Tuesday, June 30, 2020

யார் நம்பிக்கை . . .


அவரின் நினைவாக



கடந்த ஆண்டு இதே நாளில் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் துணைத்தலைவரும் பொருளாதார விற்பன்னருமான தோழர் ஈ.எம்.ஜோசப் அவர்கள் மறைந்தார்.

அவரது நினைவைப் போற்றுகிற வகையில் ஒரு வாட்ஸப் குழுவில் பகிர்ந்து கொள்ளப்பட்ட அவரது கட்டுரையை அவரது நினைவாக பகிர்ந்து கொள்கிறேன்.

செவ்வணக்கம்  தோழர் ஈ.எம்.ஜோசப்


*நாளொரு கேள்வி: 30.06.2020*
**********************************

இன்று தோழர் *இ.எம்.ஜோசப்* முதல் ஆண்டு நினைவு நாள். நம்மோடு அவர் அன்று பகிர்ந்தவை இன்றும் பொருத்தமானதாக...
________________________________

*இடதுசாரி மாற்றே இருளை போக்கும்*
************************************

*கேள்வி:* 

உலகம் முழுக்க மக்களின் அவலங்களை, குமுறல்களை வலதுசாரிகள் பயன்படுத்திக் கொள்கிறார்களே! உழைப்பாளி மக்களை அவர்களால் திசை திருப்ப முடிவதை எவ்வாறு எதிர்கொள்வது?

*இ.எம்.ஜோசப்:*

நெருக்கடியும் வேலையின்மையும் நிறைந்த சூழலில்தான் உலகம் முழுவதும் வலதுசாரித் திருப்பம் நடைபெற்று வருகிறது.

*மூன்று தரப்பாரின்* அணுகுமுறைகள் இதற்கு பங்களிக்கின்றன. ஒன்று முதலாளித்துவ தாராளமய வாதிகள். இரண்டாவது வலதுசாரிகள். மூன்றாவது இடதுசாரிகள். 

*முதலாளித்துவ தாராளவாதிகள்,* இந்த நெருக்கடி, அது உருவாக்கியிருக்கும் வேலையின்மை இரண்டும் இருப்பதாகவே ஏற்றுக் கொள்வதில்லை.

*வலதுசாரிகள்,* வேலையின்மை ஏற்படுத்தி இருக்கும் இன்னல்களையாவது குறைந்த பட்சம் ஏற்றுக் கொள்பவர்களாக  இருக்கின்றனர். ஆனால், அவர்கள் அந்தக் கேடுகளுக்கு சமூக பொருளாதார அமைப்புதான் காரணம் என்பதை ஏற்பதில்லை. குடியேறிய வெளி நாட்டினர்தான் காரணம் என்று சொல்லி குடியேற்றத்தினைத் தடுக்க வேண்டும் என குரல் கொடுக்கின்றனர்.   ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் மக்கள் எந்த நாட்டிற்கும் போய் வர முடியும் என்ற நிலையில், சிலர் ஐரோப்பிய ஒன்றியத்தினையே எதிர்க்கின்றனர்.

*இடதுசாரிகள்,* மக்கள் முன்பு மாற்றுத்திட்டத்தை வைப்பதில்  இடைவெளிகள் உள்ளன. 

இச் சூழலை வலதுசாரிகள் பயன்படுத்துகிறார்கள். வெளி நாட்டவர்களை எதிரிகளாக அவர்கள் முன்னிறுத்துகிறார்கள்.  உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள வலதுசாரிகளின் வளர்ச்சி இந்த அடிப்படையிலானதே ஆகும். நவீன தாராளமய தாக்குதலோடு, இவர்கள் உழைப்பாளி மக்கள் மத்தியில் உருவாக்குகிற பேதங்களும் கூடுதல் சவால்களாக நம் முன் நிற்கின்றன.

வலதுசாரிகள் நெருக்கடிக்கு தீர்வு தர இயலுமென்ற *பிரமையை உருவாக்குவதில் வெற்றி பெறுகிறார்கள்.*  அமெரிக்காவில் வேலையின்மை குறைந்து விட்டது என்று முதலாளித்துவ ஆதரவு இதழ்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதினார்கள். எப்படி? புள்ளி விவரங்களை மட்டும் பார்த்தால் உண்மை போல தோன்றும். 

ஆனால் உண்மையை ஊடுருவி பார்க்க *மூன்று பதங்களைப்* புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று உழைப்பாளர் படை, இரண்டு வேலை பங்கேற்பு. மூன்று வேலையின்மை விகிதம். 

ஒரு நாட்டில், வேலையில் இருப்பவர்கள், உழைக்கும் வயதிலுள்ள வேலை தேடுவோர்  என அனைவரும் சேர்ந்ததே  *உழைப்பாளர் படை* (Work Force or Labour Force) எனப்படும். 

உழைக்கும் வயதில் உள்ள அனைவரையும் உள்ளடக்கிய இந்த ஒட்டுமொத்த  உழைப்பாளர் படையில்  இருப்பவரின் மொத்த எண்ணிக்கையே *வேலைப் பங்கேற்பு* (Work Participation Rate or Labour Force Participation Rate) விகிதம் எனப்படும்.

