Saturday, October 24, 2020

உண்மையை அம்பலப்படுத்தினால் சங்கிகளுக்கு . . .

 


பெண்களை இழிவுபடுத்துவது யார்?

 பெண்களை தோழர் தொல்.திருமாவளவன் அவதூறு செய்து விட்டார் என்று சங்கிகள் கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்கள். திட்டமிட்டு அவர்கள் செய்து வரும் சதி இது.

 மூன்று நாட்கள் முன்பாக ஒரு உறவினர் ஒரு மெத்தப் படித்த ஒரு மேதாவியின் பதிவை பகிர்ந்து கொண்டிருந்தார்.

 பெண்களை மோசமாக பேசும் தெருமா மீது தமிழக பாஜக போலீஸில் புகார் கொடுத்து சிறையில் தள்ளி எம்.பி பதவியை பறிக்க வேண்டும் என்பதுதான் அந்த பதிவின் சாராம்சம்.

 இரவு கணிணியை அணைக்கும் நேரத்தில்தான் பார்த்தேன். அதனால் அப்போது ஸ்க்ரீன் ஷாட் எடுத்துக் கொள்ளவில்லை. அந்த சங்கியை கடுமையாக திட்டி விட்டு கணிணியை அணைத்து விட்டேன்.

 அவரு நல்லவரு, அறிவாளி, அனுபவஸ்தரு, வயசானவரு, அவரைப் போய் இப்படி பேசலாமா என்று என் உறவினர் எனக்கு உபதேசம் செய்ய, அந்த வீடியோவை உன் குடும்பத்து பெண்களுக்கு காண்பிப்பாயா என்று அந்த மேதாவியும் எனக்கு பதில் போட்டு வழக்கமான சங்கி அக்மார்க் வசனமான “நான் சங்கி கிடையாது. பாஜக உறுப்பினரும் கிடையாது” என்று சொல்லி முடித்திருந்தார். மிகவும் ஜாக்கிரதையாக தெருமா என்று போட்டிருந்த பதிவை நீக்கி விட்டார்.

 அவர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட அந்த காணொளியில் தோழர் திருமா, மனு தர்மம் பெண்களை எப்படி இழிவாக பார்க்கிறது, அடிமையாக கருதுகிறது என்று அம்பலப்படுத்தியிருந்த காணொளியில் ஒரு நிமிடத்தை மட்டும் வெட்டி போட்டிருந்தார். அந்த ஒரு நிமிடத்தில் கூட மனு தர்மம் எப்படி பெண்களை பார்க்கிறது என்று தோழர் திருமாவளவன் சொல்வது மிகவும் தெளிவாக இருக்கிறது.

 மனுதர்மம் என்ன சொல்கிறது என்பதை இவர்கள் வசதியாக மறைத்து விட்டு அதை திருமாவளவன்தான்  சொன்னார் என்று அவதூறு செய்வது அப்பட்டமான அயோக்கியத்தனம்.

 முதல் பதிவை நீக்கிய அவர் மீண்டும் உசுப்பேத்தும் விதமாக வேறு இரண்டு பதிவுகளை போட்டிருந்தார். அதன் ஸ்க்ரீன் ஷாட் இங்கே இருக்கிறது.




 




பாஜகவை உயர்த்திப் பிடித்துக் கொண்டு, அதன் செயல் திட்டத்தை அமலாக்கிக் கொண்டு மத வெறியை பரப்புகிறார்கள் என்றெல்லாம் பேசுவது எப்படிப்ப்பட்ட பித்தலாட்டம்!

 இந்த கண்ணியவானின் பதிவை பகிர்ந்து கொண்டிருந்த என் உறவினரின் பதிவில் பல கேள்விகளை கேட்டேன். மௌனம்தான் பதில்.

 அந்த கேள்விகள் இங்கே.


 "வேலைக்குப் போகும் பெண்களில் 90 % ஒழுக்கம் கெட்டவர்கள்" என்று பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கும் கொலைக் குற்றத்திற்கும் உள்ளான ஜெயேந்திர சரஸ்வதி கூறினார். (பார்ப்பனர்களால் எப்போதும் தூற்றப்படும் கலைஞரின் தயவில்தான் விடுதலையானார் என்பது அரசியல் வினோதங்களில் ஒன்று) அதிகாரிகளோடு படுத்துத்தான் பணியையும் பதவி உயர்வையும் பெருகிறார்கள் என்றான் சிப்பு சேகர். 30 % பெண்களுக்குத்தான் பெண்மை இருக்கிறது என்றவர் தரகர் குருமூர்த்தி. பொய்யான தகவலை பரப்பி தெருமா என்று அழைக்கிற கண்ணியவான்கள் இவர்களைப் பற்றி வாய் திறந்தது உண்டா?

