Saturday, May 9, 2020

சாவின் (ரயிலின்) ஒலி கேட்டிருக்காதுதான் . . .





தண்டவாளத்தில் ஏன் படுக்க வேண்டும், வேறு இடமா இல்லை என்றொரு கேள்வி ஒலித்ததைக் கேட்டேன். பிளாட்பார்ம் என்பது தூங்குவதற்கு அல்ல என்று சல்மான் கானின் சிநேகிதி ஒருவர் கோபமாய் கேட்டது நினைவுக்கு வந்தது. பிளாட்பார்ம் குடிவெறியில் கார் ஓட்டுவதற்கான இடம் கிடையாது என்பது ஏனோ அவருக்கு மறந்து விட்டது. இப்போது கேள்வி கேட்பவர்கள் கூட அந்த சினேகிதி போன்றவர்கள்தான்.

சாலை வழியாக பயணித்தால் போலீஸ் பிடித்து விடுகிறார்கள். ரயில் தண்டவாளத்தின் வழியாகப் போனால் பிரச்சினை வராது என்று நம்பி சென்றிருக்கிறார்கள். தண்டவாளமே அவர்களுக்கு பஞ்சணையாக இருந்திருக்கிறது. அதுவே அவர்கள் உயிரையும் பறித்திருக்கிறது.

ரயில் வரும் சத்தம் அவர்களுக்கு கேட்டிருக்காதா என்று ஒரு தோழர் நேற்று அலுவலகத்தில் கேட்டார். அவருக்கு சொன்ன பதிலையே இங்கே பகிர்கிறேன்.

1996 ல் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் 24 வது பொது மாநாடு வேலூரில் நடைபெற்றது. மாநாடு துவங்குவதற்கு முதல் நாளும் அதற்கு முந்தைய நாளும் கடுமையான வேலைகள் இருந்தது. உறக்கத்திற்கான அவகாசம் குறைவு. பிரதிநிதிகள், பார்வையாளர்களை அழைத்து வருவதற்காக போக்குவரத்துக் குழு அமைக்கப்பட்டிருந்தது. மாநாடு துவங்கும் நாள் காலை மூன்று முப்பது மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்தில் கோழிக்கோடு கோட்டத்திலிருந்து தோழர்கள் வர வேண்டும். அந்த ஒரு வண்டிக்கு மட்டும் நீங்களும் வாருங்கள் என்று போக்குவரத்துக் குழுத் தோழர்கள் அழைத்ததால் நானும் சென்றிருந்தேன்.

இரண்டரை மணிக்கு காட்பாடி சென்று ஒரு இடத்தை பிடித்து அங்கே பேனர், தோரணங்கள் கட்டி காத்திருந்தோம். பேசிக் கொண்டே இருந்த நாங்கள் அப்படியே அசதியில் தூங்கி விட்டோம்.  நல்ல தூக்கத்தில் இருந்த எங்களுக்கு அறிவிப்பு வந்ததோ, பிறகு ரயிலும் வந்ததோ தெரியவில்லை. பிளாட்பாரத்தில் நடந்து வந்த கோழிக்கோடு தோழர்கள் பேனரையும் தோரணங்களையும் பார்த்து எங்களிடம் வந்தனர். அப்போது தென் மண்டல துணைத்தலைவராக இருந்த தோழர் சி.அச்சுதன், “காம்ரேட் ராமன், நாங்கள் வந்து விட்டோம்” என்று என்னை தட்டி எழுப்பினார். தூங்கி வழிந்த முகத்தில் அசடும் சேர்ந்து வழிந்த காட்சியை நினைத்துப் பார்க்க கொஞ்சம் வெட்கமாகவே இருக்கிறது. அதன் பின்பு சுறுசுறுப்பாகி விட்டோம் என்பது வேறு விஷயம்.

ஒரு இரண்டு நாள் பணிகள் கடுமையாக இருந்த போதே அசதியில் ரயில் வருவது தெரியாமல் நாங்கள் உறங்கி விட்டோம். அவர்களோ வாழும் வழி தெரியாமல் நீண்ட தூரம் நடந்தே (36 கிலோ மீட்டர்)  வந்தவர்களுக்கு எவ்வளவு அசதி இருந்திருக்கும்! உடலின் வலியும் மனதில் வலியும் எப்படி இருந்திருக்கும்!! அதனால்தான் அவர்களுக்கு ரயில் வரும் ஒலி கேட்கவில்லை. சாவின் ஒலி காதில் விழாத வண்ணம் பாவம் அவர்கள் களைத்துப் போயிருந்தார்கள்.


2 comments:

  1. அருமை. ஆனால் ரயில் பாதையை பயன்படுத்துவதை தவிர்த்திருக்கலாம்.

    நமது வலைத்திரட்டி: வலை ஓலை

    ReplyDelete
  2. துயரம்

    ReplyDelete