும். ஆனாலும் நான்
எழுதப் போவதில்லை. மிகவும் போரடித்து விட்டது.

ஆனாலும் கூட

சிவகாசியைச் சேர்ந்த  ரெய்கி செ.வேதமூர்த்தி அவர்கள் எழுதிய
கடிதத்தை படித்து விட்டு விழுந்து விழுந்து சிரித்தேன்.

இதோ அந்த கடிதம்.

"" பாரத ரத்னா விருது குறித்து எஸ்.ராமன் அநாவசியமாக 
எம்.ஜி.ஆரையும் அவரது தொண்டர்களையும் வம்புக்கு இழுக்கிறார். இதை அப்போதே கருணாநிதி செய்து எம்.ஜி.ஆர் திருப்பி அனுப்ப,
' இல்லை. உங்களுக்கு தகுதியின் அடிப்படையில்தான் 
தரப்பட்டதாக மத்திய அரசும் விளக்கமும் தந்தது""

நான் எனது கட்டுரையில் எம்.ஜி.ஆருக்கு அவர் இறந்ததற்குப் 
பின்பே பாரத ரத்னா அளிக்கப்பட்டது என்பதை மிகவும் தெளிவாக
எழுதியிருந்தேன். மரணத்திற்குப் பிறகு அளிக்கப்பட்ட 
பாரத ரத்னா விருதை திருமதி ஜானகி ராமச்சந்திரன் பெற்றுக்
கொள்ள, அதை எம்.ஜி.ஆர் எப்படி திருப்பி அனுப்பினார்?
மத்திய அரசு எம்.ஜி.ஆருக்கு எப்படி விளக்கம் அளித்தது?
யார் எங்கே சென்று விளக்கம் அளித்தார்கள்? யார் எம்.ஜி.ஆருக்கு
விளக்கம் அளிக்க சொர்க்கம் சென்றார்கள்? 

இதற்குத்தான் இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசியில்
வடிவேலு மிகவும் தெளிவாக, ஆணித்தரமாக சொன்னார்.

" வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே"
 

 

Thursday, November 28, 2013

தர்மம் வென்றுள்ளதா? படுபாவிகளா



தீர்ப்பு வந்த போதே “இந்த படுபாவிகள் ஓவரா துள்ள ஆரம்பிச்சுடுவாங்களே” என்று நினைத்தேன். அது போலவே இன்று நாளிதழில் முழு பக்க விளம்பரம் கொடுத்து “ தர்மம் வென்றது, புண்ணாக்கு வென்றது” என்றெல்லாம் முழங்க ஆரம்பித்து விட்டார்கள். எல்லா அடிப்பொடி நாளிதழ்களும் புளகாங்கிதப்பட்டு செய்தி வெளியிட்டு தலையங்கம் எழுதி தீர்த்து விட்டார்கள். எண்பத்தி ஓன்று பேரை பல்டியடிக்க வைத்து விட்டு தர்மம் வென்றதாம், வெங்காயமாம். துட்டு வென்றது என்றாவது எழுதித் தொலையுங்களேன்.

Wednesday, November 27, 2013

சங்கராச்சாரியார்களும் சங்கரராமன்களும்



காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு நிச்சயமாக அதிர்ச்சி தரவில்லை. வழக்கு சென்ற பாதையே இலக்கை தீர்மானித்து விட்டது. கைது செய்த ஜெயலலிதாவின் ஆட்சி மாறி கருணாநிதியின் ஆட்சி வந்த போதே வழக்கு முடிந்து விட்டது.

குடியரசுத் தலைவர் தொடங்கி பிரதமர் வரை கை கட்டி வாய் மூடி அடிபணிந்து கிடந்த ஒரு மடம், தலைமை தேர்தல் ஆணையாளரே போக்குவரத்து காவலாளி போல ஊழியம் செய்த இடம். திமிரும் அகந்தையும், செருக்கும், ஆணவமும் ஆணாதிக்கமும் ஜாதியமும், மேலாதிக்கமும்  பிற்போக்குத்தனமும் பின்னிப் பிணைந்து கிடந்த பீடம். இப்படிப்பட்ட இடங்களில் முறைகேடுகள், கையாடல்கள், ஊழல்கள், வக்கிரங்கள், மீறல்கள் தவிர வேறு என்ன நடக்கும்?

இதையெல்லாம் அம்பலப்படுத்த வேண்டும் என்று நினைத்த சங்கரராமன் என்ற மனிதனை ரத்தச் சேற்றில் மிதக்க விட்டார்கள். கடவுளின் தூதராக பார்க்கப் பட்டவர்களை பக்தகோடிகள் எப்போது கடவுளாகவே வழிபடத் தொடங்கினார்கள் அல்லவா, அதனால்தான் அவர்கள் அழிக்கும் கடவுளாக மாறி அரிவாள் மனிதர்களை அனுப்பி வைத்தார்கள்.

அற்புதங்களை ஆண்டவன் மட்டும் நிகழ்த்துவதில்லை, இறைதூதர்கள் மட்டும் நடத்துவதில்லை. எப்போதாவது அரசும் கூட செய்யும் என்பது போல எட்டாவது உலக அதிசயமாய் காவி உடை அணிந்தவர்கள் மீது கூட சட்டத்தின் கரங்கள் நீண்டது. கமண்டலம் பிடித்த கைகளை காவல் விலங்கு அலங்கரித்தது. தண்டம் பிடித்தவர்களை தடி வைத்த காவலர்கள் அழைத்து வந்தார்கள். மாளிகையின் வசதிகளை மடத்தில் அனுபவித்தவர்களுக்கு சிறையின் கொசுக்கடியும் கிடைத்தது. அரசர்கள் போல் பல்லக்கில்  பயணம் செய்தவர்களுக்கு போலீஸ் வேனும் வாகனமானது.

மடத்தின் வளத்தை யார் அபகரிப்பது என்று பெரியவர்களுக்குள் நடந்த மோதல்கள், காணாமல் போன தங்கத் தாமரைகள், இன்னும் பல லீலைகள் என எத்தனையோ தகவல்கள் வெளிவந்தது. காவித்திரைக்கு பின்னே இருந்த களங்கங்கள் அம்பலமானது.

ஆட்சி மாறியதும் காட்சிகள் மாறியது. பெரியாரின் வாரிசு என்று இன்றும் கூட சிலரால் நம்பப்படுபவருக்கு நட்புக் கரம் நீட்டப்பட அவரும் நேசத்தோடு பற்றிக் கொண்டார். அரசாட்சியின் துணை கிடைத்த பின்னே சாட்சிகள் மட்டும் சளைத்தவர்களா என்ன?

மிரட்டப்பட்டார்களோ, இல்லை விலை கொடுத்து வாங்கப் பட்டார்களோ, பல்டி அடிப்பதில் உலக சாதனை அல்லவா உருவானது! அதிகமான பிறழ் சாட்சியங்களை கொண்ட வழக்கு இதுதான் என்று புள்ளி விபரங்கள் சொல்கிறதே! கொலையுண்டவரின் மனைவியும் மகனுமே தடம் பிரண்டு தடுமாறிய பின்பு மற்றவர்களை என்ன சொல்ல?

கருப்பு துணி கட்டப்பட்ட நீதி தேவதையின் கண்களுக்கு எந்த பேரமும் மிரட்டலும் பாதாளம் வரை பாய்ந்த பணமும் தெரியவில்லை. பெருமளவு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறிப் போன மர்மம் என்ன என்று யோசிக்க, இறந்து போனது என்ன கோடிகளில் மிதக்கும் ஏதாவது செல்வந்தனா என்ன? சாதாரண கோயில் ஊழியர்தானே!

முறைகேடுகளைப் பற்றி குரல் கொடுக்க இனி இன்னொரு சங்கர ராமனுக்கு துணிவு வருமா என்ன? அப்படியே வந்தாலும் அவர்களையும் அழித்து விட மாட்டார்களா முற்றும் துறந்த துறவிகள்?

தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?

கலைஞர் செய்ததை ஜெயலலிதா மாற்றுவதும் ஜெயலலிதா செய்வதை கருணாநிதி மாற்றுவதுமே தமிழக கலாச்சாரமாக மாறி விட்டது.

அந்த மரபின்படியாவது கருணாநிதியால் நீர்த்துப் போகச் செய்யப்பட்ட வழக்கிற்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும். நீதிக்கும் கூட....  

Tuesday, November 26, 2013

நடிகர் திலகத்தின் சிலையை அகற்றுவது அவசியமா?




சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள நடிகர் திலகம்
சிவாஜி கணேசன் அவர்களின் சிலையை அகற்றுவது
குறித்த சர்ச்சை மேலோங்கி வருகிறது. கலைஞரால்
நிறுவப்பட்டது என்ற  காரணத்திற்காக அதனை அகற்ற
அரசு முயற்சித்தால் அது வன்மையான கண்டனத்திற்கு
உரியது.

ஆனால் நான் வேறொரு கோணத்திலும் யோசிக்கிறேன்.

மூன்று மாதங்களுக்கு முந்தைய ஒரு சென்னைப் பயணத்தின்
போது கடற்கரைச் சாலையின் வழியே வேனில் செல்லும்
போது ஜன்னலோரம் அமர்ந்திருந்த நான் நடிகர் திலகத்தின்
சிலையை ஆர்வத்தில் எட்டிப் பார்த்தேன். பார்த்ததும்
நொந்து போனேன். ஏனென்றால் அவர் தலையில் ஒரு
காகம் அமர்ந்திருந்தது.

இப்படிப்பட்ட நிலைமை அவசியமா என்று அப்போதே
தோன்றியது.

சிவாஜி கணேசன் சிலை என்று மட்டுமல்ல, பெரும்பாலும்
சாலையில் வைக்கப்பட்டுள்ள அனைத்து சிலைகளின்
கதியும் இதுதான்.

கழுதைக்கு கற்பூர வாசனையும் தெரியாது.
காக்காய்க்கும் அது தலைவர் சிலை என்று புரியாது.

வேறு மாற்று ஏற்பாடு ஏதாவது யோசிக்கலாமே,
எல்லா சிலைகளுக்குமே....
 

கொலையும் செய்வாளா அன்னை?


பரபரப்பான ஆருஷி தல்வார் கொலை வழக்கில் அவளது பெற்றோரே குற்றவாளி என்று சி.பி.ஐ சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

17 வயது மாணவியின் சடலம் முதலில் கண்டெடுக்கப் படுகின்றது. காணாமல் போன பணியாள் ஹேம்ராஜ் தான் கொலை செய்திருப்பான் என்று நம்பப்பட்ட சூழலில் ஹேம்ராஜின் சடலமும் இரண்டு நாட்கள் கழித்து கண்டெடுக்கப் படுகிறது. பூட்டி வைத்த வீட்டில் யார் கொலை செய்திருப்பார்கள் என்ற கேள்விகள் எழ ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வாரின் உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டு பிறகு விடுதலை செய்யப்படுகிறார்கள். வழக்கு சி.பி.ஐ வசம் செல்கிறது.

கொலை செய்த காரணத்திற்காகவும் கொலைக் குற்றத்தின் தடயங்களை மறைத்த காரணத்திற்காகவும் ஆருஷியின் பெற்றோர்கள் கைது செய்யப் படுகின்றனர். இப்போது அவர்கள்தான் குற்றவாளிகள் என்று தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. உயர்நீதி மன்றம், உச்ச நீதி மன்றம், உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு என்று இன்னும் நீண்ட நாட்கள் வழக்கு பயணம் செய்யும். ஏனென்றால் அவர்கள் பணம் படைத்தவர்கள். சட்டம் தன் கடமையை சரியாக  செய்யுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

சட்டம் அளிக்கும் தண்டனையை விட அந்தப் பெற்றோருக்கு மனசாட்சி அளிக்கும் தண்டனை இன்னும் கடுமையாக இருக்கும். கொலை செய்த குற்றத்தை விட கொலை செய்யும் சூழலை உருவாக்கியதுதான் அவர்கள் செய்த பெரும் குற்றமாக நான் பார்க்கிறேன். ஒவ்வொரு பெற்றோருக்குமான பாடமாகவும் பார்க்க வேண்டியுள்ளது.