மீதியுள்ளோர் எண்ணிக்கை *வேலையின்மை விகிதம்* (Unemployment Rate) கீழ் வரும்.

பொருளாதார மந்த காலத்தில், வேலையின்மை விகிதம் சாதாரணமாக அதிகரிக்கும். அதே வேளையில், வேலைதேடும் பலர் விரக்தியின் விளைவாக வேலை தேடும் முயற்சியிலிருந்து வெளியேறி விடுவார்கள். அமெரிக்காவில் அதுதான் நடக்கிறது. அப்படி அவர்கள் வெளியேறி
விடுவதால், வேலையற்றோர் என்ற அரசின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களுக்குள் அவர்கள் வர மாட்டார்கள். இதன்காரணமாக, ஒரு புறத்தில் வேலைப் பங்கேற்பு விகிதம் குறைந்தாலும், மறுபுறத்தில் வேலையின்மையும் குறைந்தது போன்றதொரு *தோற்றப்பிழை* அமெரிக்கா பற்றி உலகப் பார்வைக்கு உருவாக்கப்பட்டது.  

இது ஓர் உதாரணம். ஆகவே வலதுசாரிகள் எப்போதுமே நெருக்கடிக்கு தீர்வு தர இயலாது. 

*பற்றி எரியும் மக்கள் பிரச்சனைகளுக்கு  இடதுசாரிகள் மட்டுமே நவீன தாராளவாத முதலாளித்துவத்தினைக் கடந்து சென்று தீர்வு காண முடியும். அதுவே நெருக்கடியிலிருந்து மீளவும் வழி வகுக்கும். அந்தப் பாதை இறுதியில் முதலாளித்துவத்தையும் கடந்து செல்வதாக இருக்கும்.*

இது இந்தியாவிற்கு மட்டும் அல்ல, உலகின் அனைத்து நாடுகளுக்கும் பொருந்துகின்ற ஒன்று. சுருங்கக் கூறின், நாம் வரலாற்று ரீதியான நிகழ்ச்சிகளின் இணைவினைப் பார்க்கிறோம்.  *பொய்யான மற்றும் பிளவுபடுத்தும் உத்திகளின் மூலம் மக்களை வசப்படுத்துவதில் வெற்றி பெறும் வலதுசாரி சக்திகள், ஒரு குறுகிய காலத்திற்கு வலுவாகத் தோன்றக் கூடும். ஆனால், வேலையின்மை மற்றும் பிற அவலங்களிலிருந்து மக்களை அவர்களால் மீட்க முடியாது.* இருக்கும் அமைப்பு நிலைத்தும் நீடித்தும் இருப்பது போல வரலாற்றில் பல தருணங்கள் இருந்திருக்கின்றன. ஆனால், புதிய தருணங்கள் வரும் போது இவை அனைத்தும் பழைய நிலையில் நீடிக்க முடியாது. வலதுசாரிகள் இந்தியாவிலும், வேறு நாடுகளிலும் தேர்தலில் வெற்றி பெற்று நிற்கின்றனர். ஆனால், *தேர்தல் வெற்றிகள் அடிப்படை உண்மைகளை மாற்றி அமைத்து விட முடியாது.* அவர்களால் தீர்வுகளையும் தந்து விட இயலாது.

ஒரு ஜப்பானிய ஹைக்கூ கவிதை :  *"Fear knocked the door; Confidence opened the door. There was none outside"* (பயம் கதவைத் தட்டியது; நம்பிக்கை கதவைத் திறந்தது. வெளியில் ஆளைக் காணோம்".) 

ஆம்! நம்பிக்கைதான் வாழ்க்கை. *Where there is life, there is hope.*

அந்த நம்பிக்கையே இடதுசாரி மாற்று


*தோழர் .எம்.ஜோசப் அவர் மறைவிற்கு சற்று முன் எழுதிய கட்டுரையின் & முக நூல் பதிவின் வரிகள் இவை. நம்பிக்கையை துளிர்க்கச் செய்கிற, இருளை நீக்கி வெளிச்சம் பாய்ச்சுகிற வார்த்தைகள். ஜூலை 3 -தொழிலாளர் கூட்டு இயக்கம், இந்த திசை வழி நோக்கிய பயணம்*

- செவ்வானம்-


பீட்டா ராதா - எச். ராசா ஏன் மோதல்?







கேரள யானைமரணம் தொடர்பாக எச்.ராசா போட்ட பதிவை இப்போதுதான் பார்த்தேன்.






மனிதர்கள் சாவதை ரசிக்கும் குரூர சிந்தனை உள்ளவர்கள், மிருகங்கள் இறந்து போனால் மட்டுமே பொங்கி எழுவார்கள். இந்த பதிவில் வழக்கம் போல இப்பிரச்சினைக்கு மதச்சாயம் பூசியுள்ள ஹெச்.ராசா, பாலக்காடு  மாவட்ட சம்பவத்தை மல்லப்புரம் மாவட்டம் என்று இடம் மாற்றி இஸ்லாமியர்களை வம்புக்கு இழுத்துள்ளது மட்டுமல்ல, ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர்கள் என்று பீட்டாவுடன் சேர்த்து கிறிஸ்துவர்களையும் சாடுகிறார்.

