Thursday, October 7, 2021

சீமானுக்கு இதெல்லாம் தெரியுமா?

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் முக நூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

தமிழுக்கு இப்படியெல்லாம் பிரச்சினை வந்தது என்று தமிழ் தேச அதிபராக கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் சீமானுக்கு தெரியுமா?

பதிவுக்குக் கீழே படமாகவே போட்டுள்ளேன். பாருங்கள்.

உங்களின் அற்புதமான பணிக்கு வாழ்த்துக்கள் தோழர் சு.வெ . . .



அன்னைத்தமிழுக்கு கிட்டியது வெற்றி.

அஞ்சலகத்தில் உள்ள அனைத்து படிவங்களிலும் தமிழ்.
எழுத்துப்பூர்வமாக உறுதிப்படுத்தியது அஞ்சல் துறை.
இந்தி திணிப்பு முறியடிக்கப்பட்டது.

சு.வெங்கடேசன் எம்.பி
அஞ்சல் அலுவலக பண விடைகள் (Money order) சிறு சேமிப்பு படிவங்கள் (Small savings forms) இந்தியிலும் , ஆங்கிலத்திலும் மட்டுமே இணைய வழியில் கிடைக்கின்றன; அலைபேசிகளில் கூட சாதாரண மக்கள் தமிழ் எழுத்துக்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிற காலத்தில் அஞ்சல்துறை மக்களுக்கு அந்நியமான மொழிகளை திணிப்பது நியாயமா? என்று ஒன்றிய அமைச்சருக்கும், தலைமை அஞ்சல் பொது மேலாளருக்கும் 22.09.2021 அன்று கடிதம் எழுதியிருந்தேன்.

இந்திய ஆட்சிமொழிச் சட்டங்களின் படி மாநில மொழிக்கான உரிமைகளை பறிப்பதை அனுமதிக்க முடியாது, சட்டத்தை மீறி இந்தி திணிக்கப்படுவதை ஏற்கமாட்டோம் என்பதை அமைச்சகத்துக்கு உறுதிபட தெரிவித்தோம்.

இந்தப் பின்னணியில் இன்று சென்னையில் தலைமை அஞ்சல் பொது மேலாளரை சந்தித்தேன். அப்பொழுது அவர் அஞ்சல் துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து படிவங்களிலும் தமிழ் இருப்பதை எழுத்துப்பூர்வமாக உறுதியளித்துள்ளார்.

அதனடிப்படையில் தமிழகத்தில் இயங்கும் 14 ஆயிரம் அஞ்சலகங்களிலும் அடுத்த இரு வார காலத்துக்குள் பணவிடை மற்றும் சேமிப்புக் கணக்கு சார்ந்த படிவங்களில் தமிழ் இருக்கும். பிற 40 வகையான படிவங்களும் அச்சடிக்கப்பட்டு அடுத்த ஒரு மாத காலத்துக்குள் அஞ்சலகங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

அஞ்சல் துறையில் தமிழ் மொழி இடம்பெறாத படிவமே இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். அன்னைத்தமிழுக்குக் கிடைத்த மற்றொரு வெற்றி.

இப்பிரச்சனையில் தலையீடு செய்த ஒன்றிய அமைச்சருக்கும், தலைமை அஞ்சல் அதிகாரிக்கும் எனது நன்றி.

உடன் தலைமை அஞ்சல் அதிகாரி திரு. செல்வக்குமார், இயக்குனர் திரு. ஆறுமுகம் மற்றும் சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் ஜி.செல்வா மற்றும் தோழர் சுவாமிநாதன் ஆகியோர்.



தோழர் சு.வெ எழுப்பிய ஒரு பிரச்சினையை இங்கே பகிர்ந்த காரணத்தால் ஒன்றிய அரசுக்கு முட்டு கொடுத்து தோழர் சு.வெ வையும் என்னையும் வந்தேறி என்று சொன்ன ஒரு முட்டாள் நாம் தமிழர் கட்சியின் தம்பிக்கு மேலே உள்ள படம் சமர்ப்பணம்.

அந்த தம்பிகளைப் போன்ற மூடர்களால்தானே சீமானின் பிழைப்பு ஓடுகிறது!

1 comment: