Wednesday, September 16, 2020

நீங்கள் நிற்கிறீர்களா மோடி?

 



அனைத்து அரசியல் கட்சிகளும் இராணுவ வீரர்களோடு ஒன்றாக நிற்கிறோம் என்ற செய்தியை நாடாளுமன்றம் எல்லையில் நிற்கும் ராணுவ வீரர்களுக்கு அனுப்ப வேண்டும் என்று மோடி சொல்லியுள்ளார்.

 

எல்லையில் நிற்கும் ராணுவ வீரர்களுக்கு ஆதரவாகத்தான் அனைத்து அரசியல் கட்சிகளும் நிற்கிறார்கள். இதிலே யாருக்கும் எந்த கருத்து முரணும் கிடையாது.

 

எல்லையில் நிற்கும் வீரர்களுக்கு உண்மையாக நீங்கள் நிற்கிறீர்களா மோடி?

 

உங்களுக்கு முன்பாக இந்த பதவியில் இருந்த உங்கள் கட்சிக்காரர் அப்படியெல்லாம் உண்மையாக இல்லை. பாகிஸ்தானியரின் ஊடுறுவல் நடக்கிறது என்ற தகவல்களையெல்லாம் அலட்சியப் படுத்தி தூங்கியதன் விளைவுதானே கார்கில் யுத்தம்! அப்போதும் கூட சவப்பெட்டியில் கல்லா கட்டிய பெருமை உங்கள் கட்சி ஆட்சிக்குத்தானே உண்டு!

 

உங்கள் ஆட்சி மட்டும் என்ன யோக்கியம்?

 

செல்லா நோட்டு விவகாரத்தின் போது வீதியில் நின்ற மக்களைப் பார்த்து “எல்லையில் நிற்கும் வீரர்களின் இன்னல்களைப் பாருங்கள்” என்று உபதேசம் செய்தது உங்கள் கூட்டம். உங்கள் ஆட்களுக்கு புதிய நோட்டுக்கள் அளவுக்கதிகமாக வந்த புளியேப்பத்தில் பிறந்தது அந்த உபதேசம்.

 

ஆனால் எங்களுக்கு தரப்படும் உணவு எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்ற உண்மையை போட்டுடைத்த எல்லைக் காவல் படை வீரனுக்கு பைத்தியக்காரன் முத்திரை குத்தி அவரை வேலையிலிருந்து துரத்தி அடித்த போதே உங்கள் “ராணுவ வீரர்கள் மீதான நேசம்” வெறும் வேஷம் என்பது வெளிப்பட்டு விட்டது.

 

தீவிரவாதிகளால் தாக்கப்படும் அபாயம் இருக்கிறது என்பதை உளவுத்துறை எச்சரித்தும் அதை அலட்சியம் செய்து சி.ஆர்.பி.எஃப் படை வீரர்களை சாலை மார்க்கமாக பயணிக்க வைத்து நாற்பத்தி நான்கு  வீரர்களின் மரணத்திற்கு காரணமாக இருந்தது நீங்கள் இல்லாமல் வேறு யார்?

 

கிட்டத்தட்ட பதினாறாயிரம் கோடி ரூபாயில் உங்களுக்காக மட்டும் ஒரு சொகுசு விமானம் வாங்கிய நீங்கள், உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் வீரர்களை வான் வழியில் இட மாற்றம் செய்வதற்கு மறுத்த கஞ்சப்பிசினாறிகள் யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தீர்களா?

 

சரி, அத்தாக்குதலுக்கு பதிலடி என்ன அளித்தீர்கள்? பாலகோடில் துல்லிய தாக்குதல், எஃப் 16 விமானம் வீழ்த்தப்பட்டது, 500 பேர் கொல்லப்பட்டார்கள்  எனும் நாடகத்தைத் அரங்கேற்றியதைத் தவிர? மழை நேரத்தில் போனால் போர் விமானம் ரேடாரில் சிக்காது என்று விமானப்படைக்கு நான் தான் ஐடியா கொடுத்தேன் என்று நீங்கள் சொன்னதை விட வேறு யாரும் அவர்களை இழிவு படுத்திட முடியாது.

