Tuesday, June 9, 2020

ஜெமோ மிரட்டராரு, பயந்து வருது




பாவம் ஜெயமோகன் ரொம்பவே பயந்துட்டார் போல.

எழுத்தாளர் திரு பா.செயபிரகாசம் அவர்களை இவர் மொட்டைக் கடிதம் வாயிலாக அவதூறு செய்ததை கண்டித்து வெளியிடப்பட்ட கண்டன அறிக்கையில் கையெழுத்திட்ட அனைவர் மீதும் வழக்கு தொடுக்கப் போகிறாராம்.

ரொம்பவே மிரண்டு விட்டார் என்பது முன்னுக்குப் பின் முரணாக எழுதுவதிலேயே புரிகிறது.

அவர் அவதூறு என்று எதை சொல்கிறார் தெரியுமா?

நேரடியான கீழ்த்தரமான அவதூறு என்பது அந்தக் கண்டன அறிக்கையில் உள்ள என்னைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் வரிகள்தான். ஒரு கும்பல் கூடி ஓர் எழுத்தாளனைப் பற்றி என்ன வேண்டுமென்றாலும் சொல்லி பத்திரிகைகளுக்கு அனுப்பமுடியும் என்பதுதான் அவதூறு நடவடிக்கை

இவருடைய மொட்டைக் கடிதாசியில் இவர் செய்த அவதூறை கண்டித்ததற்கு மேல், இவரது பொய்களை அம்பலப்படுத்தியதற்கு மேல் இவரைப் பற்றி மோசமான வார்த்தைகளோடு கூட்டு கண்டன அறிக்கையிலோ அல்லது தமுஎகச, கலை இலக்கியப் பெரு மன்றம் ஆகிய அமைப்புக்கள் வெளியிட்ட அறிக்கைகளிலோ ஒரு வார்த்தை கூட இல்லை.

இணையத்தில் திரு.செயப்பிரகாசம் அவர்கள் என் மேல் அவதூறும் வசையும் பொழிந்து எழுதியிருக்கும் பக்கங்களை நகல் எடுத்துவிட்டோம்.

ஜெயமோகனின் செயல் அறமா என்று திரு செயப்பிரகாசம் கேட்கிறார். ஜெமோவுக்கு இதுவே வசையாக தோன்றுகிறது.  இன்னொரு பதிவில் இது பற்றி விரிவாக எழுத வேண்டும்.

என் வழக்கறிஞர் நண்பர்கள் ஈரோட்டில் கூடிப்பேசியதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.திரு.செயப்பிரகாசம் மீது அவதூறு வழக்கு தொடரப்படும். அந்தக் கண்டன அறிக்கையில் கையெழுத்திட்டவர்களில் முக்கியமான அனைவர் மீதும் தனித்தனியாக அவதூறு வழக்குகள் தொடரப்படும்.

ஆமாம். எவ்வளவு பேர் மீது வழக்கு தொடுக்க முடியும்? அதற்கான ஆவணங்களை தயார் செய்ய பத்து வெண்முரசுக்கு மேல் பக்கங்கள் ஆகும். அதற்கான ஸ்டாம்ப் கட்டணம் எவ்வளவு ஆகும் என்பதெல்லாம் தெரியுமா? அதையெல்லாம் அந்த ஈரோடு வழக்கறிஞர்கள் சொல்லி விட்டார்களா? பணம் உங்களுக்கு பிரச்சினை இல்லை. திருட்டுக் கதைக்கு வசனம் எழுதியே கல்லாவை நிரப்பிக் கொண்டிருப்பீர்கள்.

குறிப்பாக அரசுப்பணியில் இருப்பவர்கள் மீது அவதூறுவழக்கும் துறைரீதியான புகார்களும் அளிக்கப்படும். அவர்கள் செயப்பிரகாசம் வழக்கிலும் சாட்சியாக நீதிமன்றத்திற்கு அழைக்கப்படுவார்கள்.

