Wednesday, June 17, 2020

திசை திருப்ப தியாகியாக்காதீர் . . .




இந்திய சீன எல்லையிலே பதட்டம் நிலவுகிறது.

இந்திய வீரர்கள் மூவரும் சீன வீரர்கள் ஐவரும் கொல்லப்பட்டனர் என்று முதலில் தகவல்கள் வந்தது.

இப்போது இந்திய வீரர்கள் இருபது பேரும் சீன வீரர்கள் 43 பேரும் கொல்லப்பட்டதாக ஒரு தகவல் கசிகிறது. இது உண்மையாகக் கூட இருக்கலாம்.

இது உண்மையாக இருந்தால் இரு நாடுகளும் இன்னொரு பேரழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதுதான் யதார்த்தம்.

அடுத்த நாட்டு ராணுவம் நம் எல்லையை ஆக்கிரமிக்கிறது என்றால் நாம் கண்டிப்பாக பதிலடி கொடுத்தாக வேண்டும். எல்லையை மீட்க வேண்டும். இதில் சமரசத்திற்கு இடம் கிடையாது.

அதே நேரம் இப்பிரச்சினை நம் மீது திணிக்கப்பட்டதா
அல்லது
நாமாக உருவாக்கிக் கொண்டதா?

என்பதையும் ஆராய்ந்திட வேண்டும்.

இந்த நேரத்தில் இந்த ஆராய்ச்சி தேவையா என்று நீங்கள் கோபமாக கேட்கலாம்.

இந்த கேள்வி ஆட்சிப் பொறுப்பில் மோடி பிரதமராகவும் அமித் ஷா உள்துறை அமைச்சராகவும் பாஜக ஆட்சியிலும் இருப்பதனால் மட்டுமே வருகிறது.

இவர்களின் கடந்த கால லட்சணம் அப்படி

குஜாராத்தில் மோடி இஸ்லாமியர்கள் மீது நடத்திய ரத்த வெறி கொண்ட படுகொலைத் தாண்டவங்களே  அவர் இன்று பிரதமர் பதவியில் இருப்பதற்கான அடித்தளம்.

குஜராத்தில் மோடியின் செல்வாக்கு குறையும் நேரத்தில் எல்லாம் “போலி  எண்கவுண்டர்”  நடத்தி “மோடியின் உயிருக்கு ஆபத்து” என்று பரபரப்பை உருவாக்கி “பேக்கரி டீலிங்” மூலமாக சிறு கீறல் கூட தப்பித்தவர் அமித் ஷா.

“கலவரங்கள் நடந்தால் எங்கள் வெற்றிகள் தொடரும்” என்று வெளிப்படையாகவே தன் தேர்தல் உத்தியை பிரகடனம் செய்ததும் அமித்தே.

உத்திரப் பிரதேச மாநில சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்பாக, தண்டவாளங்கள் பலவீனமாக இருந்து நிகழ்ந்த ஒரு ரயில் விபத்தை “எல்லைக்கு அப்பால் இருக்கிற சக்திகளின் சதியால்” நடந்தது என்று சொல்லி உ.பி தேர்தலில் ஓட்டு வேட்டையாடி மொட்டைச் சாமியாரை முதல்வராக்கியவர் மோடி.

ஜம்மு காஷ்மீர் மாநில உளவுத்துறை “வெடிகுண்டு தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளது” என்று எச்சரிக்கை அளிக்கிறது.  அந்த எச்சரிக்கை அலட்சியப்படுத்தப் படுகிறது.

 மத்திய ரிசர்வ் போலீஸ் தலைமையகமும் வீரர்களை ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமிற்கு மாற்ற விமான சேவைக்கு அனுமதி கேட்கிறது.  அனுமதி மறுக்கப்படுகிறது.

இரண்டு கிலோ மீட்டருக்கு ஒரு செக்போஸ்ட் என்று கடுமையான கண்காணிப்பு இருக்கிற நெடுஞ்சாலையில் 700 கிலோ வெடி பொருட்கள் ஏந்திய வாகனம் எப்படி வந்தது?

புலவாமா தாக்குதல் அதனால்தானே நடந்தது.

தாக்குதல் நடத்திய அமைப்பு முதல் குற்றவாளி என்றால் உளவுத்துறை எச்சரிக்கையை உதாசீனம் செய்து விமான சேவைக்கு அனுமதி மறுத்து சாலை வழியாகவே பயணம் போக வைத்து 58 பேர் மரணத்துக்கு காரணமான மோடி அரசு இரண்டாவது குற்றவாளி கிடையாதா?

