Monday, November 2, 2020

“இட்லி பொடி” யும் நீலாம்பரியும்

 


நேற்றைய முயற்சி இது.

 என் மனைவி அவருடைய தங்கையோடு வெளியே செல்ல, கொஞ்ச நேரம் இணையத்தில் மேய்ந்தேன், தொலைக்காட்சி பார்த்தேன். இரண்டும் போரடித்ததால் உருப்படியாக ஏதாவது செய்வோம் என்று முயன்றதுதான் “இட்லி பொடி”

 எப்போதாவது அவர் பிஸியாக இருக்கும் நேரத்தில் வறுத்து வைத்த பொருட்களை மிக்ஸியில் அரைத்துத்தரச் சொல்வார்.

 அந்த நினைவின் வலிமையில் செய்தது.

 முதலில் ஒரு வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும்

 ஒரு கப் வெள்ளை உளுந்து, ஒரு கப் கடலைப் பருப்பு போட்டு நன்றாக சிவக்க சிவக்க வறுத்தேன்.

 பிறகு அதே வாணலியில் பொட்டுக்கடலை அரை கப் வறுத்துக் கொண்டேன்.

 பிறகு இரண்டு கப் அளவிற்கு மிளகாய் வற்றலையும் தும்மல் வரும் வரை, கறுப்பாக தீய்ந்து போகும் முன்னால்  வரை வறுத்துக் கொண்டேன்.

 பிறகு கொஞ்சம் உப்பு, துளியளவு புளி, சின்னதாய் வெட்டி எடுத்த கட்டி பெருங்காயம், ஒரு சின்ன கட்டி வெல்லம் இவை அனைத்தையும் கொஞ்ச நேரம், வெல்லம் உருகுவதற்கு முன்பாக வறுத்துக் கொண்டேன்.





 கடைசியாக எள் அரை கப், கறுப்பு எள் போதுமான அளவு ஸ்டாக் இல்லாததால் வெள்ளை எள்ளையும் சேர்த்து வறுத்துக் கொண்டேன். எள்ளை மட்டும் எண்ணெய் வாணலியில் வறுக்காமல் தனியே எண்ணெய் சேர்க்காமல் வறுத்திருக்கலாமோ என்று பிறகு தோன்றியது. மிக்ஸியில் தனியாக அரைத்த போது பேஸ்ட் போல ஆகிவிட்டது. 
அனுபவமே பாடம்.”

 இவை அனைத்தையும் நன்றாக ஆற வைத்து

 முதலில் பருப்பு வகையறாவை மிக்ஸியில் அரைத்து,

அதோடு மிளகாய் வற்றலையும் அரைத்து

உப்பு, பெருங்காயம் வகையறாக்களை மூன்றாக அரைத்து

 வறுத்த எள்ளை தனியாக வேறு ஜாரில் அரைத்து

அதனையும் இத்தோடு சேர்த்து  மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓட விட்டால்

நன்றாக கலந்து

 “இட்லி மிளகாய் பொடி”



 கச்சிதமாக வந்திருந்தது.

 கொஞ்சம் தற்பெருமைதான். ஆனாலும் உண்மையை சொல்ல வேண்டும் அல்லவா?

 படையப்பாவைப் பார்த்து நீலாம்பரி சொல்லும் வசனம் நினைவிருக்கிறது அல்லவா?

 “நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரன். எனக்கே உன்னை பிடிச்சுருக்கு”

 அது போல இந்த இட்லி பொடியின் வாசமும் ருசியும் எனக்கே ரொம்ப பிடிச்சிருந்தது.

 பிகு: இத்தனை வருஷமா நான் செஞ்சதை காப்பியடிச்சு செஞ்சிட்டு இவ்வளவு தெனாவெட்டா என்று மனைவி திட்டாமல் இருக்க வேண்டும்  என்று அந்த நளனை வேண்டிக் கொள்கிறேன்.

 பிகு 2 : என் பேரப்பசங்களுக்கு நான் செய்யும் எள்ளு மிளகாய் பொடிதான் ரொம்பவும் பிடிக்கும் என்று பாட்டையா பாரதி மணி எழுதியதும் நினைவுக்கு  வந்தது. அதே நிறம், திடம்,  எல்லாம் . . .

2 comments:

  1. "அனுபவமே பாடம்" னு எங்க தலைவரையே நக்கலடிக்கிறீங்களா?

    ReplyDelete
    Replies
    1. யாருமே கவனிக்கவில்லையே என்றிருந்தேன். மகிழ்ச்சி

      Delete