இந்த மிரட்டல்தான் செம காமெடி. முப்பத்தி மூன்றாண்டுகளுக்கு மேல் தொழிற்சங்க இயக்கத்தில் இருப்பவன் என்ற முறையில் சொல்கிறேன். துறைவாரியான நடவடிக்கைகள் எல்லாம் இது போல தனிப்பட்ட பஞ்சாயத்துக்களுக்கெல்லாம் பொருந்தாது. இதெல்லாம் வெட்டி உதார். வீணாய் போன மிரட்டல்.

அவர்களின் மொழியைக் கொண்டே  வழக்கை  நடத்துகிறோம்

ஆமாம். வழக்கென்று வந்தால் உங்களது மொழியும் விசாரணைக்கு வராதா? உங்களுக்கு ஈரோடு வழக்கறிஞர் நண்பர்கள் இருந்தால் மற்றவர்களுக்கு திருப்பூர் வழக்கறிஞர் நண்பர்கள் இருக்க மாட்டார்களா? அந்த வழக்கிலே நீங்கள் நிஜமாகவே செய்யும் அவதூறு பற்றி அம்பலப்படுத்த மாட்டார்களா?

.நான் எப்போதுமே வசைகளையும் அவதூறுகளையும் பொருட்டாக நினைத்தவன் அல்ல. யமுனா ராஜேந்திரன் போன்றவர்கள் நேரடியாகப் பெயர் சுட்டி எழுதிக்கொண்டிருக்கும் சாக்கடைப் பதிவுகளைக் கூட கருத்தில் கொண்டதில்லை.

யமுனா ராஜேந்திரன் என்று பெயர் சுட்டி சாக்கடைப் பதிவு என்று சொல்வதெல்லாம் வசையா, அவதூறா அல்லது பாராட்டுப் பத்திரமா? இங்கிலாந்தில் இருப்பவர் எங்கே இந்தியா வந்து வழக்கு தொடுக்கப் போகிறார் என்ற திமிரா?

ஏனென்றால் கருத்துச்செயல்பாட்டில் தன்னிச்சையான வெளிப்பாடு என்பது ஓர் அம்சம். நீதிமன்றத்தில் நிரூபிக்கத்தக்க கருத்துக்களையே கருத்து விவாதங்களில் சொல்லவேண்டும் என்றால் அதன்பின் கருத்து விவாதமே இல்லை.

கருத்து விவாதத்திற்கும் கருத்து விவாதம் என்ற பெயரில் கட்டுக்கதைகளை பரப்புவது, மத வெறியை பரப்புவது, விளிம்பு நிலை மக்களை, பெண்களை எள்ளி நகையாடுவது போன்ற செயல்களை மட்டுமே உங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக மட்டும் செய்கின்ற அறமற்றவர் நீங்கள் என்பதை நீங்களும் ஒப்புக் கொள்ளப் போவதில்லை. உங்கள் ஜால்ரா கூட்டமும் உங்களின் தவறுகளைப் பற்றி உங்களிடம் சொல்லப் போவதில்லை.

சென்ற சில ஆண்டுகளாகவே இடதுசாரிகள் என்பவர்கள் கும்பல் கூடி  இந்தப் போக்கை முன்னெடுத்து நீதிமன்றத்தை ஒரு மிரட்டல் கருவியாக மாற்றி அறிவியக்கத்தைச் சீரழித்து வருகிறார்கள்.

