Sunday, November 21, 2021

ஜெய் பீம் - ஒரு சம்பவம் மட்டுமே

ஜெய் பீம் படம் தொடர்பாக அவசியமற்ற சர்ச்சைகள் ஆயிரத்தை சமூக அமைதிக்கு எதிராக உள்ளவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜெய்பீம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையிட்ட ஒரு பிரச்சினையின் அடிப்படையிலானது. ஆயிரம் திரைப்படங்கள் தயாரிக்கக் கூடிய அளவிற்கான தலையீடுகளை மார்க்சிஸ்ட் கட்சி செய்துள்ளது. 

பழங்குடி இன மக்களுக்காக சமீப காலங்களில் கட்சி செய்த தலையீடுகள் குறித்த முக்கியமான கட்டுரையை அவசியம் படியுங்கள். 



 குரலற்றவர்களின் குரலாய் ஒலித்த கம்யூனிஸ்ட்கள்..

------------------------------------
~பி.டில்லிபாபு / தீக்கதிர்


ஜெய்பீம் திரைப்படம் - மிகப்பெரிய அளவில் உலக அரங்கில் பேசப்படும் - திரைப் படமாக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் வாழும் பழங்குடி இருளர் இன மக்களின் அவலநிலைகளை நிஜங்களை முன் நிறுத்தியுள்ளது.

இதன் கருவானது அனைத்து 36வகையான பழங்குடி மக்களின் தொப்புள் கொடி உறவு என்பது போல்... இதோ... எங்கள் பழங்குடியினரின் அவலநிலையை படம்பிடித்து காட்டிய படம் என்று சொல்லும் அளவிற்கு தமிழகத்தின் அனைத்து பழங்குடியினர் மத்தியிலும் பேசப்படும் பொருளாக தொடர்கின்றது.

பழங்குடி மக்களின் அவலநிலைகளை யும், காவல் சித்ரவதைகளையும் திரைப்பட மாக கொண்டு வந்த ஜெய்பீம் பட குழுவி னர்களுக்கும், திரைக்கலைஞர் சூர்யா அவர்களுக்கும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இத்திரைப்படத்தின் தாக்கம் நவம்பர் 4-ஆம் தேதியன்று தமிழக முதலமைச் சர், செங்கல்பட்டு மாவட்டம் பூச்சேரி கிரா மத்திற்கு சென்று இருளர் இனமக்களுக்கு பட்டா, இனச்சான்றிதழ், வாக்காளர் அடை யாள அட்டை போன்றவைகளை வழங்கியது டன் தமிழகத்தில் 2 வாரங்களுக்கு பழங்குடி யினருக்கான நல உதவிகளை வழங்கிட உத்தரவு பிறப்பித்ததும் அதன் பின்னர், மதிப்புமிக்க, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதன் விளைவாக அமைச்சர்க ளும், அரசு உயர் அதிகாரிகளும் இருளர், பழங்குடி மக்களின் குடியிருப்புகளுக்கு சென்று வீட்டுமனைப்பட்டா, இனச்சான்றி தழ் போன்றவற்றை வழங்கி வருவது பழங்குடி மக்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கடந்த 30 ஆண்டுகாலமாக அனைத்து 36 பிரிவு பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக வாச்சாத்தி, கடமலைக்குண்டு, எளச்சூர், கல்லார்குடி (வால்பாறை) போன்ற பல்வேறு பிரச்சனைகளில் இன்றைக்கும் பழங்குடியின மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடி வருகின்றது.

சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத் திலும்...

பழங்குடியின மக்களுக்காக குரல் கொடுத்திட பிரதிநிதித்துவம் இல்லாத அவல நிலை உள்ளதாக சமீபத்தில் இந்து நாளிதழில் கட்டுரையை வாசித்தேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பழங்குடி யின மக்களுக்காக சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் குரல் கொடுத்து வருவதுடன் தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றது.

