Wednesday, November 17, 2021

பாட்டையா - சுவாரஸ்யம் இனி ஏது?

 


பாட்டையா பாரதி மணி (பாபா, புதுப்பேட்டை முதல்வர்)  நேற்று மறைந்து விட்டார். என் வாழ்வில் சந்தித்த மிகவும் சுவாரஸ்யமான மனிதர். முக நூல் மூலமாக பரிச்சயமானவர். ஒரே ஒரு முறை சந்தித்துள்ளேன். மறக்க முடியாத சுவாரஸ்யமான சந்திப்பு. வயது வேறுபாடு என்பது கொஞ்சம் கூட இல்லாமல் இயல்பாக பழகக் கூடியவர். 

எங்கள் மூத்த தோழர் காஸ்யபன் மறைந்த போது அவர் அனுப்பிய செய்தியே அவருடைய குணத்தை சொல்லும்.



பாட்டையாவிற்கு இதய அஞ்சலி.

அவருடைய நூல் பற்றி எழுதிய பதிவு கீழே

என்ன மனுஷன் சார் இவரு !!!!!

இந்த தலைப்பு ஓர் ஆச்சர்யத்தின் வெளிப்பாடு!

ஒரு ரசனையான மனிதனின் பல பரிமாணங்களை கண்டு வியந்து போனதின் விளைவு.

ஆமாம் இன்றைய பொழுது முழுதையும் என்னை ஆக்கிரமித்த ஒரு நூல் ஏற்படுத்திய பிரமிப்பு.

காலையில் சென்னை புறப்பட்டு கொஞ்ச நேரம் முன்புதான் வந்து சேர்ந்தேன். இடையில் இரண்டு மணி நேரம் காரிலேயே காத்திருப்பு. ஆனால் ஒரு நிமிடம் கூட அலுப்பு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொண்டது 

"புள்ளிகள், கோடுகள், கோலங்கள்"

இப்போது புரிந்து கொண்டிருப்பீர்களே,

ஆம் திரு பாரதி மணி அவர்கள் எழுதிய நூல்தான்.



சில வாரங்கள் முன்புதான் முகநூலில் அவருடைய நண்பர்கள் பட்டியலில் இணையும் வாய்ப்பு கிட்டியது. அதுவே இந்த நூலை சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்குவதற்கான தூண்டுதலாகவும் இருந்தது. 

ஒரு கலா ரசிகனாக, நாடக நடிகராக, அரசாங்க நெளிவு சுளிவுகளை கற்றறிந்த தொழில் நிறுவன நிர்வாகியாக, பல்வேறு ஆளுமைகளின் நெருங்கிய நண்பராக, திரைப்பட நடிகராக, தேர்ந்த சமையல் நிபுணராக பல முகம் காண்பிக்கிறார் திரு பாரதி மணி. 

ஐந்நூற்றி அறுபது பக்க நூலைப் பற்றி ஓரிரு பக்கத்துக்குள் அடக்குவது என்பது சாத்தியமில்லை. அதனால் அந்த முயற்சியில் நான் இறங்கவில்லை. 

நூல் முழுதும் இழையோடுகிற நகைச்சுவை இந்த நூலின் மிகப் பெரிய பலம். 

எதையும் மறைக்காமல் (தனது அளவான அதே நேரம் மிகுந்த ரசனையான மதுப் பழக்கம் உட்பட. சிவாஜி, ஜெமினி பற்றிய தகவல்களும் உண்டு) எழுதியுள்ள நேர்மை இன்னொரு பலம். 

ஜவஹர்லால் நேரு தொடங்கி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் பேன்ட்ரி  கார் மேனேஜர் வரை பரிச்சயம்  உள்ளவர். வங்க தேச பிரதமராக பின்னால் பொறுப்பேற்ற ஹசீனா டெல்லியில் இருந்த காலத்தில்  அவருக்கு வங்க தேசத்து பத்மா நதியில் கிடைக்கும் "ஹீல்சா மீன்" கிடைக்கவும் செய்துள்ளார். டெல்லி நிகம்போத்காட் சுடுகாட்டில் பலருடைய தகனத்திற்கும் தூணாய் நின்றுள்ளார்.

ஆணவம் மிக்க அரசியல்வாதியாக இதுநாள் வரை நாம் அறிந்திருக்கிற ராஜீவ் காந்தியை டெல்லி விமான நிலையத்தில் அவரது அன்னை ஆட்சியை பறி கொடுத்திருந்த காலத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் சோதனை செய்து படுத்திய போதும் அவர் பொறுமையாக இருந்தார் என்பது புதிய செய்தி.