இப்படி எல்லாம் விஷத்தை கக்கவில்லை என்றால் அது எச்.ராசா இல்லை என்பது வேறு விஷயம்.

யானை விஷயத்தில் பொங்கவில்லை என்று பீட்டாவை ஏன் சாடுகிறார் என்பது தெரியவில்லை.

ஏனென்றால் இந்தியாவைப் பொறுத்தவரை பீட்டாவின் பெயரில் ராஜாங்கம் நடத்துவது ராதா ராஜன் அம்மையார்.

அந்த அம்மையார், ராசாவுக்கு நிகராக சிறுபான்மை மக்கள் மீது நச்சு கக்கும் அக்மார்க் சங்கி.

ஒரே அழுக்கு குட்டையில் ஊறிய வெட்டி மட்டைகள்தான் இருவரும்.

அப்படி இருக்கையில்  ராதா ராஜன் அம்மையாருக்கு எதிராக எச்.ராசா பொங்குகிறார் என்றால்  ஏதோ “கோட்டைக்குள் குத்து வெட்டு” என்றுதான் தெரிகிறது.

என்ன கூட்டுக் களவாணிகளுக்குள் எப்போதுமே பங்கு பிரிப்பதில்தானே சண்டை வரும்!

பிகு: எழுதி ரொம்ப நாளா ட்ராப்டிலேயே இருந்தது. எழுதியது விரயம் ஆக வேண்டாம் என்று பகிர்ந்து கொள்கிறேன்.



அன்னிக்கு எச்.ராசாவை உள்ளே போட்டிருந்தா?



கோவில்பட்டி நீதிமன்றத்தில் சாத்தான் குளம் லாக்கப் கொலை வழக்கு விசாரணையின் போது சாத்தான் குளம் போலீஸ் செய்த அத்து மீறல் தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையின் பதிவு இது.


அன்னிக்கு எச்.ராசா, ஹைகோர்ட்டை அசிங்கப்படுத்திய போது அந்தாளை உள்ளே தூக்கிப் போட்டிருந்தா, இப்படி கான்ஸ்டபிள் எல்லாம் மாஜிஸ்டிரேட்டைப் பார்த்து அசிங்கமாக பேச முடியுமா?

எல்லாம் உங்க தப்புதான் யுவர் ஆனர்


Monday, June 29, 2020

5 போலீஸ் படம் எடுத்தவரையே . . .



 சாத்தான் குளம் போலீஸ் செய்த சாதனை என்னவென்றால், சாமி, சாமி 2, சிங்கம். சிங்கம் 2, சிங்கம் 3 என்று காவல்துறையை போற்றி படங்கள் எடுத்த இயக்குனர் ஹரியையே



இப்படி புலம்ப வைத்ததுதான்.

ஆனாலும் அவருக்கு ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்.

காவல்துறையின் திமிரை வளர்த்து விட்டதில் உங்கள் திரைப்படங்களுக்கும் குறிப்பாக “நான் போலீஸ் இல்லை, பொறுக்கி” “நான் ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்” போன்ற வசனங்களுக்கும் முக்கியமான பங்கு உண்டு.

தயவு செய்து இனியாவது அந்த ஓவர் பில்ட் அப் காட்சிகளையெல்லாம் தவிர்த்து விடுங்கள்.

இவரெல்லாம் நமக்கு அமைச்சர்!



லாக்கப் கொலை என்பதற்கு புதிய வியாக்யானம் அளித்துள்ள இவரெல்லாம் நம் மாநிலத்தின் அமைச்சர் என்பதற்காக நாமெல்லாம் மிகவும் பெருமைப்பட வேண்டும்.



இனிமே இவர் கடம்பூரில் இருந்தால்தான் கடம்பூர் ராஜூ.

வேறு ஊருக்குப் போனால் வெறும் ராஜூ.



எவ்வளவு தடவைடா?

பாவம் எஸ்.ஜானகி அவர்கள்!



அவர் பாட்டிற்கு பாடிக் கொண்டிருந்தார். 

முதுமை காரணமாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். 

எவ்வளவு முறை அவருக்கு முடிவுரை எழுதி வதந்தி பரப்புவீர்கள்?

இது போன்று வதந்தியைப் பரப்பியவர்கள் அந்த நிமிடத்தில் அல்ப சந்தோஷம் அடையலாம். கடைசியில் அவர்களே அடையாளம் இல்லாமல் அழிந்து போவார்கள்.

Sunday, June 28, 2020

மீண்டும் "அவல் புட்டு"



வலைப்பக்கத்தில் நான் பகிர்ந்து கொண்ட முதல் சமையல் குறிப்பு "அவல் புட்டு"

மனைவியின் விருப்பமாக நேற்று மீண்டும் செய்ததால் மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் அவலை நன்கு வறுத்துக் கொள்ளவும்.


பிறகு அதனை மிக்ஸியில் பொடித்து சிட்டிகை அளவு கேசரி பொடி கலந்து கொள்ளவும்.


கொதிக்க, கொதிக்க சுடு நீரை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொண்டு  அந்த மாவு பூ போல வரும் வரை செய்யவும். அது ஒரு அரை மணி நேரம் அப்படியே இருக்கட்டும்.