ஒரே மகளை கொலை செய்ய வேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது. தங்கள் மகளை பார்க்கக் கூடாத கோலத்தில் பார்த்ததுதான் காரணம் என்று சி.பி.ஐ சொன்னதை நீதி மன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. பணத்தின் பின்னால் அலையும் வேளையில் பிள்ளைகள் மீதான கவனத்தை இழந்து விடுகின்றார்கள். அவர்கள் தவறான பாதைக்கு செல்கிறார்களா என்பதை பார்க்கக் கூட அவகாசமில்லாமல் பண வேட்டை முக்கியமாக போய் விட்டது.

உலகமயம் இன்று கொண்டு வந்துள்ள பல நச்சுக்களில் கலாச்சார சீர்கேடு என்பது முதன்மையானது. பார்ட்டி கலாச்சாரம், பப்களில் நடனம், விடிய விடிய ஊர் சுற்றுவது என வாலிபப் பருவ மகிழ்ச்சிக்கு பல புதிய வடிகால்கள் வந்து விட்டன. வெளியே செல்லாமலேயே வீட்டிலேயே தடுமாற இணைய தளம் எண்ணற்ற கதவுகளை திறந்து வைத்து வருகிறது. சலனத்திற்கு வாய்ப்பளிக்கிறது. தனிமையின் கொடுமை தடம் புரள அழைக்கிறது. பணத்திற்காக பாசத்தை பின்னுக்கு தள்ளுகையில் பரிதாபத்திற்குரிய குழந்தைகள் வழி மாறி போகின்றார்கள். போக வைப்பதும் இவர்கள்தான்.

கவனிப்பை, கண்காணிப்பை உரிய நேரத்தில் கைகழுவிவிட்டு  பாசத்திற்கு ஏங்கிய பிள்ளை படி தாண்டி சென்ற பின்னர் கத்தியை தூக்கி எஞ்சிய காலமெல்லாம் கண்ணீரில் மிதப்பதில் என்ன லாபம்?

Monday, November 25, 2013

சிதம்பரம் அண்ணாச்சி, மக்களுக்கு உரிமை உண்டு, சரி உங்களுக்கு பொறுப்பு கிடையாதா?




இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதன வரம்பை 49 % ஆக உயர்த்த வழி வகுக்கிற, பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்குகளை விற்க வழி ஏற்படுத்தித் தருகிற இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற ப.சி அண்ணாச்சி துடிக்கிறார்.

இதனை எங்களது தொடர்ந்த போராட்டங்கள் மூலமாக ஒன்பது வருடங்களாக தடுத்து வருகிறோம். இப்போதும் பல இயக்கங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் மீண்டும் சந்திக்கிறோம். சிலரை சந்திக்க முடிகிறது. சிலரை சந்திக்க முடிவதில்லை.

சிவகங்கை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை நேற்று எங்களது மதுரைக் கோட்டத் தோழர்கள் சந்தித்து மனு அளித்துள்ளனர். முப்பது தோழர்கள் கொண்ட குழு நேற்று அவரை காரைக்குடியில் சந்தித்துள்ளனர். சிங்கத்தையே அதன் கோட்டையில் சந்திக்கும் வலு உள்ள எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தைப் பொறுத்தவரை ப.சி சிறு நரிதான். பன்னாட்டு கம்பெனிகளுக்காக தந்திரங்கள் செய்யும் நரி.