 

மோடி 2.0 என்பதே புல்வாமாவில்  கொல்லப்பட்ட வீரர்களின் குருதியால் அமைந்ததுதானே! அந்த காரணத்திற்காகவாவது நீங்கள் உண்மையாக இருக்கிறீர்களா?

 

சீனா இந்திய எல்லைக்குள் நுழைந்து இருபது வீரர்களை கொன்றது என்று உங்கள் ராணுவ மந்திரி சொல்கிறார். உங்களின் பிரியத்துக்குரிய முப்படைத் தளபதி கூட சொன்னார். (உங்கள் ஆட்சியின் பாரம்பரியப்படி அந்த கோப்பு தொலைந்து போய் விட்டது என்பது வேறு கதை)

 

ஆனால்  இந்திய எல்லைக்குள் ஒரு இஞ்ச் கூட ஊடுறுவல் நடைபெறவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால் நம் வீரர்கள் எங்கே கொல்லப்பட்டார்கள் என்ற கேள்விக்கு இது நாள் வரை உங்களிடமிருந்து பதில் கிடையாது.  உங்கள் கூற்றின் பொருள் உங்களுக்கு புரிந்ததா இல்லையா?

 

கேரளாவின் பரப்பளவு அளவிற்கு இந்திய எல்லை ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளதாக இப்போது உங்கள் ராணுவ அமைச்சர் கூறுகிறார்.  இந்திய சீன வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாஸ்கோவில் சந்தித்துப் பேசியதில் ஐந்து அம்ச உடன்பாடு எட்டப் பட்டுள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகிறார்.

 

உங்கள் சங்கிகளோ, சீனாவிற்கு எப்படி அடி கொடுத்துள்ளோம் தெரியுமா? அவர்கள் கதறல் கேட்கிறதா? எப்படி வீர வஜனங்களை பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.

 

நடந்தது என்ன? என்பதைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று மறுக்கிறீர்கள். அதாவது உண்மையை மக்கள் பிரதிநிதிகளிடம் கூட சொல்லாமல் மறைக்கிறீர்கள்.

 

இந்திய மக்களும், இந்திய அரசியல் கட்சிகளும் (பாஜக, அதன் கூட்டணிக் கட்சிகள் நீங்கலாக) ராணுவ வீரர்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறீர்கள்.  

 

நீங்கள் மட்டுமே உங்கள் அரசியல் சதுரங்கத்தின் பகடைக் காய்களாக மட்டுமே அவர்களை பயன் படுத்துகிறீர்கள். அவர்கள் என்ன அதானியா, அம்பானியா  நீங்கள் உண்மையாய் நேசிக்க?

 

உங்கள் அரசியல் செல்வாக்கு குறைகிற போதெல்லாம் அவர்களை களப் பலி கொடுக்கும் அசிங்கமான தந்திரத்தை கைவிட்டு நீங்கள் வகிக்கும் பொறுப்பிற்கேற்ப (அதற்கு கொஞ்சமும் தகுதியில்லாதவர் என்ற போதிலும்)  கொஞ்சமாவது நாணயமாக நடந்து கொள்ளுங்கள்.

 

நீங்கள் முதலில் ராணுவ வீரர்களுக்கு உண்மையாக இருங்கள்.

 

மயில், வாத்து, பூங்காவில் உள்ள பாறை, உங்கள் அம்மா (இதை எழுத மனதிற்கு கஷ்டமாகத்தான் உள்ளது. ஆனால் அதுதானே உண்மை?)  போல ராணுவ வீரர்கள் உங்கள் போட்டோ ஷூட்டிற்கான செட் ப்ராப்பர்டி அல்ல.

 

உங்கள் நாற்காலியை ஸ்திரப் படுத்திக் கொள்ள அவர்களை தியாகம் செய்யாதீர்.

 

அவர்களுக்கு உண்மையாக இருக்க குறைந்த பட்சம் இனியாவது  முயற்சியாவது செய்யுங்கள் மோடி.

1 comment: