Thursday, November 4, 2021

தீபாவளி - பன்முகத்தன்மையின் அடையாளம்

 


*நாளொரு கேள்வி: 04.11.2021*

தொடர் எண்: *522*

*தீபத் திருநாள் வாழ்த்துகள்*

இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *க.சுவாமிநாதன்*
##########################

*தீப ஒளியில் தீர்க்கமாய் பளிச்சிடும் பன்மைத்துவ அழகு*

கேள்வி: தீபாவளி வெகு சன விழாவாக மக்களின் மனங்களில் மகிழ்ச்சியை நிறைக்கிறதே! எப்படி அது கோடிக் கணக்கான மக்களின் கொண்டாட்டமாக திகழ்கிறது? 

*க.சுவாமிநாதன்*

திருவிழாக்கள், பண்டிகைகள் ஆகியன *வரலாறு, பண்பாடு, நம்பிக்கைகள், வருமான உருவாக்கம்* ஆகிவற்றோடு பின்னிப் பிணைந்தது. 

தீபாவளி கோடிக் கணக்கான மக்களால் மகிழ்ச்சியோடும், பரவசத்தோடும் கொண்டாடப்படுகிற நாள். *வாழ்வின் துயரங்களை கடக்க முனைகிற ஏழை எளிய மக்களின் எத்தனிப்பும் விழாவின் உணர்ச்சி பூர்வமான பங்கேற்பை உந்தித் தள்ளுகிறது.*

தீபாவளியின் பெருமை அதன் *பன்மைத்துவ கொண்டாட்டமே.* அது இந்து, சமணம், பௌத்த மதம் சார்ந்து வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடப்படுவதும், இந்து மதத்திற்குள்ளே கூட காரணங்கள் மாறுபடுவதும், கொண்டாட்ட வடிவங்கள் வேறுபடுவதும் இதற்கு சாட்சியங்கள். *"ஒற்றை பண்பாடு"* என பன்மைத்துவ பாரம்பரியம் கேள்விக் குறியாக்கப்படும் சூழலில் அதற்கான பதிலாக தீபாவளி கொண்டாட்டங்கள் உள்ளன. இது குறித்து தேடினால் கிடைக்கிற தகவல்கள் நம்மை வியக்க வைக்கிறது. ஒரு பண்டிகைக்கு  எத்தனை கதையாடல்கள்! 

இந்து மதத்திற்குள்ளேயே எத்தனை எத்தனை விதமான நம்பிக்கைகள்.   

* பிரபலமான கதை, வராக அவதாரம் எடுத்த திருமாலின் தீண்டலில் பூமா தேவிக்கு பிறந்த *நரகாசுரனின் வதம்தான்.* இது கிருஷ்ண லீலா.

* வனவாசம் முடிந்து *இராமன், சீதை, லட்சுமணன்* அயோத்திக்கு திரும்பிய நாள் இது என்ற நம்பிக்கையோடு கொண்டாடப்படுவது  இன்னொரு கதை. 

வராக அவதாரம், கிருஷ்ணாவதாரம், இராமாவதாரம் என திருமாலின் மூன்று அவதாரங்களும் தீபாவளியோடு இணைந்திருக்கின்றன. 

* *விஷ்ணு புராணம்* தீபாவளியை மகாலட்சுமி பூஜை என்கிறது. 

* *ஸ்கந்த புராணம்* சக்தியின் 21 நாள் விரதம் முடிகிற நாள் என்கிறது. அன்றைய நாள்தான் சிவன் சக்தியை தன்னில் பாதியாக (அல்லது சக்தியில் பாதியாய் தன்னை) ஆக்கி அர்த்த நாரீஸ்வரர் ஆக (அல்லது அர்த்த நாரீஸ்வரியாக) உருவெடுத்த நாள் எனக் கூறுகிறது. 

* வாத்ஸ்யாயனர் எழுதிய நூல் ஒன்று *"யட்ஷ ராத்திரி"* என்று தீபாவளியை குறிப்பிடுகிறது.... *யமனும் சனியும்* தீபாவளி அன்று மட்டும் மக்களை மகிழ்விப்பார்கள்  என்று ஒரு நம்பிக்கை. 

இப்படி பல நம்பிக்கைகள் இந்து மதத்திற்குள்ளேயே... இந்து அல்லாதவர்களும் இதே நாளை கொண்டாடுகிறார்கள். 

* *சீக்கியர்கள்* 1577 ஆம் ஆண்டு பொற்கோயில் கட்டுமானப் பணிகள் துவங்கிய நாள் என்று தீபாவளியை கொண்டாடுகிறார்கள். இது அவர்கள் மத்தியில் உள்ள 450 ஆண்டு கால கதையாடல். 

* *சமணர்கள்* மகாவீரர் முக்தி அடைந்த நாள் என தீபங்களை ஏற்றி கொண்டாடுகிறார்கள். 

* உஜ்ஜயினி அரசன் *விக்ரமாதித்தன்* பட்டம் சூட்டிய நாள் தீபாவளியாக கொண்டாடப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் உள்ளன. 

* நேபாளத்தில் நாய்களுக்கு தீபாவளி அன்று மரியாதை செய்கிறார்கள். காரணம் நாய்கள், யமராஜனின் தூதர்கள் என்பது நம்பிக்கை. மகாபாரதத்தில் *தர்மர் உடன் நாய் சொர்க்கத்திற்கு பயணம்* செய்தது. நாய்கள் இறந்த பிறகும் எசமானர்களை பாதுகாக்கும் என்பது நம்பிக்கை. 

வட மாநிலங்களில் ஐந்து நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அமாவாசை முடிந்த இரண்டாம் நாள் துவிதியை அன்று *சகோதரிகள் சகோதரர்களை விருந்து அளித்து உபசரிப்பார்கள்* என்ற பாசக் கதையும் தீபாவளியின் உணர்ச்சிமிக்க அங்கம். 

அயல் நாடுகளில் வணிகம் செய்ய இந்தியர்கள் சென்ற நாடுகளில் எல்லாம் தீபாவளி பரவியுள்ளதால் *சர்வதேச திருவிழாவாக* மாறி இருக்கிறது. 

*சிவகாசி* பட்டாசு தொழில் சார்ந்தவர்கள் தீபாவளி அன்று அவர்களால் கொண்டாட முடியாததால் இன்னொரு நாளை பின்னர் தெரிவு செய்து கொண்டாடுவார்கள் என்பது வணிகம் சார்ந்த நடைமுறை. 

இப்படி வெவ்வேறு மதங்கள், மதத்திற்குளேயே வேறுபடும் நம்பிக்கைகள், வடிவங்கள், பகுதிகள் என பன்முக கொண்டாட்டங்கள் நமக்கு உணர்த்துகிற உண்மை ஒன்றுதான். 

*ஒற்றை பண்பாடு* என்பது பன்மைத்துவ பாரம்பரியத்தை மறுதலிப்பது என்பதே.

ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்பது போல் எல்லோரையும் ஈர்க்கிற பண்டிகை ஆக தீபாவளி இருக்கிறது. அதன் அழகே உள்ளார்ந்த பன்மைத்துவம்தான். அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு பெரிது. ஆனால் நானும் நீயும் ஒன்றாய்க் கொண்டாடுவோம் என்பது எவ்வளவு பெரிய பக்குவம். கோடிக் கணக்கான மக்களின் கொண்டாட்டமாக தீபாவளி திகழ்வதற்கும் இதுவே காரணம். 

எல்லோருக்கும்
தீபத் திருநாள் வாழ்த்துக்கள். 

*செவ்வானம்*

No comments:

Post a Comment