1997-ஆம் வருடம் வேலூர் மாவட்டம், பொன்னை கிராமத்தில் அப்பாவி குறவர் இன மக்களை இரவோடு இரவாக இழுத்துச் சென்று திருவள்ளூர் மாவட்ட காவல் நிலையத்தில் அடைத்து, சித்ரவதை செய்து, தலைமறைவாகவே காவல்நிலையங்களை மாற்றி மாற்றி கடத்தி அடைத்து வைத்தி ருந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, குறவன் பழங்குடி மக்கள் மறுமலர்ச்சி சங்கம் ஆகியவை போராட்டங்களை நடத்தின.

பின்னர் ஆட்கொணர்வு மனு செய்து, திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்னர் 5 பேர்களை காவல்துறையினர் கொண்டு வந்து நிறுத்தினர். ஆயினும் அவர்கள் மீது 11 பொய் வழக்குகள் போடப்பட்டன. இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர்.ஏ.வி.சண்முகம், திருவள்ளூர் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லும் போது இவர்கள் திரு டர்கள் இல்லை; நிரபராதிகள். இவர்கள் குறவன் சாதிக்காரர்கள் என்பதாலே சந்தே கத்தில் பிடித்து பொய் வழக்கு போடுகிறார் கள் என்று நீதிபதியிடம் மனவேதனையுடன் சாட்சியம் அளித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாகத் தான் 2002-ஆம் ஆண்டு ஊத்தங்கரையை அடுத்த எளச்சூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி, மகன் ஆனந்தன், மனைவி மணிமேகலை மூவரை யும் திருட்டு வழக்கிற்காக வாணியம்பாடி காவ லர்கள் கைது செய்து காவல் நிலையத்தில் நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்ததும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மணிமேகலைக்கு நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இதர வெகுஜன அமைப்புகளும் 3000-க்கும் மேற்பட்டோர் வாணியம்பாடி காவல் நிலையத்தை முற்று கையிட்டு போராட்டம் நடத்தினர்.

பாதிக்கப் பட்ட குறவர் மக்களுக்கு நீதிவழங்கிட சட்ட மன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.கே.பாலபாரதி, எஸ்.கே. மகேந்திரன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் அன்றைக்கு குரல் எழுப்பினர் .

அப்போது அன்றைய முதலமைச்சர் செல்வி.ஜெய லலிதா இச்சம்பவம் சினிமா படத்தில் வருவது போல இருக்கிறதே என்று சொல்லி பாதிக்கப் பட்ட பெண்களுக்கு தலா ரூ.25,000 வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழங்கப் பட்டது.

பின்னர் நீதிபதி இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்ய உத்தர விட்டார்.

இன்றைக்கும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் வாழும் இருளர் இனமக்க ளுக்கு இனச்சான்று, வீட்டுமனைப்பட்டா, பழங்குடியினர் நலவாரிய அட்டை, மின்சார வசதி, குடும்ப அட்டை போன்ற பழங்குடி மக்களின் உரிமைகளை போராடிப் பெற்று தருகிறது.

அது மட்டுமல்லாமல், திரு வண்ணாமலை மாவட்டத்தில் இருளர் இன பழங்குடி பெண்கள் ஆதிக்க சக்தியினரால் பாலியல் பலாத்காரம், வன்புணர்ச்சியால் பாதிக்கப்பட்ட இருளர் இன மக்களுக்கு நீதியையும் நியாயத்தையும் பெற்றுத் தந்தது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமாகும்.

வனத்தைச் சார்ந்த பழங்குடி மக்களு க்கு காடுகளின் மீதான உரிமையை பெற்றிட வனஉரிமைச்சட்டம் 2006- நாடாளுமன்றத் தில் நிறைவேற்றிட முதல் முதலில் குரல் கொடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

அன்றைய நாடாளுமன்ற குழுவில் இடம் பெற்றிருந்த தோழர்கள் பிருந்தாகாரத், மறைந்த தோழர் பாஜுபான் ரிபாங் ஆகிய இருவரின் பங்களிப்பை இந்த தேசமும் அனைத்து அரசியல் கட்சியினரும் மறந்திட முடியாது.