அந்த கண்ணியமான மனிதர் குறிப்பிட்ட, அவரே பகிர்ந்து கொண்ட தோழர் திருமாவின் காணொளியை பார்த்தேன். மனு தர்மம் பெண்களை எவ்வாறு இழிவாக கருதுகிறது என்பதை அம்பலப்படுத்துகிறார். கோபம் கொள்ள வேண்டியது மனு தர்மத்தின் மீது. திருமா மீதல்ல. இந்த திசை திருப்பலே அந்த பெரிய மனிதரின் கண்ணியத்தை காண்பிக்கிறது. அது மட்டுமல்ல, அவர் போட்டுள்ள இன்னொரு பதிவு யாரைக் குறிக்கிறது என்பது எனக்கு புரியவில்லை. பெண்களை இழிவுபடுத்தியதாக முந்தைய பின்னூட்டத்தில் குறிப்பிட்ட ஜெயேந்திர சரஸ்வதி, குருமூர்த்தி, சிப்பு சேகர் ஆகியோரை என்று நான் நினைக்கிறேன். அப்படி இல்லாமல் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றால் என் மதிப்பீடு சரி என்று பெருமிதம் கொள்வேன்.


பெண்களை இழிவு படுத்துவது உண்மையிலேயே யார்?

 மனு தர்மமும் வேதங்களுமா?

அல்லது

அதை அம்பலப்படுத்துகிறவர்களா?

 வேலைக்கு போகும் பெண்களை ஒழுக்கம் கெட்டவர்கள் என்று சொன்ன ஜெயேந்திர சரஸ்வதி, குருமூர்த்தி, சிப்பு சேகர் வகையறாக்களா?

இந்த கேடு கெட்டவர்கள் மீது வராத கோபம், உண்மையைச் சொல்லும் தோழர் திருமா மீது வருகின்றதென்றால் அதற்கு ஜாதி வெறியைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்! நீயெல்லாம் எம்.பி யா என்ற எரிச்சல்தானே!

இந்தியாவின் இதிகாசங்களை விட பெண்களுக்கு இழிவு ஏதாவது உண்டா?

 மகாபாரதத்தை விட பெண்களை இழிவு படுத்தும் நூல் வேறு ஏதாவது உண்டா? ஒரு பிறப்பாவது அங்கே இயற்கையாக இயல்பாக உண்டா?

 தீக்குளிக்க வைத்து கற்பை சோதனை செய்த பின்பு காட்டுக்கு அனுப்பப் பட்ட சீதையை விட இழிவு படுத்தப் பெண் யாராவது உண்டா? அந்த இழிவை நிகழ்த்திய ராமன் குற்றவாளியா அல்ல அதை சுட்டிக் காட்டுபவர் குற்றவாளியா?

சீதைக்கு ராமன் நிகழ்த்திய கொடுமையை கேள்விப்பட்டு அகலிகை "எனக்கு நீயா பாவ விமோசனம் தர அருகதை உள்ளவன்?" என்ற கேள்வியோடு மீண்டும் கல்லான ஒரு மறு வாசிப்பு கதை நினைவுக்கு வருகிறது.

 அங்கிகளில் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி பெண்களை இழிவு படுத்துபவர்கள் பற்றி ஒரு பெரிய பட்டியலே தர முடியும்.

 பெண்களை சங்கிகளைக் காட்டிலும் வேறு  யாராவது இழிவு படுத்திட முடியுமா?

 ரொம்பவெல்லாம் சிரமப்பட வேண்டாம். கரூர் எம்.பி செல்வி ஜோதிமணி அவர்களின் முக நூல் பக்கத்துக்கு செல்லுங்கள் போதும்.

 அவருடைய பதிவுகளுக்கு சங்கிகள் போடும் பின்னூட்டங்களே அவர்கள் பெண்களை எப்படி மதிக்கிறார்கள் என்பதை உணர்த்தி விடும்.

 பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிற வரை தான் ஒரு பிரம்மச்சாரி என்று பொய் சொல்லிக் கொண்டிருந்தவரின் தொண்டர்கள் பெண்களுக்காக போராடுகிறார்கள் என்பதை விட மிகப் பெரிய நகைச்சுவை ஏதுமில்லை.