மனுவைப் பெற்றுக் கொண்ட அவர் “ அன்னிய மூலதனத்தை உயர்த்துவது அரசின் கொள்கை. அதற்கு எதிராக போராட மக்களுக்கு உரிமை உண்டு “ என்று சொல்லி முடித்து விட்டார்.

மக்களுக்கு உரிமை உண்டு என்பது சரிதான். ஆனால் மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப கொள்கைகளை வகுக்க வேண்டிய, அவர்களின் நலனை பாதுகாக்க வேண்டிய  பொறுப்பு அரசுக்கு கிடையாதா? பின் ஜனநாயகத்தின் அர்த்தம் என்ன?

சொல்லுங்கண்ணே சொல்லுங்க

Sunday, November 24, 2013

சிதம்பரம் அண்ணாச்சி, உங்களுக்கு 68 வயசே ஆயிடுச்சே

இன்று ஒரு கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 
மத்தியக் குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான
தோழர் டி.கே.ரங்கராஜன் ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.

ஊட்டியில் உள்ள ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் 
தொழிற்சாலையை மறுசீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்
என்று வலியுறுத்தி அவர் ப.சிதம்பரத்திடம் மனு அளித்த போது
சிதம்பரம் அண்ணாச்சி அக்கோரிக்கையை மறுத்துள்ளார்.

அங்கே உள்ள தொழிலாளர்களின் சராசரி வயது  50. அவர்களால்
அந்த நிறுவனத்தை தூக்கி நிறுத்த முடியாது என்பது போலவும்
சொல்லியிருக்கிறார்.

ப.சி அண்ணாச்சி அவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி. 

சராசரி வயது 50 உள்ள தொழிலாளர்களால் நலிவுற்ற ஒரு
ஆலையை சீரமைக்க முடியாது என்றால் அதை விட
கூடுதல் சராசரி வயதுள்ள உங்கள் அமைச்சரவையால்
நலிவுற்றுள்ள நாட்டை எப்படி தூக்கி நிறுத்த முடியும்?

ஏனென்றால் உங்கள் வயது 68, பிரதமர்வயது 81
முக்கிய அமைச்சர்கள் சரத் பவார் 73, ஏ.கே.அந்தோணி 73
மல்லிகார்ஜுன் கார்கே 71, சுஷில் குமார் ஷிண்டே 72
சல்மான் குர்ஷித் 60.

பிரதமர், நிதி, உள்துறை, விவசாய, பாதுகாப்பு, வெளியுறவு,
ரயில்வே ஆகிய  முக்கியமான பொறுப்புக்களை
வகிக்கும் உங்களின்  சராசரி வயதே 71. 

அப்படி இருக்கையில் 50 வயது தொழிலாளர்களைப் பற்றி
அவநம்பிக்கையாக பேசலாமா சார்?

எனைக் காணாமல் ஏமாந்த.......

ஜன்னலோரத்தில் மோதிய காற்று
ஜாடையாய் சொல்லியது,
ஊர் வந்து இறங்கியதும்
ஈரத்தில் நனைந்த சாலை
ஆமாமென்று ஆமோதித்தது.
இரண்டு நாளாய் வந்திருந்தும்
எனைக் காணாமல்
ஏமாந்து போயிருக்குமோ
எங்களூருக்கு வந்த மழை?

Saturday, November 23, 2013

அமெரிக்காவை இப்படித்தான் தடுமாற வைத்தார்கள்

உலகின்  மிகப்பெரிய சக்தியாக அமெரிக்கா  தன்னை கருதிக் கொண்டாலும்   அது மிகப் பெரிய அடி  வாங்கியது வியத்நாமில் .
செஞ்சேனையை அதனால் சமாளிக்க முடியவில்லை. வியட்நாமில் இருந்து தொடர்ந்து வந்த சவப்பெட்டிகள் அமெரிக்காவில் 
கொந்தளிப்பை உருவாக்கியது.

கொரில்லா தாக்குதலில் அமெரிக்க   படையை வியட்நாமிய வீரர்கள் எப்படி சமாளித்தார்கள், அவர்கள் கண்ணில் மண்ணை தூவினார்கள் என்பதற்கு கீழே உள்ள படங்களே சாட்சி.