முந்திரி வறுத்துக் கொள்ளவும்.


தேங்காய் துறுவலையும் நன்கு வறுத்துக் கொள்ளவும்.


வெல்லப்பாகு வைத்து பொங்கி வரும் வேளையில்


தேங்காய், முந்திரி, அவல் மாவு ஆகியவற்றை சேர்த்து கிளறவும். நெய்யும், ஏலக்காய் பொடியும் சேர்த்து இறக்கி வைத்து பரிமாறவும்.


நேற்றும் நன்றாக வந்திருந்ததாக மனைவி சொன்னாலும் வெல்லம் கொஞ்சம் அதிகம் என்று சுய விமர்சனம் செய்து கொண்டேன்.


காஷ்மீர் பிரச்சினையை புரிந்து கொள்ள . . .


நூல் அறிமுகம்



நூல்                           : தொடரும் காஷ்மீர் யுத்தமும்
                                      இந்துத்துவ அரசியலும்
ஆசிரியர்                : கி.இலக்குவன்
வெளியீடு              : அலைகள் வெளியீட்டகம்,
                                    சென்னை – 600089
விலை                     :  ரூபாய் 140

தஞ்சைக் கோட்டச்சங்கத்தின் முன்னாள் தலைவரும் எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளருமான தோழர் கே.லட்சுமணன் அவர்கள் எழுதிய நூல்.

காஷ்மீர் பிரச்சினையில் நம்பிக்கை கீற்று தெரிகிறது என்ற நம்பிக்கையோடு 2008 ம் ஆண்டு எழுதப்பட்ட இந்த நூல், அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின் புலத்தில் புதிய அத்தியாயத்தோடு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

காஷ்மீர் பிரச்சினை பற்றி முழுமையாக புரிந்து கொள்வதற்கான கையேடு இந்த நூல் என்று சொல்லலாம். வரலாற்றின் இரண்டாயிரம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக பல்வேறு அரசர்களால் படையெடுப்பு நடந்து பல வம்சங்களின் ஆட்சி நடந்த பூமியாகத்தான் காஷ்மீர் இருந்திருக்கிறது. அசோகர் தொடங்கி மங்கோலியர்கள், முகலாயர்கள், சீக்கியர்கள் என பல்வேறு ஆட்சிகள் காஷ்மீரில் நடந்திருக்கிறது.

இந்தியாவுடன் காஷ்மீரினை இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஹரிசிங்கின் டோக்ரா அரசு குடும்பத்தின் வசம் காஷ்மீர் வந்தது வினோதமான கதை. அதை ஒரு அவமானமாக காஷ்மீர் மக்கள் பார்த்தார்கள் என்பது இன்னொரு செய்தி. சீக்கிய அரசன் பிரிட்டாஷாரிடம் தோற்றுப் போக, போரில் ஏற்பட்ட இழப்புக்களுக்கு நஷ்ட ஈடாக 75 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று லாகூர் ஒப்பந்தம் உருவாகிறது. ஜம்முவின் மன்னனாக இருந்த குலாப்சிங் பிரிட்டிஷாருக்கு அந்த பணத்தை கொடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கை விலைக்கு வாங்குகிறார்.

ஹபீஸ் ஜலந்தாரி என்ற கவிஞர்

“காஷ்மீர் எனும் சொர்க்க பூமி, 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது” என வேதனையை வெளிப்படுத்த

இன்னொருவரோ

“நாம் ஒவ்வொருவரும் தலைக்கு மூன்று ரூபாய் என்ற கணக்கில் டோக்ரா மன்னரால் வாங்கப்பட்டோம்’ என்று புலம்பினார்.

நூலில் துவக்கப்பகுதிகள் காஷ்மீர் மக்கள் பட்ட துயரத்தையும் அவர்கள் அடிமைகளாய நடத்தப்பட்ட அவலத்தையும் காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி துவக்கப்பட்டு அது நடத்திய போராட்டங்களையும், இந்திய விடுதலையின் போது அப்போதிருந்த சமஸ்தானங்கள் எவ்வாறு இந்தியாவோடு இணைக்கப்பட்டது என்பதையும் விவரிக்கின்றன.

பெரும்பான்மை மக்கள் இஸ்லாமியர்களாகவும் அரசர் அரிசிங் இந்துவாகவும் உள்ள காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்று பாகிஸ்தான் மட்டுமல்ல பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் விரும்பினார்கள் என்பதை மவுண்ட்பேட்டன், அரிசிங்கோடு நடத்திய உரையாடலை இந்த நூல் முழுமையாக பதிவு செய்துள்ளது. அரசர் இந்தியாவோடும் இணைய விரும்பவில்லை. தனி நாடாகவே இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் பாகிஸ்தானோடு ஒரு பொருளாதார உடன்பாடு ஒன்றை உருவாக்கிக் கொண்டது, அந்த நாட்டிற்கு ஒரு நம்பிக்கை உருவானது. அதே நேரம் தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்தவர்களோ, காஷ்மீர் மக்களுக்கென்று தனித்தன்மை உண்டு, பாகிஸ்தானோடு அது முரண்பட்டது, எனவே பாகிஸ்தானோடு இணைய முடியாது என்ற நிலையை எடுத்தது.