மதுரை மாவட்டத்தில் திருமலை நாயக்கரின் மெய்காப்பாளர்களாக பரம் பரை, பரம்பரையாக இருந்து வந்த மலை வேடன் பழங்குடி இன மக்களை பழங்குடி யினர் பட்டியலில் இணைத்திடக் கோரி “வாழும் வரலாறு, சுந்திரப் போராட்டத் தியாகி, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூறு ஆண்டு வரலாற்றை கொண்டவர், மதிப்பு மிக்க தோழர்.என்.சங்கரய்யா”, மதுரை மண்ணின் கம்யூனிஸ்ட் வீராங்கனை பெண் விடுதலைப்போராளி என்று புகழ்பெற்ற தோழர்.ஜானகி அம்மாள் ஆகிய இருவ ரும் சட்டமன்ற உறுப்பினர்களாக பணி யாற்றிய காலத்தில் ஒன்றுபட்ட மதுரை மாவட்டத்தில் (இன்றைக்கு மதுரை, திண்டுக்கல், தேனி) வாழ்ந்து வரும் மலை வேடன் பழங்குடி இனமக்களை பழங்குடியி னர் பட்டியலில் இணைத்திட வேண்டும் என சட்டமன்றத்தில் பேசினர் .

அத்துடன், தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிற்கு பரிந்துரை யும் செய்ய வைத்து, மலைவேடன் பிரச்ச னையை நாடாளுமன்றத்தில் தோழர்.சமர்முகர்ஜி விளக்கம் அளித்து பேசிய வுடன் அதன் விவாதத்தில் கோரிக்கையை தோழர்கள் ஏ.கே.கோபாலன், ஜோதிர் மாய்பாசு இருவரும் வலியுறுத்தி பேசி னார்கள்.
அதன் பின்னர் 27.07.1977 நாடாளு மன்றத்தில் தாழ்த்தப்பட்டோர் (LO) பழங்குடியினர் திருத்தச் சட்டம் 108/7 கொண்டுவரப்பட்டு தமிழ்நாடு முழுவதும் மலைவேடன் பழங்குடி மக்களை பழங்குடி பட்டியலில் இணைத்து அறிவிக்கை செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் குருமன்ஸ் பழங்குடியின உட்பிரிவில் உள்ள குரும்பர், குருமன், குரும்பா இவைகளை பழங்குடியினர் பட்டிய லில் இணைத்திட 1996-97ஆம் ஆண்டுகளில் தோழர்.இ.பாலானந்தன் எம்.பி நாடாளு மன்றத்தில் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்து குருமன்ஸ் இன பிரிவுகளை பழங்குடி யினர் பட்டியலில் இணைத்திட வேண்டி தீர்மானத்தை நிறைவேற்றி அம்மக்க ளுக்காக திருப்பத்தூரில் நடைபெற்ற போராட்டத்திலும் பங்கேற்றார்.

1992ஆம் ஆண்டில் வாச்சாத்தியில் நடந்த கொடுமையை நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்று வாச்சாத்தி மக்களுக் காக வழக்கு தொடரவைத்தவர் தோழர். அ.நல்லசிவன் எம்.பி ஆவார்.
அதன் பின்னர் இம்மக்களுக்கு சிபிஐ விசாரணை கோரி அரூரில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தவர் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம்.

சங்கத்தின் சார்பில் மத்திய புலனாய்வு விசாரணைக்கு உத்தரவு பெற்று தொடர்ந்து பாதிக்கப்பட்ட வாச்சாத்தி பழங்குடிஇன மக்களுக்காக 19 ஆண்டு காலம் வழக்கை நடத்தி, வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்றுத் தந்தது.

வாச்சாத்தி வழக்கில் கைது செய்யப்பட்ட 269 பேர்களில் 155 பேர் வனத்துறையினர், 108 பேர் காவல் துறையினர், 6 பேர் வருவாய்துறையினர் உட்பட அனைவருக்கும் தண்டனையை பெற்றுத் தந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும்.