துல்லியமான தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு ஐநூறு பேர் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டதற்கு இன்று வரை எந்த ஆதாரமும் அளிக்கப்படவில்லையே!

பாகிஸ்தானுக்கு நாங்கள் விற்ற அனைத்து எஃப் 16 விமானங்களும் பத்திரமாகவே உள்ளது மோடியின் எஜமான் நாடு அமெரிக்கா சொன்னதன் மூலம் இரண்டு போர் விமானங்களை வீழ்த்தியதும் கூட வழக்கமான மோடி ஜூம்லா என்று நிரூபணமாகி விட்டதே!

எது எப்படியானாலும் நான்கரை வருட தோல்விகள், கடைந்தெடுத்த பொய்கள், நிர்வாக சீர்கேடுகள், மாட்டின் பெயரிலான படு கொலைகள், வரலாறு காணாத அளவிற்கு வேலையின்மை அதிகரிப்பு, செல்லா நோட்டு அராஜகம், ஜி.எஸ்.டி குழப்பம் அனைத்தையும் தாண்டி புலவாமாவும் பாலக்கோடும் மீண்டும் மோடியை நாற்காலியில் அமர வைத்து விட்டதே!

ருசி கண்ட திருட்டுப் பூனைக்கு பால் கிடைக்கும் வழி மறக்காதல்லவா!

இதோ பீகார் மாநில தேர்தல் நெருங்கி விட்டது.

கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும் வேளையிலும்  கூட தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி விட்டார் அமித்து.

வாக்கு கேட்க சாதனை என்று சொல்ல ஏதுமில்லை. மாநிலத்தில் உள்ள நிதின் குமார் நிலையும் அதுதான். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் ஆதரித்தது மகா கூட்டணியை. அதை முறித்து பாஜகவோடு ஒட்டிக் கொண்டு வாக்காளர்களுக்கு துரோகம் இழைத்தவர் என்ற களங்கம் வேறு அவரை அச்சுறுத்துகின்றது.

சாதனைகள் இல்லை என்பது மட்டுமல்ல, ஏராளமான பிரச்சினைகளும் இருக்கிறது.

குறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்களில் பீகாரைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.  கால் நடையாக பாதங்கள் கொப்பளிக்க, பசியும் பட்டினியுமாக வீடு திரும்பி வந்தவர்கள்  வாக்குகளை என்ன சொல்லி கேட்பார்கள்.

அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல் என்பது போல
சங்கிகளின் கடைசி புகலிடம் போர் மூலம் தேசிய உணர்வுகளை உசுப்பேத்தி அரசியல் ஆதாயம் தேடுவது.

இவர்கள் நம்ப முடியாதவர்கள்.

ஒரு பேரிடர் காலத்தில் பிஎம் கேர்ஸ் என்று கோடிக்கணக்கில் புதிய கணக்கில் வரவு வைத்து அது பற்றிய தகவல்களை ராணுவ ரகசியம் போல பாதுகாப்பவர்கள், ராணுவ ரகசியத்தில் மட்டும் உண்மையாகவா இருக்கப் போகிறார்கள்!

இத்தனை சம்பவங்கள் நடந்தும் பெரும் புள்ளிகள் எல்லாம் அமைதியாக இருப்பது வேறு சந்தேகத்தை உருவாக்குகிறது.

ஏற்கனவே நீங்கள் ஆட்சிக்கு வருவதற்காக புலவாமாவில் 58 பேரை தியாகியாக மாற்றினீர்கள்.

கொரோனா சொதப்பல் நடவடிக்கைகளிலிருந்து மக்களை திசை திருப்பவும் பீகாரில் வெற்றி பெறவும் மீண்டும் இந்திய வீரர்களை தியாகியாக்காதீர்கள்.

உங்கள் அரசியல் சதுரங்கத்தின் பகடைக்காய்கள் அல்ல இந்திய வீரர்கள்.

1 comment:

  1. Exact assessment. To move on their preplan RSS now needs majority in Rajya sabha. For that they need political gains in the upcoming states election. To win, they will go to any extreme. To be in the power - is the first need to implement their Ideology and also protect their criminal members.

    ReplyDelete