காஷ்மீரை தங்களோடு இணைப்பதற்காக பழங்குடி இன மக்களான பத்தாணியர்களின் படையை பாகிஸ்தான் அனுப்புகிறது. கொள்ளையடிக்கும் வெறியோடு புறப்பட்ட அவர்கள் பல பகுதிகளை கைப்பற்றி ரத்த ஆறை ஓட விடுகிறது.  அரிசிங் அபயம் கேட்க இந்தியா தலையிடுகிறது. மக்களின் விருப்பப்படி இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஷேக் அப்துல்லா

“இந்தியாவுடன் இணைவதற்கு நாங்கள் முடிவு செய்யக் காரணம் எமது லட்சியத் திட்டமும் கொள்கையும் இந்தியா ஏற்றுக் கொண்டுள்ள லட்சியத்திட்டத்திற்கும் கொள்கைகளுக்கும் இசைவானதாக உள்ளன. புதிய காஷ்மீரும் பாகிஸ்தானும் என்றுமே சந்திக்க முடியாது”

இப்படிப் பேசிய ஷேக் அப்துல்லா ஏன் பின்பு தடுமாறினார்? அந்த தடுமாற்றத்தின் பின்னணியில் யார் இருந்தது?

ஐக்கிய நாடுகள் சபையில் என்ன ஆனது?

இந்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்கு கொடுத்த சிறப்பு உரிமைகள் என்ன? அவை கொஞ்சம் கொஞ்சமாக எப்படி நீர்த்துப் போனது?

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த சறுக்கல்களும் சொதப்பல்களும் என்ன?

தீவிரவாத இயக்கங்கள் எப்படி தோன்றின?

இந்தியாவுடன் காஷ்மீர் இணைவதையும் சிறப்பு உரிமைகளையும் எதிர்த்தது யார்?

இப்போதைய மத்தியரசின் முடிவு என்ன விளைவுகளை உண்டாக்கும்?

இப்படிப்பட்ட ஏராளமான கேள்விகளுக்கு விடையளிப்பதாக இந்த நூல் அமைந்துள்ளது என்பதுதான் இந்த நூலின் சிறப்பம்சம். நூலாசிரியரின் உழைப்பையும் சொல்கிறது. ஜம்மு, லடாக், காஷ்மீர் ஆகிய பகுதி மக்களின் வாழ்நிலை பற்றியும் விவரிக்கிறது. ஷேக் அப்துல்லா எடுத்த நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளை பிரஜா பரிஷத் என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எப்படி மதச்சாயம் பூசி பிரச்சினைகளை தூண்டியது என்பதை நம்மால் அறிய முடிகிறது.

ஒரு புறத்தில் ஏகாதிபத்திய சக்திகள்  காட்டிய தனி நாடு ஆசையால் தடுமாறிய ஷேக் அப்துல்லா,  உறுதி மொழிகளை மீறியதால் மக்களின் நம்பிக்கையை இழந்த காங்கிரஸ் அரசு செய்த ஜனநாயக விரோத மற்றும் சிறப்பு உரிமைகளை நீர்த்துப் போகச் செய்த நடவடிக்கைகள், கேலிக் கூத்தான தேர்தல்கள், ஒரு கட்டத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் சமரசம் செய்து கொண்ட அரசியல் சந்தர்ப்பவாதம். துவக்கத்தில் இருந்தே இப்பிரச்சினையை மத வாதக் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்த சங் பரிவார அமைப்புக்கள், தீவிரவாத நடவடிக்கைகளை தூண்டி விட்ட பாகிஸ்தான், இரு நாடுகளுக்கும் நடைபெற்ற போர்கள் என்று ஒரு தகவல் களஞ்சியமாகவும் இந்நூல் திகழ்கிறது.

துவக்கத்திலிருந்தே காஷ்மீருக்கான உரிமைகளை எதிர்த்து வருகிற பாஜக, பெரும்பான்மை உள்ளதை பயன்படுத்தி அதை பறித்து விட்டது என்பதை விவரிக்கிற ஆசிரியர், வேறெந்தெந்த மாநிலங்களில் இது போன்ற சிறப்புச் சட்ட உரிமைகள் உள்ளது என்பதை பட்டியலிட்டு அரசின் போலித்தனத்தை அம்பலப்படுத்துகிறார்.

“காஷ்மீர் மக்களின் இதயங்களை இந்தியாவுடனான இணைப்புக்கு ஆதரவாக வென்றெடுப்பதே இன்றைய முக்கிய தேவையாக உள்ள நிலையில் நரேந்திர மோடி அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், அந்த இடைவெளியை என்றுமே இட்டு நிரப்பப்பட இயலாத ஒன்றாக மாற்றி விட்டது.”

தற்போதைய அரசின் நடவடிக்கைகளை விவரிக்கிற நூலாசிரியர்

“காஷ்மீர் இந்தியாவின் பகுதியாக உள்ள சூழல் தொடருமா என்பதற்கு காலம்தான் விடையளிக்கும்”

என்று நூலை நிறைவு செய்கிறார்.