அரசு வேலையை விட்டுவிட்டு தனது கம்பெனிக்கு வந்து சேருமாறு பிர்லா அழைக்கிற போது இரண்டு மடங்கு சம்பளமும் பழைய வேலைக்கான நோட்டீஸ் பீரியட் சம்பளத்தையும் கேட்கிற துணிவு எனக்கு பிடித்திருந்தது. அவரது கோரிக்கையை பிர்லா ஏற்கிறார்.

அது போல எல்லா முதலாளிகளும் எல்லா தொழிலாளர்களிடமும் நடந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

இந்த நூலில் அவர் எழுதியதை விட எழுதாமல் விட்டதுதான் அதிகம். 

அது போல இந்த நூல் பற்றி நான் எழுதாததுதான் அதிகம்.

தயங்காமல் இந்த நூலை வாங்கலாம். சுவாரஸ்யத்திற்கு நான் கியாரண்டி.

நீங்களும் சொல்வீர்கள்,

என்ன ரசனையான மனுஷன் சார் இவரு !!!!

அவருடனான சந்திப்பு பற்றிய பதிவு கீழே 

சந்திப்பில் .... முதல்வரோடு ஒரு சந்திப்பு,









ஆம், முதல்வரோடுதான் ஒரு சந்திப்பு. எடப்பாடி அல்ல. பாபா திரைப்பட முதல்வர் பாட்டையா பாரதி மணி அவர்களோடுதான். பல்வேறு பரிமாணங்கள் கொண்ட அவரோடு முக நூல் மூலமாகத்தான் அறிமுகம். கடந்த வருடம் சென்னை புத்தகத் திருவிழாவில் வாங்கிய அவரது ஐநூறு பக்க புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்து அவருக்கும் ரசிகனானேன். நகைச்சுவை உணர்வும் நையாண்டியும் கலந்த அந்த சுவாரஸ்யமான மனிதர் திருப்பத்தூருக்கு வந்திருப்பதாக முகநூலில் எழுதியிருந்தார். அந்த நூல் குறித்த பதிவின் இணைப்பு  இங்கே. . . .

வியாழனன்று திருப்பத்தூருக்கு ஒரு திருமணத்திற்கு செல்ல வேண்டியிருந்ததால் அன்று வரை நீங்கள் அங்கே இருப்பீர்களா என்று கேட்பதற்கு பதிலாக திங்கள் கிழமை வரை இருப்பீர்களா என்று கேட்டு இன்பாக்ஸில் தொடர்பு கொண்டேன். செய்தி அனுப்பிய உடனேயே  திங்கள் கிழமை காலை அன்று பெங்களூர் புறப்படுகிறேன் என்று பதில் போட்டார். பிறகுதான் வியாழன் என்பதற்குப் பதிலாக திங்கள் என்று எழுதிய தவறு புரிந்தது. அலுவலகம் போகாத நாளுக்கு மறுநாள் திங்கள் என்றே மனதில் பதிவாகியுள்ளது. கிழமையை தவறாக எழுதி விட்டேன் என்று சொன்னால் ஆமாம், நானும்தான் என்று பதில் போட்டார். வியாழன் காலை ஜோலார்ப்பேட்டை சந்திப்பில் சந்திப்பது என்று முடிவானது.

காலையில் திருப்பத்தூர் திருமணம் முடிந்து, முக்கியமாக சாப்பிட்டு முடித்த பின்பு அவர் எங்கே இருக்கிறார் என்று கேட்க திருப்பத்தூரிலிருந்து ஜோலார்ப்பேட்டை வந்து கொண்டிருப்பதாகச் சொன்னார். நான் திருப்பத்தூர் அருகில் இருப்பதாகச் சொன்னதும் ஜோலார்ப்பேட்டைக்கு காரில் செல்வதாகவும் ஒன்றாகவே கூட போகலாம் என்றும் சொன்னார். நான் காரில் வந்திருப்பதாகச் சொன்னதும் சரி நேரில் பார்ப்போம் என்றார்.

அடுத்த பதினைந்து நிமிடங்களில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. ஜோலார்ப்பேட்டை சந்திப்பில் நான் காத்திருக்க, காரிலிருந்து இறங்கி ரயில் நிலையத்துக்கு உள்ளே வராமல் எதிர்ப்பக்கமாக வேகமாக அவர் செல்ல, துரத்திக் கொண்டே போனேன். அது ஒரு மொபைல் கடை. அவர் வந்த வேலையை பார்க்க விடவில்லை. அறிமுகம் செய்து கொண்டு பேசத் தொடங்கினேன், இல்லையில்லை அவர் பேசுவதை கேட்கத் தொடங்கினேன்.

உங்கள் நூல் என்னை மிகவும் கவர்ந்தது என்று சொன்னதற்கு

என்னைப்  எழுத்தாளன் என்று சொல்லும் போது அப்படியே கூனிக்குறுகிப் போகிறேன். நான் எழுத்தாளன் என்றால் அப்புறம் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜானகிராமன் எல்லாம் யார்?

