Tuesday, October 20, 2020

நீட் – தேவையில்லாத ஆணியே

 



இந்த வருட நீட் தேர்வு முடிவுகள்  உணர்த்தும் உண்மை ஒன்றுதான். அத்தேர்வு அவசியமில்லை.

 

மருத்துவப் படிப்பிற்கான தகுதியை நிர்ணயிக்கும் அந்த நிறுவனம் தகுதியானதுதானா என்ற கேள்வியை அந்த நிறுவனம் வெளியிட்ட தேர்வு முடிவுகளின் பட்டியலே உருவாக்கி விட்டது. தேர்வு எழுதியவர்களை விட பல மடங்கு  பேர் தேர்ச்சி பெற்றதாகவும் சதவிகிதக் கணக்குகளும் அந்த நிறுவனம் ஒரு பூஜ்ஜியம் என்றே உணர்த்துகிறது. ஒரு அறிக்கையை தயாரிப்பதிலேயே அலட்சியம் காண்பிக்கிற அமைப்பு தேர்வுக்கான வினாக்களை தயாரிப்பதிலும் விடைகளை திருத்துவதிலும் கவனம் செலுத்தியிருக்கும் என்று எப்படி நம்ப முடியும்?

 

ஒடிசாவை சேர்ந்த மாணவன் நூறு சதிவிகித மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்றதாக செய்தி. அந்த மாணவன் எங்கள் பயிற்சி மையத்தில்தான் படித்து தேர்ச்சி பெற்றான் என்று ஆறு பயிற்சி மையங்கள் விளம்பரம் வெளியிட்டுள்ளதும் ஒரு செய்தி.

 


“ஸ்ரீஜன் சூர்யாவுக்கு மரண அடி” என்ற தலைப்பில் ஒரு செய்தியில் நீட் தேர்வு எளிமையானதுதான் என்று ஒரு மாணவன் சொன்னதாக பார்த்தேன். அந்த மாணவனின் பின்னணியில் ஒரு கோச்சிங் மையம் இருப்பதை நீங்களும் பாருங்கள்.

 


ஆடு மேய்ப்பவரின் மகன் அரசுப் பள்ளி மாணவர்களிலேயே முதலாவதாக தேர்ச்சி பெற்றதற்காக பாஜகவினர் சால்வை அணிவித்ததாகவும் ஒரு செய்தி. அனிதாவின் மரணத்தின் போது ஆசிரியை பணியை ராஜினாமா செய்த சபரிமாலா, பல பேரிடம் பணம் திரட்டி அந்த மாணவனை தனியார் பயிற்சி மையத்தில் படிக்க வைத்து வெற்றி பெற வைத்தார். அந்த மாணவனுக்கு சால்வை அணிவிக்க பாஜகவிற்கு என்ன தகுதி இருக்கிறது என்ற விமர்சனங்களையும் பார்த்தேன். ஆசிரியை சபரி மாலாவும் ஒரு காணொளியில் அந்த கேள்வியை எழுப்பியிருந்தார்.

 


இந்த செய்திகள் எல்லாம் ஒரு முக்கியமான உண்மையைத்தான் உரைக்கின்றன.

 யாரெல்லாம் பணம் பறிக்கும் பயிற்சி மையங்களில் பயின்றார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றுள்ளார்.

 பனிரெண்டாம் வகுப்பு முடிந்த வருடமே இவர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. ஒரு வருடம் முழுதும் நீட் தேர்விற்காக பயிற்சி எடுத்துக் கொண்ட பிறகே வெற்றி பெற்றுள்ளார்கள்.

 நான் அறிந்து இந்தாண்டு தேர்ச்சி பெற்ற பலரும் கூட மேலே சொன்ன வரையறைக்கு உட்பட்டவர்களே.

 ஆக “நீட்” தேர்வில் வெற்றி பெற வேண்டுமெனில்

 ஒரு வருட கல்வியை தியாகம் செய்தாக வேண்டும்.

தனியார் பயிற்சி நிறுவனத்தில் சில லட்சங்களை கொட்டி பயில வேண்டும்.

 இவை இரண்டும் யாருக்கு சாத்தியம்?

 யாருக்கு சாத்தியம் என்பதை விட யாருக்கு சாத்தியமில்லை என்று பார்ப்பது மிகவும் முக்கியம்.

 ப்ளஸ் டூ படிப்பிற்கே தனியார் பள்ளியில் படிக்க கட்டணம் செலுத்த வழியில்லாமல் அரசுப் பள்ளிகளில் பயில்பவர்களுக்கு தனியார் பயிற்சி நிறுவனங்களில் லட்சக் கணக்கில் செலுத்துவது எப்படி சாத்தியம்?

 அரசுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கு எந்த மதிப்பும் கிடையாது என்றால் என்ன எழவிற்கு பொதுத்தேர்வுகள் நடத்த வேண்டும்.

 “நீட் தேர்வு தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப் படுபவை என்று சொல்வது சரியல்ல. தனியார் பயிற்சி நிறுவனங்கள் கோடி கோடியாக சம்பாதிப்பதற்கான ஏற்பாடன்றி வேறல்ல.

 நீட் அமைப்பிற்கும் தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கும் இடையே எழுதப்படாத புரிந்துணர்வு ஒப்பந்தம் இருக்கிறதா என்பது ஆராயப் பட வேண்டும்.

 நிச்சயமாக சொல்ல முடியும்.

நீட் என்பது தேவையற்ற ஆணியே.

 பிகு: நீட் தேர்வுக்கு எதிராக பணியை ராஜினாமா செய்த திருமதி சபரி மாலா, ஒரு மாணவனை மட்டும் தனியார் பயிற்சி நிறுவனத்தில் சேர்த்தது என்பது ஒரு முரண் என்றே பார்க்கிறேன்.


பிகு 2 : ஏழை மாணவர்களின் வாழ்வை அழிப்பது மோடி என்று மிகச் சரியாக சொல்லியுள்ள தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு வாழ்த்துக்கள்



 

No comments:

Post a Comment