இந்தியாவின் பிற மாநில  மக்கள் காஷ்மீர் மக்களோடு கரம் கோர்த்து நிற்க வேண்டிய அவசியத்தை இந்த நூலை படித்தால் உணர்ந்து கொள்ள முடியும்.



செத்தாவது படிக்கனுமா மாலன்?




அவர், இவர் என்று மரியாதை கொடுக்கவே மனமில்லை. 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தான போது

 "எத்தனை பதின்ம வயதினர் செத்தார்கள்?' 

என்று கேட்ட யோக்கியவான்

பள்ளிகள் திறப்பது தாமதமாகும் என்று அறிவித்தவுடன் இப்படி ஒரு படத்தை போட்டு நக்கலடிக்கிறார்.



நோய்த்தொற்று பரவல் அதிகமாவது இவர் அறிவுக்கு எட்டவில்லையா? இந்த சூழலில் பள்ளிகளை திறந்து மாணவர்களை காவு கொடுக்க வேண்டும் என்ற வெறி ஏன் இவருக்கு? ஒரு வருடம் கல்வி தள்ளிப் போனால் என்ன குடி முழுகிப் போய்விடும், தனியார் பள்ளிகள் கல்லா கட்ட முடியாது என்பதைத்தவிர? 

முன்பே சொன்னது போல பிராய்லர் பள்ளி முதலாளிகளிடம் வாங்கிய காசுக்கு ஓவராக கூவுகிறார் போல.

இல்லை மாலனுக்கே ஏதாவது பினாமி பெயரில் பள்ளி இருக்கிறதா?

பிகு: 

இவரைப் போல நாம் கீழிறங்க முடியாதல்லவா? அதனால் மரியாதையாகவே எழுதி விட்டேன். அதை மாலனால் தக்க வைத்துக் கொள்ள முடியாது.

Saturday, June 27, 2020

போலீஸ்களின் குடும்பங்கள் கவனத்திற்கு



மேலே உள்ள செய்தி உண்மையா, பொய்யா என்று தெரியாது.

உண்மையாக இருப்பின் 

வணிகர்களின் குமுறல் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

காவல்துறையினர் தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர்தம் குடும்பத்தினர்தான் சொல்ல வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்குத்தான் பாதிப்பு அதிகம்

கொலைகாரர்கள் விடுதலைக்கு இரு அர்த்தம்

உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை வழக்கில் கௌசல்யாவின் பெற்றோர்கள் விடுதலை அடைந்த போது திரு வால்டர் ராபின்சன் என்பவர் வரைந்த ஓவியம். 

முக நூலில் பார்த்தேன்.



கொலை செய்தவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள் என்பது மட்டுமல்ல அர்த்தம்,

மேலும் இது போன்ற கொலைகள் செய்யவும் பலர் ஊக்குவிக்கப்படுவார்கள் என்ற அர்த்தமும்

இணைந்தே இருக்கிறது. 

அற்புதமான ஓவியம் . . . .

செந்தில் காமெடி மாதிரியே . . .




ஆமாம்.

மேலே உள்ள ஜெண்டில்மேன் பட காமெடி போல ஒன்றை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடத்தியுள்ளது.

சீனாவுக்கு பதிலடி கொடுக்க அரசு போதுமான நடவடிக்கைகள் எடுத்ததா என்று ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது.

அவர்கள் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை. அரசுக்கு சாதகமான வாக்குகளை விட எதிரான வாக்குகளே அதிகம்.

அதற்காக அது கவலைப்படவில்லை.

என்ன செய்தது?

கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.



60.2  % பெயில் என்றும் 39.8 % பாஸ் என்றும் முடிவு செய்து அவர்கள் வெளியிட்ட கிராப்பில் 39.8 % ஐ பெரிதாகவும் 60.02 % சிறிதாகவும் போட்டுள்ளார்கள். 

இதுதான் முதலாளித்துவ ஊடக அறம். 

இந்த ஊடகங்கள் உசுப்பேத்துவதை நம்புகிறவர்கள்தான் பாவம் . . .


Friday, June 26, 2020

சிரிச்சு முடியலை . . .



எழுத்தாளரும் வழக்கறிஞருமான தோழர் ஏ.ஏ.கரீம் அவர்களின் முக நூலில் பார்த்தது. பார்த்ததிலிருந்து சிரித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் நிறுத்த முடியவில்லை.




பிகு" இந்த பதிவை எழுதியவர் ஒரு பெண் என்பதால் அந்த விபரங்களை மறைத்து விட்டேன். சங்கிகளின் நாகரீகம் நாம் அறிந்ததுதானே!

நிதியமைச்சருக்கு ஒரு கடிதம்




எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்பதென்று மத்தியரசு பட்ஜெட்டில் அறிவித்தது. அந்த மிக மோசமான முடிவை அமலாக்குவதற்கான பணியை இந்த மோசமான கொரோனா காலத்திலும் கூட துவக்கியுள்ளது. தேசத்தின் மிகக் கேந்திரமான நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவு “தேஷ் பக்த்” சங்கிகளுக்கு தெரியாது போல. அதனால் அது பற்றி அவர்கள் வாய் திறக்கவில்லை.