காட்டுநாயக்கன், இருளர், இரவலர், காடர், பளியன், முதுவர், மலையாளி, மலசர், மலமலசர், கொண்டாரெட்டீஸ், மலைக்குற வன், குருமன்ஸ், மலைவேடன் இப்படி பெரும்பாலான பழங்குடிமக்களின் உரிமை களை தொடர்ந்து பெற்றிட நாடாளுமன்றத்தி லும், சட்டமன்றத்திலும் செங்கொடி இயக் கத்தின் புதல்வர்கள், கம்யூனிஸ்ட்டுகள் இன்றும் குரல் கொடுத்து வருகின்றனர்.

கடந்த 2006 முதல் 2016 வரையில் நான் சட்டமன்ற உறுப்பினராக தொண்டாற்றிடும் வாய்ப்பு கிடைத்த போது மேற்கண்ட பழங்குடி யினத்தவர்களுக்கு இனச்சான்றிதழ், வழங்குவதில் பெரும் பின்னடைவு உள்ளதை ஆதாரங்களுடன் சட்டமன்றத் தில் பேசியிருக்கிறேன்,
அதேபோல் வீட்டு மனை, மின்சார வசதி, சாலைவசதி, இவை களை வலியுறுத்தி பலமுறை சட்டமன்றத் தில் வலியுறுத்தி பேசியுள்ளேன்.

இதன் தொடர்ச்சியாக சுமார் 10000க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் இனச்சான்றிதழ் கோரியும், குறவன், குருமன்ஸ், புலையன், ஈரோடு மாவட்ட மலையாளி, வேட்டைக்கா ரன் இனக்குழுக்களை பழங்குடி பட்டியலில் இணைத்திடவும், வனஉரிமைச்சட்டத்தை அமல்படுத்திடக் கோரியும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் 2012ஆம் ஆண்டில் சென்னை கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்குபின் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர்.பிருந்தாகாரத், மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சட்டமன்ற குழு தலைவர் அ.சவுந்தரரா சன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் , நான் உட்பட அன்றைய சட்டப்பேரவைத் தலைவர் டி.ஜெயகுமார் தலைமையில் மூன்று அமைச்சர்களும், உயர் ஐஏஎஸ் அதிகாரிகளும் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தையின் விளைவாக வன உரிமைச்சட்டத்தினை விரைவாக அமல் படுத்துகிறோம் என்று உறுதியளிக் கப்பட்டது. அதன் பின்னர் ஆயிரக்க ணக்கான பழங்குடி மக்களுக்கு இனச் சான்றிதழ் பெற்றுத் தந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே.

தமிழ்நாட்டில் ஏற்காடு, சேந்தமங்க லம் ஆகிய இருதொகுதிகளும் பழங்குடியி னருக்காக ஒதுக்கப்பட்டவையாகும். இத்தொகுதிகளில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்கள் சார்ந்த கட்சியின் பிரதிநிதியாக மட்டுமே செயல்பட்டனர் என்பதை அவர்களது சட்டமன்ற உரைகள் மூலம் அறியமுடிந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரு இயக்கங்க ளின் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அனைத்து பழங்குடியினருக்காகவும், ஒடுக் கப்பட்ட உழைப்பாளி வர்க்கத்திற்காகவும் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட வும் சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்தவர்கள்.

பழங்குடியினருக்கான இனச்சான்று வழங்குவதில் - பெற்றோர்க ளுக்கு சான்றிதழ் இருப்பின் அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கு வழங்கிட வேண்டும் என்று சட்டமன்றத்தில் 2012-இல் நான் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தேன்.

அன்றைய வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பதிலளித்தார். பெற்றோர்கள் சாதிச் சான்று பெற்றிருந்தால் அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கும் சான்று வழங்கப்படும், அதேபோல் குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் மற்றவர்களுக்கும் வழங்கிட இவ்வரசு உத்தரவிட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.

