Thursday, May 14, 2020

குருமூர்த்தி "சிவாஜி"யாகி இருப்பார்

எங்கள் பண்ருட்டி கிளைத் தோழர் ஆரோக்கியராஜ் பகிர்ந்து கொண்ட ஒரு பத்திரிக்கையாளரின் முகநூல் பதிவு கீழே உள்ளது.


*பத்திரிக்கையாளர் நண்பர் ஒருவரின் முகநூல் பதிவிலிருந்து...*

வாஜ்பேயி காலம்வரை பாஜக சுதேசி என்றொரு கோஷத்தை கையில் பிடித்துக்கொண்டு சுற்றியது நினைவிருக்கிறதா?

1998ல் பாஜக பாஜக ஆட்சிக்கு வருகிறது. தயக்கம் ஏதுமின்றி உலகமயமாதல் தொடர்கிறது. சிறிது காலத்தில், வெளியுறவு அமைச்சரான ஜஸ்வந்த் சிங் அமெரிக்கா செல்கிறார்.

அப்போது பாஜக பேசும் சுதேசி பற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்கிறார்கள்.

ஜஸ்வந்த் சிங் பதில் சொல்கிறார்: "Swadeshi is not national jingoism".

அதாவது "சுதேசி என்பது தேசிய வெறிக்கூச்சல் அல்ல" என்பதே ஜஸ்வந்த் சிங்கின் பதில். 

இந்தியாவில் இருக்கும்போது சுதேசி என்பது தேசப்பற்று. அமெரிக்கா சென்றுவிட்டால் அது "தேசிய வெறிக்கூச்சல்"... அவ்வளவுதான்.

அப்போது சுதேசி என்பது ஒரு அலங்கார வாசகம். 

சுதேசி சுதேசி என்று வெறுமனே கத்துவது ஒலி மாசுபாடு என கருதி காலப்போக்கில் அவர்களே மெல்ல மெல்ல அதைக் கைவிட்டிருக்கலாம்.

இப்போது 'தற்சார்பு'.


அதற்கு எங்கள் தென் மண்டல துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் அளித்த பதில் கீழே உள்ளது.


இவர்கள் உலக மயத்தை காங்கிரஸ் அமலாக்கிய போது "சுதேசி" என்று பேசினார்கள். அப்போது இப்போதைய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி "சுதேசி ஜாக்ரான் மன்ச்" அமைப்பாளராக இருந்தார். அந்த "மன்ச்" சங் பரிவாரின் குடும்ப உறுப்பினர்தான். இன்சூரன்ஸ் துறையில் பன்னாட்டு மூலதனத்தை அனுமதிக்க கூடாது என்று வீராவேசமாக பேசினார். நாடகம்தான் என்றாலும் தத் ரூபம் ஆக இருந்தது. சிவாஜி கணேசன் பொருளாதாரம் படித்திருந்தால் குருமூர்த்தி ஆகி இருக்க முடியுமா? தெரியாது. ஆனால் குருமூர்த்தி திரை உலகம் வந்திருந்தால் சிவாஜி ஆகியிருப்பார். 😀 

1998 ல் பா.ஜ.க 13 நாள், 13 மாதம் என்கிற இரண்டு அல்பாயுசு வாய்ப்புகளை இழந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்ந்தது. உடனே அந்நிய மூலதனத்தை அனுமதிக்க ஆரம்பிக்கிறது. 1990 களின் துவக்கத்தில் ரோடுகளில் பட்டியல் போட்டு "இது சுதேசி சோப், இது சுதேசி பிளேடு என்று விளம்பரம் செய்தவர்கள். ஆட்சியில் அமர்ந்தவுடன் அந்நிய மூலதனத்திற்கு சோப் போட ஆரம்பித்தார்கள். கடந்த கால முழக்கங்களுக்கு பிளேடும் போட்டார்கள்.

இன்சூரன்ஸ் துறையில் முதன் முதலில் அந்நிய முதலீட்டை கொண்டு வந்தவர்களும் அவர்களே. ஒரு கமல் படத்துல "எங்கே அந்த மானஸ்தன் சந்துரு" என்று கவுண்டமணி தேடுவாரே அது மாதிரி குருமூர்த்தியை தேடினால் காணோம். நாடகக் குழு வேறு ஊருக்கு வேறு நாடகத்திற்கு புறப்பட்டு போய் விட்டது. 

ஆனாலும் சுதேசியில் இருந்து விதேசிக்கு ஒரே ஜம்ப் ல் எப்படி தாவுவது. அவர்களிடம் மயங்கி போயிருந்த நடுத்தர வர்க்கத்திற்கு நளினமாக தங்கள் நழுவலை எப்படி விளக்குவது? 

அப்போது அவர்கள் கண்டு பிடித்த வார்த்தைதான் "Calibrated Globalisation". அதாவது படிப் படியான உலகமயம். இதுதான் எங்கள் சுதேசியின் அர்த்தம் என்றார்கள். படிப் படியாக என்றாலும் 3 படி 4 படி சேர்த்து சேர்த்து தாண்டினார்கள். இன்சூரன்ஸ் துறையில் 1999 ல் 26 சதவீத அந்நிய முதலீட்டை கொண்டு வந்த இவர்களே 49 சதவீதமாகவும் உயர்த்தினார்கள். இப்படி பல துறைகளிலும்... தாவல்னா உங்க தாவல் எங்க தாவல் இல்ல... அப்படி ஓர் பேய் பாய்ச்சல்...

இப்படி வேடங்கள் இவர்களுக்கு புதிதல்ல... 1980 களில் காந்திய சோசலிசம். 90 களின் துவக்கத்தில் சுதேசி. 90 களின் இறுதியில் துவங்கி 21 ஆம் நூற்றாண்டின் முதல் சில ஆண்டுகள் வரை "படிப்படியான உலகமயம்". இரண்டாவது பத்தாண்டில் "படி தாண்டிய சுதேசி" (இது மட்டும் நமது வர்ணனை). 

"வலிமையான பிரதமர்" அந்நிய மூலதனத்திற்கு மட்டும் "வளைந்து விடும் பிரதமர்".

இது நாடகத்தின் பிளாஷ் பேக் அல்ல. நாட்டு நடப்பின் பிளாஷ் பேக்.

No comments:

Post a Comment