ஆனால் எல்லோரும் அப்படி இருந்து விட முடியாதல்லவா! எல்.ஐ.சி நிறுவனத்தில் முதல் நிலை அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள், மூன்றாம் பிரிவு, நான்காம் பிரிவு ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று பிரதான சங்கங்கள் நிதியமைச்சர் நிர்மலா அம்மையாருக்கு 20.06.2020 அன்று எழுதிய கடிதத்தின் தமிழாக்கத்தை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

எங்கள் உறுப்பினர்களுக்காக செய்யப்பட்ட தமிழாக்கம்தான். ஆனாலும் தேசத்தை உண்மையாகவே நேசிக்கிற அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஏராளமான விபரங்கள் இக்கடிதத்தில் உள்ளது.

அவசியம் முழுமையாக படித்திடுவீர்.

மத்தியரசு, எல்.ஐ.சி நிறுவனத்தில் தன் வசமுள்ள பங்குகளை விற்பதற்கான நடவடிக்கைகளை துவக்கியுள்ளது என்று  சில முக்கியமான நாளிதழ்களில் இன்று வெளியாகியுள்ள செய்தி எங்களுக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்கு விற்பனைக்கு உரிய ஆலோசனைகள் வழங்குவதற்காக, முன் முதலீட்டு  பரிவர்த்தனை ஆலோசகர்களை ( PRE TRANSACTION ADVISORS) ஐ நியமிப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை பெறுவதற்கான அறிவிப்பை நிதித்துறையின் கீழ் செயல்படும் “முதலீடு மற்றும் பொதுச்சொத்து நிர்வாகத்துறை (DEPARTMENT OF INVESTMENT AND PUBLIC ASSET MANAGEMENT) வெளியிட்டுள்ளதாக அறிகிறோம்.

தங்களின் மகத்தான, அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் மூலமாக எல்.ஐ.சி நிறுவனத்தை ஒரு மாபெரும் நிதி நிறுவனமாக கட்டமைத்த எல்.ஐ.சி நிறுவனத்தின் அனைத்து பிரிவு ஊழியர்களும் நியாயமான, தக்க காரணங்களுக்காக அரசு தன் வசமுள்ள எல்.ஐ.சி பங்குகளை விற்கும் முடிவை கடுமையாக எதிர்க்கிறோம். உங்களுக்கு அனுப்பப்பட்ட எங்களின் முந்தைய கடிதங்களில் எல்.ஐ.சி பங்கு விற்பனைக்காக  நீங்கள் குறிப்பிட்டிருந்த காரணங்கள் சரியில்லை என்பதை சுட்டிக் காட்டியிருந்தோம்.

எந்த வித குறுகிய நோக்கமும் எங்களின் எதிர்ப்பிற்குக் காரணம் அல்ல. எங்கள் வாதங்கள் தேசப் பொருளாதாரத்தின், இந்திய சமூகத்தின் நலன்களை காக்கும் அக்கறையுடனானது. எல்.ஐ,.சி நிறுவனத்தின் மிக முக்கியமான அங்கமாக இருக்கிற எங்களது வாதங்கள் மீது அரசு தீவிர பரிசீலனை செய்யும் என்றும்  எங்கள் கருத்துக்களை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும் நம்பினோம். ஆனால் அப்படியொரு முன்முயற்சி உங்கள் தரப்பிலிருந்து வரவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.

இந்தியாவை தொழில்மயமாக்குவதில் எல்.ஐ.சி ஆற்றிய முக்கியமான பங்களிப்பு பற்றியும் தேச நிர்மாணத்திற்கு ஆற்றி வரும் பணிகள் குறித்தும் நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். எங்களின் மகத்தான நிறுவனத்தின் உன்னதமான செயல்பாடு குறித்த விபரங்களை எடுத்துரைத்து உங்களை தொல்லைப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. எல்.ஐ.சி யின் வளர்ச்சி, அதன் விரிவாக்கம், பாலிசிதாரர்கள் எண்ணிக்கை மற்றும் கேட்புரிமப் பட்டுவாடா ஆகியவற்றில் உலகின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமாக உருவெடுத்தது ஆகியவையெல்லாம் எல்.ஐ.சி தானே உருவாக்கிக் கொண்டிருந்த நிதி ஆதாரங்கள் மூலமாக மட்டுமே என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.  எல்.ஐ.சி துவக்கப்பட்ட போது  1956 ல் முதலீடு செய்த ஐந்து கோடி ரூபாய் மூலதனம் மற்றும் சட்டபூர்வ காரணங்களுக்காக அதை நூறு கோடியாக உயர்த்தியது என்பதற்கு மேலாக எல்.ஐ.சி க்கு அரசு வேறெந்த முதலீடும் செய்யவில்லை. இந்த சொற்ப மூல தன அடித்தளத்தைக் கொண்டுதான் இன்று 32 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ள சொத்துக்களை நிர்வகிக்கும் நிலைக்கு வந்துள்ளது. பாலிசிதாரர்களிடமிருந்து  திரட்டப்பட்ட தொகை கொண்டே இந்த விரிவாக்கம் நடந்துள்ளது. எல்.ஐ.சி ஒரு பரஸ்பர நிதி நிறுவனமாவே செயல்பட்டு வந்திருக்கிறது. அரசு தன் பங்குகளை விற்பது என்று முடிவெடுக்கிற போது இந்த முக்கியமான அம்சத்தை புறக்கணித்து ஒதுக்கியுள்ளது.