சமீபத்தில் வியட்நாம் சென்ற இந்திய வங்கி  ஊழியர் சம்மேளனத்தின் தமிழ் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் சி.பி.கிருஷ்ணன் அங்கே எடுத்த புகைப்படங்களை முக நூலில் பகிர்ந்து கொண்டிருந்தார்.

வியட்நாமியர் பயன்படுத்திய பதுங்கு குழிகளை பாருங்கள்.

அது என்னை பரவசப்படுத்தியது.  







Friday, November 22, 2013

மோடியின் கைகள் மட்டுமென்ன சந்தனத்திலா தோய்க்கப்பட்டிருக்கிறது?

மோடி காங்கிரஸ் மீது வைக்கப்பட்ட விமர்சனம் குறித்து 
தேர்தல் ஆணையம் விசாரித்து அவருக்கு அறிவுரை
சொல்லியுள்ளது.

மோடி பயன்படுத்திய வார்த்தையான "கூனி பஞ்சா" என்ற
வார்த்தையைத் தான் ஹிந்து நாளிதழ் போட்டிருந்ததே
தவிர அதன் அர்த்தத்தை போடவில்லை.

இன்றுதான் ஹிந்தி தெரிந்த ஒரு தோழரிடம் அர்த்தம்
கேட்டேன்.

கூனி பஞ்சா என்றால் ரத்தம் தோய்ந்த கை என்று பொருளாம்.

காங்கிரசின் கை ரத்தம், ஊழல் எல்லாம் தோய்த்தெடுத்ததுதான்.

ஆனால் இவர் கை.

ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களின் ரத்தத்தில் 
தோய்த்தெடுக்கப்படாமல் சந்தனத்திலா மோடியின்
கை தோய்த்தெடுக்கப் பட்டுள்ளது?

கொஞ்சம் கூட கூச்சமே இல்லாத மனிதன் மோடி

சாக்கடையில் சறுக்கி விழுந்த தருண் தேஜ்பால்

" ஊருக்கெல்லாம் பலன் சொல்லும் பல்லி தான் விழுமாம்
கழுநீர்ப் பானையில் " என்பது போல நாட்டில் உள்ள ஊழல்
பேர்வழிகளை அம்பலப் படுத்தி வந்த டெஹல்கா இதழின்
ஆசிரியர் தருண் தேஜ்பால் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி
அசிங்கப் பட்டு நிற்கிறார்.

தவம் செய்வதோ, பதவி விலகுவதோ போதுமானதல்ல.

சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப் படுவது
மட்டுமே சரியாக இருக்கும்.

பொது வாழ்வில் உள்ளவர்கள் கறை படியாமல் இருக்க வேண்டிய
அவசியத்தையும், மற்றவர்களுக்கு போதிக்கும் உபதேசங்களை
தாங்களும் பின்பற்ற வேண்டும் என்பதையும் இச்சம்பவம்
உணர்த்துகிறது.

Thursday, November 21, 2013

மோடி சொதப்பல் அலுத்துப் போச்சுப்பா

மகாத்மா காந்தியின் முழுப்பெயர் மோகன்லால் கரம்சந்த் காந்தி
என்று நரேந்திர மோடி பேசியதை அனைவரும் கிழித்து  தோரணம்
தொங்க விட்டு விட்டார்கள். 

நான் எதுவும் எழுதப் போவதில்லை.

எனக்கு பழகிப் போச்சு, அலுத்துப் போச்சு.

மோடி சரியாக பேசினால்தான் இனிமேல் செய்தி.
அப்ப எழுதலாம் அந்த மனுஷன் பத்தி.

சின்ன கவுண்டர் போலவே நிஜத்திலும்

திரைப்படக் காட்சியை பார்த்து சமூகத்தில் மோசமான நிகழ்வுகள்
நடக்கிறதா இல்லை சமூக நிகழ்வுகள் திரைப்படக் காட்சிகளாக
மாறுகிறதா என்ற விவாதம் தொடர்ந்து நடைபெறுகிறது.