அறிவியக்கத்தை சீரழிக்கிற மிரட்டல் கருவியாக நீதிமன்றத்தை எத்தனை வழக்குகள் மூலம் இடதுசாரிகள் என்பவர்கள் கும்பல் கூடி முன்னெடுத்துள்ளார்கள்? பொத்தாம் பொதுவாக பேசக் கூடாது. பட்டியல் அளிக்க முடியுமா உங்களால்? பெருமாள் முருகன் பிரச்சினையில் கருத்துரிமை காக்க நீதிமன்றம் போனது இடதுசாரி அமைப்பான தமுஎகசதான். அண்ணல் அம்பேத்கர் மீது வசுமித்ர பொழிந்தது அருவெறுக்கத்தக்க ஆபாசம். உங்களைப் போல ஆணவம் மிக்க அந்த நபர் மீது வன் கொடுமைச் சட்டத்தின் மீது வழக்கு பதியச் சொல்லி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி புகார் அளித்தது. சமூக ஊடகங்களில் இது குறித்து பெரும் விவாதமே நடந்தது. எத்தனையோ பேர் அந்த புகாரை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அவர்கள் யாரையும் தீஒமு பொறுப்பாளர்கள் வசை பாடவில்லை, அவதூறு செய்யவில்லை. பொறுப்பாகவே பதில் அளித்தார்கள். கருத்து விவாதம் என்பது அதுதான். பின்னூட்டங்கள் இட வாய்ப்பை உங்கள் வலைத்தளத்தில் அடைத்து விட்டு கருத்து விவாதம் என்று நீங்கள் சொல்வது மோசடி, போலித்தனம்.

அமைப்புக்கு ஆதரவானவர்கள் என்று முத்திரை குத்தப்படும் எவரும் இங்கே நீதிமன்றத்தை அணுகியதில்லை.

உங்களை அமைப்புக்கு ஆதரவானவர் என்றெல்லாம் யாரும் முத்திரை குத்தவில்லை. நீங்கள் சங் பரிவார அமைப்பின் கலாச்சார முகம் என்பதை அனைவரும் அறிந்தே இருக்கிறார்கள். அராஜகம் செய்பவர்களே நீதிமன்றத்தை அணுக வேண்டிய அவசியம் எங்கிருந்து வருகிறது?

அமைப்புக்கு எதிரான புரட்சியாளர்களாக தங்களை சொல்லிக்கொண்டு அத்தனைபேர் மீதும் அவதூறு கக்குபவர்கள்தான் அவர்கள்மேல் சிறு விமர்சனம் வந்தால்கூட நீதிமன்றத்தை அணுகிக்கொண்டிருக்கிறார்கள்.

வழக்கு தொடுப்பேன், துறை ரீதியான புகார் அளிப்பேன் என்ற மிரட்டலோடு, வன்மத்தோடு நீங்கள் செய்த அவதூறுக்கு எதிர்வினை ஆற்றியவர்களுக்கு எதிராக நீங்கள்தான் இப்போது நீதிமன்றத்தை அணுகிக் கொண்டிருக்கிறீகள்.

இந்தப் போக்கு தொடர்ந்தால் இங்கே எழுதும்போதே எச்சரிக்கை உணர்வு உருவாகும். கைகள் தயங்கும். அது நிகழக்கூடாது.

பின்னே என்ன எழவுக்கு இப்போது நீங்க வழக்கு தொடரப் போறீங்க? இந்த வார்த்தைக்கும் உங்களுடைய நடவடிக்கைக்கும் சம்பந்தமே இல்லை. இதுல நீங்க பெரிய மாஸ்டர்.

முறையான நடவடிக்கைகளுக்கு சென்னையிலும் நண்பர் குழு ஒன்று கூடுவதாக உள்ளோம்.

சென்னைக்கு செல்கையில் கண்டிப்பாக ஈ-பாஸ் வாங்கிச் செல்லவும். அப்படி இல்லையென்றால் 14 நாட்கள் குவாரண்டைனாம். நீங்கள் 14 நாட்கள் குவாரண்டைன் ஆவது பிரச்சினையில்லை. ஆனால் அந்த அவகாசத்தில் வேறு எழுதிக் கொட்டுவீர்களே, அதுதான் பிரச்சினை.

இறுதியாக சில வார்த்தைகள் ஜெயமோகன்.

உங்களால் அவதூறு செய்யப்பட்டவர்கள் ஏராளம்.

அருந்ததி ராய், கமலா தாஸ், மனுஷ்ய புத்திரன் ஆகியோரை அவர்களின் உருவ அமைப்பிற்காகவும், உடல் ஊனத்திற்காகவும் கொச்சையாக பேசியவர் நீங்கள்.

சுஜாதா, அசோகமித்திரன், தஞ்சை பிரகாஷ், கவிஞர் இன்குலாப் ஆகியோரை அவர்களின் இறப்பிற்குப் பிறகு சிறுமைப் படுத்தினீர்கள்.