ஆயுள் காப்பீட்டு வணிகத்தை தேசியமயமாக்கி, 245 தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளை தன் வசம் கொண்டு வந்ததன் நோக்கம் என்பதே மக்களின் சிறு சேமிப்பை திரட்டி பாலிசிதாரர்கள்  சேமிப்புக்கு முழுமையான உத்தரவாதம் அளித்து அவர்களுக்கு உரிய லாபத்தையும் அளிப்பதும் அதே நேரம் அச்சேமிப்பினை கட்டமைப்புத் தேவைகளுக்கான நீண்ட கால முதலீட்டுக்கான மூலதனமாக மாற்றுவதுதான். வியக்கத்தக்க அளவில் எல்.ஐ.சி இந்த நோக்கங்களை நிறைவேற்றியுள்ளது. எல்.ஐ.சி பங்கு விற்பனை என்பது இறுதியில் தனியார்மயத்துக்கு இட்டுச் சென்று இந்த உயரிய நோக்கங்களை சிதைத்து விடும். “மக்கள் பணம் மக்கள் நலனுக்கே” என்ற கோட்பாடு மங்கிப் போய் பங்குதாரர்களுக்கு அதிக லாபம் என்ற நிலைக்கு சென்று விடும். இந்த நிலை தேசத்தின் பொருளாதாரத்திற்கோ அல்லது நாற்பது கோடி பாலிசிதாரர்களின் நலனுக்கோ உகந்தது அல்ல.

எந்த ஒரு தேசத்தின் பொருளாதாரத்திற்கும் மிக முக்கியமான பங்காற்றுவது உள்நாட்டு சேமிப்புதான் என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு உண்மை. உள் நாட்டு சேமிப்பிற்கு மாற்றாக அன்னிய மூலதனம் எந்நாளும் அமைய முடியாது என்று பல உலகப்புகழ் பெற்ற பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். வளர்ச்சிக்காக மிகப் பெரும் நிதியாதாரம் தேவைப்படும் இச்சூழலில் அரசு உள்நாட்டு சேமிப்பின் மீது, அதிலும் குறிப்பாக வீட்டு சேமிப்பின் மீது அதிக கவனமும் கட்டுப்பாடும் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும்.

ஆத்மநிர்பர் பாரத் என்று இந்தியாவின் சுயசார்புத்தன்மைக்காக பிரதமர் குரல் கொடுத்துள்ளார். முதலீடு செய்வதற்கான ஏராளமான உபரியை ஒவ்வொரு வருடமும் ஈட்டுகிற  நூறு சதவிகிதம் அரசின் கட்டுப்பாட்டில் நீடிப்பதுதான் அந்த சுயசார்புப் பார்வை வெற்றிகரமாக அமலாக உதவிகரமாக இருக்கும்.

எனவே எல்.ஐ.சி நிறுவனப்பங்குகளை விற்பதென்பது இந்தியப் பொருளாதாரத்தையும் சாமானிய, எளிய மக்களையும்  வெகுவாக பாதிக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்த விழைகிறோம். சமூகத்தின் நலிவடைந்த பிரிவினருக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு அளிப்பது என்ற சமுதாய நோக்கத்திற்கு பின்னடைவு நேரிடும். லாபமீட்ட வாய்ப்பில்லா கிராமப்புறப்பகுதிகளில் காப்பீட்டை விரிவு படுத்துவது என்ற இலக்கும் பாதிக்கப்படும். எனவே எல்.ஐ.சி நிறுவனத்தின் பொதுத்துறை தன்மையை சிறிதளவு மாற்றுவது கூட இந்தியப் பொருளாதாரத்தின் நலனுக்கும் இந்திய மக்கட்தொகையில் உள்ள ஏழைகளுக்கும் ஊறு விளைவிக்கும்.

இச்சூழலில் எல்.ஐ.சி பங்கு விற்பனை தொடர்பான ஆலோசனை அளிப்பதற்கு ஆலோசகர்களை நியமிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்து எல்.ஐ.சி பங்கு விற்பனை தொடர்பான முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம். எங்கள் கருத்துக்களை தங்களிடம் நேரில் சொல்வதற்கான வாய்ப்பு அளிக்கப்படுமாயின் மகிழ்ச்சியடைவோம்.

எல்.ஐசி யையும் அதன் வாடிக்கையாளர்களையும் பாதுகாக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறோம்.

நன்றி

இவண் தங்களின் உண்மையான

எஸ்.ராஜ்குமார்                  விவேக் சிங்                     ஸ்ரீகாந்த் மிஷ்ரா
பொதுச்செயலாளர்    செகரட்டரி ஜெனரல்       பொதுச்செயலாளர்

எல்.ஐ.சி முதல் நிலை                தேசிய களப் பணியாளர்    அகில இந்திய
அதிகாரிகள் சங்கங்களின்     கூட்டமைப்பு                   இன்சூரன்ஸ் ஊழியர்
கூட்டமைப்பு                                                                                     சங்கம்