Saturday, May 23, 2020

இன்னும் எத்தனை உயிர் குடிக்குமோ?


கொரோனா நோய்த்தொற்றினால் உயிரிழப்பவர்களை விட  அதன் பரவலை தடுப்பதற்காக என்ற பெயரில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் இன்னும் அதிகமான உயிர்களை பறித்துக் கொண்டிருக்கிறது.

புலம் பெயர் தொழிலாளர்கள் நிலைமை நாம் அனைவரும் அறிந்ததே. நான்கு மணி நேர அவகாசத்தில் அமலாக்கப்பட்ட ஊரடங்கு இன்று கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறித்து விட்டது. உழைக்க வந்த இடத்தில் அனாதை போல  பட்டினியில் மடிவதை விட சொந்த மண்ணில் கௌரவமாக இறப்பது மேல் என்ற உணர்வே அவர்களை பல நூறு கிலோ மீட்டர்கள் நடக்க வைக்கிறது. மார்ச் மாத இறுதியில் தொடங்கிய நடை (துயரம்)  இன்னும் முடியவில்லை.

ஊரடங்கு விலக்கப்பட்ட பின்பு அவர்கள் நிலைமை என்ன? முன்பு பணியாற்றிய நகரங்களுக்கே மீண்டும் செல்ல அவர்கள் துணிவார்களா? சொந்த ஊரிலேயே தொடரலாம் என்றால் அவர்களுக்கு என்ன வழி? ஊரக வேலை உத்தரவாதச் சட்டத்திற்கு கூடுதல் நிதி அளித்துள்ளோம் என்று தம்பட்டமடிக்கிறது மோடி அரசு. ஏற்கனவே பதிவு செய்துள்ளவர்களுக்கு நூறு நாள் வேலை முறையாகக் கொடுத்தாலே அந்த நிதி போதுமானது அல்ல. அப்படி இருக்கையில் சொந்த ஊருக்கு திரும்புபவர்கள் கதி என்ன?

மேலும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதிச்சட்டம் என்பது கிராமப்புறங்களுக்கு மட்டுமே பொருந்தும். பேரூராட்சிப் பகுதிகளுக்கும் நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளுக்கும் வேலை உத்தரவாதச் சட்டத்தை விரிவு படுத்த வேண்டும் என்று பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி மனு அளிக்கும் இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சில வருடங்களுக்கு முன்பு அளித்தது. ஆனால் அரசிடமிருந்து எந்த அசைவும் இல்லை. கிராமப்புறங்கள் அல்லாத சொந்த ஊர்களுக்குத் திரும்பிய புலம் பெயர் தொழிலாளர்கள் நிலை என்ன ஆகும்?

ஆரவாரத்தோடு அறிவிக்கப்பட்ட இருபது லட்சம் கோடி ரூபாய் உடான்ஸ் ஊக்குவிப்பில் இப்பிரச்சினை பற்றி கண்டு கொள்ளவே இல்லை.  வேலை இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?  கொலை, கொள்ளை என்று தைரியமுள்ளவர்களும் தற்கொலை என்று தைரியம் இல்லாதவர்களும் நாடும் நிலை உருவாகப் போகிறது.

ஏற்கனவே கிடைக்கிற தகவல்கள் கவலை அளிக்கிறது.

ஆனந்த விகடன், தி ஹிந்து என்று பெரும் ஊடக நிறுவனங்கள் ஆட்குறைப்பை துவக்கி விட்டார்கள்.

சுற்றுலாத்துறை மீள்வதற்கு நாளாகும் என்பதால் உங்களை பணி நீக்கம் செய்கிறோம் என்று மைசூரைச் சேர்ந்த ஒரு ஹோட்டல் குழுமம் தன் பணியாளர்களை நீக்கி விட்டது. கவனத்திற்கு வந்தது ஒரு நிறுவனம். இன்னும் எத்தனை நிறுவனங்கள் எத்தனை ஊழியர்களை நீக்கியுள்ளதோ?

ஸ்விக்கி நிறுவனம் ஒரு புறம் டெலிவரி சார்ஜை அதிகரித்து விட்டு இன்னொரு புறம் 1100 பேரை வீட்டுக்கு அனுப்பி விட்டது.

மருந்து உற்பத்தித்துறையும் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் மருந்து கம்பெனிகள் ஆட்குறைப்புக்களை துவக்கி விட்டார்கள்.

ஐ.டி நிறுவனங்கள் சாதாரணமாகவே ஆட்குறைப்பில் சாதனை செய்பவை.  பொது முடக்கம் முடிவதற்காக பல நிறுவனங்கள் காத்திருப்பதாக எழுத்தாளர் வினாயக முருகன் எழுதி வருகிறார்.

தமிழக அரசோ, ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தி புதிய ஆட்களுக்கான வாசலை அடைத்துள்ளது. (இது தொடர்பாக எழுதிய பதிவு நீண்ட நாட்களாகவே ட்ராப்டிலேயே உள்ளது. நாளை பகிர்ந்து கொள்கிறேன்.)

இவை அனைத்தும் கொரோனாவின் விளைவா?

அல்லது

கொரோனாவின் பெயரைச் சொல்லி முதலாளித்துவம் செய்யும் கொடூரமா?
  
இரண்டாவதுதான் காரணம் என்பது யதார்த்தம்.

கொரோனாவின் பெயரில் இன்னும் எத்தனை உயிர்களைத்தான் முதலாளித்துவம் பலி வாங்குமோ?

பிகு: “இந்த சுவரு இன்னும் எத்தனை உயிரை காவு வாங்கப் போகுதோ?” என்ற மெட்ராஸ் பட வசனம் நினைவுக்கு வந்ததால் அந்த படம் மேலே.

No comments:

Post a Comment