அசோகமித்திரன் மறைவுக்குப் பிறகு, அவர் சாவி அலுவலகத்தில் காபி வாங்கிக் கொடுக்கும் ஆபீஸ் பாயாக இருந்தார் என்றும் இந்துமதி வீட்டில் காரோட்டினார் என்றும் எழுதி அசோகமித்திரன், சாவி, இந்துமதி ஆகிய மூவரையும் உங்களது கேவலமான பொய் மூலமாக இழிவு படுத்தினீர்கள்.

தோழர்கள் டி.செல்வராஜ், மற்றும் சோலை சுந்தரப்பெருமாள் ஆகியோரைப் பற்றி முன்பு தரக்குறைவாக எழுதி விட்டு, அவர்களின் எழுத்துக்களையெல்லாம் படித்ததே இல்லை என்று நீங்கள் பொய் சொன்ன அறமற்ற செயலை நான் தேதி வாரியாக அம்பலப்படுத்தி உள்ளேன்.

தோழர் யமுனா ராஜேந்திரனுக்கு நீங்கள் ஏதோ பெரிய உதவி செய்ததாகவும் அவர் நன்றி மறந்து நடந்து கொள்கிறார் என்று எழுதியதற்கு அவர் சூடாக பதில் கொடுத்ததும் வாயை மூடிக் கொண்டதை  நீங்கள் மறந்திருக்கலாம். நான் மறக்கவில்லை.

தோழர் சம்சுதீன் ஹீராவின் "மௌனத்தின் சாட்சியங்கள்" நாவலை வஹாபிய பிரச்சாரம் என்று சொல்லி நீங்கள் ஒரு ஞான சூனியம் என்று உங்களை நீங்கள் இழிவு படுத்திக் கொண்டதையும் மறக்க முடியாது. 

புளிச்ச மாவு விவகாரத்தில் “வெறும் வாய்தகராறு மட்டுமே நடந்திருந்தாலும் போலீஸ் கேஸை ஸ்ட்ராங்காக்க மருத்துவமனையில் அட்மிட்டான” உயர்ந்த மனிதனல்லவா நீர்! பெரியவர் பாரதி மணி உண்மையை சொல்லி விட்ட பிறகும் தவடைக்கும் காதுக்கும் செல்லும் குருத்தெலும்பு பாதிக்கப்பட்டது என்றெல்லாம் கதை விட்ட உத்தமன் அல்லவா நீர்!

உம் மீது வழக்கு தொடுக்க மற்றவர்கள் புறப்பட்டால் ஆயிரமாயிரம் வழக்குகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

நீங்கள் வசனம் எழுதிய பாபனாசம் படத்து நாயகன் கதாநாயகன் கமலஹாசன், விருமாண்டி படத்தில் “மன்னிக்கிறவன் மனுசன், மன்னிப்பு கேட்கறவன் பெரிய மனுசன் என்பார்”

இதுதான் நல்ல வாய்ப்பு

உங்கள் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு குறைந்த பட்சம் “பெரிய மனிதன்” ஆகப் பாருங்கள்.

ஏனென்றால் எப்போதுமே நீங்கள் “மனிதன்” என்று கருதப்படுவதற்கு அருகதையானவர் அல்ல.

பிகு 1 : நீல நிறத்தில் இருப்பதெல்லாம் ஜெமோ கூறியது.

பிகு 2: ஆமாம். ஜெமோவுக்கு ஏன் பா.செயப்பிரகாசத்தின் மீது வன்மம்? அவருடைய முந்தைய பதிவில் அதற்கான விளக்கம் இருக்கிறது. அது பற்றி நாளை பார்ப்போம்.

பிகு 3 : ஜெமோ என்னத்தான் வீரன் போல பில்ட் அப் கொடுத்தாலும் அடிப்படையில் அவர் "பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக்" என்ற வடிவேலுவின் நாய் சேகர் கேரக்டர் போலத்தான். 



No comments:

Post a Comment