Tuesday, November 30, 2021

திரிபுரா - அவர்கள்தான் வெட்கப்பட வேண்டும்

 தீயில் எரியும் திரிபுரா



 மூன்று நாட்களுக்கு முன்பு எழுதிய “தக்காளி இல்லா வெங்காய சட்னி” என்ற பதிவில் செல்வகுமார் என்பவர் திரிபுரா உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்தும் அகர்தலா மாநகராட்சியில் சி.பி.ஐ(எம்) ஒரு இடம் கூட பெறாதது குறித்தும் ஒரு பின்னூட்டமிட்டிருந்தார்.

 பதிவிற்கு தொடர்பில்லாத பின்னூட்டமென்பதால் நீக்கியிருந்தேன். ஆனால் திரிபுரா பற்றி விரிவாக எழுதுவேன் என்று கூறியிருந்தேன். அந்த அடிப்படையில்தான் இந்த பதிவு.

 திரிபுராவில் சில ஆண்டுகளுக்கு முன்பாக பாஜகவிற்கு அமைப்பு என்பதோ உறுப்பினர் பலம் என்பதோ கிடையாது. அங்கே எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியினர் ஒட்டு மொத்தமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியாக மாறினார்கள். அப்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினராக மாறியவர்களை நல்ல விலை கொடுத்து பாஜகவாக மாற்றிக் கொண்டார்கள்.

 மற்ற இடங்களில் தேச பக்தி வேடம் போடும் பாஜக, திரிபுராவில் தனி நாடு கேட்கும் அமைப்போடு கூட்டணி வைத்துக் கொண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தது. இடது முன்னணி ஆட்சியைப் பற்றி எந்த குற்றச்சாட்டையும் முன் வைக்க முடியாததால் மத்தியில் ஆட்சி செய்யும் ஆட்சியே மாநிலத்திலும் ஆட்சி செய்தால்தான் வளர்ச்சி சாத்தியம் என்று பிரச்சாரம் செய்தது. பிரிவினைவாத சக்திகளால் மோதல்களிலும் தாக்குதல்களிலும் மூழ்கிக் கிடந்த மாநிலத்தை அமைதிப் பூங்காவாக மாற்றியது இடது முன்னணிதான் என்ற வரலாறு தெரியாத இளைஞர்கள் பாஜகவின் பொய் முழக்கங்களில் ஏமாந்து பாஜகவை வெற்றி பெறச் செய்து பிப்ளப் தேவ் எனும் கோமாளியை முதல்வராக்கினார்கள்.

 அப்போது முதல் திரிபுராவில் நடைபெறுவது ரௌடிகள் ராஜ்ஜியமே. அகர்தலாவில் லெனின் சிலை வீழ்த்தப்பட்டதை நம்மால் மறந்து விட முடியுமா?

 எதிர்க்கட்சிகள், அவர்கள் நடத்தும் இயக்கங்கள் மீது கொலை வெறித் தாக்குதல்கள் நடத்துவது என்பது இயல்பான நடவடிக்கையாகி விட்டது.

 ஆட்சியாளர்களின் செயலின்மையைக் கண்டித்து மார்க்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செப்டம்பர் மாதம் கண்டனப் பேரணிகள் நடத்திய போது பாஜகவைச் சேர்ந்த ரௌடிகள் வெறித் தாக்குதல்கள் நடத்தினார்கள். காவல்துறை ஆட்சியாளர்களின் ஏவலர்களாக மாறினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தை காவல் காத்தவர்கள் திரும்பப் பெறப்பட்டு குண்டர்கள் அலுவலகத்தை தாக்கினார்கள்.

 அப்போதைய புகைப்படங்கள் நிலைமையின் தீவிரத்தை உணர்த்தும்.
















 உள்ளாட்சித் தேர்தல்கள் நெருங்கிய நிலைமையில் வங்க தேசத்தில் நடந்த சம்பவங்கள் அவர்களுக்கு ஊக்கமளித்தது. துர்கா பூஜை பந்தலொன்றில்  குரான் நூலொன்றை காளி சிலை அருகில் வைக்க இந்துக்களுக்கு எதிராக கலவரம் வெடித்து அவர்கள் தாக்கப்பட்டார்கள்.  வங்க தேச அரசு எடுத்த உறுதியான நடவடிக்கைகள் காரணமாக ஓரிரு நாளில் இயல்பு நிலை திரும்பியது. சமூக அமைதியைக் கெடுப்பதற்காக இச்சதிச்செயலில் ஈடுபட்டவர்களையும் கண்டு பிடித்து கைது செய்தார்கள்.

 இந்த சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டு திரிபுரா மாநிலத்தில் பாஜக ரௌடிகள் இஸ்லாமியர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள், மசூதிகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இத்தாக்குதல்கள் உள்ளாட்சித் தேர்தல் வரை தொடர்ந்தது. எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மிரட்டப்பட்டார்கள். பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. பல வேட்பாளர்கள் ஆயுதங்கள் மூலம் மிரட்டப்பட்டு வேட்பு மனுவை திரும்பப் பெற வைத்தார்கள். எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்க வாய்ப்புண்டு என்று கருதப்பட்டவர்கள் எல்லாம் வாக்குச்சாவடிக்கு அருகில் செல்லக் கூட அனுமதிக்கவில்லை.

 அகர்தலா உயர் நீதிமன்றம் தலையிட்டும் கூட மாநில தேர்தல் ஆணையமும் காவல் துறையும் வேடிக்கை பார்த்தது.

 இப்படிப்பட்ட சூழலில் திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி என்பது ஜனநாயகத்துக்குக் கிடைத்த தோல்வியே. இந்த அராஜகத்திற்கு காலம் பதில் சொல்லும்.

 தோல்விக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வெட்கப்பட வேண்டியதில்லை.  கீழ்த்தரமான முறையில் வெற்றி பெற்றதற்காக பாஜகதான் வெட்கப்பட வேண்டும்.

 ஆனால் இந்த நிலைமை தொடர அனுமதிக்க முடியுமா?

 தோழர் பி.சீனிவாச ராவ் சொன்ன வழிமுறையை திரிபுரா மாநில மக்கள் கையிலெடுத்தால் மட்டுமே அராஜகம் நிற்கும்.

 

No comments:

Post a Comment