சின்னக் கவுண்டர் திரைப்படத்தில் ஒரு முக்கியமான காட்சியாக
குளத்தில் விஷம் கலந்து மீன்கள்  இறந்து போவது  இருக்கும்.

அது வெறும் திரைப்பட காட்சியாக மட்டும் இப்போது இல்லை.

வேலூரை அடுத்த அலமேலுமங்காபுரத்தில் ஒரு நிலப் பிரச்சினை.
அதனால்  பிரச்சினைக்குரிய நிலத்தின் மீது உரிமை கொண்டாடிய
நபர் அங்கே இருந்த மீன் வளர்ப்புக் குளத்தில் விஷம் கலந்து விட
அந்த குளத்திலிருந்த அத்தனை மீன் களும் இறந்து போய் விட்டன.

நான்கு டன் அளவிற்கு மீன்கள்  இறந்து போயுள்ளது. எந்த அளவு
வன்மமும் வக்கிரமும் மனதில் இருந்திருந்தால் இப்படி ஒரு
கொடூரத்தை அந்த மனிதன் செய்திருப்பான்!

இப்போது கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறான்.

Wednesday, November 20, 2013

கட்டப் பஞ்சாயத்து நடத்து, கலவரத்தை தூண்டு, கௌரவிக்கப் படுவாய்!





நாற்பது உயிர்களை பலி கொண்ட முசாபர்நகர் கலவரம் இன்னும் நினைவில் உள்ளதல்லவா?

ஒரு சிறிய பிரச்சினை ஊதி ஊதி பெரிதாக்கப்பட்டு மிகப் பெரிய கலவரமாக வெடித்தது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் நாசமாகின. சொந்த மாவட்டத்திலேயே ஆயிரக் கணக்கானவர்கள் அகதிகளாக முகாம்களிலே அடைபட்டு இருக்கிறார்கள்.

பாகிஸ்தானின் ஆப்கான் எல்லை பகுதியிலே ஒரு பாகிஸ்தான் இளைஞனை தாலிபன்கள்  அடித்துத் தாக்கிய காணொளிக் காட்சியை யுடியூபிலிருந்து எடுத்து அதை இஸ்லாமியர்கள் இந்து வாலிபன் ஒருவனை தாக்குவதாக சித்தரித்து வி.சி.டி யாக வெறுப்பை பரப்பியவர் சங்கீத் சோம் என்ற பாஜக எம்.எல்.ஏ. அவருக்கு சுரேஷ் ராணா என்ற இன்னொரு எம்.எல்.ஏ வும் உடந்தை. இந்த வி.சி.டி கள்தான் முசாபர்நகர் கலவரம் தீவிரமாகக் காரணம்.

இதைத் தவிர காப் பஞ்சாயத்துக்கள் என்ற பெயரில் இயங்கும் ஜாதிய கட்டப் பஞ்சாயத்துக்களின் சங்கமமாக மகா பஞ்சாயத்து நடத்தி கலவரத்தை வேகப்படுத்திய குற்றவாளிகளும் இவர்கள் இருவர்தான்.

இந்த இருவரையும் பாஜக கௌரவப் படுத்தப் போகிறதாம். ஆக்ராவில் நடைபெற உள்ள பாரதீய ஜனதா கட்சியின் பேரணி, பொதுக்கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இவர்களை பொன்னாடை போர்த்தி மலர் மாலை சூட்டி மகுடம் வைத்து கௌரவித்து அழகு பார்க்கப் போகிறாராம்.

இதன் மூலம் பாஜக தனது தொண்டர்களுக்கு என்ன செய்தி சொல்கிறது?

கலவரம் செய், ரத்த ஆற்றில் எதிரிகளை மிதக்க விடு, அப்பாவிகளை அகதியாக்கு. உன்னை நாங்கள் கௌரவிப்போம் என்பதுதான் அந்த செய்தி.

உருப்படுமா தேசம்?