 பிகு 1:  எச்சரிக்கை

 சாஸ்திரங்களோ, வேதங்களோ, மனு தர்மமோ பெண்களை இழிவு படுத்தவில்லை என்று யாரும் தோளைத் தட்டிக் கொண்டு வர வேண்டாம் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். பதினான்கு  வருடங்களுக்கு முன்பு ஆதாரங்களோடு நான் எழுதிய கட்டுரையை  அடுத்ததாக மீள் பதிவு செய்யவுள்ளேன்.

பிகு 2 :

அதற்கு முன்பாக 22.02.2020 அன்று எழுதிய பதிவை மீள் பதிவு செய்துள்ளேன்.  இந்த சம்பவம் குறித்து இந்த கண்ணியவான்கள் யாராவது வாய் திறந்துள்ளார்களா?

சாஸ்த்திரங்களை கொளுத்துங்கள்




இதை எழுத கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் வேறு வழியில்லை. எழுதித்தான் ஆக வேண்டும்.

கடந்த வாரம் மோடியின் குஜராத்திலே ஒரு கேவலமான சம்பவம் நடந்தது.

சுவாமி நாராயன் கோயிலைச் சேர்ந்த ஒரு பள்ளி விடுதியில் மாத விடாய்க் காலத்தில் உள்ள பெண்கள் மற்ற பெண்களோடு சேர்ந்து உணவு உண்ணக் கூடாதாம். ஆனாலும் சில பெண்கள் அந்த விதியை மீறுகிறார்கள் என்ற சந்தேகத்தில்  அறுபது மாணவிகளை கழிப்பறைக்கு அழைத்துச் சென்று அவர்களின் உள்ளாடைகளைக் களைந்து அவர்கள் மாத விடாய்க் காலத்தில் உள்ளார்களா என்று சோதித்துள்ளார்கள்.

வலிமையான கண்டனம் எழுந்த பின்னணியில் அந்த விடுதியின் மேலாளரும் இன்னும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வளவு பிற்போக்குத்தனமான செயலை செய்யும் தைரியம் யார் கொடுத்தது என்று பார்த்தால்

அந்த நிறுவனங்களை நடத்தும் சாமியாரே ஒரு கேடு கெட்டவனாகத்தான் இருக்கிறான்.

மாத விடாய்க் காலத்தில் சமைக்கும் பெண்கள் அடுத்த பிறவியில் நாய்களாகத்தான் பிறப்பார்கள் என்றும் அப்படி சமைக்கப்பட்ட உணவை சாப்பிடும் ஆண்கள் காளைகளாகத்தான் பிறப்பார்கள் என்றும் சொல்லியுள்ளான்  கிருஷ்ணஸ்வரூப்தாஸ் என்ற அந்த மடாதிபதி (மட அதிபதி).

மாத விடாய் என்பது ஒரு இயற்கையான ஒன்று என்பதை புரிந்து கொள்ளாமல் பெண்களை அந்த காலகட்டத்தில் தீட்டு என்று ஒதுக்கி வைப்பது எவ்வளவு கேவலமான சிந்தனை! இவன் ஒரு பெண்ணுக்குப் பிறந்தவன்தானே!

இது நியாயமா என்று கேட்டால் இது ஒன்றும் என் கருத்தில்லை. சாஸ்திரங்கள் சொல்லியுள்ளதைத்தான் நான் சொல்கிறேன், பின் பற்றுகிறேன் என்று விளக்கம் வேறு அளித்துள்ளான்.

பெண்களை இழிவுபடுத்துகிற சாஸ்திரங்களை கொளுத்திட வேண்டும்.  அந்த நெருப்பு இத்தீயவர்களை பொசுக்கிட வேண்டும்.

பிகு 3 : அந்த பெரிய மனிதனின் பெயரை நான் மறைக்கவில்லை. பொய்மையை அம்பலப்படுத்தும் நல்ல வாய்ப்பாகவே கருதுகிறேன்

பிகு 4 : இந்த பதிவின் முகப்பில் என்ன படம் வைக்கலாம் என்று யோசித்த போது திரைக்கலைஞர் தோழர் பொன்வண்ணன் வரைந்த தோழர் தொல்.திருமாவின் படத்தைப் பார்த்தேன். இன்று அதுதானே பொருத்தம்.

YES, WE STAND WITH YOU

 

No comments:

Post a Comment