பதில் சொன்னார்.

அவரது திரைப்பட அனுபவங்கள், டெல்லி தொடர்புகள் குறித்து பேசினார். சாகித்ய அகாடமி யாருக்கு கிடைக்கப்போகிறது என்ற தகவல் கிடைக்கும். உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வரப்போகிறது என்று மட்டும் சொல்வேன். ஏதோ நான்தான் முயற்சி எடுத்து வாங்கிக் கொடுத்ததாக நன்றி சொல்வார்கள் என்றார். எமி ஜாக்சனுக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததை மறக்காமல் சொன்னார். பாரதி மணி நடிக்கும் படத்திற்கு விருது கிடைக்கும் என்று லெனின் ஷங்கரிடம் சொன்னது, அதன் படியே அன்னியனுக்கு கிடைத்தது, ஊருக்கு நூறு பேர் நல்ல படமாக இருந்தாலும் ஓடாதது, ஒரு சீனாக இருந்தாலும் பளிச்சென்று இருக்கும் என முப்பத்தி ஆறு வயதினிலே படத்தில் நடிக்க ஜோதிகா அழைத்தது பற்றி சொன்னார். சுகாவின் படத்தில் நடிக்க இருப்பது என்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

சந்திரா சுவாமி பற்றி எழுதியது சுவாரஸ்யமாக இருந்தது என்று சொன்னேன். நாளை அதை சுட்டு பதிவிடலாம் என்று யோசித்துள்ளேன்.

புழல் நிரம்பாமால் சென்னை வர மாட்டேன், சிறை அல்ல, ஏரி என்று முகநூலில் பதிவு போட்டதை நினைவு படுத்தி அதில் உறுதியாக இருக்கிறேன் என்றார். சிறை வேண்டுமானால் நிரம்பலாம், ஏரி நிரம்பும் வாய்ப்பு குறைவு என்றேன் நான்.

அந்த மொபைல் கடையில் அவர் வந்த வேலை நடக்கவில்லை ஆனாலும் கூட அவர் கிளம்புகையில் அந்த உரிமையாளரைப் பார்த்து “நுகர்வோருடனான உங்கள் அணுகுமுறை மிகவும் நன்றாக இருக்கிறது, காட் ப்ளெஸ் யு” என்று வாழ்த்தி விட்டுத்தான் புறப்பட்டார்.

நீங்கள் படிகளில் ஏறுவதற்கு பதிலாக ஸ்லோப்பில் செல்லுங்கள் என்று அவர் சொல்ல, எனக்கு முட்டியில் எல்லாம் பிரச்சினை இல்லை என்றும் என்னுடைய ஸ்பைனில் எல்.5, எல்6 பிரச்சினைக்கு ஸ்விம்மிங்தான் நல்லது என்று டாக்டர் சொல்கிறார். சென்னையில் எந்த ஸ்விம்மிங் பூலும் சுகாதாரமில்லாமல் நாற்றமடிக்கிறது. பெங்களூரில் இருப்பதே அதற்காகத் தான் என்று சொன்னார்.

புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். பிளாட்பார்மிற்கு புறப்பட்டார். எனக்கு முட்டியில் பிரச்சினை இருக்கிறது. அதனால் இங்கிருந்தே விடைபெற்றுக் கொள்கிறேன் என்றேன், கொஞ்சம் வெட்கத்துடன். மெல்லமாக அணைத்து “காட் பிளஸ் யு” என்று சொல்லி புறப்பட்டார். படிகளில் அவர் கொஞ்சம் வேகமாக ஏறுகையில் பொறாமையாகக் கூட இறந்தது.

பின் குறிப்பு 1 : நடுவில் அவர் பைப்பை எடுத்து புகைக்கையில் நாமும் பைப்பிற்கு மாறி விடுவோமா என்று யோசித்தேன். விரைவில் விட்டுவிடுவதாக மனைவிக்கு கொடுத்த வாக்குறுதி நினைவிற்கு வந்ததால் அந்த யோசனையை அந்த நிமிடத்திலேயே துறந்து விட்டேன். 

பின் குறிப்பு 2 : கடைசி படத்தில் இருப்பவர் எங்கள் தோழர் சி.கணேசன். "இந்த வயசுலயும் எவ்வளவு வேகமா இருக்காரு, கொஞ்சம் கூட பந்தாவே இல்லாம" என்று இன்று காலையில் சொன்னார்.

"அதனால்தான் அவரை எல்லாருக்கும் பிடிக்கிறது" என்று பதில் சொன்னேன்.

ஆமாம். அதுதானே உண்மை!

1 comment:

  1. சிறந்த அஞ்சலிப் பதிவு

    ReplyDelete