பிற்பகலில் கேன்டீனில் அப்போதைய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டி என்னைப் பார்த்து இரு கைகளையும் பிடித்துக் கொண்டு, “ரொம்ப நன்றி அண்ணே, எங்கள் மாவட்டத்திலே காட்டு நாயக்கன் சாதி மக்களுக்கு சாதி சர்ட்டிபிகேட் தர சில அதிகாரிகள் மறுக்கிறார் கள், நீங்க சட்டமன்றத்தில் காட்டுநாயக்கன் சாதி மக்களுக்காக பேசியதுக்கு ரொம்ப நன்றி அண்ணே” என்று சொல்லி
“நாங்கள் எல்லாம் இப்படி, பேச முடியாது, கேட்க முடியாது “என்று ஆதங்கப் பட்டுக்கொண்டது இன்றைக்கு கண்முன்னே நிழலாடுகிறது

நான் கடந்த 2012-ஆம் ஆண்டில் எனது அரூர் தொகுதியான சித்தேரி மலையில் வசிக்கும் மலையாளி இன பழங்குடியின மக்களுக்கு, இனச்சான்றிதழ் வழங்கிட காலையில் மனு பெற்று மாலையில் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு இனச்சான்றிதழை ஆர்.டி.ஓ.காமராஜ் அவர்களால் எனது முயற்சியில் பெற்றுத்தந்தேன் என்று பேசி னேன்

. அப்பொழுது முன்னாள் அமைச்சர் மோகன், எப்படி சித்தேரி மலையாளி இன மக்களுக்கு ஒரே நாளில் 300க்கும் மேற்பட்ட சான்றிதழ்களைபெற்று தந்தீர்கள். பெரிய சாதனை தான் என்று பாராட்டியதும், அதன் பின்னர் அவருடைய தொகுதியில் இதே போன்று சான்றிதழை வழங்கியதை யும் அவர் தெரிவித்தார்.

தேனி மாவட்டம், கடமலைக்குண்டில் பழங்குடி பெண்களை நிர்வாணப்படுத்திய கொடூர வன்கொடுமைக்கும், கடுமையாக அடித்து சித்ரவதைக்குள்ளான பளியர் இன பழங்குடி மக்களுக்கும் தேசிய பழங்குடி யினர் ஆணையம் வரை சென்று, பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் பெற்றுத்தந்து இன்றும் தொடர்ந்து போராடி வருகின்றோம்.

தமிழ்நாட்டில் வேட்டைக்காரன், புலையன், (ஏற்கனவே பழங்குடியின பட்டி யலில் இருந்தவர்கள்) ஈரோடு மாவட்ட மலையாளி, நரிக்குறவர் (குருவிக்காரர்கள்), குறவர் இனத்தின் உட்பிரிவினர் இவர்களை தமிழ்நாடு அரசு பழங்குடியினர் பட்டியலில் இணைத்திட வேண்டும் என்று நாடாளு மன்றம் வரை சென்று, ‘இந்திய பதிவாளர் துறைத்தலைவர் மற்றும் அன்றைய பழங்குடி யினர் நலத்துறை அமைச்சர், அரசின் செயலாளர் இவர்களிடத்திலெல்லாம் நேரில் மனு அளித்து வலியுறுத்தி பேசியுள்ளோம்.

இப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்றும் குரலற்றவர்களின் குரலாக தொடர்ந்து சட்டமன்றத்திலும், நாடாளு மன்றத்திலும், பொது வெளியிலும், களங்க ளில்.... களமாடி வருகின்றது... என்பது நிதர்ச னமான உண்மை....

நன்றி : தீக்கதிர் 21/11/2021

மேலே உள்ள மரம் வாச்சாத்தி கிராமத்தில் உள்ளது.

1 comment:

  1. வாழ்த்துக்கள் தோழர்களே. மானுடம் வெல்லும்

    ReplyDelete